Wednesday 6 March 2024

நிகழ்வும் நினைப்பும் 2024(5) -நட்புத் தமிழ் வட்டம் மதுரை

 

நட்புத் தமிழ் வட்டம் என்னும் ஓர் அருமையான அமைப்பு மதுரையில்.ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் அய்யா புலவர் நா. ஆறுமுகம் அவர்கள் அதன் தலைவராக இருக்கிறார்.தொடர்ச்சியான இலக்கிய நிகழ்வுகள்,கல்லூரிகளுக்குச்சென்று பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், பரிசு அளித்தல் எனத் தொடர்ந்து இயங்கும் இயக்கமாக அந்த நட்புத் தமிழ் வட்டம்,மதுரை இருக்கிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை,03.03.2024 உழைக்கும் மகளிர் தினவிழா ,அந்த அமைப்பின் சார்பாக மதுரை கே,புதூரில் உள்ள அல் அமீன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நட்புத் தமிழ் வட்டத்தின் செயலாளர் நாவினி நாசர் அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.அத்தோடு நிகழ்வு முழுமைக்கும் அழகான,சிறப்பான இணைப்புரை வழங்கினார்.அய்யா நா.ஆறுமுகம் அவர்கள் தலைமையேற்று,இன்றைய நிலையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்,எப்படி இருக்கவேண்டும்,மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம், அது உலக மகளிர் தினம் என மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்.காலை 11 மணிக்குத் தொடங்கித் தொடர்ச்சியாக மதியம் 2.30வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பள்ளியில் படிக்கும் மாணவிகள் ,மகளிர் தினத்தைப் பற்றிய தங்கள் எண்ணங்களை அவையில் அழகுற எடுத்துவைத்தனர்.முதலில் செயசிறி கணீர்க்குரலில் வெடிப்பேச்சாய் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து மொழினா,தர்சனி,ச.சபரிசா,மகாலெட்சுமி,இராசராசேசுவரி,தாரணி,வினிதாசிறீ, நிரஞ்சனா என மாணவிகள் ஒளவை,திருக்குறள்,சாதனைப்பெண்கள்,பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும்,பெண்கல்வி ஏன் தேவை போன்ற பல்வேறு கருத்துகளைக் குறிப்பிட்டு உரையாற்றினர்.இளையவர்களின் கருத்துகள் காதுக்கு இனிமையாக வந்து சேர்ந்தது. .

அடுத்துப் பல்துறை சார்ந்த மகளிர்கள் பேசினர். மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் ஆப்ரேசன் தியேட்டரில் மேலாளராய் இருக்கும் திருமதி ஆ.அமல கலைச்செல்வி வெகு இயல்பாகப்  பட்டறிவினால் பெற்ற படிப்பினைகளை கூட்டத்திற்குக் கடத்தினார். ஆளுமையான குரல் வளத்தோடு கு..சண்முகப்பிரியா ,தே.ஆனந்தவள்ளி, சி.பொய்யாமொழி, பா.சுமதி,பேரா.கிருஷ்ணவேணி,சி.சரிமிளா,தி.லதா ,ந.இராணி யாஸ்மின் ஆகிய ஆளுமைகள் உரையாற்றினர்.முதல் மேடை என்றார்கள் சிலர், ஆனால் உள்ளக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள் சிலர்.’சும்மாதானே துவைக்கிறோம்,சும்மாதானே சமைக்கிறோம் …” எனச்சும்மா,சும்மா என்று சர்மிளா சும்மா கூட்டத்தைக் கலக்கிவிட்டார்.சகோதரி தி.லதா உணர்ச்சிபொங்கத் ,தான் கிராமத்தில் வளர்ந்ததையும்,சாமியாடி வீட்டுப் பிள்ளை என்பதையும் தான் ஒரு கருப்புச்சட்டைக்காரரை(சுப.முருகானந்தம்) திருமணம் முடித்து  நன்றாக வாழ்வதையும்,தனது கணவர் தனக்கு எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறார் என்பதையும் மிகுந்த உருக்கமாகப் பதிவு செய்தார்.இதுதான் என்னுடைய முதல் பொதுமேடைப்பேச்சு என்றார் அவர். ஆசிரியர் ந.இராணி யாஸ்மின் அவர்கள் ,பெண்கள் தாங்கள் இரட்டை வேலை ..வீட்டிலும் பள்ளியிலும் வேலை பார்க்கும் நிலைமையை மிக எதார்த்தமாக எடுத்துரைத்தார்.பேரா.கிருஷ்ணவேணி புதிர்க் கேள்விகளும் பதிலுமாய் அரங்கத்தைக் கலகலப்பு ஊட்டினார்.கேட்க,கேட்க நிறைவான,உளபூர்வமான உரைகளாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

  , பெண் ஆளுமைகள் விருது பேரா.அனார்கலி அவர்களுக்கும் ,பெண்ணிய எழுத்தாளர்,திராவிடர் கழகத்தின் மகளிரணியைச்சார்ந்த தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.வாழ்த்துரையை நானும்,அல் அமீன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஷேக் நபி அவர்களும் வழங்கினோம். தலைமை ஆசிரியரின் உரை எதார்த்தமாகவும் மிகச் சிறப்பாகவும் அமைந்தது

நிறைவாகப் பேரா.அனார்கலி அவர்களும் தோழர் ந.தேன்மொழி அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினர்.விழாவின் நிறைவாக வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.வரவேற்பாளர்களாக இளம்தோழர்கள் மகிழ்நன்,அமிழ்தன்,இனியன்,பொன்அரீஷ் ஆகியோர் ஓடி ஓடி வரவேற்றனர்.வேலைகள் செய்தனர்.



உரையாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.பெண் ஏன் அடிமையானாள் ?’ என்னும் புத்தகம் விரும்பியவர்களுக்கு வழங்கப்பட்டது.. நட்புத்தமிழ் வட்டத்தின் உறுப்பினர்கள் மட்டுமே மிகப்பெரிய அளவிற்குச் செலவுகள் செய்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இப்போது கிடைக்கிறது.முக நூலில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம்,அவரது இணையர் சகோதரி லதா,திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.லீ.சுரேசு,அவரின் மகள்கள்,தி.மு,.க.பொறுப்பாளர் தோழர் அன்புமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கு தலைமை வகித்த அய்யா புலவர் நா.ஆறுமுகம் அவர்கள் நிகழ்வில் அவ்வப்போது அருமையான உரைகளை நிகழ்த்தினார்.அவரின் இணையரோடு வந்திருந்தார்.பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தது  நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தது.

நிகழ்வு சிறக்க மகாராணி செல்வராசு,அட்சயா சிவகாமேஸ்வரன்,செ.காவ்யா,நிர்மலாதேவி ஆறுமுகம்,வனிதா நாகராசன்,சாந்தி சிறீராம்,மகாலெட்சுமி வரதராஜ்,இராசபீர்த்தி ஆகியோர் உதவியிருக்கின்றனர்.முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவும் அளிக்கப்பட்டது.5 வயது சிறுவர்,சிறுமி முதல் 70 வயதைக் கடந்தவர்கள்வரை,எல்லா வயதினரும் துடிப்பாய் இணைந்து வேலை செய்து  நடத்திய கூட்டமாய் ,மிகுந்த நம்பிக்கையைத் தந்த கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்தது.மிகுந்த மகிழ்ச்சியை,ஊக்கத்தைத் தந்த நிகழ்வு இது.நட்புத் தமிழ் வட்டம் மென்மேலும் வளரட்டும்.அதன் இலக்கிய சேவைத் தொடரட்டும்.

 

 

8 comments:

anandam said...

நிகழ்விற்கு வந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கியதோடு காலப்பதிவேட்டில் நிகழ்வைப் பதிவாக்கியமைக்கு நன்றி அண்ணே!

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி.நல்லவற்றைப் பாராட்டுவோம்...நல்லவற்றில் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் பங்கேற்போம்.நன்றிங்க அண்ணே...

ந.தேன்மொழி. said...

சிறப்பான தொகுப்பு தோழர்..இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஊக்கம் தரும் இனிப்பாக..இந்த அருமையான நிகழ்வில் நானும் பங்கேற்றேன் என்பது மட்டற்ற மகிழ்வாக
தோழர்.ந.தேன்மொழி.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்..மகிழ்ச்சி.

ஆசைத்தம்பி said...

முனைவரின் முழுமையான நயமிகு தொகுப்புரை
முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்
முத்தமிழின் சுவையொடு
முத்தாய்ப்பாயிருந்தது.
நன்றியும் பாராட்டுகளும்.
🙏🌹

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா

புலவர் நா,ஆறுமுகம் said...

வணக்கம் ஐயா.
தங்கள் எழுத்து ஒவ்வொன்றும்
எம்மை
இன்னும் இன்னும் ஆழமாக உழச்சொல்லுகிறது.
இணைந்து பண்படுத்துவோம் ஐயா.
தங்கள் வாழ்த்துக்கும் வணக்கமும் நன்றியும் ஐயா.

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா..மகிழ்ச்சி.காலை 9.30 நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பான வேலைகளில் இருந்து மாலை 4 நிகழ்வு முடிந்தபின்பு இருக்கும்வேலைவரை..தாங்கள் இருந்து ஒருங்கிணைத்து ..தங்களைப் பார்த்து பிரமித்தேன்.மிகப்பெரிய முன் உதாரணம் நீங்கள்.வாழ்க! வாழ்க!