Tuesday 20 February 2024

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

 


ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணம் செய்கிறது என்னும் வெளிநாட்டுப் பத்திரிகையின் செய்தி கண்ணில் பட்டது.

“ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் பயணம் செய்யும் பாதையைத் தவிர்த்துத் தமிழ்நாடு வேறு வழிகளில் பயணம் செய்து வெற்றி பெற்று வருகிறது என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தமிழ்நாட்டைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், தொழில் மயமாக்கலை பொறுத்தவரை தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதிலும், பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் மற்றும் சர்க்கரை போன்ற உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. அண்மையில், தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்று திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறையில் சாம்பியனாகச் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் dye-casting மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடைத் தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் நிபுணத்துவம் பெற்றவை.” என்று விரிவான செய்தியை பி.பி.சி. தமிழ் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு செய்தி, இந்திய ஒன்றியம் முழுவதும் வளர்ச்சி – பின்பு பகிர்ந்து அளித்தல் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும் பகிர்ந்து அளித்தல், அதன் மூலம் வளர்ச்சி என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இதனை விளங்கிக்கொள்ள ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய ஒன்றிய அரசு அதானி,அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று நினைக்கிறது. அதற்காகப் பெருமுதலாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளிக்கிறது.பொதுவுடைமை வங்கிகளின் மூலமாக இலட்சக்கணக்கான கோடிகளை அவர்களுக்குக் கடனாக அள்ளித் தருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில், அவர்களின் வளர்ச்சிதான் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி என நினைக்கிறது. பெரும்பாலும் இப்படி இந்தியாவின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாம் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அதில் நிரவ் மோடி போன்றவர்கள் பல்லாயிரம் கோடி கடனை வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொண்டு சலுகை பெற்று,வெளி நாட்டில் சொத்துகளை,பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலிருந்து தப்பிப் போய் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும்முதலாளிகளுக்குச் சலுகைகள் அளிப்பதன் மூலமே இந்தியா வளரும் என்பதுதான் இன்றைக்கு ஆளும் பி.ஜே.பி.அரசின் கொள்கை.அவர்கள் ஆளும் மாநிலங்களின் கொள்கை.

ஆனால், தமிழ்நாடு இவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்தது. இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளித்தது தமிழ்நாடுதான்.மற்ற மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்தாத காலத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தமிழ்நாடு அரசாங்கம் அமைத்தது.இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு வங்கிகள் மூலமும் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூலமும் கடனும் உதவிகளும் வழங்கப்பட்டன.கடன் பெற்றவர்கள் முறையாகக் கடனைத் திருப்பிக் கட்டினர். மீண்டும் அதிக அளவில் கடனைப் பெற்றுத் தொழில்களை மேம்பாடு செய்தனர். அலையென எழுந்த பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றனர். விழிப்புணர்வு பெற்றனர். தங்கள் மகன்களை,மகள்களை உயர்கல்வி பெறக் கல்லூரிகளுக்கு அனுப்பினர்.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும்,மலை வாழ் பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக தமிழ்நாட்டுத் திராவிட இயக்க அரசுகள் இயங்கின; இன்றைக்கும் இயங்குகின்றன.

ஜாதி ஒழிப்புச் சிந்தனையை மக்கள் மனதில் ஆழமாகச் சுயமரியாதை இயக்கம் விதைத்தது. அண்மையில் அறிவுச்சுடர் காணொலியில் பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்கள்,திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.அந்தப் பேட்டியில் திராவிட இயக்கம் எப்படி மக்கள் மனதில் 95 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி ஒழிப்பு சிந்தனையை விதைத்தது, ஒவ்வொரு ஜாதியிலும் பிறந்தவர்களில் பலரை எப்படி ஜாதி ஓழிப்பு முற்போக்காளர்களாக மாற்றியது என்பதை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.ஆம். அதனால்தான் தமிழ்நாடு ஜாதிச்சண்டைகள் இல்லாத,மதச்சண்டைகள் இல்லாத ஒரு மாநிலமாக,அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.அதனால் சமூக முன்னேற்றமும்,கல்வி முன்னேற்றமும் ,பெண்கள் முன்னேற்றமும், தொழில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல; தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் கிராமங்களை ஒழிக்க வேண்டுமென்றார்.கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், குலத்தொழில் ஜாதியாக முடிவெட்டுதல்,துணிகளை வெளுத்தல்,பிணங்களை எரித்தல் போன்ற தொழில்களைச் செய்பவர்களை கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு வரச்சொன்னார். ஜாதி இழிவிலிருந்து வெளியேறி, குலத்தொழிலை விட்டுவிட்டு, கல்வி கற்று, பொருளாதார ரீதியாக, சுயமரியாதையோடு வாழ்வதற்கான வழியைத் தந்தை பெரியார் சொன்னார். திராவிட இயக்க ஆட்சிகள் அதற்கான பாதைகளை அமைத்துக்கொடுத்தன.பெரும் பாய்ச்சல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பல நூல்கள் இப்போது வருகின்றன. அப்படி வந்த ஒரு புத்தகம் ‘”Dravidian Years” என்பது. அதன் ஆசிரியர் எஸ். நாராயணன் அவர்கள்..
“”அரசியல், வளர்ச்சி, நிருவாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஓர் உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அந்த நூலைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,

“இதுதான் ‘திராவிட மாடல்.’ எல்லாச் சமூகங்
களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்தப் பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

“மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய அய்ந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இது குறித்துத் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டீன் கூறுகையில், “நம்முடைய முதலமைச்சர் மறைமுகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், இது பெரியாரின் பூமி என்பதைத்தான்! பெரியார் எதையெல்லாம் இந்தச் சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர். ஆகவே, தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறார். பிறப்பொக்கும் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதல்வர் குறிப்பிடுகிறார்” என்கிறார்.”(பத்திரிகைச் செய்தி)

“நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகையின் செய்தி பற்றிப் பேசிய தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் “எங்கள் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் நாங்கள் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை” என்று கூறினார். தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிடுகிறோம். ஸ்காண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கு மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டுகளைப் போடுகிறது. தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய முறையான நிதிப்பங்கீட்டைக் கொடுக்க மறுக்கிறது. பெரிய அண்ணன் தோற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ்நாடு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5 சதவிகிதம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய தொழிற்சாலை பெண் ஊழியர்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய வெற்றி. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும்,’அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் திராவிட மாடலின் நோக்கம் முழுமையாக அடையப்படவில்லை என்றாலும் அதை நோக்கிய வெற்றிகரமான பயணமாக தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் பயணம் இருக்கிறது. வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்!

நன்றி : உண்மை இதழ் -பிப்ரவரி 16-29 ,2024

No comments: