Monday 26 February 2024

நிகழ்வும் நினைப்பும் 2024-4 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம்

 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம் (25.02.2024- ஞாயிற்றுக்கிழமை)தோழர் கலைமாமணி அகன் என்ற தி.அமிர்தகணேசன் அவர்களின் படைப்புலகம் பற்றிய சிறப்புக் கூட்டமாகவும் நூல் வெளியீட்டு விழாக் கூட்டமாகவும் நடைபெற்றது.  அனைவரையும் வரவேற்று வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ,இந்த நிகழ்வுக்கு எல்லாமுமாக இருந்து உழைத்த எழுத்தாளர் மு.கீதா அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு  வழிகாட்டியது மட்டுமல்லாது எப்போதும் தோழமைகளை வழிநடத்தும் தோழர் கவிஞர் ந.முத்துநிலவன் அவர்கள் தலைமை வகித்து பாடலுடன் கருத்து மிக்க தலைமையுரையை ஆற்றினார்.முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம் எழுதிய 'நீடு வாழ்க நிகழ்காலத்திலே' ,கோவை கவிஜி எழுதிய ' பச்சைமலைப்பூவும் உச்சி மலைத்தேனும் ', தஞ்சாவூர் உமா மஹேஸ்வரி பால்ராஜ் எழுதிய 'எழுதித் தீராத வலி',கலைமாமணி அகன் எழுதிய 'எது கவிதை? என்ன செய்யும் அது ?','வீதி 100 தொகுப்பு முதலிய 5  நூல்கள்  வெளியிடப்பட்டன. நூல்களின் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை அவையில் எடுத்து வைத்தனர்.




தோழர் அகன் அவர்களின் படைப்புகளில்  ‘பயணங்களில் அகன் ‘ என்னும் தலைப்பில் நானும், 'உரைநடைகளில் அகன்' என்னும் தலைப்பில் கவிஞர் வித்யா மனோகர் அவர்களும்,'கவிதைகளில் அகன்' என்னும் தலைப்பில் தோழர் அ.ந. சாந்தாராம் அவர்களும் …உரையாற்றினோம்.தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் அவர்களும் அகனின் படைப்புகள் என்னும் பொதுத்தலைப்பில் அருமையான பாடல்களுடன் உரை நிகழ்த்தினார்.


ஏற்புரையை தோழர் அகன் ஆற்றினார். மிக நல்ல நிகழ்வாக அமைந்தது.படைப்பாளிகள் கோவை கவிஜி,புதுக்கோட்டை சோலச்சி,'எழுதித் தீராத வலி 'நூலின் ஆசிரியர் உமா மகேஸ்வரி பால்ராஜ் என்று பலரையும் பார்ப்பதற்கான,உரையாடுவதற்கான நிகழ்வாக இன்று அமைந்தது. எழுதித் தீராத வலி நூலுக்கு நானும் அணிந்துரை வழங்கி இருந்தேன்.அந்த நூல் ஆசிரியரை இங்குதான் சந்தித்தேன். எழுத்தாளர் சோலச்சி அவர்கள் தனது முதல் நாவலான 'முட்டிக்குறிச்சி ' நூலைக் கொடுத்தார்.வாசிக்க வேண்டும்.தோழர் அகன் 'மகாகவி ' என்னும் தொகுப்பைக் கொடுத்தார். பலரும் தங்கள் வீட்டு  நிகழ்வுக்கு செலவழிப்பது போல நினைத்து, மனமுவந்து  நன்கொடை தந்து அதன் மூலம் நடைபெறும் நிகழ்வாக 'வீதி; இருக்கிறது ..வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கீதா அவர்கள் செலவுகள் போக இன்னும் ரூ 5000 மீதம் இருக்கிறது என்று மேடையிலேயே அறிவித்தார்கள்.

நல்ல முயற்சி. படைப்பாளிகள் பலரும்,வாசகர்கள் பலரும் இணைந்து இந்த வீதி அமைப்பை மிக வீச்சாக புதுக்கோட்டையில் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய இளம் படைப்பாளிகள் பங்கு கொண்டதும் பங்களிப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது .இன்று நடந்தது 116வது கூட்டம்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கூட்டம் காலையில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள். தொடரட்டும் இந்த இலக்கியப்பணி   

2 comments:

Anonymous said...

மனம் நிறைந்த நன்றி அய்யா

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சிங்க.