Thursday 17 November 2022

கருவியாய் 'கடவுள்'...

 எல்லாம் வல்ல 

கடவுளுக்கு

எதிராக எளிய மனிதன்

எப்படிப் பகைமை கொள்ள இயலும்?


உடன் பிறந்தவரோடு

உடன் பழகியவரோடு

உடன் வாழ்ந்தவரோடு

ஓர் இடத்தில் ஒன்றாய்

பயணம் செய்பவரோடு

ஒரு மனிதன் 

பகைமை கொள்ள இயலும்...

எங்கேயுமே காணாத கடவுளோடு

எங்கனம் ஒரு மனிதன்

பகைமை கொள்ள இயலும்?


அவரின்றி ஓர் அணுவும் அசையாது...

ஒரு மனிதன் சிரிப்பதுவும்

அழுவதுவும் 

மனித வாழ்க்கையில் எல்லாமே

அவரின் கருணையால் என்றானபின்

கடவுளைப் பகைமை கொள்வதுவும்

கடவுள் அருள்தானே...

பின் அதற்காக ஒரு மனிதருக்கு

மரண தண்டனை என்பது

எவ் வகையில் நியாயம்?



மனித உரிமை மீறல்கள்

உச்சபட்சமாக நடக்கும்

நாடாக ஈரான் இன்றைய நாளில்...

எப்போதும் அதிகாரம்

செலுத்த நினைக்கும்..

மக்களை வாட்டி வதைக்கும்

கொடுங்கோலர்களுக்கு

நல்ல துணை செய்யும்

கருவியாய் 'கடவுள்'...

அன்றைய காலம் முதல்

இன்றைய காலம்வரை...


                      வா.நேரு,

                      17/11/2022


https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o



2 comments:

Anonymous said...

சிந்தித்து தெளிவு பெற மறுப்பவர்கள் .

முனைவர். வா.நேரு said...

ஆமாம்...நன்றிங்க..