Friday 14 May 2021

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)....ஆத்மார்த்தி

 அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)

 நூல் ஆசிரியர்              : ஆத்மார்த்தி

வெளியீடு                   :  தமிழினி ,சென்னை-51

முதல் பதிப்பு               : டிசம்பர் 2020

மொத்த பக்கங்கள்          :  184 , விலை ரூ 180            


இந்த மிட்டாய்பசி,ஒருவனின்  கால் நூற்றாண்டுக் கால  வாழ்க்கையைச்சொல்லும் நாவல். நாவல் என்னும் வடிவத்தின் சிறப்பே கால் நூற்றாண்டு,அரை நூற்றாண்டுக் கதைகளைச்சொல்ல முடியும் என்பதுதான்.அந்த வகையில் இந்தக் கதையின் நாயகன் ஆனந்திற்கு நடக்கும்  நிகழ்வுகளின் விவரிப்புத்தான் இந்த நாவல். துன்பங்கள்  எப்படி ஏற்படுகிறது,எதனால் ஏற்படுகிறது என்பது அவனுக்கே புரியாத நிலையில் நடப்பதும்,அதனால் அவன் நலிவதும் மீள்வதுமான வாழ்க்கையின் கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் இந்த நாவல்.இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை அழகாக நாவலாக ஆக்கி நம் கையில் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஆத்மார்த்தி..

உடலால்,சொற்களால் நிகழும் வன்முறைகளுக்கு முன்னால் ,அந்த வன்முறை நிகழ்த்துபவனின் மனதுக்குள் நிகழ்கிறது.உடனடி கோபத்தினால் விளையும் வன்முறை அந்தக் கணத்தில் நிகழ்ந்துவிடும். கோபமும் குறைந்துவிடும். ஆனால் மனதுக்குள் ஏற்படும் வன்மம்,காலம்,இடத்திற்காகக் காத்திருக்கிறது,மனதுக்குள் மீண்டும் மீண்டும் நிகழப்போகும் வன்முறையை ஒத்திகை பார்த்துக்கொண்டே இருக்கிறது.

மதுரை மூன்று மாவடியில் வசிக்கும்,பெரிய ஆதரவு எதுவும் இல்லாத,அப்புராணியாய் வளரும் செல்லம்மா,மாரிஸ் என்பவனால் ஈர்க்கப்படுகிறாள்.செல்லம்மாவின் தோழி ஜெகா,செல்லம்மா-மாரீஸ் திருமணம் நடைபெறக் காரணமாக இருக்கிறாள். இவன் தான் இனி நம் உலகம் என மாரீஸிடம் முழுமையாக செல்லம்மா தன்னை ஒப்படைக்கிறாள்.ஆனால் மாரீஸ் அப்படி இல்லை,அவனுக்கு ஜெகாவிடம் தொடர்பு இருக்கிறது என்பதனை அறிந்தபோது,ஏமாற்றமடைந்த செல்லம்மாள் தன் கணவன் மாரீஸ் மேல் வன்மம் கொள்கிறாள். மனம் முழுவதும் படர்ந்திருக்கும் வன்மத்தோடு மாரீஸோடு குடும்பம் நட்த்துகிறாள். அழகான ஆண்குழந்தை,கணவனைப் போலவே பிறக்கிறது. கணவனிடம் இருக்கும் வன்மம்  ,அவனைப் போலவே இருக்கும் மகன் ஆனந்திடமும் பரவுகிறது.




கணவனை இழந்த மாரீஸின் அக்கா திலகா, செல்லம்மா குடும்பத்தோடு இருக்கிறாள்.செல்லம்மா கவனிக்காத அவளது குழந்தை ஆனந்தை ,திலகா கவனிக்கிறாள்.செல்லம்மாவின் வன்மம் அறியாத திலகா,ஏன் தன் தம்பி மனைவி ,அவளது குழந்தையின் மேல் அன்பு செலுத்த மறுக்கிறாள் என யோசிக்கிறாள்.ஒரு விபத்தில் செல்லம்மாவின் கணவன்,மாரீஸ் இறந்து விடுகின்றான்.கணவன் இறந்தபின்பும்,அவன் மேல் இருந்த வன்மம்  மகனின் மேல் செலுத்தும்  வன்மமாகத் தொடர்கிறது.

சிறுவன் ஆனந்திற்கு ,தனது அம்மா ஏன் தன் மீது அன்பு செலுத்த மறுக்கிறாள் என்பது புரியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான்.புதூரில் இருக்கும் அலோசியஸ் பள்ளிக்குச்செல்கிறான்.. தன் நண்பன் சபரிக்காக,இன்னொரு மாணவன் மகேசை ஆனந்த் அடிக்கிறான். மனதிற்குள் வன்மம் வைத்து,இன்னும் இரண்டு மூன்று மாணவர்களை வைத்து ஆனந்தை வம்புக்கு இழுத்து,ஆசிரியரிடம் மாட்டவைக்கிறான் மகேசு. பள்ளிக்கு வரும் செல்லம்மா,தன் மகனைத்திட்டுகிறாள்.டி.சி.கொடுத்துவிடுவேன் எனத் தலைமை ஆசிரியர் மிரட்டுவதற்காகச்சொல்ல, செல்லம்மா டி.சி.யைக் கொடுத்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்கிறாள்.” இந்த அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? எங்கே என்ன நடந்தாலும் தன்னை இகழ்ந்தபடி இப்படியா இருப்பாள்?” என்று ஆனந்த பொருமுகிறான்.அம்மாவை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று ஆகிறது.

மகன் ஆனந்தை ,மதுரையில் இருக்கும் தூய வளனார் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்துவிடுகிறாள் செல்லம்மா.பிரமாண்டமாக இருக்கும் புதிய பள்ளி,ஆனந்திற்குப் பிடிக்கவில்லை. அங்கு  இருக்கும் சூழலும்,ஆசிரியர்களும் ஆனந்திற்குப் பிடிக்கவில்லை.தன்னை இந்தப்பள்ளியில் சேர்த்துவிட்ட,தனது அம்மாவின் மீது வன்மம் கொள்கிறான் ஆனந்த்.  அம்மாவுக்கும் பிள்ளைக்குமாக ஏற்படும் இந்த வன்மத்தை இப்படிச்சொல்கிறார் நாவல் ஆசிரியர்.

.’எல்லாவற்றின் முன்பாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட உபவழியாக வன்மம் இருந்துகொண்டே இருக்கிறது.பசியும் தாகமும் சோர்வும் தளர்ச்சியுமாக வீழ்ந்து போய்ப் பாதியில் மடிந்து முடிந்துபோயிருக்கவேண்டிய பல பிரயாணங்களைக் கடைசிவரைக்கும் உயிர்ப்புடன் வழி கூட்டிச்செல்வதன் பெயர்தான் வன்மம்.ஓயாத மேஸ்திரியாகத் தன் கைச்சவுக்கைக் கீழிடாமல் முன்னால் செல்வதைக் கடைசிவரைக்கும் கருணையின்றிச்செலுத்துவது வன்மத்தின் வெளிப்பாடு …சின்ன்ஞ்சிறிய வயதில் எந்த முகாந்திரமும் இன்றி அங்கே ஒரு பகை உருவானது.ஒரு புறம் பெற்றவள்.இன்னொரு பக்கம் ஒரே மகன்….தாய் மகன் என்பதை மறந்து அங்கே ஒரு ஆட்டம் நிகழத் தொடங்கியிருந்தது”.(பக்கம் 46)

தாயின் மீது ஏற்பட்ட வன்மத்தால்,பிடிக்காத பள்ளிக்கூடத்தை மிகவும் பிடித்ததாகத் தன் தாயிடம் கூறுகின்றான்.அந்தப் பள்ளியில் வகுப்பு லீடராக இருக்கும் ராஜீ என்பவன் ஆனந்தின் மீது வன்மம் கொள்கின்றான். அவனை அஞ்சாமல் எதிர்க்கும் ஆனந்த் சண்டைக்கு அழைத்து அவனது ஆணவத்தைக் கொல்கிறான். ,அவர்களின் ஒத்தைக்கு ஒத்தை சண்டையைப் பற்றி விவரிக்கும் அத்தியாயம் 10 எனக்கு மிகப் பிடித்திருந்த்து.மிகவும் இரசித்து வாசித்த பகுதி இது.ஆனந்தின் அம்மா செல்லம்மா,ஒரு கட்ட்த்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ,மும்பைக்கு சென்று விடுகின்றாள்.அவள் ஆனந்திற்கு என்று பணத்தை வங்கியில் போட்டு விட்டுச்செல்கின்றாள்.இப்போது அத்தை திலகா மட்டுமே ஒரே ஆதரவு ஆனந்திற்கு.

இந்த மாணவன் இப்படிப்பட்டவன்,இவன் தவறு செய்யக்கூடியவன் என்று முன் முடிவு எடுக்கும் ஆசிரியர்களால் நிரம்பியிருக்கிறது ஆனந்த் படிக்கும் பள்ளி.ஆனந்த அவதியுறுகிறான்.ஒரு கட்ட்த்தில் தேறி, படிப்பது என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்.இவனது ஆசிரியர் அருள் ஜெபத்துரை. நல்லவர். நன்றாகப் பாடம் நடத்துபவர்.அவர் மீது ராம்பிரபு என்னும் பணக்கார வீட்டு மாணவன் வன்மம் கொள்கிறான்.ஆசிரியரைச்செங்கலால் மறைந்திருந்து ராம்பிரபு தாக்க முனைகிறான்.செங்கல் தவறி,ஆசிரியருக்குப் பின்னால் சென்ற ராஜீ மீது பட்டு,மண்டை உடைந்து ராஜீ விழுகின்றான்.ஆசிரியர் மேலே பார்க்கும் நேரம் ராம்பிரபு மறைந்துகொள்ள,ஆனந்த் கண்ணில் படுகின்றான். அருள்ஜெபத்துரை ஆனந்துதான் எறிந்திருக்கிறான் என்று சொல்ல,வாட்ஸ்மேன் சாட்சி சொல்ல,உண்மையான குற்றவாளிக்குப் பதிலாக கொலை செய்த்தாக ஆன்ந்த சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகின்றான்.உண்மைக்குற்றவாளியான ராம்பிரபு மீது ஆனந்திற்கு வன்மம் படர்கிறது. சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் இருக்கும் தயா,ராம்பிரபுவின் கழுத்தை அறுக்கவேண்டும் ,அதற்கு நான் துணை நிற்கிறேன் என்று சொல்கின்றான்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து விடுதலையாகும் ஆனந்த்,ராம்பிரபுவை வஞ்சம் தீர்க்க வழி தேடி அலைகின்றான். உதவுவதாகச்சொன்ன தயா,வெறி நாய் கடித்து  பொசுக்கென்று இறந்து போய் விடுகின்றான்.திக்கற்று நிற்கும் ஆனந்த் ,கால் போன போக்கில் அலைகின்றான்.. கேரளா,சென்னை,மும்பை ,டில்லி என்று ஒவ்வொரு இடமாகச்சென்று ஆனந்த வேலை பார்ப்பது ,அங்கு அவனின் அனுபவங்கள் என இந்த நாவல் விரிகிறது.  ஒரு 184  பக்கங்களுக்குள் நூல் ஆசிரியர் காட்டும் வெவ்வேறு களங்களும்,வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றிய விவரிப்புகளும் இப்படியான மனிதர்களுக்குள்தான் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனை உணர்த்துகிறது.


மும்பையில் இருக்கும்போது தன் தாய் செல்லம்மாவைப் பார்க்,கின்றான்.அவள் இவனைப் பார்க்கவில்லை. அவள் போக்கில் அவள் வாழட்டும் என்று ஆனந்த் விட்டுவிடுகின்றான்.அம்மாவின் மீதான வன்ம்ம் இப்போது இல்லை,பக்குவப்பட்டிருக்கிறான்.டில்லியில் ஒரு  நட்சத்திர ஓட்டலில் 5 வருடங்களாக ஆனந்த் வேலை பார்க்கிறான்.அவனுக்கு கேரளாவும்,மும்பையும்,டில்லியும் நிறையக் கற்றுக்கொடுக்கிறது.டில்லியில் வேலை பார்க்கும் இடத்தில் நம்பிக்கைக்கு உரியவனாகவும்,மதிப்பிற்குரியவனாகவும் மாறியிருக்கிறான் ஆனந்த். அந்த நேரத்தில் இவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்வதற்குக் காரணமாக இருந்த ராம்பிரபு ,ஆனந்த் வேலை செய்யும் ஓட்டலில் வந்து தங்குகிறான்.’ அவனது கழுத்தை அறு ‘என்று ஆனந்துக்கு தயாவின் குரல் உள்ளத்திற்குள் கேட்கிறது. ஆனாலும் ஆனந்த் பேசாமல் இருக்கிறான். ராம்பிரபு ஆன்ந்திடம் வந்து ‘என்னை மன்னித்து விடு ‘ என்று கேட்கிறான்.அவனிடம் ஆனந்த் ‘இந்தா பார் ராம், நான் உன்னை மறக்கலை.நீ செஞ்சதெதுவுமே மன்னிக்கவே முடியாதுன்றதும் உனக்குத் தெரியும் ….” என்று சொல்லும் கடைசிப்பக்கமும் ,அதற்கு முந்தைய பக்கமும் இந்த நாவலின் மிக முக்கியமான பக்கங்கள்.

தான் அறிந்த மதுரையை மிக விரிவாகவே இந்த நாவலில் ஆத்மார்த்தி கொடுத்திருக்கிறார்.மூன்று மாவடி,புதூர்,புதூர் அலோசியஸ் ஸ்கூல்,தூய வளனார் மேல் நிலைப்பள்ளி என அவை பற்றிய விவரிப்புகளோடு கதையும் நகர்ந்து செல்வது படிக்கத்தூண்டுவதோடு மதுரையில் வசிக்கும் எனக்கு மிக  நெருக்கமாகவும்  தோன்றுகிறது.சென்னை,மும்பை,டில்லி,கேரளா பற்றிய விவரிப்புகளும் இப்படியே  இருக்கக்கூடும். அந்த ஊர்களில் வசிப்பவர்கள் இன்னும் கூடுதலாகச்சொல்ல முடியும்.

இந்த நாவலின் சிறப்பாக நான் கருதுவது,நாவலுக்கு இடையே சொல்லப்படும் கருத்துகள் என்பவைதான். பயிர்களுக்கு இடையே விதைக்கப்படும் ஊடுபயிர் போல, நாவலின் கதை ஓட்டத்திற்கு மட்டுமல்ல,படிப்பவனின் சிந்தனைக்கும் கூட இந்தக் கருத்துகள் வளம் சேர்க்கின்றன.  ‘சின்னதொரு பார்வை பல்லாயிரம் உளிகளுக்குச்சமம்…வெற்றி  தோல்வியற்ற சம நிலை எந்த இடத்திலும் நன்மை பயக்காது.சொல்லப்போனால் தோல்வி கூட மனதை  ஆற்றிவிடும்.வெற்றி தரவேண்டிய சமாதானத்தை ஒரு போதும் சம நிலை அளிக்காது.மாறாக இதற்கு நீ தோற்றே இருக்கலாம் என்றுதான் கூக்குரலிடும்.சம நிலை என்பது இருபுறமும் தோல்வி என்றால்கூடப் பொருந்தும்’ என்று சொல்லிவிட்டு ‘செல்லம்மா மற்றும் ஒரு பெண்ணாகத் தன் மனத்தைக் கொன்றாள்.அவளுக்கென்று இருந்த குறிப்புகளற்ற கனவுப்பாடல் ஒன்றின் எல்லாச்சொற்களையும் கண நேரத்தில் கிழித்தெறிந்தாள்…’(பக்கம் 17) என்று நாவல் ஆசிரியர் சொல்லிச்செல்வது கவித்துவமாகவும்,தத்துவமாகவும்,கதையை நகர்த்தும் உத்தியாகவும் பயன்படுகிறது. இப்படியான உத்திதான் இந்த நாவல் முழுக்கக் காணப்படுகிறது. நிறையத் திருப்பங்களோடு நல்ல வாசிப்பு அனுபவம் தந்த நாவல் இது. படித்துப்பாருங்கள்

No comments: