Sunday 23 June 2013

அணமையில் படித்த புத்தகம் : லண்டன் (ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம் )

புத்தகத்தின் தலைப்பு    :        லண்டன் (ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம்)

எழுதியவர்                          :  மு.சங்கையா

வெளியீடு                           :   வாசிப்போர் களம், மதுரை ,   , 160 பக்கங்கள் , விலை ரூ 100 .

                                                                          எத்தனையோ தமிழர்கள் வெளி நாடுகள் போகின்றார்கள், சொந்த காரணங்களுக்காக. ஆனால் சென்ற இடங்களை , பார்த்த இடங்களை  பதிய வேண்டும் என்ற எண்ணம் சில பேர்களுக்கு மட்டுமே வருகின்றது. அதுவும் பார்த்த இடங்களைத  தான் நம்பும் கொள்கைப் பார்வையோடு பார்ப்பதும், பதிவதும் மிகவும் அரிது. அவ்வகையில் இந்தப் புத்தகம் புதுமையான முயற்சி எனலாம்.

                                                                          அணிந்துரையில் " இந்த நூல் இலண்டனை மட்டுமல்லாது இங்கிலாந்தின் அரசியல் பொருளாதார நிலைகளைப் புதிய கோணத்தில் விளக்கி நம்மைச்சிந்திக்க வைக்கிறது உண்மை. : என்று வாசிப்போர் களத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.கருப்பையா சொல்வது உண்மைதான். புதிய கோணத்தில் , புதிய பார்வையில் ஒரு பயண நூல் எனலாம்.

                                                                              " 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மைச் சுரண்டிக் கொழுத்த ஒரு சாம்ராஜ்யம்தான் பிரிட்டன், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இறுகிப்போயிருந்த இந்திய சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு அதிர்வையும், சலனத்தையும் ஏற்படுத்தியதும் 'உடன் கட்டைக்கு ' கொள்ளி வைத்ததும் இதே பிரிட்டன் தான் " என்று முன்னுரையில் பிரிட்டனின் இரண்டு முகங்களைக் காட்டும் நூலாசிரியர் மு.சங்கையா , நூல் முழுக்க பிரிட்டனின் முரண் முகங்களைச்சுட்டிக் காட்டிச்செல்கின்றார் இயல்பாக.

                                                                         மொத்தம் 31 தலைப்புகளில் தனது இலண்டன் பயணத்தை, இலண்டன் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளை, இலண்டனில் தான் கண்ட பல்வேறு இடங்களை நூல் ஆசிரியர் பதிவு செய்திருக்கின்றார். " பிரிட்டன் ஒரு மதம் சார்ந்த நாடாக தன்னை அறிவித்துக்கொண்டாலும் , ஒரு மதச்சார்பற்ற நாடு போல ஜனநாயகப்பூர்வமாகவே இன்று நடந்து கொள்கிறது. முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சி , மதததைக் கொஞ்சம் தள்ளி வைக்க உதவியிருக்கிறது " (பக்கம் 16 ) என்று குறிப்பிடுகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச்சேர்ந்த ஒரு தோழர் இலண்டன் சென்று வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது "நமது நாட்டில் பக்தியின் பெயரால் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கின்றபொழுது , இவை மறையாதா, மக்களிடம்  இந்த பக்தி மனப்பான்மை மறாதா என்ற வருத்தம் ஏற்படும் . ஆனால் இலண்டன் சென்று சர்ச்சுகளுக்கு செல்ல விருப்பம் இல்லாத, பக்தி மனப்பான்மை இல்லாத பல பேரைப்பார்த்த பொழுது ஒரு நம்பிக்கை வந்தது. மதம் விரைவில் முதலாளித்துவ உலகில் கூட  காணாமல் போகும் எனும் நம்பிக்கை வந்தது "என்றார். இந்தியாவில் மக்கள் மாறி விடுவார்களோ என்னும் பயத்தில்தான் ஊடகங்கள் கோயிலையும் , கும்பாவிசேகத்தையும் ஒலிபரப்பிக் கொண்டு அலைகின்றார்கள் போலும்.

                                                        'தோழர் மார்க்ஸின் கல்லறையில்  என்னும் கட்டுரை நூல் ஆசிரியர் மு.சங்கையாவின் உறுதிப்பாட்டையும் கொள்கையையும் காட்டுவதோடு, மார்க்ஸிப்பற்றி தெரியாதவர்கள் அவரைப் பற்றி அறிய இந்தக் கட்டுரை உறுதியாகத் தூண்டும். வோர்ட்ஸ் ஒர்த்தையும் , புரட்சிக் கவிஞரையும் ஒப்பிட்டு (பக்கம் 79 ) நூல் ஆசிரியர் பேசுகின்றார். " பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கூட வோர்ட்ஸ் ஒர்த்தின் பாதையிலேயே பயணிக்கிறது என்றாலும் அதையும் தாண்டி , சமூகத்தின் மீது பாவேந்தர் பாரதிதாசனின் பார்வை ஆழமாய்ப் பதிகிறது " என்று குறிப்பிடுதல் நல்ல ஒப்புமை.

                                                        மிக விரிவாக இலண்டனைப் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம் , நூல் ஆசிரியரின் முதல் புத்தகம் என்றாலும் , நூல் ஓட்டம் மிக அருமையாக உள்ளது. வாசிப்பதில் எந்த இடத்திலும் தடங்கள் இல்லாது நீரோட்டமாக செல்கின்றது. வெளி நாடுகளில் உள்ள தமிழர்களும், வெளி நாடு சென்று வரும் தமிழர்களும், வெளி  நாட்டைத் தெரிந்து கொள்ள விரும்புவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் .  .

No comments: