Sunday 22 January 2012

ஏடெழுதும் பார்ப்பனர்களே!

ஏடெழுதும் பார்ப்பனர்களே!
ஏதேனும் ஒருநாளிலாவது
இதயத்தின் ஓரத்திலாவது
உண்மையை எழுதுதல் வேண்டும்
எனும் எண்ணம் உண்டா ?

சிறீரங்கநாதர் சொர்க்கவாசல்
திறப்பன்று விரஜாநதி மண்டபத்தில்
பட்டர்களின்
வேத விண்ணப்பங்களை
கேட்டாராம் !

சொர்க்க வாசல்
திறப்பு பற்றி
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளில்
டவுட் தனபாலுக்கு
எந்தவித டவுட்டுமில்லே

தினமணியில்
இது உண்மையா?
சரிதானா? நியாயம்தானா?
இது உங்கள்
கடிதத்திலும் இல்லை!
தலையங்கத்திலும் இல்லை!

சொர்க்க வாசலா!
திறப்பா ! அப்படியா?
என்று மாமிகள் எல்லாம்
செய்தி மட்டும்
விசாரித்துக் கொண்டிருக்க
உண்மைதான் என்று
நம்பி
நாலு மணிக்கு எழுந்து
ஏழு மணி நேரம்
வரிசையில் நின்னு
சொர்க்கவாசல் பார்க்க
கோவிலுக்குப் போய்வந்த
எங்க சின்னாத்தா
காலு ஒடிஞ்சு கிடக்கா
கூட்டத்திலே
மிதிபட்டு

படிக்காத பாமர ஜனங்க மண்டையிலே
ஏத்திட்டிங்கே
எங்க மக்களையெல்லாம்
மரமண்டையா ஆக்கிட்டீங்க

உனது நம்பிக்கை
என்கிறாய்
உருக்குலைக்கிறதே
எனது உறவுகளை
உடலால் உள்ளத்தால்
எப்படி பார்த்துவிட்டு
அது உனது நம்பிக்கை
என நான் எட்டிச் செல்வது

நாங்களும் சொல்லிப்
பார்க்கிறோம்
விடாமல்தான்
அவங்க காதுக்கு
எங்க செய்தி
போகுமுன்னே
எட்டுக் கால் பத்தியிலே
கூசாமல் புளுகுறீங்க !
முதியவர்கள் அப்படியே
வளர்ந்துவிட்டார்கள் !

மூளையிலே ஊனமாகி
விட்டார்கள் !
வருகுது பார் !
இளையோர் பட்டாளம் !
இணையத்திலும்
பேஸ் புக்கிலும் உங்களது
பொய்மைகளை நொறுக்கி!

பெரியார் வழிப்
பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் !
கைகளில் கணினியோடும்
கண்களில் பொய்மை
கண்டு பொங்கும்
வெறியோடும்!
உங்கள் சொர்க்கவாசல்
புரட்டும் இனி
ரொம்ப நாள் தாங்காது !

- வா.நேரு நன்றி - விடுதலை நாளிதழ் -14-1-12

No comments: