Friday 8 January 2021

புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்- முனைவர் நா.நளினிதேவி

 

வண்ணத்தில் ,இதழிலேயே படித்திட பக்கம் 28 முதல் 32 வரை

இணைப்பு :https://tinyurl.com/yy6m8ryn

சங்கப்பலகை

               புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்.

                        நூல் மதிப்புரை

                        முனைவர் வா.நேரு



                            ஆராய்ச்சிக்கும் எழுத்திற்கும் ஓய்வு வயது என ஒன்று உண்டா? இல்லை என்பதனை தன் எழுத்துக்களால் ,ஆராய்ச்சிகளால் மெய்ப்பிக்கும் முனைவர். நா,நளினிதேவி நம்மை உற்சாகப்படுத்துகிறார் ஓய்வு பெற்ற பேராசிரியரான நா.நளினிதேவி தனது .75 வயதில். 20களில் 30களில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல 70,80 களில் இருக்கும் பெண்களையும் எழுதுவதற்கு வழிகாட்டுகிறார்.அவரால் எழுதப்பட்ட '  புற நானூறு-தமிழரின் பேரிலக்கியம்' என்னும் இந்த நூல் ஓர் ஆய்வு நூலாகும். புற நானூற்றை ஆழமாக ஒவ்வொரு பாடலையும்  படித்து, பாடலின் கருத்தினை உள்வாங்கி, உள்வாங்கிய கருத்தினை இன்றைய நடைமுறையோடு ஒப்பிட்டு புற நானூறு எப்படி தமிழரின் பேரிலக்கியம் என்பதனை நிறுவுகின்ற ஒரு நூலாக இந்த நூல் இருக்கிறது.திருக்குறளில் படித்து ஆராய்ந்து அதன் ஒவ்வொரு குறளுக்கும் பொருள் கூறும் தமிழ் அறிஞர்களை நான் அறிந்திருக்கிறேன்,பழகியிருக்கிறேன். 


நூல்                 : புற நானூறு -தமிழரின் பேரிலக்கியம் - 

நூலின் ஆசிரியர்     : முனைவர் நா.நளினிதேவி

வெளியீடு           : புதுப்புனல்,சென்னை--5 பேச : 9884427997

மொத்த பக்கங்கள்    : 342  விலை ரூ 360 /-


ஆனால் புற நானூறு முழுவதையும் ஆய்ந்து கூறும் ஒருவரை நேரிடையாக அறிவது இதுவே முதல்முறையாகும். தனது ந்ன்றியுரையில் 'ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் என்னுள்ளத்தே நடமாடி என்னை உயிர்ப்பிக்கும் வகையில் உரையாடி உறவாடும் பழந்தமிழ்ப் புலவர்கட்கு என்னென்று நன்றி நவில்வது ' என்று கூறியிருக்கிறார். உண்மைதான் இவர் உள்ளத்தே நடமாடி,உரையாடிய புலவர்களின் புலமையை,வலிமையை இன்றைய நாளுக்கு ஏற்ற வகையில் எடுத்து எழுதியிருப்பதே இந்த நூலின் சிறப்பு.


பதிப்புரையில் 'புதுப்புனல்' பதிப்பாசிரியர் இர.இரவிச்சந்திரன் 'இந்நூலை வாசிப்பதன்மூலம் பல்வேறு ஆய்வு மாணவர்கள் பயன்பெறுவர் என்பது நிச்சயம் " எனக்குறிப்பிடுகிறார்.உண்மைதான்." நான் இந்துவல்ல.நான் தமிழன் என்ற உணர்வு ஏற்பட்ட காலத்தில் கம்பராமாயணம் தமிழர்களின் பேரிலக்கியமாக இருக்க முடியாது.அப்படியானால் தமிழரின் தமிழருக்கான பேரிலக்கியம் என்று எதைச்சொல்வது என்ற தேடலின் விளைவாகவே புறநானூறுதான் தமிழரின் பேரிலக்கியம் என்ற கருத்து என்னுள் எழுந்தது " என்று குறிப்பிடும் கோவைஞானி 'அறத்தின் உய்ர்துடிப்பு ! 'என்னும் தலைப்பில் அணிந்துரையை  கொடுத்துள்ளார்." புற நானூற்றை அங்குல அங்குலமாய் ஆராய்ந்து ,அதன் சிறப்பியல்புகளை இந்த ஆய்வு நூலில் ஆசை ஆசையாகக் கொண்டாடியிருக்கிறார் நளினிதேவி " என்று 'இலக்கியப்பெட்டகம்' என்னும் தலைப்பில் முன்னுரையை ஆருர் தமிழ் நாடன் கொடுத்திருக்கிறார்.அடுத்து என்னுரை என்னும் தலைப்பில் நூலின் ஆசிரியர் நா.நளினிதேவி தனது கருத்துக்களைக் கொடுத்துள்ளார்.


அடுத்ததாக உள்ளடக்கத்தில் 8 தலைப்புகளில் இயல்கள் உள்ளன. புற நானூறே தமிழின் பேரிலக்கியம்','அரசியல் இலக்கியம்',போர் இலக்கியம்'.'நட்பிலக்கியம்','மகளிர் இலக்கியம்',வாழ்வியல் சமுதாய இலக்கியம்,'படைப்பிலக்கியம்','புதுமை இலக்கியம் ' எனும் தலைப்புகளில் உள்ள ஒவ்வொரு இயலும் விரிவாக விரித்துரைக்கத்தக்கன.இவை பக்கம் 24 முதல் பக்கம் 236 வரை இடம் பெற்றுள்ளன.புற நானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் நூல் ஆசிரியரே படைத்திட்ட கதைகளும் நாடகங்களும் 237 பக்கம் முதல் 276 வரை. இந்தக் கதைகளும் நாடகங்களும் வாசிக்கும்போதே நமக்குக் களிப்பூட்டுகின்றன, புன்னகை வரவைக்கின்றன.முழுப்பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஓர் எடுத்துக்காட்டு '(பறம்பு மலை) நான் பேசுகிறேன்' என்னும் தலைப்பில் உள்ளதில் ஒரு பகுதி " புலவர்கள் தமக்குள் மன்னன் பாரியை வஞ்சப் புகழ்ச்சியுடன் பாடிக்களிப்பர்..ஒருவர் ,பாரியைப்போல உலகில் வாரி வழங்குவோர் யாருமில்லை என்று வேண்டுமென்றே தொடங்குவார். மற்றொருவர் இவ்வாறுதான் உலகம் முழுக்கச்சொல்கின்றது.ஆனால் பாரியைப் போல மாரியும் இங்கு உள்ளதே என்பார்.இன்னொரு புலவர்,மாரி சிலபோது பெய்யாமல் போவதுண்டு. ஆனால் பாரி ஒரு போதும் இல்லை என்று கூறாமல் வழங்குபவன் என்பதை அறீவீரா எனத்தொடர்வார் இன்னொருவர் ,இது மட்டுமில்லை.மழை பெய்யாமல் வாடி நின்ற முல்லைக்குத் தன் தேரையே தந்தவன் என்பார்.இப்படியே அவர்கள் பாரியைப் புகழ்வதைத் தமது மனதுக்கு நிறைவாகக் கொள்வதை நான் கண்டும் கேட்டும் எனக்குள் சிரித்துச்சிலிர்ப்பேன் " மலை பேசுவதாகச்சொல்லும் இந்தப் பகுதி கற்பனையையும், புற நானாற்றுப்பாடலையும்  கலந்து நூலாசிரியர் கொடுத்திருப்பது.பிற்சேர்க்கை என்று 277 முதல் 336 வரை பல புற நானூற்றுப்பாடல்களுக்கான விளக்கவுரையை நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் கொடுத்திருக்கிறார். நிறைவாக நூலாசிரியரின் 4 பக்க நிறைவுரையோடு இந்தப்புத்தகம் முடிவு பெறுகிறது.


புற நானூறே தமிழின் பேரிலக்கியம் என்னும் முதல் இயல் நூலாசிரியரின் தனித்துவமான பார்வையைப் புலப்படுத்துகிறது ."சிலப்பதிகாரம், கம்பராமாயணம் காப்பியங்கள் என்று சொல்லப்படுகின்றன. கம்பராமாயணம் என்பது வடமொழி நூலின் தழுவல் நூல். எனவே அதனை தமிழ்க்காப்பியமாக எடுத்துக்கொள்ள முடியாது. முதல் தமிழ்க்காப்பியம் புற நானூறே என்று கூறும் நூலின் ஆசிரியர் " தமிழின் மூல நூல் என்ற முறையிலும் ,வரலாறு என்பது மன்னர்கள் பற்றியது அன்று மக்களைப் பற்றியது என்ற இன்றைய பார்வையிலும் வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குரிய வழிகாட்டுவதே இலக்கியத்தின் பயன் எனும் இக்காலத்தேவையிலும் தமிழ் இலக்கியங்களை மீள்பார்வைக்குட்படுத்திவோமாயின் இத்தகுதிகளை முழுமையாகப் பெற்றுள்ள புற நானூறே  தமிழின் பேரிலக்கியமாகிறது' பக்கம் 28."ஒருவரே பாடியுள்ள பிற பேரிலக்கியம் ஒவ்வொன்றும் ஒரே ஒரு கனியின் சாறு போன்றது என்றால் ,புற நானூறு பல சுவை மிகு கனிகளிலிருந்து பிழிந்தெடுத்த சாறு எனக்கொள்ளலாம் ' எனச்சொல்கின்றார்.வாழ்ந்து மறைந்த வாழும் மக்களின் இன்ப துன்பங்கள் ,இவற்றுக்கான காரணங்கள்,அக,புறச்சிக்கல்கள்,இவற்றோடு வாழ்க்கையின் வெற்றி தோல்விகளையும் அவர்களின் போராட்டங்களையும் முயற்சிகளையும் கூறுவதே மக்கள் இலக்கியம் " பக் 33."புற நானூறு எந்த வகையிலும் மக்கள் துன்பம் தீர்க்கும் வழியாகக் கடவுளைக்காட்டவில்லை. மனிதன் முயன்றால் தம் துன்பங்களுக்கான காரணங்களைக் களைந்து அவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றது. நன்னம்பிக்கை ,எந்தக் குறைபாடுகளையும் தீர்க்க வல்லது.மனிதனின் துன்பத்துக்கு மனிதன்தான் காரணம்,மனிதனால் தீர்க்கமுடியும் என்று மனித ஆற்றலை முன்னிறுத்துகின்றது." என்று குறிப்பிடும் நூலாசிரியரின் ஆய்வுத்திறனை நூல் முழுக்கக்  காண முடிகின்றது.


புற நானூறு அரசியல் இலக்கியம் என்னும் தலைப்பில் நூலாசிரியர் புற நானூற்றுக்கால அரசர்கள் பற்றியும் அவர்களைப் பாடிய புலவர்கள் பற்றியும், அன்றைய அரசியல் நிலைமைக்கும் இன்றைய அரசியல் நிலைமைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரிசைப்படுத்தியும் வகைப்படுத்தியும் கொடுத்துள்ளார்.' ஆட்சியின் அடிப்படையும் நோக்கமும் மக்கள் நலனே என்று கொண்டதால் மன்னர்களைப் போற்றிப்பாடும் பாடல்கள் பெரும்பான்மையும் மக்கள் சார்புடையவனாக விளங்குகின்றன....இன்றைய உலகில் மலிந்து காணப்படும் அரசியல் சீர்கேடுகளுக்கும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கும் உரிய ஆற்றல் வாய்ந்த இயற்கை சார்ந்த கற்பனை கலவாத,கடவுள் இடம் பெறாத தீர்வுகள் கூறும் திறம் புற நானூற்றுக்குரிய தனிச்சிறப்பாகும். காப்பியங்கள் அல்லது பேரிலக்கியங்களின் மையக்கூறு அரசர்களும் ஆட்சி பொறுப்புகளுமே என்ற வகையில் புற நானூறு அரசியல் இலக்கியமாகின்றது என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.இதனைப்போலவே மற்ற இயல்களும் புற நானூறை உணர்ந்து தெளியும் வகையில் அமைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.


நிறைவாக நிறைவுரையில் " புற நானூற்றுப்பாடல் அனைத்தும் எட்டு ஒன்பது வகையான கோணங்களில் கூர்ந்து அணுகப்பெற்று அது தமிழரின் பேரிலக்கியம் என்பதற்கான வலுவான சான்றுகளையும் விளக்கங்களையும் இவ்வாய்வு நூல் உள்ளடக்கியுள்ளது. புற நானூறே தமிழின் முதல் மூலப்பேரிலக்கியமாகும் எனும் புதிய கருத்து தமிழுலகில் அறிமுகமாகிப் பரவி நிலைபெற வேண்டும்.

 இதுவே, இந்நூல் ஆய்வின் அளப்பரிய பயன் ஆகும் " என்று நூலாசிரியர் தனது ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார். 'கரும்பு தந்த தீஞ்சாறே ' என்பார் புரட்சிக்கவிஞர் தமிழைப்..புற நானூறு தரும் கரும்புச்சாற்றைப் பிழிந்து நமது கரங்களில் புத்தகமாய் கொடுத்திருக்கிறார் ,,பேரா.நா.நளினிதேவி.அவரது உழைப்பும் ஆய்வும் போற்றத்தக்கது. புற நானூற்றைப் பருக ,இந்த 'புற நானூறு தமிழரின் பேரிலக்கியம் ;என்னும் நூலைப் படித்திடுவீர்.


நன்றி : வல்லினச்சிறகுகள் -நவம்பர் 2020 இதழ்  


1 comment:

முனைவர். வா.நேரு said...

தமிழரின் பேரிலக்கியம் புற நானூறு காப்பியம் புதிய வடிவில் படைத்திட்ட முனைவர் நா.நளினிதேவி அவர்களுக்கு வாழ்த்துகள்,பாராட்டுகள்!.நன்றியும் தெரிவிப்போம்.....திரு.செல்லப்பாண்டி ஆறுமுகம் அவர்கள்...முக நூலில்