Sunday 10 January 2021

நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு ...ஓவியா

 

வல்லினச்சிறகுகள் 2021 ஜனவரி இதழ் மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது. வண்ண வண்ணப்புகைப்படங்கள், அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களின் விரிவான பேட்டி,நான் எழுதிய நூல் அறிமுகம்அமெரிக்கப் பெண் கவிஞர் பற்றி புதுக்கோட்டைக் கவிஞர் மு.கீதா அவர்களின் கட்டுரை,கவிதைகள்,நேர்முகம்,கட்டுரைகள் எனப் பன்முகம் கொண்ட பெண் ஆளுமைகளின் பங்களிப்போடு வெளிவந்திருக்கும் இதழை முழுமையாக வாசிக்க இந்தச்சுட்டியை சுட்டுக.

https://tinyurl.com/yy6v9vou


சங்கப்பலகை

         நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு  ...ஓவியா

                     முனைவர் வா.நேரு

நூல்  : பெண்ணும் ஆணும் ஒண்ணு

நூல் ஆசிரியர் : ஓவியா

வெளியீடு : நிகர் மொழி பதிப்பகம் சென்னை-73 பேச:8428477477

மொத்த பக்கங்கள் : 152 விலை ரூ 110

பெண்ணிய சிந்தனையாளர்,பெரியாரிய செயல்பாட்டாளர் ஓவியா அவர்களின் 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இந்தக் கட்டுரைகள் ‘தமிழ் இந்து ‘நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்தவை.” இந்தக் கட்டுரைகள் ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமைவரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதனுடைய போலித்தனம் ,சூழ்ச்சி,அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கும் வண்ணம் சொல்லவேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை “ என்று என்னுரையில் ஓவியா குறிப்பிடுகிறார்.உண்மைதான்.

‘வல்லினச்சிறகுகள்’ என்னும் இந்த இதழில் உலகம் முழுவதும் இருக்கிற தமிழ்ப்பெண்கள் ஆசிரியர் குழுவில், இதழின் பங்களிப்பில், வாசிப்பில் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் நாட்டில் பிறந்து,வளர்ந்து வெளி நாட்டிற்குச்சென்று வாழ்பவர்கள். அவர்களுக்கு மேல் நாடுகளில் இருக்கும்,மேல் நாட்டு பெண்களின் வாழ்க்கைக்கும் ,தமிழகத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கைக்குமான வேறுபாடு மிக எளிதாகப்புரியும். அம்மா டாக்டர்.சரோஜா இளங்கோவன் போன்றவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.பொதுத்தொண்டினை தனது இணையர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களோடு இணைந்து செய்யக்கூடியவர்கள்.அப்படிப்பட்ட, வல்லினச்சிறகுகளில் இருக்கும் பெண் ஆளுமைகளின் தொடர் கருத்து உரையாடலுக்கு அடிப்படையாக இந்த நூல் அமையும் என்ற நோக்கில் இந்த ‘பெண்ணும் ஆணும் ஒண்ணு’ என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்த நினைத்தேன். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன்.

மொத்தம் 31 கட்டுரைகள். அனைத்துமே ஆழ்ந்த பெண்ணியப்புரிதல் நோக்கில் எழுதப்பட்டவை.சமூக ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,தோழர் காரல்மார்க்ஸ்,ஏங்கல்ஸ் ஆகியோரை நினைவுபடுத்தியே முதல்கட்டுரை தொடங்குகிறது.ஏற்றத்தாழ்வுகள் வேண்டும் என்று வாதிட்ட நீட்சே,ஹிட்லர் போன்றவர்களையும் இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது. நாம் எல்லாம் பெண்ணும் ஆணும் ஒண்ணு என்று சொல்லும்போது இல்லை,ஆண்களுக்காகவே பெண்கள் படைக்கப்பட்டவர்கள் என்று இன்றும் மதவாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் மனு நீதி போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் “’சம்மாக ‘இருப்பதற்கு ‘ஒரே மாதிரியாக’ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் வேறுபாடுகள் உள்ளவர்களாக ,வேறுபட்டவர்களாக இருக்கலாம்.ஆனால் சமமானவார்கள் .” என்பதனைச்சுட்டும் ஓவியா நூல் முழுக்க பெண் எப்படியெல்லாம் சமம் இல்லாமல் நட்த்தப்படுகிறாள் என்பதனை  விவரிக்கின்றார்.

“பாலின சமத்துவ்த்தின் முதல் சவால் அதன்மீதான பொது மனிதரின் நம்பிக்கையின்மை.”ஆணுக்கு எப்படி பெண் சம்மாக முடியும் ? என்ற கேள்வி தவிர்க்கவே இயலாமல் அனைவர் மனதிலும் படிந்து கிடக்கிறது”. என்பதனைச்சுட்டும் ஓவியா “கல்வி,அறிவியல்,அறிவு இவற்றியெல்லாம் மீறி பெண்ணின் பிறப்பு என்பது அந்தப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவேண்டிய ஒரு சம்பவமாக ஏன் இன்னும் தொடர்கிறது என்கின்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்கவேண்டும் “. என்று கேள்வி எழுப்பச்சொல்கிறார். கள்ளிப்பால் கொடுமை இன்னும் நடந்துகொண்டுதானே இருக்கிறது பல வடிவங்களில்.”கறுத்த மாப்பிள்ளையும் சிவத்த பொண்ணைத் தேடும் நாடு இது “ என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் “நிறப்பாகுபாட்டின் கொடுமையைப் பேசாமல் பெண் விடுதலையைப் பேச முடியாது “ என்பதனை அடித்துச்சொல்கிறார்.”எல்லோருடைய உடலும் அழகானததுதான் என்பதைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்த “டோட்டாசான் “ புத்தகத்தின் தலைமையாசிரியரை சுட்டிக்காட்டி  நீச்சல் உடை உள்ளிட்ட ஆண்,பெண் உடை வேறுபாடுகளைச்சுட்டுகிறார்.அது மட்டுமல்ல ஆடைகள் தேர்வில் நமது மனதுக்குள் இருப்பதை வெளிப்படுத்தி “ஆசை கொள்ள வைக்கும் சிறுமியர்க்கான உடைகள்தான் அவர்களை ஒடுக்கும் முதல் ஆயுதம் என்பதை உணர்த்துவது உண்மையிலேயே சவாலான பணிதான்” என்று சொல்கின்றார்.இக்கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நமது ஆழ்மனது அழுக்குகளை நாமே அறிந்து துயரப்படலாம்.

தமிழ் எழுத்துலகம் பெண் குழந்தைகளுக்கென தனித்துக்கண்ட முதல் பாட்டான புரட்சிக்கவிஞரின் “ஆராரோ ஆரிரோ “ பற்றி விவரிப்பத்தைப்போன்ற இலக்கிய வரலாறு இந்த நூலில் இருக்கிறது.பல திரைப்படங்கள்,சிறுகதைகளோடு ஒப்பிட்டு பெண்களின் துன்பத்திற்கான காரணங்களை மனதில் பதிய வைக்கிறது.”உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வராவிட்டால் உன் கதி என்ன? என்ற கேள்வி அவள் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது.அவள் காலை பாவடை தடுக்கிறது .மனதை தாயின் வார்த்தைகளே தடுக்கின்றன” என்று தாயே மகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை இந்த நூல் பேசுகிறது.

கேலியோடு இணைந்த விவரிப்பும் இந்த நூலில் வெளிப்படுகிறது.தாய் வீட்டிலிருக்கும் காலம் ,பெண்ணுக்கு என்ன காலம்? காத்திருப்பு காலம்? எதற்காக்க் காத்திருப்பு ? ஓவியாவின் மொழியிலேயே பார்ப்போம்.”தன்னைக் காப்பாற்ற ,தான் பணிவிடை செய்ய வேண்டிய அந்த இராஜகுமாரனின் குதிரைக் குளம்பொலி சத்த்துக்காகக் காத்திருக்கும் காலமே அவர்கள் தாய் வீட்டிலிருக்கும் காலமாக இருக்கிறது.” வரலாற்று அடிப்படையில் ஆண் கடவுள்கள் எப்படி பெண் கடவுள்களின் இட்த்தைக் கைப்பற்றினார்கள்? என்பதையும் பெண்கள் ஏன் கடவுள் மறுப்பைக் கைக்கொள்ள வேண்டும் என்பதற்கு “ வாழ்க்கை முழுவதும் கடவுள் மீதான ஆராதனை என்பது உண்மையில் சமுதாயத்தில் ஆண் தலைமை மீதான ஆராதனையாகவே தொடர்கிறது “ என்னும் உண்மையை எடுத்துப்போட்டு உடைக்கிறார் நூல் ஆசிரியர்.

பாட்த்திட்ட மாற்றங்கள் ஏன் தேவை? எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதனை,பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலைமை -அதனால் பெண் குழந்தைகள் படும் பாடு,பெண்ணின் மூளைக்கு போடப்படும் முதல் விலங்காய் அமையும் வீட்டு வேலைகள்,பெண் குழந்தைகள் சாமியாடுவது…,மாதவிடாய்-அதனால் ஏற்படும் அக-புற வேதனைகள் பற்றிக்கூறி “எந்த ஒரு காரணத்தை வைத்தும் என்னைப் புனிதமற்றவள்,தீட்டானவள் என்று சொல்கின்ற உரிமை இந்த சமுதாயத்துக்குக் கிடையாது என்று பெண் நினைக்கவேண்டும்.அந்தத் தன்மானம்தான் பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை “ என்று தெளிவாக்க் குறிப்பிடுகின்றார்.

திருமணத்துக்கு முன்பு பாலுறவு அல்ல பாலுணர்வே தவறு என்று கருதுகிற சமுதாயத்தில் வாழ்கிறோம் என்னும் எதார்த்த நிலைமையை சுட்டிக்காட்டி பாலியல் அறிவு பற்றி,குழந்தைத் திருமணங்கள் இன்னும் நின்றுவிடவில்லை என்பதைப் பற்றி,காதல் பற்றி,பெண்களுக்கு சம வாய்ப்பும் ,சம ஊதியமும் பற்றிப் பேசும் ஓவியா எழுப்பும் கேள்விகள்,அதற்கான பதில்களை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன.

திருமணம் என்னும் விசித்திரமான சந்தையை விளக்கமாகவே விவரித்து கேள்வி எழுப்புகிறார்.வாழ்நாள் முழுக்க இறுக்கும் சங்கிலியாய் வரதட்சணை இருப்பதைக் குறிப்பிட்டு என்ன தீர்வு என்பதனை நம்மைச்சிந்திக்க சொல்கிறார்.புகுந்த வீட்டின் மீதான வெறுப்பு,தனிக்குடித்தனம்,பெரியார் முன்வைத்த ‘வீட்டுக்கொரு அடுப்படி என்பதை ஒழிக்கவேண்டும் ‘என்னும் தீர்வு,இணையர்களைப் பாடாய்ப்படுத்தும் ‘சந்தேக நோய்’,திருமண உறவுக்குள் பாலுறவு நிர்ப்பந்தம்,பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்குரல்கள்,பெண்களுக்கு இன்னும் கிடைக்காத பொருளாதாரச்சுதந்திரம்,மணமுறிவு,விதவைத்தன்மை,மறுமணம்,எனப்பேசும் இந்த நூல் முடிவாக ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று தீர்வுகளை முன்வைக்கிறது.

இந்த நூலின் 31-வது கட்டுரை ‘தமிழ் இந்து’வில் வராமல் இணைத்தது என்று நினைக்கிறேன்.தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து தனது கருத்துக்களை ஓவியா தொகுத்துத் தருகின்றார்.

நூலின் பதிப்புரையை நூலைப் பதிப்பித்த நிகர்மொழி  பதிப்பகத்தின் பிரபாகரன் அழகர்சாமி,ஜோன்சன் ஜெய்சிங் கொடுத்துள்ளனர்.முதல் வெளியீடாக இந்த நூலைக்கொண்டு வந்துள்ள அவர்கள் “சமத்துவ சிந்தனையையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கக்கூடிய வெளியீடுகளை வெகுமக்களிடம் பரவலாக்க் கொண்டு சேர்க்கவேண்டும் “ என்பதே தமது பதிப்பகத்தின் முதன்மையான நோக்கம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.வளர நமது வாழ்த்துகள்.

நூலாசிரியர் அறிமுகம் சிறப்பாக உள்ளது.’வரலாற்றின் புது வரவு’ எனப்பேராசிரியர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் நட்புரை கொடுத்துள்ளார்.” இந்நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது ,பல செய்திகளைப் புதிதாய் அறிந்து கொண்ட மாணவனைப் போல மகிழ்ச்சியும் ஊக்கமும் பெற்றேன்,நன்றி ஓவியா “என்று குறிப்பிட்டுள்ளார்.அணிந்துரைகளை மூத்த பத்திரிக்கையாளர் இரா.ஜவஹர்,சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சரசுவதி ,பத்திரிக்கையாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் மிகச்சிறப்பாக கொடுத்துள்ளனர்.

“தன் கருத்தோடு உடன்படுகிறவர்களை மட்டுமல்ல,மாற்றுக்கருத்து சொல்கிறவர்களையும் ஒருங்கிணைத்துப்பயணப்பட நினைக்கிற மிகச்சிலரில் ஓவியாவும் ஒருவர்…’’பெண்ணியம் ‘என்பதே மிகச்சிக்கலானதாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில் பெண்களைப் பிணைத்திருக்கும் அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிவது சவால் நிறைந்தது.அதிலும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே விரும்பிப் பூட்டிக்கொண்டிருக்கும் விலங்குகள் ஏராளம். அவை அடிமைத்தளைகள் என்பதைப் புரியவைக்கப் பொறுமையும் அனுபவமும் அவசியம்.இவை இரண்டும் கைவரப்பெற்றிருக்கிறார் ஓவியா “ என்று பிருந்தா சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.உண்மைதான்.தன்னுடைய வாழ்க்கை முழுவதும் சந்தித்த பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவது மட்டுமல்லாது,அதற்கான தீர்வுகளை பெண்ணிய நோக்கில்,முழுமையான பெரியாரியல் புரிதலோடு முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் படிக்க வேண்டிய நூல்.உள்ளடக்கக் கருத்துக்களைப் பற்றி  பெரிய அளவில் விவாதிக்கப்படவேண்டிய நூல்.


நன்றி : வல்லினச்சிறகுகள்  ...ஜனவரி 2021



 


 


 


 


 


 


No comments: