Saturday 12 July 2014

முட்டுச்சுவரு - வா. நேரு

                                        முட்டுச்சுவரு  - வா. நேரு

அழுது அழுது மாரியின் கண்கள் எல்லாம் வீங்கி இருந்தன. அறுபது வயதைக் கடந்தவர் , இப்படி அழுகை கோலத்தோடு அவரைப் பார்த்தபொழுது தூக்கி வாரிப்போட்டது அரசுக்கு. " ஏன் இப்படி , இந்த நேரத்தில் , என்ன நிகழ்ந்தது ? " என்று அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டான் அரசு. " ஏமாந்து விட்டேன் அரசு, ஏமாந்து விட்டேன் , பெத்த பிள்ளைகிட்டயே ஏமாந்திட்டேன், என் தலையிலே மண்ணை வாரிப்போட்டுட்டான் " என்ற போது அவரின் ஒரே மகன் வாசு எவளையும் காதலித்து , திருமணம் முடித்து விட்டானோ என்று அரசு எண்ணினான். காதல் திருமணம் என்றால் நாம் ஆதரவு தரும் ஆள் என்று எல்லோருக்கும் தெரியுமே, அப்படி ஒரு செய்தி என்றால் நம்மிடம் வரமாட்டாரே என்று நினைத்துக்கொண்டு " முதலில் அழுகையை நிப்பாட்டுங்கள், அப்புறம் சொல்லுங்கள் , எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், இழவு வீட்டில் அழுவது போல் தயவு செய்து அழுகாதீர்கள் " என்றான் அரசு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் பணி ஓய்வு பெற்றார் அரசுவோடு வேலை பார்த்த மாரி. அரசுக்கு மாரி பக்கத்து ஊர்க்காரர். ஒரே அலுவலகத்தில் உடன் இருந்தவர். . மாரி மிகப்பெரிய பதவி வகித்தவரல்ல. அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக வேலை பார்த்தவர். ஆனால் தான் கடை நிலை ஊழியர் என்றாலும் பிள்ளைகள் முதல் நிலை ஊழியராக வரவேண்டும் என்று படிக்கவைத்தார். ஒரு மகன், ஒரு மகள் என்றாலும் மகளை விட மகன் படிப்பில் மிகவும் அக்கறை காட்டினார். எல்.கே.ஜி-க்கே பல ஆயிரம் கட்டி மகனைப்படிக்கவைத்தார். அரசு தன் பிள்ளைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளியில் மொட்டு, மலர் என்று சேர்த்து விட்டிருந்தார். ஒரு நாள் அரசுவிடம் மாரி,"உன் மகனுக்கு எவ்வளவு வருடக் கட்டணம் ? " என்றபோது அரசு "என் மகன் மொட்டு வகுப்பு படிக்கிறான் , அவனுக்கு வருடக்கட்டணம் ரூ 2000-" என்றபோது அரண்டு போனார். " என்ன, என் பிள்ளையை வருடக்கட்டணம் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து படிக்கவைக்கிறேன், நம்ம சுந்தரு வருடத்துக்கு 65000 பணம் கட்டி எல்.கே.ஜி.யில் படிக்க வைக்கிறார். என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குற ஆள் நீ, ஏன் இப்படி ? "என்றார். "எனக்கு அதிகக் கட்டணம் கொடுத்து படிக்க வைத்தால்தான் , நல்ல படிப்பு என்பதில் நம்பிக்கை இல்லை. நல்ல பள்ளிக்கூடம் என்பது கட்டணத்தில் இல்லை " என்றபோது மாரி அரசுவிடம் " போப்பா, இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்கு பூட்டியா ஏதாவது நீ சொல்லுவே, செய்யுவே " என்றார்.

மாரி தன் பிள்ளையின் படிப்பிற்காகப் பட்டபாட்டையெல்லாம் அரசு நன்றாக அறிவான். எல்.கே.ஜி.படிக்கும்போது அவனுக்கு ஆரம்பித்த செலவு கடந்த வருடம்தான் முடிந்தது. எல்.கே.ஜி. படித்த பள்ளிக்கூடத்திலேயேதான் வாசு பத்தாம் வகுப்புவரைக்கும் படித்தான். அவன் பத்தாம்வகுப்பு படிக்கும்போது அவனுக்கு பள்ளிக்கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டிவிட்டு, டியூசனுக்கு என்று ஏகப்பட்ட பணத்தை செலவழித்தார். பின்பு பத்தாம் வகுப்பு விடுமுறையின்போதே, பதினொன்றாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு டியூசனுக்கு போகச்செய்தார்.பத்தாம் வகுப்பில் 70 சதவீதம் எடுத்த மகனை , அந்த நகரத்திலேயே மிகப்பெருமையாகப் பேசப்படும் மற்றொரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளிக்கூடம் மாணவ், மாணவிகள் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் என வருடந்தோறும் முதல் மூன்று ரேங்குகளுக்குள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் க்ட்டிட நிதி என்று 10 ஆயிரம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் வாசு படித்த காலத்தில் ஒரு இல்ட்சம் என்று மாற்றி விட்டார்கள் . ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் போய் மாரி, மகனைச் சேர்த்து விட்டார். +2 -வில் மதிப்பெண் அடிப்படையில் நல்ல கல்லூரி கிடைக்கவில்லை என்று தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு இலட்சம் பணம் கொடுத்து , பின்பு சுய நிதிக்கல்லூரி பிரிவில் அதிகமாகப் பணம் கட்டி சேர்த்து விட்டார். கோவைக்கு அருகில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த மகனின் வங்கிக் கணக்கிற்கு அடிக்கடி பணம் அனுப்பிக்கொண்டே இருப்பார். "ஏன் இவ்வளவு பணம் அடிக்கடி அனுப்பிகின்றீர்கள்" என்று கேட்டதற்கு " விடுதி பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். நாலைந்து பையன்களோடு இணைந்து ரூம் எடுத்து வெளியில் சாப்பிட்டுக்கொண்டு படிக்கின்றான். கோயம்புத்தூர் சும்மாவே நிறைய பணம் புழங்குமிடம், விலைகளும் மற்ற ஊர்களை விட அதிகம். என் பிள்ளை அங்கே துன்பப்படக்கூடாதல,அதனாலதான் பணம் அடிக்கடி அனுப்புகின்றேன்" என்பார். திடீர் திடீரென்று பி.எஃப் பணத்தை சேமிப்பிலிருந்து எடுப்பார். கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடனை வாங்குவார். சில நேரங்களில் அலுவலங்களில் , வெளியிடங்களில் வட்டிக்கு கொடுப்பவர்களிடம் கடன் வாங்குவார். மாரி தன் வாழ்க்கையில் என்றும் ஆடம்பரமாக, தேவையில்லாமல் செலவழித்தாக ஞாபகம் இல்லை. பார்த்து , பார்த்துச்செலவழிப்பார். ஆனால் பிள்ளைகள் படிப்பு என்று வந்தால், அதுவும் மகனின் படிப்பு என்றால் கடன் வாங்கியாவது படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.சில வருடங்களுக்கு முன் சில நேரம் அவரின் செயல்கள் கிறுக்குத்தனமாகத் தோன்றும். அலுவலகத்தில் வேலை மும்மரமாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்,திடீரென்று மகன் ஞாபகம் வந்து விடும். மகனை டியூசனுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்று சொல்லி, மேலதிகாரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பறந்து பறந்து போய் வருவார்.ஏற்கனவே அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்தன. மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கிக் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சென்ற வருடம் பணி ஓய்வு விழாவிற்கு அவரது மனைவி, மகன், மகள், மகளின் கணவன் என வந்திருந்தனர். மகனைக் காண்பித்து அரசுவிடம் பெருமையாகச்சொன்னார். எனது மகன் டிரிபில் ஈ பாடம் எடுத்து தொன்னூறு சதவீதம் எடுத்து பாஸ் செய்திருக்கிறான். தற்சமயம் ஒரு சின்ன வேலையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அனுபவம் கிடைக்கிட்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறேன். அனுபவம் கிடைசசு , நல்ல கம்பெனிக்கு வேலைக்கு போயிருவான். வேலைக்கு போயிட்டா வெளி நாடுகளுக்கெல்லாம் போற வாய்ப்பு கிடைக்கும். நானும் கூட பாலு சாரு மாதிரி வெளி நாடு போறதெக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களோடு வேலை பார்த்த பாலுவின் மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றான். காடு ஆறுமாதம், நாடு ஆறு மாதம் என்பது போல பாலு தமிழ் நாட்டில் ஆறுமாதம், அமெரிக்காவில் ஆறுமாதம் என்று அலைந்து கொண்டிருந்தார். நன்றாக போட்டோ எடுக்கக் கூடியவர் பாலு. அமெரிக்கா சென்றது, அங்கே தங்கியது, ஒவ்வொரு நாடாக விமானத்தில் இறங்கி, இறங்கி மாறி அமெரிக்கா போனது என்று வித விதமான கலர் படங்களைக் கொண்டு வந்து பாலு அலுவலகத்தில் அசத்திக் கொண்டிருந்தார். அரசுவுக்கு பாலு போலத் தானும் தன் மகனால் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறோம் என்று நம்பிக்கை இருந்தது. படாத பாடுபட்டு , நிறையச்செலவழித்து தன் மகனை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விட்டோம் என்ற தெம்போடு இருப்பவராக மாரி இருந்தார்

அப்படிப்பட்ட மாரிதான் " நான் மோசம் போயிட்டேன், நான் மோசம் போயிட்டேன், பெத்த பிள்ளையால மோசம் போயிட்டேன் " என்று அரசுக்கு முன்னால் அழுதுகொண்டிருந்தார். " என்னண்ணே நடந்தது " என்ற அரசுவிடம் மாரி விளக்கியபோது அரசுவே கதிகலங்கிப் போனான். மாரியின் மகன் வாசு பொறியியல் பாடத்தில் தேர்ச்சி பெறவேயில்லை. ஏகப்பட்ட பாடங்கள் இன்னும் அரியர்ஸ் வைத்திருக்கிறான். மொத்தம் உள்ள 48 பாடங்களில் 10 பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவேயில்லை. ஊரிலிருந்து வந்த மாரியின் அண்ணன் மகன் , எத்தனை மதிப்பெண் , என்ன கூட்டுத்தொகை, எவ்வளவு சதவீதம் என்றெல்லாம் கேட்டபோது வாசு மழுப்பியிருக்கிறான். சந்தேகமடைந்த மாரியின் அண்ணன் மகன் மாரியிடம் சொல்ல, இரண்டு பேரும் வாசு இல்லாத நேரத்தில் அவனது பெட்டியை எடுத்துப் பார்த்தபொழுதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. ஏற்கனவே 90 சதவீதம் எடுத்து வெற்றி பெற்றதாகச்சொன்ன சான்றிதழ்களும் , உள்ளே இருந்த சான்றிதழும் ஒன்று போல இருக்க, மதிப்பெண்கள் மட்டும் மாறியிருந்திருக்கின்றது. மாலையில் வந்த வாசுவிடம் கேட்க, கையோடு பிடிபட்ட கள்வன்போல ஆமாம் என்று சொல்லியிருக்கின்றான். இருதய வலி வந்து விடும் அளவுக்கு கத்திக் குமித்த மாரி, வீட்டை விட்டுத் தாண்டி ஓடி வந்து அரசுவிடம் வந்து நின்று இப்படி புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

அரசு அறிந்த வரையில் வாசு தெரிந்து தவறு செய்யக்கூடிய பையன் அல்ல, திட்டமிட்டுச்செய்யும் கிரிமினலும் அல்ல. ஏதோ , எங்கோ சிக்கல் இருக்கிறது என்று புரிந்த அரசு, "இப்போ வாசு எங்கே" என்றான் மாரியிடம் . "தா.... மகன் எங்கோ இருக்கானோ, என்ன திருட்டுத்தனம் பண்ண திட்டம் போட்டிருக்கானோ "என்று மாரி குமுறினார். " இல்லை, என் கூட வாருங்கள் " என்று மாரியையும் அழைத்துக்கொண்டு மாரி வீட்டுக்கு விரைந்தான் அரசு.

மாரியின் மனைவி ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் " வாசு எங்கே " என்ற போது உள்ளே கையைக் காட்டினார். விறு விறுவென்னு மாரியைக்கூட எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்த அரசுவைக் கண்டதும் பரக்க, பரக்க முழித்த வாசு , ஏதோ ஒரு பாட்டிலை எடுத்து ஒளித்துவைப்பதை அரசு பார்த்து விட்டான். நேரே போய் அரசு அதை எடுத்துப் பார்த்தான் , நஞ்சு மருந்துப் பாட்டில். " ஏண்டா, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கேவலப்படுத்தனது எல்லாம் போதாதுன்னு இனி விஷ்ம் குடித்து செத்து வேற கேவலப்படுத்த போறயா? எப்படிடா உங்கப்பாவை ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு ? என்னென்ன பண்ணினாரு மனுசன் உனக்கு, எப்படி எப்படி எல்லாம் உன்னைப் பொத்தி பொத்தி வளர்த்தாரு, " என்ற அரசு " ஏண்டா இப்படி செஞ்ச ? " என்றான் கோபமாக.அரசுவின் ஆங்காரத்தை, அழுகையை, கோபத்தைக் கண்ட வாசு என்ன நினைத்தானோ " அங்கிள் , என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்லிக் கொண்டே படாரென்று நெடுஞ்சாங்கிடையாக அரசுவின் காலில் விழுந்தான்.

" அங்கிள், எப்பயுமே அப்பா, என் கிட்ட அதிகமாக எதிர்பார்த்தாரு, சின்னப் பிள்ளையில் இருந்தே என்னையை பெரிய பெரிய பள்ளிக்கூடத்திலே சேர்த்தாரு, மத்த பிள்ளைகள் எல்லாம் கார்ல் வந்து இறங்கும்போது, நான் மட்டும் அப்பாவின் சைக்கிளில் போய் இறங்குவேன்,அந்த படிப்பு எனக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது பதிலாக, ஒரு இன்பிரியாரிட்டி காம்பளக்ஸ் மனப்பான்மையைத்தான் ஏற்படுத்துச்சு. பத்தாவது வரைக்கும் கொஞ்சம் என்னால் முடிந்த அளவு படித்தேன். 11-ஆம் வகுப்பு வேற பெரிய பள்ளிக்கூடத்திலே போய் சேர்த்தாரு, அந்தப் பள்ளிக்கூடத்திலே பதினொன்றாம் வகுப்பு பாடமே நடத்தல. 11-ஆம் வகுப்பு தொட்க்கத்திலே இருந்து 12-ஆம் வகுப்பு பாடத்தைத்தான் நடத்துனாங்க. மனப்பாடம் பண்ண வச்சு , பண்ண வச்சு பேப்பரிலே எழுதவச்சாங்க, நானும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கிற மாதிரி படிச்சு படிச்சு பேப்பர்ல் கக்குனேன். செரிக்கலை எனக்கு அது. மனசுலே அது என்னன்னு விளங்கலை.கணக்கையே மனப்பாடம் பண்ண வச்சாங்க. சில பதில்களை, பாடப்பகுதிகளை குருட்டு மனப்பாடம் பண்ண வச்சாங்க, நானும் ஏதோ என்னால முடிஞ்ச அளவு மார்க் எடுத்து +2 முடிச்சேன் " என்றவன் கேவிக் கேவி அழுதான் பின்பு தொடர்ந்தான்

" அப்பா சேர்த்து விட்ட் பொறியியல் கல்லூரியும் பெரிய கல்லூரி. ஆனால் அங்க போனதும் 11-ஆம் வகுப்பு பாடம்தான் அடிப்படை , அதை வைத்துத்தான் பாடத்தை புரிஞ்சுக்கிறனும் அப்படினாங்க. சில வாத்தியார்கள் கொஞ்சம் சைக்கோ டைப்பிலேயே இருந்தாங்க. அவங்களைப் புரிஞ்சு , நான் தயார் ஆகுறதுக்குள்ள முதல் செமஸ்டர் வந்திருச்சு. ஆறு பாடத்துக்கு நாலு பாடத்திலே பெயிலு. அப்பா கிட்ட வந்து நான் பெயிலுன்னு சொல்ற வர்றதுக்குள்ள , எங்க அப்பா என் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து 90 மார்க்கா, 95 மார்க்கான்னு கேட்டாரு. 90 மார்க்குன்னு பொய் சொன்னேன். உள்ளுக்குள்ளே உறுத்தினாலும் , சொன்ன பொய்யை மறைக்கிறதுக்காக போலி மார்க் சர்ட்டிபிகேட் வாங்கினேன். எங்க கல்லூரிக்குப் பக்கத்திலேயே ஒரு கம்ப்யூட்டர் செண்டர் இருக்கு. 500 ரூபா கொடுத்தா வேற மார்க் சீட், அதிகமாக மார்க் போட்டுக் கொடுத்துருவாங்க. . முதல் செமஸ்டரில் பெயிலானாலே, கேம்பஸ் இண்டர்வியூவிக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்பவே அப்பாவின் வெளி நாட்டுக் கனவு நிறைவேறாதுன்னு தெரிஞ்சு போச்சு. பக்கத்து ரூம்ல் இருந்த பையன் முதல் செமஸ்டரில் 4 பாடத்தில பெயில் ஆனவுடன் தற்கொலை பண்ணிக்கிட்டான். எனக்கு அப்படி பண்ணிக்கிறலாமுன்னு தோனுச்சு. ஆனா அப்பா என்ன பாடுபட்டு என்னைப் படிக்கவைக்கிறார்ன்னு நினைச்சுப்பார்த்தேன். அந்த மனுசர் ஓய்வு பெற்றவுடன் நான் சம்பாரிச்சு அவருக்கு நல்ல சாப்பாடு போடணும்ன்னு நினைச்சேன். முதன் முதலில் தேர்வில் தோல்வி, வகுப்பில் பெயிலானவங்க 20 பேரில் நானும் ஒருத்தன் என்பது என்னை ரொம்பவுமே பாதிச்சது. அந்த வெறுப்பிலேயே படித்தும், படிக்காமையும் நாள் ஓடிப்போச்சு. நான் பண்ணியது தப்புத்தான், மகா தப்புத்தான், எங்க அப்பா என்னை எப்படி துயரப்பட்டு படிக்கவச்சாருன்னு எனக்குத் தெரியும், அவரை மனசளவில துன்பப்பட வைக்கக்கூடாதுன்னுதான் நான் இப்படி பண்ணினேன். ஏற்கனவே இருதயத்திலே அடைப்பு இருக்கு, பைபாஸ் பண்ணனும்ன்னு அப்பாவுக்கு சொல்லியிருக்காங்க. அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டாம்ன்னு நினைச்சேன். ஏதோ ஒரு வேலைக்குப் போய்கிட்டே மீதப்பாடத்தை முடிச்சு, பொறியியல் பட்டத்தை வாங்கி விடுவோமுன்னு இந்த இரண்டுவருடமா தேர்வு எழுதிக்கிட்டு இருக்கேன் , முடிக்க முடியலையே மாமா, முடிக்க முடியலையே " என்று சுவரில் போய் நங்கு நங்கு என்று முட்டினான்.

அவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது அரசுக்கு. மகனுக்கு தன் துன்பம் தெரியக்கூடாதென்று மாரி துன்பப்பட்டு பணம் அனுப்பியதுபோலவே, படிக்கும் இடத்தில் தனக்கு இருக்கும் துன்பம் தன் தந்தைக்கு தெரிய வேண்டாம் என்று வாசு நினைத்திருப்பான் போலும். என்ன இருந்தாலும், போலி மதிப்பெண் சான்றிதழ் காட்டியது எவ்வள்வு பெரிய தவறு என்பதனை வாசுவுக்கு அரசு விளக்கிக்கொண்டிருந்தான். " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிசு இல்லே, ஒத்துப்போகலைன்னா , தலைமுடி போச்சுன்னு போயிரனும்.ஒரு பாதையில போறோம், முட்டுச்சுவரு , இதற்கு மேல போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பிவந்து , வேற பாதையில போறது இல்லையா, அது மாதிரிதான் படிப்பும். ஒரு படிப்பு புடிக்கலேன்னா, போகுது கழுதைன்னு விட்டுட்டு வேற படிப்பை படிக்க வேண்டியதுதானே, முதல் வருடம் விட்டுட்டு, ஏதாவது வேறு ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தால் அவருக்கும் நிம்மதி, உனக்கும் நிம்மதி. நீ ந்டிச்சு, நீயும் உருப்படாம, அவரையும் இப்படி உருக்குலைச்சிட்டேயே , விடு, வேலைக்கு போய்கிட்டே அஞ்சல் வழியில் ஏதாவது ஒரு பாடத்தைப் படி " என்ற அரசு "என்ன பாடம் உனக்குப் பிடிக்கும் "என்றான். " ஆங்கில வழியிலேயே படித்தது, ஆங்கிலப்பாடம் பிடிக்கும்" என்றான் வாசு. மாரியை அருகில் அழைத்த அரசு வாசுவை அஞ்சல் வழியில் இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பு படிக்கச்சொல்லுங்கள். அவன் சம்பாரிக்கும் காசிலேயே அவனைப் பணம் கட்டச்சொல்லுங்கள். படிக்கட்டும் , பணத்தைக் கட்டட்டும் . புரிதல் இல்லாமல் நன்றாக ஆக்குகிறேன் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சாகடித்து விடாதீர்கள் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி , சாப்பிட வைத்து விட்டு வந்த அரசுவிடம் அவரது மனைவி சாப்பிட வாருங்கள் என்று சொன்னபோது " இல்லைப்பா, எனக்கு சாப்பிட பிடிக்கல, மனசு சரியில்ல, கொஞ்ச நேரம் தூங்கப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு வந்த அரசு, மாரிக்கு அவன் மகன் செய்த நம்பிக்கைத்துரோகத்தை தாங்கமுடியாமல் படுக்கையில் உருண்டு உருண்டு புரண்டு கொண்டிருந்தான் .மாரி சமாதானம் ஆனாலும் அரசுவால் சமாதானம் ஆகமுடியவில்லை, படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான்

சிறுகதையை வெளியிட்ட எழுத்து. காம் - இணையதளத்திற்கு நன்றி . வா. நேரு

2 comments:

முனைவர். வா.நேரு said...

வணக்கம் தோழரே..! கதை குறித்து எனது கருத்தாய், சில வரிகள்..!

கல்விக் கொள்ளையர்கள் தமது விளம்பரங்களின் மூலம்,தம்மைத் தாமே உயர்த்திக் கொள்வது பெரும் மோசடி என்பதை, உணாந்து வரும் காலத்தில்,பொதுமக்களில் இன்னும் பெரும்பான்மையான சதவீதத்தினர்,அந்த மாயைக்கு பலியாகி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட,தனியார் பள்ளியொன்றில் தம் குழந்தைக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் உண்ணாவிரதம் இருந்த பெற்றோர் என்ற செய்தி அதற்கொரு உதாரணம்.

இவர்களில் ஒருவராக மாரியும் இருக்கிறார்.எதிர்காலத்தில் பிள்ளையின் வசதியான வாழ்க்கை,தடுமாறாத பொருளாதாரம் என மாரியைப் போன்றவர்களை நினைக்க வைத்ததில்தான்,கல்விக் கொள்ளையர்களின் சூது வெற்றிபெற்றிருக்கிறது.ஏமாந்து போனவர்களின் பிரதிநிதியாகவே மாரியும் தெரிகிறார்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்,தங்களின் பிள்ளையின் மீது கொண்ட அக்கறை, ஒரு வகையில் பேராசை போலத் தோன்றினாலும், கல்விக் கொள்ளையர்களின் உண்மை சொரூபத்தை அவர்களாக உணரும் வரை, அதை தவறெனச் சொல்லமுடியாது.

ஆனால்,அந்தப் பிள்ளையை சரியான முறையில்,தக்க வகையில் பொறுப்புள்ளவராகக் கல்வி வார்த்தெடுக்கிறதா..? எனில்,பெரும்பாலும் இல்லை என்பதே தற்போதைய பதில்.

குறிப்பிட்ட அளவு காற்றைத் தாங்கும் பலூனைக் குறித்து,ஊதுபவர்கள்தான் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால்,தேவைக்கு மீறியும் ஊது ஊதென ஊதி..ஒரு கட்டத்தில் வெடித்துவிடும் பலூன் போல,பள்ளி,கல்லூரிப் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வது,என்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.வாசுவைப் போல..!

வாழ்க்கையை நடத்த படிப்பு என்பது ஒரு தேவையாக அல்லது தகுதிகளுள் ஒன்றாக இருக்கிறதே தவிர,படித்தால்தான் வாழ்க்கை என்று கொள்ளக் கூடாது. படிக்காமலேயே அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்வதே நிரந்தரமான தகுதியாக இருக்கிறது. மாணவர்களாய் இருந்து,தொழிற்கல்வியை படித்து முடித்துவிட்டு,தொழிற்சாலைகளில் பணியாற்றச் செல்பவர்கள்,அங்கிருக்கும் அனுபவமிக்க,உயர் கல்வி என்பதற்ற,ஒரு தொழிலாளியின் வழிகாட்டுதலோடுதான் தங்கள் பணியைத் தொடர்வதை இன்றைக்கும் பலநிறுவனங்களில் பார்க்க முடியும். மேலும் பாதையோரம் இருக்கின்ற சில சிறு இருசக்கர வாகனப் பணிமனைகளில் வேலை செய்யும் ஒரு சிறுவனிடம்,பத்து பனிரெண்டு ஸ்பேனர் எடுத்துட்டு வாடா..என்று சொன்னால்,கலைந்து கிடக்கும் அந்தக்கருவிகளை வெறும் கண்களால் பார்த்தே,குறிப்பாக சரியாக அதனைப் பொறுக்கி எடுத்துவந்து தருபவர்களும் உண்டு. இத்தனைக்கும் தாங்கள் எடுத்துத் தருவது சரியான அளவுள்ளதா..? என்றுகூட அவர்கள் பரிசோதிப்பதில்லை.அது சரியாகத்தான் இருக்கும்.அந்த நிச்சயத்தன்மையை அவர்களின் அனுபவ அறிவு, கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் பட்டப்படிப்பு முடித்துவருபவர்கள்,அந்தக்கருவியின் மீது குறிப்பிடப்பட்டுள்ள அளவைக் கொண்டே நிச்சயப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் வருகின்றனர்.

இங்கு கல்வி என்பது அறிவைப் பெருக்கும் ஒரு கருவி என்பதைக் கடந்து,விற்பனைச் சரக்காக மாறிவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.எனவே பெற்றோர்களும், பிள்ளையின் தகுதியறிந்து,அவர்களை அரவணைக்கும் வேலையைச் செய்யவேண்டும் என்பதை உணர்த்தும் பாத்திரமாகவே ‘அரசு’ வைப் பார்க்கிறேன்.

“மாரிக்கு அவன் மகன் செய்த நம்பிக்கைத்துரோகத்தை தாங்கமுடியாமல் படுக்கையில் உருண்டு உருண்டு புரண்டு கொண்டிருந்தான்.” அது வாசு செய்த நம்பிக்கை துரோகமாகக் கொள்ளாமல்,அவனது இயலாமை..சூழ்நிலைக்கு அவனும் பலியானானதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதைப் போல, வரிகள் சமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

காரணம்.. “அரசு அறிந்த வரையில் வாசு தெரிந்து தவறு செய்யக்கூடிய பையன் அல்ல. திட்டமிட்டுச்செய்யும் கிரிமினலும் அல்ல. ஏதோ எங்கோ சிக்கல் இருக்கிறது என்று புரிந்த "அரசு"

“எங்க அப்பா என்னை எப்படி துயரப்பட்டு படிக்கவச்சாருன்னு எனக்குத் தெரியும். அவரை மனசளவில துன்பப்பட வைக்கக்கூடாதுன்னுதான் நான் இப்படி பண்ணினேன். ஏற்கனவே இருதயத்திலே அடைப்பு இருக்கு. பைபாஸ் பண்ணனும்ன்னு அப்பாவுக்கு சொல்லியிருக்காங்க. அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.” –என்று மகன் வாசு சொல்லும் நியாயமான காரணத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது அல்லவா..?

மற்றபடி,காலத்திற்கேற்ற கதையாகவும்,யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும் கதை இருப்பதில் மிக மகிழ்ச்சி.அதேபோல கதை சொல்லும் பாங்கும்,கருவும் நன்றாகவே இருக்கிறது தோழரே..! இது குறித்து தங்கள் கருத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்.
மீண்டும் பேசுவோம்..!
பொள்ளாச்சி அபி.
நன்றி: எழுத்து.காம்

முனைவர். வா.நேரு said...

காளியப்பன் இசக்கியேல் :

தோளுக்கு மேலே தோழனாய்ப் பார்த்து
நாளுக்கு நாளாய்ப் பேசித் தீர்த்தால்
ஆளுக்கு ஆள் இப்படி ஏமாற்ற நேருமா?
வளரும் போது குழந்தை என்கிறோம்;
வளர்கிறான் அறிவில் என்றுதான் நம்புவோம்;
ஆயினும் அவனது விருப்பம் அறிகிலோம்;
தமது விருப்பமே அவனுக்குத் தேவையாய்
திணிக்கிறோம் தொடருவோம் துளைக்கிறோம்
மணிக்கயிறு அறுந்ததும் மயங்குவோம் வருந்துவோம்!

எவர்க்கேது தேவையென்று எவர்முடிவு எடுப்பது?
எதையா தரிப்பது?; எதைவூக்கம் என்பது?
இன்னும் கற்கிறோம் இதனை; அதுவரை
தலைமுறை கற்றுத் தேர்ந்திடும் நாளிவை!
விலையெனப் படுகிறோம் வேதனை!
நிலையிலை இவைகள்; நாள்களும் மாறுமே!

கதை அருமை. கருத்துள்ளது- பொருத்தமான தலைப்புடன்.

நன்றி : எழுத்து.காம்