Thursday 24 November 2022

திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.

 எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.பள்ளியில் கற்ற கல்வியை விட மதுரைக்கு நான் வந்த பின்பு அவரிடம் கற்ற கல்வி அதிகம்.புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தார். குறிப்புகளை எடுத்து நோட்டு நோட்டுகளாய் எழுதிக் குவித்துக்கொண்டே இருந்தார்.பல ஊர்களில் ஆசிரியராக,. தலைமை ஆசிரியராகப் பணியாற்றி எங்கள் ஊருக்கு 1979-ல் தலைமை ஆசிரியராக வந்தார்.தன் தனித்தன்மையால் ஊர்மக்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் எல்லோர் மனதிலும் நிறைந்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக(CEO),மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக(Inspector Of Matriculation ) பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார்.தனது 75 வயது வரை சைக்கிளில்தான் மதுரை முழுவதும் சுற்றி வந்தார்.கடந்த சில ஆண்டுகளாக சைக்கிள் எடுக்கவில்லை. காலில் அறுவைசிகிச்சை செய்ததால் வீட்டை விட்டு செல்ல இயலாமல் வீட்டிற்குள்ளேயே நடமாடினார்.இடையில் கொரனாவிலும் பாதிக்கப்பட்டு வென்று வந்தார்.இன்று மாலை இறந்துவிட்டார் என்று அவரது மகன் தொலைபேசியில் கூறினார்.நெருக்கமானவரின் இறப்பு துயரத்தைக் கூட்டுகிறது.80 வயதிற்கு மேற்பட்டவர்,இறப்பது இயற்கைதானே என்று அறிவு சொல்கிறது,ஆனால் மனம் முழுக்க துயரம் அப்புகிறது.எனது தாயின் இறப்பைப் போலவே இவரது இழப்பும் ....வருத்தத்தைக் கூட்டுகிறது


2 comments:

கருப்பையா.சு said...

தாய், தந்தைக்குப் பிறகு குரு தான் மதிக்கத் தக்கவர். நீங்கள் மூவரையும் இழந்து விட்டீர்கள். உங்கள் வருத்தத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன் நேரு.

முனைவர். வா.நேரு said...

ஆமாம் அண்ணே...நன்றி.