Friday 26 August 2022

5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்

                                       5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்

                                                             முனைவர்.வா.நேரு


இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் முழுமையாக டிஜிட்டல் உலகத்தை ஆக்கிரமிக்கப் போகும் இரு நபர்களாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி உருவாகி இருக்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் _ஜியோ, வோடஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க் எல்லாம் இந்த ஏலத்தில் பங்கெடுத்து பணம் கட்டியிருக்கிறார்கள். இன்னும் இந்த சேவையையே தொடங்காத அதானி கம்பெனிக்கு 5ஜி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக தொலைதொடர்பு சேவையில் இருக்கும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5ஜி ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை. இன்னும் கேட்டால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி தொழில் நுட்பமே இன்னும் கொடுக்கப்படவில்லை. 4ஜி தொழில்நுட்பம் கொடுக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராடிப் பார்த்து விட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது. இந்த ஏலத்தில் அம்பானி, அதானி மற்றும் இருவர் என மொத்தமே நான்கு நிறுவனங்கள் மட்டுமே போட்டியில்…



முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர், எந்நாளும் தந்தை பெரியாரின் மாணாக்கர் மானமிகு ஆ.இராசா அவர்கள் இந்த ஏலத்தில் 2,80,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பி.ஜே.பி.யிலிருந்து மழுப்பான பதில்கள் மட்டுமே வருகின்றன. 2ஜியில் 1 லட்சத்து 76,000 கோடி ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி, ஊதிப் பெருக்கிய ஊடகங்கள் அமைதி காக்கின்றன…. பார்ப்பனியத்தின் நரித்தனத்தை அறிய 5ஜி ஏலமும் ஒரு வழியாக அமைந்திருக்கிறது.




 5ஜி வந்தால் இணையத்தின் வேகம் கூடும் என்பது நமக்குத் தெரியும்.சேமிக்கப்படும் செர்வரிலிருந்து கூகுள் போன்ற வழங்குகின்ற மென்பொருள் மூலம் தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கணினி மூலம் தாங்கள் எழுதும் கவிதைகளை, கதைகளை கட்டுரைகளை எழுதி அதனை இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவை மொத்தமாகச் சேமிக்கப்படுகின்றன. எனக்கு பெரியார் பற்றிய கவிதை தேவை என்றால் பெரியார் பற்றிய கவிதை என்று கூகுள் வழங்கியிடம் கேட்கிறேன். அது உலகத்தில் இருப்பவர்கள் யார் யாரெல்லாம் பெரியாரைப் பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார்களோ அவற்றை எல்லாம் செர்வரிலிருந்து எடுத்து வந்து காண்பிக்கிறது. எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். இது இன்றைய நிலை.

வருகின்ற 5ஜி தொழில் நுட்பத்தில் மனிதர்களின் இணையமும் இருக்கும். அதோடு பொருள்களின் இணையம் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். ஒரு வயற்காடு இருக்கிறது. அந்த வயற்காட்டில் ஒரு கிணறு நீர் இறைக்கும் இயந்திரத்தோடு இருக்கிறது.


இந்த வயற்காடும், மின்சார மோட்டாரும் பொருள்கள். இந்த இரண்டு பொருள்களும் இணையத்தால் இணைக்கப்படும். வயற்காட்டில் நெல் பயிரிட்ட பின் வயற்காட்டிற்கு தண்ணீரை இணையத்தின் மூலம் இயந்திரம் பாய்ச்சும். எல்லா நெல் பயிருக்கும் தண்ணீர் பாய்ந்துவிட்டால் போதும், நிரம்பிவிட்டது என்று அந்த வயற்காட்டில் இருக்கும் உணரி சொல்லும். உடனே இயந்திரம் நின்றுவிடும். மனிதர்கள் அங்கு தேவையில்லை.

இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தொடர்புடைய பொருள்கள் எல்லாம் இணையத்தின் மூலம் இணைக்கப்படும். வீட்டிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதை கதவு என்னும் பொருள் உணரி மூலம் உணர்ந்தால். வீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனை மின் கருவிகளையும் இணையம் அணைத்துவிடும். விளக்கு சுவிட்சை அணைக்காமல் விட்டு விட்டோமே என்று எண்ணி நாம் மறுபடியும் வீட்டுக்கதவைத் திறந்து பார்க்க வேண்டியதில்லை. இப்படி விவசாயத்தில், மருத்துவத்தில், செய்திகளில், வாகனங்களில் எனப் பல அதிசயங்கள் மிக விரைவில் நடக்க இருக்கின்றன 5ஜி தொழில் நுட்பம் மூலம். அதேநேரத்தில் 5ஜி அலைக்கற்றைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அய்ரோப்பிய நாடுகளில் தீவிரமான எதிர்ப்பு கிளம்பியது.


“இந்தக் கதிர்வீச்சுக்கு ஆளாகும் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் என்கிற முடிவுக்கு வருவதற்கும் ஓரளவுக்கு ஆதாரம் இருப்பதால்” இந்த வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது. 4ஜி வரை செல்போன் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டன. தொலைவும் 3 அல்லது 4 கி.மீ.க்கு ஒன்று என அமைக்கப்பட்டன. ஆனால், 5ஜி செல் கோபுரங்கள் குட்டையாக அமைக்கவேண்டும். மிகவும் நெருக்கமாகவும் அமைக்க வேண்டும். இதற்கான செலவும் அதிகம் ஆகும் என்கிற நிலையில், தனியார் தொலைதொடர்புத்துறை நிறுவனங்கள் நகரங்களில் மட்டும் மிக மிக பக்கத்தில் 5ஜி செல் கோபுரங்களை அமைத்து, அதிக கதிர்வீச்சு ஆபத்துகளை உருவாக்கி, மிகப் பெரிய அளவிற்கு இலாபம் சம்பாதிப்பார்கள்.

பெண்களின் பங்களிப்பு இணையம் வடிவமைப்பில் இருந்தாலும் முடிவெடுத்து அமல்படுத்தும் இடத்தில் ஆண்களே முழுக்க முழுக்க இருந்துள்ளனர் _ இருக்கின்றனர். “ஆன்லைன் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதால் பாதிக்கப்படுவதில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்தான் அதிகம். சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் 10 பெண்களில் ஆறு பேர் ஏதேனும் ஒரு வகையான ஆன்லைன் வன்முறையை அனுபவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.


1,600க்கும் மேற்பட்ட ஆபாச வழக்குகளின் (பழிவாங்கும் எண்ணத்துடன் பதிவேற்றப்பட்ட படங்கள், விடியோக்கள் தொடர்பான வழக்குகள்) மற்றொரு ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் 90% பெண்கள் என்று தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதில் ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது” என்று பி.பி.சி.யில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. நிஜ உலகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக இருக்கிறது.


இந்த உலகம் இன்றைக்கு முதலாளித்துவ உலகமாக இருக்கிறது. லாபம் வேட்டையாடும் களமாக இணையமும் இருக்கிறது. பெரியாரிஸ்டுகளைப் பொறுத்தவரையில் நாம் மாறுதல்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை வரவேற்பவர்கள்; வரவேண்டும் என விரும்புகிறவர்கள். அதே நேரத்தில் 5ஜி போன்ற தொழில் நுட்பம் வருகின்றபோது, அதனைச் சுற்றி என்ன விவாதங்கள் நடக்கின்றன என்பதையும், அவை எதை நோக்கி மக்களை இழுத்துச் செல்லப்போகின்றன என்பதையும் அறிய வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்கக் குறிக்கோளுக்கு அதனை எந்தெந்த வகையில் எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். அந்த வகையில் 5ஜி தொழில் நுட்பத்தை வரவேற்போம்.


நன்றி : உண்மை இதழ் ஆகஸ்ட் 16-31

No comments: