Thursday, 22 February 2018

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்....வி.எஸ்.முஹம்மது அமீன்

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்
நூல் ஆசிரியர்              : வி.எஸ்.முஹம்மது அமீன்
வெளியீடு                  : மனக்குகை,சென்னை-33 அலைபேசி : 9841436889
முதல்பதிப்பு                : மே,2007. மொத்த பக்கங்கள் 95 ,விலை ரூ 30/-
மதுரை மைய நூலகம் எண்  : 177829

                              'பதிவு செய்யப்படாத மனிதர்கள்' என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத்தொகுப்பு. 9 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. 'ஒரு நெசவாளியும் பட்டறையும் ' என்னும் தலைப்பில் தாழை மதியவன், 'துணிச்சல் மிக்க பதிவு ' எனும் தலைப்பில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், 'இன்ஷா அல்லாஹ் ' என்னும் பெயரில் கலாப்ரியா ஆகியோர் நூலின் உள்ளே புகுவதற்குமுன் இந்த நூலைப் பற்றியும், நூலின் ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல அறிமுகத்தையும் பாராட்டையும் கொடுத்திருக்கின்றார்கள். 






                            9 சிறுகதைகளும் ஒவ்வொரு உட்பொருளில் உள்ளன. ஆனால் அனைத்திலும் வாழ்தலுக்கான உழைக்கும் மக்களின் துயரமும் சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படும் துன்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. 'நெய்தல் ' என்னும் முதல்கதை சிக்கந்தர் என்னும் நெசவாளியை , அவரின் நெய்தல் நேர்த்தியை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. உழைப்பதில் கிடைக்கும் சுகம் மட்டுமே அவருக்கு சுகமாகத்தெரிவதையும் மகன் நல்ல வேலைக்கு வெளி நாட்டில் போனதால் மனைவி உழைக்க வேண்டாம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்வதைக் கேட்காமல் உழைப்பதையும் மகன் வந்து தறியை விற்றபின்பு என்னதான் சுகமான சாப்பாடாக இருந்தாலும் உழைக்காமல் சாப்பிடப்பிடிக்காமல் அவர் மனம் படும் பாட்டையும் மிக நேர்த்தியாகவே வி.எஸ்.முஹம்மது அமீன் சொல்லிச்செல்கின்றார். பக்கத்து தெருவில் இருக்கும் கரீம் வீட்டிற்குச்சென்று வீட்டிற்குத் தெரியாமல் அவர் நெய்ய ஆரம்பிப்பதையும் 'கொத்து ரூபா முக்கியமில்லப்பா...உழைச்சுத் திண்ண உடம்புக்கு ...உறங்கித் திண்ண முடியல... தினசரி காலையில் உன் வீட்டிற்கு வந்து நெய்றேன் ' என்று சொல்வதை மிக அருமையாக கதையைச்சொல்கின்றார் ஆசிரியர். எனது உறவினர் ஒருவரின் மகன் சாப்டூவேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர் 70 வயதுகளைக் கடந்து உழைத்து உழைத்து ஓடானாவர். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று பிள்ளை வருந்தி அழைத்தாலும் அங்கு அவர் சென்றாலும் அவருக்கு நிம்மதி கிராமத்திற்கு வந்து காட்டு வேலையைப் பார்ப்பதில்தான் இருக்கிறது என்பது ஞாபகம் வந்தது. உண்மைதான் இன்றைய இளைய தலைமுறை ,போன தலைமுறையின் உழைப்பையும் ,அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உழைப்பிற்கான ஈர்ப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்தக் கதை அதற்கு உதவும்.

'வெளிச்சம் இல்லாத உலகு ' - தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது, அண்ணனுக்கு நடக்காமலேயே , கதையின் இறுதியில்தான் அண்ணன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடப்படுகின்றது. அவர்களுக்கு உலகமும் உறவுகளுமே வெளிச்சம் இல்லாமல்தான் இருக்கின்றார்கள் என்பதனை சுட்டுகின்றார்.நட்புக்கு முன்னால் மதங்கள் எல்லாம் காணாமல் போகும் மனித நேயம் பற்றிப் பேசும் கதை 'திசம்பர் 6' . என்னுடன் பணியாற்றிய நண்பர் பசீர் அகமதுவும்,சின்னாளபட்டி காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆறுமுகமும் அப்படி ஒரு நண்பர்கள். உயிருக்குயிரான நண்பர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான நண்பர்கள். அவர்களை எல்லாம் இந்த மதம் பிடித்த மனிதர்கள் மத அடிப்படையில் பிரிக்க இயலாது. அப்படி இரு வேறு நம்பிக்கை உள்ள இரண்டு நண்பர்கள், அவர்களது நம்பிக்கை, உடைந்த ஒரு சிலை பற்றிய கதை திசம்பர் 6. நடப்பு கொடுமைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார். 

"பாத்திமா +2" பணம் இல்லாத காரணத்தால் ஆசிரியர் பயிற்சி சேர இயலாத ஒரு மாணவியின் கதையைச்சொல்கின்றது.வாப்பா,படிக்காத அண்ணன்மார்கள், அதில் சாதிக் என்பரால் வாப்பா அடையும் துன்பம், 'நீயாவது ஒழுங்கா படிப்பிளா ? ' என்னும் கதையின் முதல் வாக்கியத்தில் துவங்கும் இயலாமை கலந்த எதிர்பார்ப்பு கதை முழுக்க பரவி, முடியாமையில் முடிகின்றது. ஆனால் இஸ்லாம் என்பதால் சீட்டு கிடைக்கவில்லை என்பதாக கதை முடிவதில் மாறுபட்ட கருத்து உண்டு. பணம் உள்ளவர் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் பயிற்சிக்கல்லூரி முதலாளிக்கு பணம்தான் முக்கியமாகத் தெரியும் என்பது எதார்த்தம்.

'பொய்த்துப்போகும் சாபங்கள்' ,'29 A' என்னும் தலைப்பில் அடுத்தடுத்த கதைகள்.ஒரு மின்சார ஊழியருக்கு நேர்ந்த இறப்பையும் அதற்கு பின்னால் அவர் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் சேகர் என்னும் பாத்திரப்படைப்பால் நேர்த்தியாக 'பொய்த்துப்போகும் சாபங்கள் கதையில் சொல்கின்றார்.  அவரின் அனுபவத்தையும் பார்த்த அனுபவத்தையும் சொல்லும் கதை'29A'. 'பதிவு செய்யப்படாத மனிதர்கள் ' என்னும் தலைப்பில் ஆன கதை அடுத்த கதை." சுபாஷ் சந்திர போஸூடன் நெருக்கமாக இருந்த போராட்ட தியாகியின் சுதந்திரப்போராட்ட வரலாறு பதிவு செய்யப்படாமல் போவதைப்பற்றிய ஆசிரியரின் மனக்கவலையை வெளிப்படுத்தும் கதைதான் பதிவு செய்யப்படாத மனிதர்கள். ....ஒரு நல்ல கதை வாசித்த அனுபவத்தை இந்தக் கதை தருகிறது " என்னும் தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் கருத்து உண்மைதான். இஸ்லாம் மதத்திற்குள் நிலவும் மூட நம்பிக்கை பற்றி 'செய்யதலி பாத்திமா ' என்னும் கதை பேசுகிறது. இரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்களைப் பற்றிய கதையாக 'யாவரும் கேளிர் ' என்னும் கதை அமைந்திருக்கிறது. தனது மன எதிர்ப்பை கதையாகக் கொடுத்திருக்கிறார் எனலாம்.

                        மொத்தத்தில் 9 கதைகள்தான் என்றாலும் கதைகளின் நடை மிக ஈர்ப்பாக இருக்கின்றது.தோப்பில் முகம்மது மீரான் கதைகளைப் போல வட்டார மொழியில் அமைந்திருக்கும் கதைகள், ஆனால் வாசிப்பதும் ,சொற்களைப் புரிந்துகொள்வதும் அவ்வளவு கடினமாக இல்லை. கதைகளை வாசிக்கும்போது ,தனது மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் எனத்தெரிகிறது, ஆனால் கதைகளின் ஊடாக மனித நேயம்தான் வெளிப்படுகின்றது,பக்தி வேண்டும் என்னும் பறைசாற்றல் இல்லை. 

                           " அமீனுக்கு கரு,களங்கள் மட்டுமல்ல,கனிவான மொழி நடையும் கைகூடி வந்திருக்கிறது.;கை கொடுக்கிறது.இனிமையும் எளிமையும் கைகோர்த்து கதையோட்டத்தையே நீரோட்டமாக்குகிறது.அந்நீரோட்டத்தின் அலைகளாய் நுரைகளாய் உரையாடல் உயிர்த்தெழும் அழகை கதைகள் தோறும் காணலாம் " என்று சொல்கின்றார் தாழை மதியவன் தனது முன்னுரையில். 
படித்துப்பார்க்கலாம். நம்மைச்சுற்றி வாழும் நமது இஸ்லாமிய சகோதரர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இதனைப் போன்ற சிறுகதைகள் உதவும். தெரிந்து கொள்ளலும்,புரிந்து கொண்டு உதவுவதும்தானே மனித நேயத்தின் அடிப்படை,அதற்கு இக்கதைகள் உறுதியாக உதவும். படித்துப்பாருங்கள்.

குறிப்பு : இணையத்தில் இந்தப்புத்தகத்தினை தேடியபொழுது இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது தெரிந்தது. இரண்டாம் பதிப்பின் அட்டையை இணையத்திலிருந்து எடுத்துப்போட்டிருக்கின்றேன்.

23.02.2018 காலை 7 மணி

Sunday, 18 February 2018

‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல்......

‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல் கீழ்க்கண்ட தலையங்கத்தில் தீட்டியுள்ளது.
தலையங்கம் வருமாறு:
பாஜகவா இப்படி?
கடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகத் திறம்பட செயல்படுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்திய அரசுப் பணி அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருக்கிறது. மதிற்சுவரைத் தாண்டிச் சென்று பூந்தொட்டிகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சாணத்தைக் கரைத்து வீட்டின் சுவரில் ஊற்றி இருக்கிறார்கள்.
இது ஏதோ அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால் திட்டமிட்டு ஓர் அரசியல் கட்சியால், அதுவும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களமிறங்கி இருக்கும், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் இந்த வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
முதலிலேயே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்றால் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொடியுடன், புவனேசுவர் நகர பாஜக தொண்டர்கள் முதல்வரின் தனிச்செயலாளரான கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டின் முன் திரண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அனைத்துமே ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? தமிழகத்தில் மேலூரைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஒடிஸா மாநிலத்தில் பணிபுரியும் இந்திய அரசுப் பணி அதிகாரி அவர். இவரது திறமைக்கும் நேர்மைக்கும், ஒடிஸாவில் பல்வேறு சம்பவங்களும், செயல்பாடுகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
விஜயந்த் பாண்டே என்பவருக்கு, ஒடிஸா மாநிலத்தைச் சேராத தமிழர் ஒருவர் மீது முதல்வர் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதில் பொறாமை ஏற்பட்டதில் வியப்பில்லை. விஜயந்த் பாண்டே இப்போது பாஜகவில் சேர்ந்து விட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியனின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜக இப்படி யொரு செயலில் ஈடுபட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், அடுத்த ஆண்டு ஒடிஸாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுபவருமான தர்மேந்திர பிரதான் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. ‘ஒடிஸா மக்களின் வரிப்பணத்திலிருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிஸா மக்கள் போராடத் தயங்கமாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்’ என்று அவர் கூறி இருப்பது இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதாக அல்லவா அமைந்திருக்கிறது?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வேற்று மாநிலத்தவர்கள் இந்திய அரசுப் பணி அதிகாரிகளாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் தலைமைச் செயலாளராக எல்.கே. திரிபாதியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக ஜே.கே. திரிபாதியும், உளவுத் துறைத் தலைவராக அமரேஷ் பூஜாரியும் இருந்திருக்கிறார்கள். அந்த மூன்று பேருமே ஒடிஸாக்காரர்கள். தமிழரல்லாதவர்கள் என்பதால் அவர்கள் தவிர்க்கப்படவோ ஒதுக்கப்படவோ இல்லையே...
தற்போது ஒடிஸாவில் தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய அரசுப் பணி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களது திறமையால் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். மேலூர் வெள்ளையாம் பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருப்பது ஒடிஸாவைச் சேர்ந்த சுஜாதா என்பவரை. அவரும்கூட ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான்.
ஒடிஸாவில் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராகத் தொடர்பவர் நவீன் பட்நாயக்தான். அதுமட்டுமல்ல, தேர்தலுக்குத் தேர்தல் பிஜு ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. நவீன் பட்நாயக்கின் வெற்றிக்குக் காரணம், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழரான அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் சிறப்பான நிர்வாகம்தான் என்பது அனை வருக்குமே தெரியும்.
வர இருக்கும் பிப்ரவரி 24ஆம் தேதி பிஜெபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்க இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, வெற்றி பெறாவிட்டாலும் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திலாவது வந்து விட வேண்டும் என்று துடிக்கிறது. அதற்காக, திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் மீதா தாக்குதல் நடத்துவது? பாண்டியனை முதல்வர் நவீன் பட்நாயக்கிடமிருந்து அகற்றுவதால் பிஜு ஜனதா தளம் பலவீனமடைந்துவிடும் என்றா பகல் கனவு காண்பது?
மாநில உணர்வுகளின் அடிப்படையில் தோன்றிய திமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள்கூட, இந்திய அரசுப் பணி அதிகாரிகள் மாநிலங்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பேசியதில்லை. தேசியக் கட்சியான பாஜக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, இப்படி மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறதே, அதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது!
......நன்றி : விடுதலை 18.02.2018


Monday, 29 January 2018

எதிர்க்கவிதையாளர் நிகனோர் பர்ரா!........சமயவேல்

எதிர்க்கவிதையின் முன்னோடியான நிகனோர் பர்ரா, சிலியின் சான்டியாகோ நகரில் ஜனவரி 23-ல் தனது 103-வது வயதில் காலமானார். “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக் குரல் அவருடையது” என்று அந்நாட்டு அதிபர் மிச்செல் பாச்சிலே புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நிகனோர் பர்ரா, லத்தீன் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குள்ள கவிஞர். நீண்டகாலமாகக் கவிஞர் பாப்லோ நெருதா தக்கவைத்திருந்த ஸ்தானத்தின் சரியான வாரிசாக அமைந்தார். எதிர்க்கவிதையின் பிரதிநிதியாக, சிலியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இலக்கிய வெளிப்பாட்டை புரட்சிகரமாக மாற்றியவர். ஒரே சமயத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சித் ததும்பலாகவும் எல்லாவற்றுக்குமான பதிலியாகவும் எளிதில் அணுக முடிவதாகவும் இருந்த இவரது எதிர்க்கவிதை, ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் அலங்கார ‘ரொமாண்டிக்’ மரபுக்கு எதிரானதாக இருந்தது.

சிலி நாட்டின் சில்லான் என்னும் சிறுநகரில் 1914-ல், இசையால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி வயலெட்டா பர்ரா, உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். பள்ளி ஆசிரியரான அவரது அப்பா இரவில் கிட்டார் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், பாடுவதும் ஆடுவதும் போக அவர் குடிக்கவும் செய்தார். அப்பாவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து அவரது கிட்டாரின் நரம்புகளைக் கழற்றிவிட்டார் இளம்வயது நிகனோர் பர்ரா. தனது வாழ்க்கை முழுவதும் அவர் செய்யவிருந்த கலகங்களின் முன்னோட்டம் அது.

சான்டியாகோவில் உள்ள ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளியின் கல்வி உதவித்தொகையை பர்ரா வென்றார். அவரது முதன்மையான ஆர்வம் இலக்கியமாக இருந்தபோதும் கணிதத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். சிலி பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு சென்று எந்திரவியலும் பிரபஞ்சவியலும் பயின்றார். ஒரு இயற்பியல் பேராசிரியராக சிலி திரும்பிய அவர் ஆர்க்கிமிடீஸ், அரிஸ்டாட்டிலிருந்து நியூட்டன் வரையிலும் பயின்றார். நியூட்டனை நிராகரித்த அறிவியல் ஞானம், ஒரு கவியாக பர்ரா வளர்வதைப் பாதித்தது. எந்த ஒரு விஷயத்தின் உண்மையும் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது என அவர் நம்பத் தொடங்கினார். கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகளைக் கவிதை கையாள வேண்டும் என நம்பினார்.

தனது சமகால அக்கறைகளைக் கையாள ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வால்ட் விட்மனின் பேச்சு மொழியையும், காஃப்காவின் அவல நகைச்சுவையையும் இணைக்கும் முயற்சியில் சொற்களை இரு நிலைகளில் பயன்படுத்தினார். ஒன்று மற்றதை விமர்சிக்கையில் ஒரு நகைமுரண் விளைவு உருவாகியது. இந்த வகையில் கவிதைகளை, கணிதத் தேற்றங்களாக எழுத ஆரம்பித்தார் பர்ரா. குறைந்த சொற்கள், நிறைந்த உள்ளடக்கம். மொழிச் சிக்கனம். படிமங்கள் இல்லை. உருவகங்கள் இல்லை. நேரடிக் கவிதைகள் இவ்வாறே உருவாகின. பிழைப்புக்கு இயற்பியல், உயிர்த்திருப்பதற்குக் கவிதை என்றார்.

லத்தீன் அமெரிக்காவில் முதல் நோபல் பரிசைப் பெற்ற, கவிஞர் கேப்ரீயலா மிஸ்ட்ரால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மேடையில் தாவிக் குதித்த ஏறிய பர்ரா ஒரு கவிதை வாசித்தார். அதைக் கேட்ட மிஸ்ட்ரால், “உலகளாவிய புகழை அடையப்போகிற ஒரு கவி நம்முன் நிற்கிறார்” என்றார். அது உண்மையும் ஆகியது. பிறகு, பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். பர்ராவின் ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார் நெருதா. இத்தொகுப்பு 1954-ல் வெளியாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது. இரு விருதுகளையும் வென்றது. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டை, பர்ராவால் தகர்த்தெறியப்பட்டது. அடுத்ததாக வெளியான ‘சலான் செய்யுள்கள்’ என்னும் தொகுப்பு, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அசலான, புதிதான குரலை உறுதிசெய்தது. பிறகு 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.

சமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். தனது சுதந்திரத்தை அவர் பெரிதும் பேணிய போதிலும் அவரது கவிதைகளில் அரசியல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நான் வலதையோ இடதையோ ஆதரிக்கவில்லை. வார்ப்பில் கட்டிதட்டிப்போன எல்லாவற்றையும் உடைக்கிறேன்” என்றார். யதார்த்தத்தை சார்பியல்ரீதியாகப் பார்க்கும் அவரது பார்வை, எல்லா வகையான அரசியல் கோஷங்களையும், அவை எத்திசையில் இருந்து வந்தாலும், ஐயப்பட வைத்தது. சிலியின் அயந்தே நாட்களில் அவர் விலக்கப்பட்ட கவியாக இருந்தார். ஆனால் ‘கலைப் பொருட்கள்’ என்னும் ஒரு சிறிய கேலிச்சித்திரம் போன்ற கிறுக்கல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டார். இதுவரை கவிதையே வாசிக்காதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும்படி விளம்பரங்களைப் போல அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. பின்னாட்களில் சூழலியல் கவிதைகளையும் எழுதி ‘எக்கோ போயம்ஸ்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். ‘இன்னொரு முறை என்னால் இந்தப் பூமியைப் படைக்க முடியாது’ என்று கடவுள் கூறுவதாக எழுதினார்.

சிலியின் தேசிய விருதை 1969-லும் 1981-லும் பெற்றார். ஸ்பானிஷ் மொழியின் மிக உயரிய செர்வாண்டிஸ் விருதை 2011-ல் பெற்றார். தான் எழுதத் தொடங்கியதிலிருந்து ஒரு கலகக்காரக் கவியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் நிகனோர் பர்ரா.

- சமயவேல், கவிஞர், ‘அரைக் கணத்தின் புத்தகம்’,

‘இனி நான் டைகர் இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: samayavelk@gmail.com

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

நான் செல்வதற்கு முன்பு

ஒரு கடைசி ஆசையைப் பெறுவதாக நான் நம்புகிறேன்:

தாராளமான வாசகர்களே

இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்

நான் என்ன கூற விரும்பினேனோ அதுவே இல்லை

இது ரத்தத்தில் எழுதப்பட்டபோதிலும்

நான் என்ன கூற விரும்பினேனோ அது இல்லை.

என்னுடையதைப் போலத் துயரமானது எதுவும்

இருந்திருக்க முடியாது

எனது சொந்த நிழலால் நான் தோற்கடிக்கப்பட்டேன்:

எனது சொற்கள் என் மேல் பழி தீர்த்தன

வாசகரே, நல் வாசகரே, என்னை மன்னித்துவிடுங்கள்

நான் உங்களை விட்டுப் போக முடியாவிட்டால்

ஒரு கதகதப்பான தழுவலோடு,

நான் உங்களை விட்டுப் போகிறேன்

ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் வருத்தமான புன்னகையோடு.

அவ்வளவுதான் நானாக இருக்கலாம்

ஆனால், எனது கடைசி வார்த்தையைக் கேளுங்கள்:

உலகத்தில் இருக்கும் மாபெரும் கசப்புடன்

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.

ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: மில்லர் வில்லியம்ஸ்; தமிழில்: சமயவேல்
-------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் பாப்லோ நெருதாவை தமிழ் வழியாக அறிந்திருக்கின்றோம். அப்படி நிகனோர் பர்ரோவை தமிழ் வழியாக அறியும் வாய்ப்பை தி இந்து -தமிழ் வழியாக கவிஞர் சமயவேல் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். (ஏற்கனவே இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பார்). நல்ல கவிஞர்கள் எல்லோருமே உலகம் முழுவதும் அறியப்படவேண்டும். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் கடைப்பிடித்தும் ஒரு கவிஞனுக்காக மரியாதையை செலுத்திய சிலி நாடு,சிறிய நாடு என்றாலும் பண்பால் பெரிய நாடாகத்தோன்றுகிறது.எதிர்க்கவிதையாளர் நிகனார் பர்ரோ பற்றிய நினைவஞ்சலி கட்டுரை மிகவும் உருப்படியான கட்டுரை.இதனைப் படித்து இணையத்திலும் தேட ஆரம்பித்து இருப்பார்கள் நமது இளைஞர்கள்.வெளி நாட்டு கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளில் கவிஞர்களின் பெயரை ஓரிடத்திலாவது ஆங்கிலத்திலும்-அடைப்புக்குறிகளுக்குள் குறிப்பிடலாம். அவர்களின் கவிதைகளைப் படிப்பதற்கான இணைய சுட்டிகளையும் குறிப்பிடலாம். முனைவர்.வா.நேரு,மதுரை
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தி இந்து தமிழ் 28.01.2018

Wednesday, 24 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்.....ஜெ. வெண்ணிலா

உளவியல் என்பது ஒரு மிகப்பெரிய பகுதி. உளவியல் குறித்து பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அடிப்படையான ஒன்று மாஸ்லோ கோட்பாடு. தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றார் அவர். அந்த அடிப்படையில்  மனிதர்களின் தேவைகளை  5 அடுக்குகளாகக் காட்டினார். அது பிரமிட் வடிவம் கொண்டது. ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருப்பிடம் போன்றவை. அப்புறம் பாதுகாப்பான இடம், பாதுகாப்பான வேலை போன்றவை அடுத்த அடுக்கு. அடுத்து அன்பு செலுத்தப்படுதல், அப்புறம் சமூக ரீதியலான மரியாதை. அப்புறம் முழுத்திறனையும் நான் உயயோகப்படுத்தி விட்டேன், நான் நன்றாக இருக்கின்றேன் எனத் தன்னை உணர்தல் போன்றவை.தேவைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும் என்றாலும்,  எந்தத் தேவையாக இருந்தாலும் இந்த 5 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து விடலாம். இந்த 5 அடுக்குகளில் எல்லாக் காரணிகளும் நிறைவேறி இருந்தால் ஒரு மனிதன் மன நிறைவாக இருக்கலாம்.
இந்த 5 அடுக்குகளில் இருப்பதில் எது குறைந்தாலும் அது நமக்கு பிரச்சினையைத் தரும்  என்பது உளவியல். நமது தேவை நிறைவேறவில்லையென்றால்  நமக்கு மன உளைச்சல் வரும். என்றைக்காவது காலையில் எழுந்தவுடன் அலுப்பு, சலிப்பு போன்றவை இருந்தால் நமக்கு உளவியல் பிரச்சினை இருக்கிறது என அர்த்தம்..திருப்தி இல்லாத நிலைமையில் நாம் அடுத்தவர்களை நோண்டுவோம்.தேவையைப் பொறுத்து இந்த நோண் டுதல் தொடரும் -பிரச்சினைகள் தொடரும்.
மனிதர்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்கின்றார்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைப்பது ஒரு வகையான நம்பிக்கை என்றால், நான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பது, யாரும் என்னை விரும்புவதில்லை என்று நினைப்பது இவை எல்லாம் கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. சேரக் கூடாத வர்களோடு சேர வைக்கிறது, தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இதுதான் அடிப்படையான தன்மை.
நம்மை, சமூகத்தை மிகவும் பாதித்த சம்பவம் மாணவி அனிதாவின் தற்கொலை. அண்மையில் ஒரு பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன.எங்கோ நடக்கும் மன உளைச்சல் விளைவு இது என நாம் விட்டுவிடமுடியாது.இது நமது வீட்டைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்?. எப்படி இதனை அணுகப் போகிறோம்?ஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றன? என்பதனை நாம் உளவியல் கருத் துக்களோடு பார்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நம்பிக்கைதான் குணத்தை மாற்று கின்றது. தந்தை பெரியார் நாம் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத்தான் அசைத்தார்.  நம்பிக்கைகளுக்கு  ஆதாரமான விசயங்களை அசைத்தார் .நம்பிக்கைகளை அசைப்பதற்கு கேள்விகள்தான் அடிப்படை..பெரியார் அத்தனையையும்  கேள்வி கேட்டார். கேள்வியைக் கேட்டு கேட்டு பதிலை வரவழைத்தார். நாம் கேள்வி கேட்கப் பழக வேண்டும். நான் கேள்வி கேட்கச் சொன்னேன் ?ஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள்  யாரும் கேள்வி கேட்கவில்லை? நமக்கு பெண்களுக்கு  பதில் சொல்லித்தான் பழக்கம்.சிறுவயதிலிருந்து நாம் கேள்வி கேட்கப்பழகவில்லை.பெரியார் சொன்னது கேள்வி கேட்கத்தான். நிறையக் கேள்விகள் நாம்  கேட்க வேண்டும். பெண் விடுதலை என்பதே கேள்விகள் அடிப்படையில்தான் நிகழும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்  என்ன மாதிரியான நம்பிக்கை யினால் நமக்கு இந்தப் பிரச்சினை வருகிறது என்று நமக்குள்ளேயே நாம் கேள்வி கேட்டிருக்கின்றோமா ?
பணமே அத்தனை மகிழ்ச்சியை யும் நமக்கு  கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கையா? எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும்  நம்பிக்கையா? வீடுகளில் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா? இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை.  பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு  மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன்? அந்தப் பெண்களுக்கு மதம் சார்ந்த சடங்குகள் மிக அதிகம். அது அவர்களைப் பாதிக்கின்றது. மனச் சிதைவு நோய்வாய்ப்படுகின்றார்கள்.  அடுப்படியிலேயே வைத்திருந்தால் நமது வீட்டுப் பெண்களுக்கும்  வரும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை, சக்தியைப் பயன்படுத்த விடவேண்டும்.பெண் விடுதலை வேண் டும். இன்னும் வரவில்லை என்பதற்கு பெண்களின் எண்ணமும் காரணமாக இருக்கிறது. ஆண்களைச் சார்ந்தே சிறுவயதிலிருந்தே பழகிவிடு கின்றோம். சுயமாக வாழ வேண்டும். பெரியார் சொன் னது போல பெண்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் பெண்களிடம் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்றார். அப்புறம் சந்ததி எப்படி வளரும் என்று கேட்டபோது அது ஆண்களின் கவலை என்றார். அது உன் கவலை இல்லை. உளவியலில் ஒருமுகமாக பார்ப்பது, அதாவது போகஸாகப் பார்ப்பது மிக முக்கியம். தந்தை பெரியார் பெண் விடுதலை விசயத்தில் போகஸாக பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்று பார்க்கின்றார். இப்படித்தான் பார்க்க வேண்டும் உளவியல் அடிப்படையில். .
தந்தை பெரியார் எப்படி  ஒரு பிரச்சினையை அணுகுவது என்பதனை நமக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார். அது உளவியல் அடிப்படை சார்ந்தது. எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதல்ல தந்தை பெரியாரின் அணுகுமுறை. எதனையும் ஆழமாகப் பார்ப்பது. உள்ளுக்குள் சென்று பார்ப்பது என்பதல்ல, பெரியாரின் அணுகுமுறை. உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்று பார்ப்பது, ஒவ்வொரு விசயத்தை யும் நிர்வாணமாகப் பார்ப்பது. அடிப்படையிலிருந்து ஆரம்பித்து அணுகி அணுகிப் பார்ப்பது என்பது. தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நான் பயன்படுத்துகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்கின்றேன். கடவுளைப் பற்றி இப்படி அணுகினால் அச்சம்தான் கடவுளுக்கு அடிப்படை என்பதனை நாம் உணரமுடியும்
நாங்கள் உளவியலில் ஒவ்வொரு விசயத்தையும் என்ன? ஏன், எதற்கு? யார்? எங்கே? என்னும் 5 டபுள்யூ மற்றும் எப்படி என்னும் ஒரு ஹெச் என்பதாகப் பார்க்கவேண்டும் என்று சொல்லித்தருகின்றோம். இதைத்தான் பெரியார் சொல்கின்றார். இல்லை, இல்லை பெரியார் சொன்னதை நாங்கள் சொல்கின்றோம். அவரின் தர்க்க முறைகள் ஆச்சரியமானவை.பெரியார் சொன்ன தத்துவ விசாரணை  என்று ஒரு பகுதி இருக் கிறது. சர்வ சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றி
7 கேள்விகள் கேட்கின்றார். 70 வகையான பதில்கள் இருப்பதைச் சொல்கின்றார்.
நாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் உள்ள வேறுபாடே மன அழுத்தம். நான் உளவியல் ரீதியாக அணுகும்போது ஒவ்வொரு விசயத்தையும் நிர்வாண மாகப் பார்ப்பது போல் பார்க்கின்றேன். அதுதான் உண்மை. நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்துப் பழக வேண்டும்.  சமூக அறிவியல் படிக்கும் போது முதல் நாள் நாமெல்லாம் ஸ்பிருச்சுவலாக (ஆன்மிகமாக) இருக்க வேண்டும் என்றார்கள். மறு நாள் பாடம் ஆரம்பிக்கும்போது முதல் பாடமே தந்தை பெரியார் பற்றித்தான். ஆசிரியரிடம் கேட்டேன், அவர் பெரியார் இல்லாமல் சமூக அறிவியல் பாடம் எப்படி இருக்க முடியும் என்றார்! பெரியாரைத் தாண்டி சமூக அறிவியல் கிடையாது. நாம் எந்தத் துறைக்குள் சென் றாலும் பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்க்கலாம். உளவியலிலும் அப்படித்தான். பெரியார் சொன்ன பல விசயங்கள் உளவியலாக சொல்லித்தரப்படுகின்றன.
மும்பையில் உளவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கம் வைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கே சென்றால் தந்தை பெரியார் சொன்ன  கேள்விகள் கேட்பதைத் தான் சொல்லித்தருகின்றார்கள். இதுதான் எனக்கு முதலிலேயே பெரியார் மூலமாகத்தெரியுமே என்றுதான் நினைத்தேன். பெரியார் ஒழுக்கத்தை மாணவப் பருவத் திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திச் சொல்கின்றார். நாம் நினைத்துக் கொண்டி ருக்கின்ற ஒழுக்கம் என்பது வேறு. பெரியார் சொன்ன ஒழுக்கம் என்பது வேறு. நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பை செவ்வனே செய்வதுதான் ஒழுக்கம் என்று சொல்கின்றார் பெரியார்.. இந்த அரங்கத்தில் பேச வந்தி ருக்கின்ற எனது ஒழுக்கம், நான் பேசுவது 10 பேருக்கா வது உபயோகமாக இருக்கும்படி பேசுவதுதான். ஒவ் வொரு நிமிடத்தையும் நாம் ஒழுக்கமாக செய்திருக்கின் றோமா என்று யோசிக்கவேண்டும் என்று சொல்கின்றார் பெரியார். ஒவ்வொரு நிமிடமும், படிக்கும்தோறும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றார் பெரியார்.
உறவு முறைகளில் வரும் சிக்கல்கள் என்பவை உளவியலில் மிக முக்கியமானவை. உறவுமுறைகளில் வரும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்க  நான் ஒரு மன நல மருத்துவரைத்தான் நாடுகின்றேன். அந்த மன நல மருத்துவர் அய்யா ஆசிரியர் வீரமணி. நமது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டார் என்று சொன்னால் அதனையே நினைத்துக்கொண்டிருப்போம். இல்லை வேறு யாரும் ஏதாவது சொல்லிவிட்டால் அதனைப் பற்றி நினைப்பது,பேசுவது என இருப்போம். அய்யா ஆசிரியர் சொல்கின்றார் , மாடு அசை போடுவதுபோல, உறவுகள் சொல்லும் சொற்களை அசை போடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கின்றார்.  அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மனதைத் தொடுபவை. ஒரு நிகழ்வை நாம் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும். இதனைத்தான் “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் “எம்பதி” யோடு இருங்கள் என்று சொல்கின்றார். அடுத்தவர் களைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன் அவர்கள் நிலையில் நின்று நாம் யோசிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அடுத்தவர் நிலையில் நின்று பிரச்சினை களை அலசுகின்றபோது மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லையென்றால் அமைதி இருக்கும்.மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு மனிதத்தன்மையோடு நடந்து கொண்டோமா ? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
அடுத்து கல்வி. பகுத்தறிவுக் கல்வி வேண்டும் என்றார் பெரியார். சுயமரியாதை உணர்ச்சியைத் தரும் கல்வி வேண்டும் என்றார். குழந்தைகளுக்கு சுயமரி யாதையை, பகுத்தறிவைச்சொல்லித்தரும் கல்வி வேண்டும் என்றார்.நமது பிள்ளைகளுக்கு 13 வயது வரை தான் நாம் சொல்லித்தர முடியும். நாம் சொல்வதை அந்த வயதுவரைதான் கேட்பார்கள். அதற்குப்பின் அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும். கேள்வி கேட்கவிட வேண்டும். உங்களை எதிர்த்து பேச விடவில்லையென்றால் அடிமையாகத்தான் இருப்பான். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றால் கேள்வி கேட்க விடுங்கள். 13 வயதுவரை நிறையப் பேச வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பேசுவான்.
பிள்ளைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.எதையும் சமாளிக்கும் மன வலிமையை உண்டாக்க வேண்டும். எனது மகளிடம் “கணினியை பயன்படுத்து, போட்டோவை நெட்டில் போட்டு விடுவேன் என்று சொன்னால், போட்டால் போடுடா, எனக்கு ஒரு காபி அனுப்படா” என்று சொல்லிவை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். புளுவேல் கேமிற்குப் பிள்ளைகள் எப்படி பலியாவர்கள், நாம் நம் பிள்ளைகளிடம் பேசினால்? நாம் நமது பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். “வாழ்வியல் சிந்தனைகள்”  5-ஆம் பாகத்தில் விடலைப் பருவத்தில் என்னும் தலைப்பில் ஆசிரியர் வீரமணி எழுதியிருக்கின்றார்; குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்று சொன் னால், கை வலிக்கிறது,வயிறு வலிக்கிறது என்று சொன் னால் கவனிக்க வேண்டும். பேசவேண்டும்.  மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும்.அப்படியே உளவியல் மருத்துவரைப் போல அந்த வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் அய்யா ஆசிரியர் எழுதியிருக்கின்றார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஹோமோ செக்ஸ் தொந்தரவு இருக்கின்றது. வெளி நாட்டில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். இங்கும் இருக் கிறது. பகுத்தறிவோடு குழந்தைகளை வளர்க்க வேண் டியது அவசியம். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பிரச்சனையையும் சமாளிப்பார்கள்.மனம் என்னும் குப்பையை கிளீன் செய்யுங்கள் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும். பகுத்தறி வோடு சிந்திக்காத சமூகத்தில் என்ன கொண்டு வந்தாலும் பலன் இல்லை என்றார் பெரியார். டிஜிட்டல் இண்டியா கொண்டு வந்தாலும் பகுத்தறிவு இல்லை யென்றல் பலன் இல்லை.எதையும் பகுத்தறிவு மூலம் அணுக வேண்டும். அப்படித்தான் திருமணம் என்ப தனை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் பெரியார். சமூகப்பணி ஆற்றுவதற்கு திருமணம் தடையாக இருக்கிறது என்றார் பெரியார். மன நலத் தோடு வாழ்வதற்கான வழிதான் பகுத் தறிவு. எனக்கு உடல் ரீதியாக பல பிரச் சினைகள் உண்டு. ஆனால் மன தைரியத் தோடு இருப்பதற்கு பகுத்தறிவுதான் கார ணம். பிள்ளைகள் அவர்களாக வளர்கின் றார்கள் என்றார் பெரியார்.பிள்ளைகள் வளரவேண்டும். நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக வெளி நாடு சென்று வந்தாள் .உலக அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அய்யா ஆசிரியர் அவர்களிடம் பாராட்டு பெற்றாள்.
உடல் ரீதியாக எல்லோருக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. நான் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு கொஞ்சம் சோர்ந்து இருந்தேன். எனது பெரிய அத்தான் வந்து பார்த்தார்.எனக்கு இருதயத்தில் எத்தனை ஓட்டை இருக்கிறது தெரியுமா? என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா ? என்றார். துள்ளி எழுந்து உட்காருவதுபோல எழுந்தேன். எத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு தந்தை பெரியார் பாடுபட்டார். அவரின் உடல் வலியோடு ஒப்பிடும் போது நமது உடல் வலியெல்லாம் வலியே அல்ல என்பதுதான் உண்மை.
மற்ற தலைவர் எல்லாம் நெஞ்சில் இருக்கின்றார்கள். ஆனால் பெரியார் மூளையில் இருக்கின்றார். நெஞ்சில் இருப்பது அழிந்துவிடும். ஆனால் மூளையில் இருப்பது அழியாது. அதனால் தான் நமது எதிரிகளால் தமிழகத்தில் நோட்டாவைக் கூட வெல்ல முடியவில்லை. என்னோடு இருப்பவர்களுக்கு, உளவியல் துறையில் இருப்பவர் களுக்கு  இல்லாத ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது. அது பெரியார் கொள்கை. அது மனப்பாடமாகத்தெரியும். அதனை இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளோடு இணைத்து தீர்வைச்சொல்கின்றேன். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதற்கு அடிப்படைக்காரணம் பெரியார்தான். அதனால் எனது துறையில் வெற்றி பெற முடிகிறது.உளவியல் பற்றி நாள் கணக்கில் பேச இயலும், நான் அதனின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்!
மதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற  கருத்தரங்கத்தில் “தந்தை பெரியாரும் உளவியலும்” என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
தகவல்: வா.நேரு

நன்றி : விடுதலை 24.01.2018

Monday, 22 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்: கருத்தரங்கம்...

மதுரை, ஜன.22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் 30.12.2017 அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் பொ.நடராசன், மதுரை மண்டல  செயலாளர் மா.பவுன்ராசா, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.





அவர் தனது தலைமை உரையில் “கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதையில் மனிதனுக்கு மலச்சிக்கலும், மனச்சிக்கலும்? இருக்கக்கூடாது என்பார்.  மனச்சிக்கல் நம்மைப் பலவிதத்திலும் தொல்லைப்படுத் துவது. மனச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் அதனை முறையாக அணுகத் தெரியாமல் கார்ப்பரேட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றார்கள். மனச்சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் படிக்காதவர்கள் அல்ல, மெத்தப்படித்தவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள், நிறைய சம்பாதிப்பவர்கள். சிலர் மனச்சிக்கல் களில் மாட்டிக்கொண்டு, அதனைத் தீர்ப்பதற் காக என்று சொல்லி கார்பரேட் சாமியார்களின்  அடிமைகளாக மாட்டிக்கொண்டு முழிக்கின் றார்கள். இன்றைய சிறப்புப்பேச்சாளர் ஜெ. வெண்ணிலா பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்” எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.
“மானம், மானுடம் பெரியார்”
நூல் அறிமுகம் பகுதியில் புத்தகத் தூதன் பா.சடகோபன் திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய “ மானம், மானுடம் பெரியார் “ என் னும் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர் தனது உரையில் “ சு.அறிவுக்கரசு அவர் களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலம். கருவூலம் என்பது சேர்ப்பவருக்கும் பயன்படும், பயன் படுத்துபவருக்கும் பயன்படும். அப்படி அய்யா அறிவுக்கரசின் மன ஓட்டத்தை மட்டு மல்ல, வாசிக்கும் நமது மன ஓட்டத்தையும் செலுமைப்படுத்தும் கருவூலம் இந்தப்புத்தகம்.
இந்த நூலின் அறிமுகவுரையில் நேரு அவர்கள், ஆற்றில் ஓடும் வெள்ளம், கரை புரண்டு ஓடும். அது சுழற்றி சுழற்றி அழுக்கு களை அடித்துச்செல்லும் . அப்படி உணர்ச்சி வெள்ளமாகச்செல்லும் அறிவுக்கரசு அவர் களின் எழுத்துகள் சமூக அழுக்குகளை அடித்துச்செல்லும் தன்மை உள்ளதாக உள்ளது என எழுதியிருப்பார். அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளமாக இந்த நூல் வந்துள்ளது. மனி தனை அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதுதான் பெரியாரின் கருத் துக்கள் என்று இந்த நூல் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். உண்மை, அச்சம் பல வகை என்றாலும் மனிதனுக்கு முதலில் ஏற் பட்ட அச்சம் உடல் வலியாகத்தான் இருக்கவேண்டும். உடல் வலிதான் மனிதனை முடக்குகின்றது.உடல் வலிக்குப்பின்புதான் உயிர் அச்சம், இழப்பு அச்சம் போன்ற பல அச்சங்கள். ஆனால் உடல் வலி என்னும் அச்சம் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய இயலவில்லை.சிறுவயது முதல் இறப்புவரை தந்தை பெரியாரை உடல் வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை  மீறி வெற்றி படைத்தவர் பெரியார்.
அதனைப் போலவே ஆதிக்கத்திலிருந்து விடுதலை. காட்டில் வாழ்ந்த மனிதனை முதலில் ஆதிக்கப்படுத்தியது அவன் விரும் பிய உணவு என்று நான் கருதுகின்றேன். எந்த உணவு மீண்டும் மீண்டும் உண்ண வேண்டு மென்று தோன்றியதோ அதுதான் அவனை ஆதிக்கப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால்  எந்தவொரு ஆதிக்கமும் தந்தை பெரியாரை ஆட்கொள்ள இயலவில்லை. ஒடுக்கப்படு பவர்கள் அவர்களை ஒடுக்குபவர்கள், இரு வருக்கும் ஒருவர் நல்லவராக இருக்கமுடியாது. இதற்கு பெரியார் ஒரு எடுத்துக்காட்டு சொல் கின்றார். .திருடனுக்கும் திருட்டுக்கொடுப்பவ னுக்கும் ஒருவன் நன்மை செய்யமுடியாது. அப்படித்தான் திருடுபவர்கள் ஒரு வகுப்பார். திருட்டு கொடுப்பவர்கள் ஒரு வகுப்பார் எனச்சொல்கின்றார். ஆனால் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்ப்பேன் என்று சொல் கின்றார் பெரியார்.  பார்ப்பனர்கள் ஏதாவதொரு ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டால் அந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்ப்பேன் என்று சொல்கின்றார் பெரியார். இப்படி ஏராளமான செய்திகள் இந்தப்புத்தகத்தில்  இருக்கிறது” எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் சிறப்புரையாற்றிய ஜெ.வெண் ணிலா  மகேந்திரன் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். மதுரை அய்.ஜெயராமன் அவர்களின் மகள். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த  சிவானணைந்த பெருமாள் அவர்களின் மருமகள், அண்ணன் மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தூத்துக் குடி பொறியாளர் மனோகரன் அவர்களின் தம்பி- திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் மகேந்திரன் அவர்களின்  மனைவி என்னும் சிறப்புக்குரியவர். சமூக அறிவியல்,உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக,தற்போது மேலாளராகப் பணியாற்றுபவர். தொடர்ந்து இளைஞர் களின், பெண்களின், மாணவ, மாணவி களின் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்து வைப்பவர்..” என்று சிறப்பாக சிறப்புரையாற்றுபவரின் தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து “ தந்தை பெரியாரும் உளவியலும்” “ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் “சிறு வயது  முதல் பெரியாரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, படித்து வருபவள் நான். எனது இணையர் மகேந்திரனின் குடும்பமும் பெரியாரைப் பின்பற்றும் குடும்பம். எனது கணவரின் அண்ணன் மறைந்த எனது மாமா மனோகரன் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பவர். எனவே பெரியாரைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது. அதிலும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருவது ஏன் என் றால் பகுத்தறிவாளர் கழகம் என்றால்  மனி தர்கள் கழகம் என்றார் பெரியார். மனிதர்கள் கழகத்தில் பேசப்போகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சி.
“தந்தை பெரியாரும் உளவியலும்” என்பது என் தலைப்பு. உளவியல் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் பணி புரிபவள் நான் “ எனக்குறிப்பிட்டு உளவியல் தத்துவம், தந்தை பெரியாரின் கருத்துக்கள், திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்களை இணைத்து பவர் பாயிண்ட் மூலம் காணொலிக் காட்சிகளாவும் காட்டி, திரை யிட்டும் திரையிட்டதை விளக்கியும் புதிய அணுகுமுறையில் புத்துணர்ச்சி தரும் அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட அய்யங்களுக்கு எல்லாம் ஜெ.வெண்ணிலா பதில் அளித்தார். கூட்டத்தின் நிறைவில் கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் உசிலை மாவட்டத்தலைவர் சிவகுருநாதன்,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நா.கணேசன், பொறியாளர் முத்தையா, ந.முருகேசன் -அவரது துணைவி யார்,வழக்குரைஞர் தியாகராசன்,வடக்குமாசி வீதி செல்லதுரை, சுமதி செல்வம், மாரிமுத்து, பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம் உட் பட்ட பொறுப்பாளர்களும், மகளிரும், ஆர்வ லர்களும் கலந்து கொண்டனர்.

Friday, 12 January 2018

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு.........


திருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு
பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்
திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு!
எல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்!

கோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி


கோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோவையில் 8.1.2018 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஜனவரி 5, 6, 7:


உலக நாத்திகர் மாநாடு

வணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ  என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.

அதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

அதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.

அரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள்.  ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.

பிரகடனம் நிறைவேற்றப்பட்டது

முதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.

சிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.

இரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன்  போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.

எனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன்னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.


எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.

அதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம்  என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்!’’

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’

‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’

சுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.


மக்கள் இயக்கமாக இருக்கிறது

இதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.

எனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.

பிரியா விடைபெற்றனர்

எனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங்கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது.

நன்றி : விடுதலை 10.1.2018

Tuesday, 12 December 2017

ஆறறிவு உடையவர்கள்தானா நாம் ?......



பிடிங்குப் போடப்பட்ட
வேரை விடுத்து 
மரத்தின் கிளைகள் மட்டும் 
அங்குமிங்கும் 
அலைவது போன்றொரு
உணர்வு.........

ஒளியும் உணவும்
அளித்து 
வளர்த்தெடுத்த
வேரை 
மரத்தின் கிளைகளே
தங்களுக்குள்
சண்டையிட்டு
பிடிங்கிப் போட்ட
கொடுமை கண்டு மனதில்  
தோன்றும்  அயர்ச்சி....

வேரின் நினைவாய்
திதி என்றும் 
திவசம் என்றும்
அலையும் கிளைகளைப்
பார்க்கையில்
இயல்பாகத்தான்
செத்தனவா 
வேர்கள் எனும் 
கேள்விகளால் 
மண்டைக்குள் எழும்
விநோத ஒலிகள் ......

ஒரேயொரு 
ஊரிலே மட்டும் அல்ல
பல ஊர்களில் 
ஒரு மரத்தின் கிளைகள்அல்ல
இரு மரத்தின் கிளைகள் அல்ல
பல மரத்தின் கிளைகள்
வேர்களை பிடிங்கிப்போட்டு 
அங்குமிங்கும் 
அலைவதைப் பார்க்கையில்
ஆறறிவு உடையவர்கள்தானா
நாம்
எனும் கேள்வி
எழுவதைத் தவிர்க்க இயலா
உள்ளுணர்வு......

                                              வா.நேரு, 12.12.2017

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு ....

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு

21 வயது முடிந்தது
மகனே
முழுமனிதனாகிறாய்
இன்றுமுதல்

எது குறித்தும்
எவர் குறித்தும்
கவலைப்படாமல்
நீயாக முடிவெடுக்கலாம்
முன் செல்லலாம்
முழு மனிதனாகிறாய்
இன்று முதல்

அரிதாக இருக்கும்
இளைஞர்களில்
ஒருவனாயிருக்கிறாய்
எந்த நிலையிலும்
நேர்மையாகவே இருக்க
விரும்புகிறாய்....
உண்மையிலேயே
பெருமையாக இருக்கிறது
உனை பெற்றவனாக இருப்பது...

இப்படியே தொடர்
வாழ்வில் சில இடர்பாடுகள்
வந்தாலும்
நேர்மையாளனாகவே
தொடர்ந்து செல்......

விரிந்த பார்வையோடு
நட்பு கொள்...
நட்புகளிடம் இருக்கும்
குறைகளை
அல்ட்சியப்படுத்து...
நிறைகளை அவர்கள்
இன்னும் நிறைவாக்க
வழிகாட்டு.......
நட்புதான் வாழ்க்கை
முழுக்க வரும்....
நல்லது கெட்டதுகளில்
முழுக்க உடன் இருக்கும்..

உறவுகள் இல்லையேல்
நாமில்லை...
உறவுகள் அப்படியும்
இப்படியுமாகத்தான்
இருக்கும்
மரியாதை கொடு....
மனதில் இருப்பதை
முழுவதையும்
உறவுகளிடம் கொட்டாதே.....
அன்பைக் கொட்டு.....

உனது மனதுக்குள்
நீ எழுதிவைத்த
உனது குறிக்கோள்
நிறைவேறும்
அதனை நோக்கி உழை

நிறைய வாசி.....
படைப்பாளியாய்
எந்த நாளும் இரு....
எழுது.....படி.....
எழுது.....படி.....


முன் செல்லும் ஏராகத்தான்
முடிந்தவரை உனக்கு
நான் சென்றிருக்கிறேன்
இனியும் செல்வேன்....
உனது உடன் பிறந்தவளை
மதிப்பதுபோலவே
உன்னுடன் பழகும்
அத்தனை பெண்களையும் மதி....
அம்மாவும் அப்பாவும்
எதிர்பார்ப்பது
உன் பெயரில் இருப்பது
தவிர வேறு ஏதுமில்லை..

                           அன்புடன் அப்பா
                                வா.நேரு.....
                                                       03.06.2017
                               

Saturday, 9 December 2017

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா.......மு.சங்கையா

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா
ஆசிரியர்                    : மு.சங்கையா
வெளியீடு                   : வாசிப்போர் களம், மதுரை ,பெறுவதற்கு : 0452-2643003, 9486100 608
முதல்பதிப்பு                 : அக்டோபர் 2017
விலை                      : ரூ 225 / மொத்த பக்கங்கள் 238

                         இந்தப் புத்தகம் அரசியல் அறிவைப் புகட்டும் புத்தகம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பிப்போய் , ஏன் இப்படி நிகழ்கிறது எனப்புரியாமல் ,பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து அடிவாங்கும் பாமரனுக்கு ,ஏன் இப்படி நிகழ்கிறது,இதற்கு யார் காரணம் என்பதனை மிகத்தெளிவாக பாடம் போல நடத்துகின்ற, வாசிக்க வாசிக்க அறிய வைக்கும் புத்தகம்.

                           கந்து வட்டிக்காரன் அலுவலகம் முழுக்க கடவுள்கள் படம் பல இருக்கும். கந்துவட்டிக்காரனின் முகமும் மதக்குறியீடுகளால் நிரம்பி வழியும் . பேச்சில் முழுக்க கருணை அப்படியே பொங்கும். ஆனால் அவனது செயல்கள் வட்டிக்கு கடன் வாங்கியவனை பரம்பரை பரம்பரையாக எழ முடியாமல் அடி மேல் அடி கொடுக்கும். இப்படித்தான் இன்றைக்கு நமது நாட்டுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பதனை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்ற புத்தகம். 
அண்மையில் படித்த புத்தகம் : 

                         உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம்,உலக  வர்த்தக நிறுவனம் இப்படியெல்லாம் சொல்லப்படும் நிறுவனங்களின் வரலாறு என்ன ? எதற்காக இவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டன? எப்படி இவை வளர்ந்தன ? இவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடான அமெரிக்கா எப்படி எப்படி எல்லாம் இந்த நிறுவனங்களை வழி நடத்துகிறது ? போன்ற செய்திகள் அளப்பரிய தகவல் சேகரிப்புகளோடு, புள்ளி விவரங்களோடு தரப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு, உறுமீன் வருமளவு காத்து நின்ற கொக்காக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் எந்தப்பக்கமும் சேராமல் முதலில் நின்றது, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்பனை செய்தது பின்பு இணைந்து ஜப்பான் நகரங்களின் மீது  அணுகுண்டு வீசி அழித்தது பின்பு உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களை அமைத்தது என வரலாற்றுப் பாடத்தோடு கூடிய பொருளாதாரப்பாடம் எடுத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்/ 1970--களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், எண்ணெய் நாடுகளுகளுக்கு கிடைத்த பொருளாதார வளர்ச்சி அதன் விளைவுகள், WTO  என்னும் உலக வர்த்தக நிறுவனத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என விரிவாகவே பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். 

                        உலக வங்கி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதையும்,பின்னர் நரசிம்மராவ், சந்திரசேகர் காலத்தில் இந்தியாவிற்குள் வந்தமர்ந்து சம்மணமிட்டு கொண்டு என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும், டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் இன்றைய மோடியின் ஆட்சியில் எப்படியெல்லாம் கந்துவட்டிக்காரன் போல இந்தியாவிற்கு கடனைக்கொடுத்து ,அவர்கள் சொல்லும் விதத்தில் எல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சட்டமியற்றுகின்றார்கள் என்பதையும் விரிவாகப்பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதற்கு எதற்காக என்பது மட்டுமல்ல, யாருக்காக என்பதையும் படிப்பவர்கள் எளிதாகப் புரிந்த கொள்ள இயலும் இந்தப்புத்தகத்தின் வாயிலாக.....

                         பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இந்த நூலின் ஆசிரியர் ,பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுகின்றன என்பதையும், தான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் கொண்டுவருவதற்காக அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம் எடுத்தது என்பதையும், எத்தனையோ இன்னல்கள், நய வஞ்சகம் அத்தனையும் தாண்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிலைத்து நின்று வருவதையும், அதன் லாப நட்ட கணக்குகளையும் ,எம்.டி.என்.எல், பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் பற்றிய ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடும் ,ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, எந்தவொரு தொழிற்சங்கவாதியும் மிக ஆழமாகவும், பொறுமையாகவும் படித்து உள்வாங்கி  தன் ஊழியர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பயன்படும் புத்தகம் இது.

                          வளர்ச்சி, வளர்ச்சி என்னும் வார்த்தை நம்மைச்சுற்றி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை. 'வளர்ச்சியா? வீக்கமா ? எனத்தலைப்பிட்டு' வாராக்கடன்கள் ' எனும் பெயரில் நடக்கும் மோசடிகளை,மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு வங்கிகள் அள்ளிக்கொடுத்த கடன்களை பின்னர் அவையெல்லாம் வாராக்கடன் என்னும் பெயரில் தள்ளுபடி செய்த வரலாறுகளை எல்லாம் வங்கிப்பெயர்களை குறிப்பிட்டு, ஒவ்வொரு பணக்காரரும் வாங்கிய கடனைக் குறிப்பிட்டு பின்பு தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார். படித்தவுடனேயே நமக்கு எல்லாம் அறச்சீற்றம் வரவேண்டும். அவ்வளவு விவரங்களும் விளக்கங்களும் இந்தப்பகுதியில் உள்ளன.. சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு, வால்மார்ட் -ஒரு பொருளாதார புற்று நோய் போன்ற தலைப்புகள் சொல்லும் செய்திகள் படிப்பவர்களுக்கு பளிச்சென புரிகின்றன. பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. வால்ட்மார்ட் என்பதற்கு ஒரு வரையறை தருகின்றார் ஆசிரியர் . "வால்ட்மார்ட் என்றால் விலைக் குறைப்புப்போட்டி, மலிவு விலையில் கொடுத்தல், தொழிலாளர் விரோதப்போக்கு,இவற்றோடு ஊழலும் சேர்ந்து செய்த கலவைதான் வால்ட்மார்ட் " என்பது அந்த வரையறை. இதற்கான ஆதாரங்களை, எத்தனை கம்பெனிகளை தொலையக் காரணமாக அமைந்தது வால்ட்மார்ட் என்பதையும் எப்படி எப்படி எல்லாம் அவர்கள் மற்றவர்களுக்கு இன்னல் செய்து வளர்ந்தார்கள் என்பதையும் பெயர்களோடு நூலின் ஆசிரியர் பகிர்ந்துள்ளார்.தன்னொடு வேலை பார்த்த பாலு என்னும் தோழர் முதன் முதலில் வணிகர்கள் மத்தியில் இந்த வால்ட்மார்ட் பற்றிப்பேசச்சொன்னதும், அதற்காக தான் தயார் செய்ததும் பின்பு அந்த நிகழ்வில் கிடைத்த பாராட்டே இந்தப் புத்தகம் வருவதற்கு காரணம் என்றும் என்னுரையில் நூலின் ஆசிரியர் மு.சங்கையா குறிப்பிட்டுள்ளார்.

                         'தண்ணீர், தண்ணீர் ' எனத் தலைப்பிட்டு,தண்ணீர் எப்படித் தனியார் மயமாகியது என்பதையும், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்தது கூட எப்படி என்பதையும் குறிப்பிடும் நூலாசிரியர் பொலிவியா நாட்டில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த எழுச்சியை, போராட்டத்தை குறிப்பிடுகின்றார். ஆறுகள் விற்பனைக்கு என்னும் தலைப்பில் எப்படி ஆற்று நீர் பன்னாட்டு கம்பெனிகளால் உறிஞ்சப்படுகிறது என்பதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன? நிலம் எப்படி வளைக்கப்படுகின்றது? எப்படி அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளால் நிலம் வாங்கப்படுகின்றது, வனவேட்டை என்னும் தலைப்பில் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன, பழங்குடி மக்கள் எப்படி வனத்திலிருந்து விரட்டப்படுகின்றார்கள் என்பதையும் விரிவாகவே விளக்குகின்றார். ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக பல கிழக்கிந்திய கம்பெனிகள் எப்படி இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள், சூறையாடுகின்றார்கள் என்பதையெல்லாம் விளக்குகின்றார். 

                       செல்லாக்காசு எனத் தலைப்பிட்டு, 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதன் நோக்கத்தை, சாதாரண மக்கள் பட்ட அவதியை எல்லாம் -நாம் எல்லாம் கண்ணில் கண்டவைதான். அவற்றை எல்லாம் எழுத்தாக ஆக்கி, ஆவணமாக நமது கையில் கொடுத்துள்ளார். இந்த தலைப்பிற்கு 'பித்தலாட்ட பெரும்புள்ளிகள் கட்டாத பணத்தையெல்லாம் வட்டியோடு வசூலிக்கப்பார்க்கிறது பஞ்சைப்பராரிகளிடம் 'எனும் கவிஞர் யுகபாரதியின் கவிதை மிக பொருத்தமாக உள்ளடக்கைத்தை உணர்த்துகிறது. 

                        முடிக்கும் முன் எனும் தலைப்பில் சுதேசி பேசிய விதேசிகள் எப்படி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் " நிலவுகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக சொல்லப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயக்கொள்கைகள் முற்றிலும் தோற்றுப்போய்விட்டது. அதன் எதிர் விளைவுகளாக வறுமை , வேலையின்மை அதிகரித்தது,விவசாயம் அழிந்தது, தண்ணீர் விலைப்பொருளானது,கிராமங்கள் இடம் பெயர்ந்தன....எல்லாச்செல்வங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு ,இந்தியாவைக் கழிவுகளைச்சுமக்கும் குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டது " என்று ஆசிரியர் குறிப்பிடுவது உண்மைதான். சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அழுத்தப்படும் மக்கள் அதனைத் தீர்க்க வீதிக்கு வந்து போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனைத் தனது கருத்தாகக் கூறி இந்த நூலின் ஆசிரியர் நூலினை முடிக்கின்றார். 

                      எவ்வளவு அநீதிகள் நிகழ்ந்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்வதற்கு நமது நாட்டில் ஜாதிகள் இருக்கின்றன. மதங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு திருவிழா, மாதம் ஒரு உற்சவம் என்று உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுப்பதற்கு பார்ப்பனியம் நமது நாட்டில் இருக்கிறது.கார்ப்பரேட் சாமியார்கள் புதுப்புது வேசங்களோடு ,பிரச்சனைகளுக்கு தீர்வு இதுதான் என மக்களை மயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் கோள்களின் செயல்கள் என சோதிடத்தைக் காரணம் காட்டிக்கொண்டிருக்கின்றன ஊடகங்களும் பத்திரிக்கைகளும். மூட நம்பிக்கை என்பது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது பார்ப்பனியத்தால். இந்த நம்பிக்கைகள் உடைவது என்பது எளிதாக உழைக்கும் மக்கள் ஒன்றுசேரவும், புதிய பாதை அமையவும் வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.மதமும் நம்பிக்கைகளும் எப்படி கார்பரேட் நிறுவனங்களால் வளர்க்கப்படுகின்றன,கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி, யார் யாருக்கெல்லாம் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள் என்னும் விவரங்களும் மக்களுக்குத் தெரியவேண்டும். அதனை ஒரு அத்தியாயமாக இந்தப் புத்தகத்தில் இணைக்கலாம்.   

                   புத்தகத்தின் கடைசிப்பகுதியில் உதவிய நூல்களின் பட்டியல் இருக்கிறது. இதழ்கள், வலைத்தளங்கள் எனப் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டைப்படம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் நுழைவு வாயிலில் உள்ள வெளியீட்டாளரின் உரை என்னும் பகுதியில் சு.கருப்பையா நூலைப் பற்றிய சுருக்கத்தை, நோக்கத்தை மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்."உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது" என விவரித்துள்ளார்.  பேரா.டாக்டர். இரா.முரளியின் அணிந்துரை வலியுறுத்த வேண்டியதை மிக அழுத்தமாக எள்ளல் நடையில் வலியுறுத்துகிறது.நூலின் ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்தும் உவமைகள், சொல்லாடல்கள் வாசிப்பவருக்கு மிக எளிதாகக் கருத்தை புரியவைக்கின்றன.உலகவங்கி ஏன் தொற்றுவிக்கப்பட்டது என்பதற்கு 'அமெரிக்காவுக்கு வலி தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டையைப் போன்ற அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய தேவை எழுந்தது '-பக்கம் 4,'நிதியாதிக்க கும்பல்களின் காட்டிலோ சிரபுஞ்சியில் கொட்டுகிற மழையை விட அதிகமாகப் பண மழை கொட்டுகிறது' பக்கம்21, 'இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சி ஒரு மின்னலைப் போல தாக்கிவிட்டு மறைந்து விடுவதில்லை " பக்கம் 41, "இந்திராகாந்தி ,நேருவால் மெத்தப் புகழப்பட்ட கலப்புப் பொருளாதார பதாகையையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார் ' பக்கம்50, 'திவாலாகிப்போன என்ரானுக்காக ரூ 5250 கோடியை, தூக்கிக்கொடுக்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க.வின் 13 நாள் ஆட்சிதான் காரணமாக அமைந்தது ' பக்கம் 65, 'அரசுத்துறை நிறுவனங்களைப் பெருமாள் கோவில் புளியோதரையைப் போல எண்ணி அள்ளி அள்ளி தனியாரின் கைகளில் திணித்தது' பக்கம் 66. இப்படி புத்தகம் முழுக்க ஏராளமான எடுத்துக்காட்டுகள் அமைந்துள்ளன.

                  மதுரை வாசிப்போர் களத்தின் உறுப்பினர் இந்த நூலின் ஆசிரியர் தோழர் மு.சங்கையா அவர்கள். பணிக்காலம் முழுவதும் தொழிற்சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்ட தோழர். பணி ஓய்வுக்குப் பின்பு தனது இரண்டாவது புத்தகத்தை  நூலாசிரியர் மு.சங்கையா வெளியிட்டுள்ளார். தான் வாழும் வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுள்ளதாக ஆக்கும் வகையில் அவரின் படைப்பாற்றலை வகுத்துக்கொண்டுள்ளார். மிகுந்த அர்ப்பணிப்போடும், கடுமையான உழைப்பின் விளைவாக விளைந்த புள்ளிவிவரங்களோடும், தரவுகளோடும் ஆக்கியிருக்கும் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் உழைப்பும் , எளிய மக்களின் உயர்வுக்கான விருப்பமும் தெரிகிறது.வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூல்களைப் படைத்திட வேண்டும்.....  





                         

Tuesday, 5 December 2017

எளியவர்களையும் உயர்த்துவார்.....

எளியவர்களையும் உயர்த்துவார்.....

நமது பரம்பரை எதிரிகளைக் கருத்துக் களத்தில் சந்திக்க தயாரிக்கப்படும் ஈட்டிமுனைகள் புத்தகங்கள்.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கைகளிலே நமது இன எதிரி, நம் இனத்திற்கு  எதிரான புத்தகத்தைக் கொடுத்தபோது அதனை நாகரிகம் கருதி பெற்றுக்கொண்டு கலைஞர் அவர்கள் நமது இன எதிரியிடம் திருப்பிக்கொடுத்த புத்தகம் 'கீதையின் மறுபக்கம் ';.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு கொடுக்கப்பட்ட புத்தகம். இன்றுவரை விற்பனையில் சக்கை போடும் புத்தகம். 





தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரை அருகே இருக்கும் ஊர்களுக்கு வரும்போது அவரோடு பயணிக்கும் அனுபவம் மிகப்பெரிய வாய்ப்பு. பயணிக்கும் தோழர்களின் உடல் நிலையை, வீட்டில் உள்ளவர்களின் நலங்கலை விசாரிப்பார்கள். அரிய புத்தகங்கள் பற்றிச்சொல்வார்கள்.கழகப்பணியாற்றி மறைந்த கருப்பு மெழுகுவர்த்திகளைப் பற்றிச்சொல்வார்கள்.

 சில நேரங்களில் உடன் செல்லும் தோழர்கள் வாய்விட்டுச்சிர்க்கும் அளவில் நகைச்சுவையாய் சில கருத்துக்களைச்சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில், கழகப்பணியில், தியாகத்தில் பத்து சதவீதம் கூட இல்லாத தோழர்களிடம் கூட மிகத்தோழமையோடும் அன்போடும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடியவர்கள் அய்யா ஆசிரியர் அவர்கள் .தந்தை பெரியார் அவர்களுக்கு இனிப்பு,பழங்கள்  பிடிக்கும். இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள் யாரேனும் கொடுத்தால் அதனை அப்பொழுதே கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு , கொடுத்த தோழர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவாராம், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும். இயக்கத்தோழர்கள் புத்தகத்தை கொடுத்தால் பெற்றுக்கொள்வார்கள். மறுமுறை பார்க்கும்பொழுது அந்தப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தைக் கூறுவார்கள். மிக நல்ல புத்தகம் என்றால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொடுத்தவரின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவார்கள்.

 புத்தகத்தின் மீதிருக்கும் அவரின் காதல் அற்புதமானது.நாம் தலைவர்களின் வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். தோழர் காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நூலகத்தின் மேல் கொண்டிருந்த காதலை. நூலப் படிப்பதற்காக காலை முதல் மாலை வரை நூலகத்தில் இருந்த வரலாறைப் படித்திருக்கின்றோம் அய்யா ஆசிரியர் அவர்கள் தான் பயணிக்கும் வாகனத்தையே நூலகமாக மாற்றிக்கொள்கிறார். தான் பயணிக்கும் வாகனத்தை  எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிதான இடமாக ஆக்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே இருக்கின்றார். 

.போகக்கூடிய ஊர்களில், நாடுகளில் எல்லாம் பழைய புதிய புத்தகக் கடைக்குப் போகக்கூடியவர். செம்மாந்து நிற்கும் பெரியார் திடலின் பணிகளில் மிகப்பெரிய பணி நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகம். குளிரரூட்டப்பட்ட அறைகளும், பாடப்பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகும், பழைய குடியரசு இதழ்களும், விடுதலை ,உண்மை போன்ற இதழ்களும் பைண்டிங் செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும், இணையத்தில் அவை எல்லாம் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பேருழைப்பும் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் காரியங்கள்.

 ஆசிரியருக்கு புத்தகம் பிடிக்கும் என்பதனை அறிந்த கழகத்தோழர்கள் போகும் இடமெல்லாம் புத்தகம் கொடுப்பதை இப்போது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். உலகமெல்லாம் தான் போய் வந்த இடங்களில் வாங்கிய புத்தகங்களை, தோழர்கள் கொடுத்த புத்தகங்களை எல்லாம் நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகத்திற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப்புத்தகங்கள் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலரும், நூல் எழுத விரும்பும் பலரும் அடைக்கலம் புகும் இடமாக பெரியார் திடல் நூலகம் இருக்கிறது.இந்த நூலகத்தைப் பார்த்தாலே அய்யா ஆசிரியர் அவர்கள் நூல்களுக்கும், நூலகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எளிதில் புரியும்.  

பெரியார் தொலைக்காட்சி(periyar.tv) வலைத்தளத்தில்  இருக்கிறது. இணையத்தின் மூலமாக எளிதாகப் பார்க்கமுடிகின்றது. தமிழர் தலைவர் அவர்களின் உரையை,கழக முன்னனித்தலைவர்களின் உரைகளையெல்லாம் உடனுக்குடனே கணினி மூலம் கேட்க முடிகின்றது. எங்களைப் போன்றவர்கள் காலையில் நடைப்பயிற்சி போகின்றபோதே பெரியார் தொலைக்காட்சி மூலமாக அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையிலே பேசிய பேச்சினைக் கேட்கமுடிகின்றது.நடையும், குளிர்ந்த காற்றும் கொடுக்கின்ற இன்பத்தை விட அய்யா ஆசிரியர் அவர்களின் குரலை, கருத்தை பெரியார் தொலைக்காட்சி மூலமாக கேட்கும் இன்பம் பெரிது. மாட்டு வண்டியில் ஏறி  பயணம் செய்து , ஒலிபெருக்கி இல்லாத இடங்களில் அய்யா ஆசிரியர் பேசியது  அந்தக் காலம் 60,70 ஆண்டுகளுக்கு முன்னால்.அன்றைக்கு அவர் பேசியது ஒரு ஊரின் ,ஒரு பகுதியில் மட்டுமே கேட்டது.  இன்றைய காலகட்டத்தில் அய்யா ஆசிரியர் அவர்கள்  ஒரு இடத்தில் பேசும் பேச்சு பதிவு செய்யப்பட்டு இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் கேட்கப்படுகிறது. இரண்டு நிலையிலும் தந்தை பெரியாரியலை, தமிழர்களுக்கான விடிவை பேசும் உணர்ச்சிமிக்க குரலாக அய்யா ஆசிரியர் அவர்களின் குரல் இருக்கிறது.அவரின் போர்ப்பரணி எப்போதும் போல் ஒலிக்கிறது. எழுத்தால், உரையால், இணையத்தால்,கல்வி நிறுவனங்களால், பெரியார் புரா போன்ற திட்டங்களால் பெரியார் பணி முடிக்கும் அய்யா ஆசிரியர் அவர்களின் பணி பெரும்பணி.எவரோடும், எதனோடும் ஒப்பிட்டுச்சொல்ல முடியாத அரும்பணி.    

கொள்கைகளின் உறுதியாக இருப்பவர்கள் என்றால் எளிய வாய்ப்பு பெற்ற தோழர்களைக் கூட உயர் பொறுப்பில் வைத்துப்பார்க்கும் அய்யா ஆசிரியரின் அணுகுமுறையால் பயன்பெற்றவர்கள் நாம். தலைமைக்கு கட்டுப்படு, தலைமை சொல்வதைக் கேள், தலைமை சொல்வதைச்செய் என்பதே வாழ் நாள் பெருமையாகப் பெற்றிருக்கும் தோழர்களின் கூட்டத்தில் நாமும் ஒருவர்.தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மையாருக்குப்பின் நமக்கு கிடைத்திருக்கும் அருட்கொடை அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவர் சுட்டும் திசையில் நம் பயணத்தைத் தொடருவோம். இனப்பகையின்  கருத்துருவாக்கத்தை,கருத்தினை வேரறுப்போம். 

வா.நேரு,தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்....

நன்றி : விடுதலை 01.12.2017
(திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

Sunday, 3 December 2017

மதிக்கும் மாண்பாளர்............

ஏனோ தானாவென்று
எதையும் அவர்
செய்ததில்லை...
எதைச்செய்தாலும்
முன்கூட்டியே திட்டமிடலின்றி
அவர் வந்ததில்லை.....


நோயின் தன்மையை
ஆய்ந்து அறிந்து
அதனை நீக்கும்
மருத்துவத்தில் வல்லாளர்....

மொய்க்கும் நோயாளிகளை
அவர்தம் நோய் தீர்க்கும்
அகச்சுரப்பியல் மருத்துவராய்
மணிக்கணக்கில் பார்த்தபோதும்
இலக்கியத்தெற்கென
மணிக்கணக்காய்
நேரமொதுக்காமல் விட்டதில்லை....

மருத்துவத்தில்
மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை
அவற்றின் முகத்திரைகளை
கிழித்தெறிவதில்
எந்த நாளும் சளைத்ததில்லை.....

திருக்குறளைப் பரப்புவதை
திராவிட இயக்கம்போல
வாழ்நாள் பணியாகச்
செய்தவர் அவர்.....
அழகுற ஆங்கிலத்தில்
திருக்குறளை மொழிபெயர்த்து
அதன் நுட்பங்களை
அந்நிய மொழியிலும்
சொன்னவர் அவர் !

பெரியார் இயக்கம்
செய்யும் பணிக்கெல்லாம்
பெறும் நன்கொடை
அளிக்கும் அருளாளர்....
பெரியாரின் தொண்டர்களை
மதிக்கும் மாண்பாளர்......

தேடித்தேடி
நூல்களை வாசிக்கும் பண்பாளர்....
ஆங்கிலத்தில் வாசித்த
பகுத்தறிவுப் புத்தகங்களை
அழகு தமிழில்
மொழி பெயர்த்த ஆற்றலாளர்......

வயது முதிர்ந்தோர்
வாடிடும் நிலை கருதி
முதியோர் காப்பகம் அமைத்த
முதியோர் காப்பாளர்.....

தனக்கென வாழ்வதே
வாழ்க்கை எனக்கருதாமல்
அடுத்தவர்களையும் நினைத்து
வாழ்ந்தவர் அய்யா
மருத்துவர் கு.கண்ணன் !
தரணியில் என்றும்
அவர் புகழ் ஓங்கும் !.......

                  வா. நேரு .......
(கடந்த 23.11.2017, மதுரையில் மறைந்த புகழ்பெற்ற அகச்சுரப்பியல்,நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர் அய்யா கு.கண்ணன் அவர்களின் நினைவாக )     


 

Saturday, 2 December 2017

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்......

                                                                  தமிழர் தலைவர் வாழியவே......
திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.
இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!
பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.
வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்
காண்கிலேன் அன்றும் இன்றும்
உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’
- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!


திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!
பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.
தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.
இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.
சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.
அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.
69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!
மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!
அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!
85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!
வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!
நன்றி : விடுதலை தலையங்கள் 02.12.2017