Monday 21 August 2023

செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்...ஞான வள்ளுவன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் எட்டாவது நூல் அண்மையில் வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே பெரியார்-95,தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் அன்றும் இன்றும்,திராவிட இயக்கமும் எங்கள் ஊரும்,இசைவேளாளர்,ராஜநாயகம்(வரலாற்றுப்புதினம்),ஆச்சாரம்(சமூகப்புதினம்),வரலாற்றில் வென்ற அவர்தாம் பெரியார் என்னும் ஏழு நூல்களின் ஆசிரியர்.மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கும் இந்த 'செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும் ' என்னும் இந்த நூல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரையை இத்துடன் இணைத்துள்ளதோடு,புத்தகம் எப்படிப்பெறுவது என்பதற்கு தொடர்பு எண்ணும்,மின் அஞ்சல் முகவரியும் பதிவு செய்துள்ளேன். வாங்கிப் பயன் பெறுக.





                              அணிந்துரை

                          முனைவர்.வா.நேரு,

            தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

                  பெரியார் திடல், சென்னை-600 007.

 

இந்த நூலை ஆக்கியிருக்கும் நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் தமிழ்நாடு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர். தந்தை பெரியாரியலை களப்பணி வழியாகவும்,கருத்துப்பணி வழியாகவும் பரப்புவதோடு அதனை வாழ்வியலாகக் கடைப்பிடிப்பவர். தன் தந்தை காலந்தொட்டு திராவிடர் கழகத்தில்,தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பயணித்து,பல்வேறு பணிகளைச்செய்து வருபவர்.

அவரால் எழுதப்பட்டு ,அவரின் எட்டாவது நூலாக ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்’ என்னும் இந்த நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.பரந்து பட்ட வாசிப்பு அறிவும்,எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் அறிவோடு அணுகுவதும் இவரின் சிறப்பு. வாசிப்பவர்கள் ‘மெய்ப்பொருள் அறியும்’ நோக்கோடு படைக்கப்பட்டிருக்கும் நூல் இந்த நூல்.தனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதிய நூல் அல்ல இது, பலவகைப்பட்ட தரவுகளைப் பட்டியலிட்டு அதனின் விளக்கமாகவும் ஆய்வு நூலாகவும் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ‘பார்ப்பனர்களும் சாஸ்திரங்களும் ‘என்னும் இயலில் தொடங்கி,’அடிமையாகப்போன அரசர்கள் ‘ என்னும்  இயல்வரை 19 இயல்களைக் கொண்டுள்ளது.’செப்பேடுகளையும் சதுர்வேதி மங்கலங்களையும் பற்றிக் கூற வந்த இடத்தில் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றியும் கூற வந்தது ஏன்? ‘ என்னும் கேள்வியோடுதான் இந்த நூல் தொடங்குகிறது. இந்தக் கேள்விக்கான பதில் ,இந்த நூலை வாசித்து முடிக்கும்போது மிகத் தெளிவாகத் தெரியும்.

மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு கிடைத்த ‘திருவிந்தளூர்ச் செப்பேடு’ என்னும் நூல்தான் இந்த நூலை அவர் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது.’தமிழக வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான செப்பேடுகள் தொடங்கி சமீபத்திய செப்பேடுகள் வரையிலும் பெரும்பான்மையானவை பார்ப்பனர்களுக்கான சதுர்வேதி மங்கலங்கள்,பிரம்மதேயங்கள்,கொடைகள் அளித்த செய்திகளைக் கொண்டவையே.அவைகளைப் பற்றியும் ,அச்செப்பேடுகளில் கூறப்படாத விரிவான ,நிலக் கொடையளிக்கப்படும் நடைமுறையை விளக்கும் திருஇந்தளூர் செப்பேடு பற்றி முழுமையாகவும் எழுதிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொகுக்கப்பட்டதே இந்த முயற்சி ‘ என்று இந்த நூலின் ஆசிரியர் ,இந்த நூல் ஆக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். மிக நல்ல முயற்சி.அந்த முயற்சியின் விளைவு நமக்கு இந்த ஆராய்ச்சி நூல் கிடைத்திருக்கிறது.

இந்த நூல் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றிய உண்மையையும் எளிமையான சொற்களால் விளக்குவதோடு சோழ மன்னர்கள் அதிலும் குறிப்பாக பிற்காலச்சோழ மன்னர்கள் எப்படி பக்தி என்னும் மயக்கத்தால் ஏமாந்தார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடுகிறது.அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் நூல்களின் சிறப்பே, நம்முடைய கருத்திற்கு நேர் எதிராக இருக்கக்கூடியவர்களின் நூல்களில் இருந்தே  நம்முடைய கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களைத் தருவதாகும். ஒவ்வொரு இயலிலும் அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களை நாம் வாசிக்கும்பொழுது அவரின் உழைப்பு நமக்குத் தெரிகிறது.

இந்த நூலில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.பல்வேறு செப்பேடுகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.தமிழர்களும் தமிழ் மன்னர்களும் பார்ப்பனர்களிடம் எப்படி ஏமாந்தார்கள்,என்ற விவரமும் இருக்கிறது.இந்த நூல் வாசித்துவிட்டு வைத்துவிட்டுப் போகும் நூல் அல்ல.ஆங்கிலத்தில் Reference Book என்று சொல்வார்களே,அதனைப் போல நாம் பாதுகாத்து,பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நூல்.பல்கலைக் கழகங்களில்,கல்லூரிகளிலும்  பாட நூலாக வைக்கும் அளவுக்கு செழுமையான கருத்துகளைக் கொண்ட நூல்.

இதனைப் போல இன்னும் பல நூல்களை பெரியாரிய நோக்கில் அய்யா ஞான.வள்ளுவன அவர்கள் படைக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிப்பதோடு,இந்த நூலை நல்ல முறையில் திராவிட இயக்கத்தைச்சார்ந்த தோழமைகளும்,அம்பேத்கரிய,பொதுவுடமை இயக்கத் தோழமைகளும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன், நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                                              தோழமையுடன்

                                              வா.நேரு,15.07.2023


நூலின் தலைப்பு : செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்

நூல் ஆசிரியர்   : ஞான வள்ளுவன்

வெளியீடு       :  இனியன் பதிப்பகம்,வைத்தீஸ்வரன் கோவில்

தொடர்பு எண்   :  9443985889,valluvan54@gmail.com

மொத்த பக்கங்கள் : 142,விலை ரூ 150






 

2 comments:

Kavitha Elango said...

அய்யா ஞான வள்ளுவன் அவர்களின் முயற்சிக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறும்!

முனைவர். வா.நேரு said...

ஆமாம்,நன்றி கூற வேண்டிய எழுத்துப்பணி...அய்யா ஞான வள்ளுவன் அவர்களின் பணி.