ஜாதி நோய் போக்கும்..ஆதலினால்காதலிப்பீர்…
காதலா ?
அய்யோ
கூடாது கூடாதென
கூக்குரல்
எழுப்புகிறது
ராமசேனைக் கூட்டம்
காமத்தை
மட்டுமே
கடவுளின் பண்பாய்க் காட்டி
கதை புனைந்து
காசு பறித்தவர்கள்!
நாங்கள்
கலாச்சாரக் காவலர்கள்
எனும் முகமூடியோடு
கைகளில்
காட்டுமிராண்டிக் கால
ஆயுதங்கள் ஏந்தி
மங்களூர் நகரில்
நகர்வலம் வந்திருக்கின்றார்கள்
கவனம் ! கவனம் !
ஆண் பெண் உடலுறவை
விதவிதமாய் விவரிக்கும்
சிற்பக் கூடங்களாய்
கோவில்கோபுரங்களை
அமைத்தவர்கள்
இன்றைக்கும் அதனை
பத்திரமாய் வர்ணம்
பூசி கும்பாபிசேகம்
செய்து வைப்பவர்கள்…
கோபியர் கொஞ்சும்
குமணா என்று
அறுபதினாயிரம் மனைவியர்
கடவுள் கண்ணனுக்கு
என்று பட்டியலிட்டவர்கள்…
ராமனொரு கடவுள்
அவன் அப்பன் தசரதனுக்கு
அறுபதினாயிரம் மனைவியர்
மற்றும் மூன்று
பட்டத்தரசிகள் என்றவர்கள்….
இவள்
அய்வருக்கு மனைவி
ஆனாலும் கிட்டாமல்
போன கர்ணன் மேலும்
ஒரு கண் இருந்தது
என்று பத்தினி திரவுபதிக்கு!
பட்டியலிட்டவர்கள்….
பண்பாடு என்பதும்
ஒருவனுக்கு ஒருத்தி
என்று இவர்கள்
சொல்வதெல்லாம்
வெறும் சொல்
என்பதை நாம் அறிவோம்…
ஜாதிக்கட்டமைப்பு
குலையக்கூடாது
என்றான் மனு
கலப்புத் திருமணங்கள்
நடக்கக்கூடாது
என்றான் மனு
மீறி நடந்தால்
கடுமையாகத்
தண்டிக்கவேண்டும்
என்றான் அவன்
மனு அதர்மத்தை
நடைமுறைப்படுத்த
துடிப்பவர்கள்
இவர்கள்
கோட்சேயின் வாரிசுகள்
இவர்கள் காதலின்
கலப்பு மணத்தின்
எதிரிகள் இவர்கள்
ஒரு ஆணும் பெண்ணும்
நட்பு கொள்வதோ
காதல் கொள்வதோ
அவ்விருவர் மட்டுமே
சம்பந்தப்பட்ட விசயம்
மூன்றாவது நபராய்
மூக்கை நுழைப்பதற்கு
எவனுக்கும்
அருகதை இல்லை
காதல் வலு
சேர்க்கும்
காதல் சமூகத்தின்
ஜாதி நோய் போக்கும்...
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும்!
ஆதலினால்
காதலிப்பீர்.
---------------- ப.க.தலைவர் - வா
நேரு அவர்கள் 14-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில்
எழுதியது.
நன்றி: தமிழ் ஓவியா இணையதளம்
No comments:
Post a Comment