Wednesday 6 January 2021

தந்தை பெரியாரே.. உங்களை நினைவில் கொள்வது

 தந்தை பெரியாரே..

தத்துவத் தனிச்சுடரே!

இந்தக் கொரனா

காலத்தில் உங்களை

நினைவில் கொள்வது

எவ்வளவு பொருத்தமானது ?


மனிதர்கள் அஞ்சி

அஞ்சியே சாகிறார்கள்!

தாங்கள் சொர்க்கத்துக்கு

போவதற்காக மட்டுமே

பணத்தை செலவழித்தவர்கள்

நேரத்தை ஒதுக்கியவர்கள்

எதற்காக  அஞ்ச வேண்டும்..?


எல்லாம் வல்ல அவனின்

செயல் இது ...சரி சரி விடு.

சீக்கிரம் போவோம் சொர்க்கம் 

எனும் நிம்மதியைக் காணாமே...

எந்தப் பக்தரிடத்தும்


பக்தர்கள் அனைவருக்கும்

நன்றாகவே தெரிந்திருக்கிறது...

இப்பிறப்பு மட்டுமே பிறப்பென்று...

இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்க்கையென்று...


பிணங்களை அவர்கள்

எரிப்பவர்களில்லை...

என்றோ ஒரு நாள்

தங்கள் கல்லறைகள்

திறக்கப்பட்டு

கடவுளுக்கு முன்னால்

பாவங்கள் கணக்கிடப்பட்டு

சொர்க்கமோ நரகமோ

நமக்கு எனும்

நம்பிக்கையில் இருப்பவர்கள்...


கொரனாவில் இறந்தவர்க்கு

கல்லறை இல்லை 

என்று சொல்லிவிட்டார்களாம்

கல்லறை பாதுகாப்பாளர்கள்..

கதி கலங்கிப் போனார்களாம்

பிணத்தை என்ன செய்வது...

 சுடுகாட்டில் சென்று

சுட்டிட்டு

மிஞ்சிய சாம்பலை

எடுத்து வந்து

பேழைக்குள் வைத்து

கல்லறையில் புதைத்தார்களாம்!

அட உங்கள் பாவமன்னிப்பு

எழுப்புதல் கணக்கு என்ன ஆனது ?


அவரவர் கடவுள் நம்பிக்கைகள்

அவரவர்க்கு தானாகவே தகர்கிறது...

தவிடு பொடியாகிறது..

இருந்தாலும்

மீசையில் மண் ஒட்டாத கதையாக

காப்பார் கடவுள் என்று

கதை சொல்கிறார்கள்..

இருப்பது கடவுள் அருளால் என்றால்

செத்தவர் எல்லாம்

எவர் அருளால் செத்தார்கள் என்றால்

எக்குத்தப்பாய்

பேசாதே என்கிறார்கள்....


அனைத்தையும் கேள்வி கேள்..

என்ற எங்கள் அய்யா பெரியாரே...

கொரனா காலத்தில் உங்களை 

நினைவில் கொள்வது

உண்மையை உணர்ந்து கொள்வது...


                                                  வா.நேரு,   06.01.2021

No comments: