Friday, 19 December 2025

இயற்கையைப் படிப்பது. – முனைவர் வா.நேரு

 நவம்பர் 23, 2025இல் எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி

(Hayli Gubbi) எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது, இது சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்திய வான்பரப்பை அடைந்த சாம்பல் மேகங்களால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, குறிப்பாகச் சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.


உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் சூழல் மாற்றம், அந்தப் பகுதியை மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. “நவம்பர் 23, 2025இல் எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது, இது சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்திய வான்பரப்பை அடைந்த சாம்பல் மேகங்களால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, குறிப்பாகச் சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.” இந்த எரிமலை வெடிப்புடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றியும், அதன் தாக்கங்கள் பற்றியும் செய்திகள்  நிறைய வெளியாகின.


எனவே, உலகில் நிகழும் நிகழ்வுகளை அறிவியல் அறிவு கொண்டு உற்று நோக்கி பல்வேறு செய்திகளை அறிவியல் அறிஞர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால், நகருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய செய்திகள் அடிபடுகின்றன.


அண்டார்டிகா கண்டம் என்பது மனிதர்கள் வாழமுடியாத பகுதி. பனிப்பாதுகாப்பு உடைகளைப் போட்டுக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அவ்வப்போது சென்று வரக்கூடிய இடமாக அண்டார்டிகா கண்டம் இருக்கிறது. மனிதர்களால் இன்னும் கண்டுபிடிக்கமுடியாத பல ஆச்சரியங்களைக் கொண்ட கண்டமாக அண்டார்டிகா கண்டம் இருக்கிறது.

அண்டார்டிகா கண்டத்தில் நிறையப் பனிப்பாறைகள் காணப்படுகின்றன. ஏ23ஏ என்று அறியப்படும் பனிப்பாறைதான் இப்போது நகர ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பனிப்பாறை 35 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பகுதியில் இருந்த பனிப்படலத்திலிருந்து உடைந்து மிதந்து நகர்ந்தது. தெற்குப் பெருங்கடலில் மிகப்பல ஆண்டுகளாக அமைதியாக நகராமல் நின்றிருந்தது. இந்த ஏ23ஏ மீண்டும் 2020ஆம் ஆண்டில் நகரத்தொடங்கியது. அண்டார்டிகா பகுதியில்தான் மிகப்பெரும் பனிப்பாறைகள் இருக்கின்றன. பனிப்பாறைகள் கடலில் மிதந்தாலும், முழுக்க முழுக்க நன்னீரைக் கொண்டது ஆகும். மிகப்பெரிய பனிக்கட்டியே பனிப்பாறை என்று அழைக்கப்படுகின்றது.


நாம் அனைவரும் டைட்டானிக் கப்பல் சினிமாப்படம் பார்த்திருக்கிறோம். கப்பல் ஒன்றில் மோதியதால்தான் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தது என்றால், அதுதான் இல்லை. அது எதில் மோதியது என்றால் பனிப்பாறையில்தான் மோதியது. டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையைப் போல் பல இலட்சக்கணக்கான மடங்கு பெரியது இந்த ஏ23ஏ பனிப்பாறை என்று குறிப்பிடுகின்றனர்.


உலகத்தின் இப்போது இருக்கும் பனிக்கட்டிகளில் மிகப்பெரியது இந்த ஏ23ஏ பனிப்பாறை. இதன் எடை ஒரு ட்ரில்லியன் டன்.சென்னையின் பரப்பளவு போல் மூன்று மடங்கு பெரியது ஏ23ஏ பனிப்பாறை தோராயமாக 3,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சதுரமாக வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட ஏ23ஏ பனிப்பாறை இரு திசைகளிலும் நீளவாக்கில் 60 கிலோ மீட்டர் வரை நீண்டுள்ளது தோராயமாக 280 முதல் 300 மீட்டர் தடிமன் கொண்ட இந்தப் பனிப்பாறையின் 10 விழுக்காடுதான் நீரின் மேற்பரப்பிற்கு மேலே தெரிகிறது. அதன் சுமார் 90 விழுக்காடு பகுதி நீருக்குள் மூழ்கியுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர்.


“பழையவைகளை-ஏற்ற அளவுக்கும்  நற்பயன் தரவேண்டிய அளவுக்கும், உபயோகித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்க மாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு, புதியவற்றைக் கண்டுபிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (‘இன்வென்ஷன்’, ’ப்ராக்ரஸ்’) சுலபத்தில் சாத்தியமாகலாம்’’ என்றார் தந்தை பெரியார்.(தந்தை பெரியார், இனி வரும் உலகம்)


புதியவற்றிலே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருந்தால் இயற்கையைப் படிக்கமுடியும் என்று சொல்கின்றார் தந்தை பெரியார்.பனிப்பாறை என்பது இயற்கை. இயற்கையாக உருவாகி, கடலில் மிதந்து செல்லக்கூடிய ஒன்று. ஆனால், இயற்கையான பனிப்பாறைகளைப் பற்றிய ஆராய்ச்சி புதிய புதிய செய்திகளை உலகத்திற்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. 


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 16-31,2025







No comments: