Saturday 17 April 2021

கிருமிகளும் கிருமி நாசினியும் ....முனைவர்.வா.நேரு


கிருமிகளும் கிருமி நாசினியும்
                                                                        முனைவர்.வா.நேரு


தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியாதது.சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் மட்டுமே ஒரு புரட்சிகரமான இயக்கத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்த ஒரு நண்பர் எனக்கு இருந்தார். அவர் எனக்கு தூரத்து உறவினரும் கூட. என்னை விட பத்து வயது இளையவர்,  என்னை 'அண்ணே' என்று உரிமையோடு அழைத்து பேசிப் பழகக்கூடியவர்.ஒரே ஊர்,உறவினர், தன்வீடு,தன் குடும்பம்,சோறு,சம்பாத்தியம் என்று இல்லாமல் அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து ,அதற்காக நேரத்தை,உழைப்பை செலவழிப்பவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. தான் விற்கக்கூடிய  பத்திரிக்கைகளை என்னிடம் கொடுப்பார். எந்த நூல் என்றாலும் பெரும்பாலும் ஓசியாகப் படிக்கக்கூடாது என்ற எண்ணம் உடையவன் நான் என்பதால் அதற்கு உரிய பணத்தைக் கொடுப்பேன். பெற்றுக்கொள்வார்.ஆனால் திராவிடர் கழகத்தில் நான் இருப்பதை ஏதோ பிற்போக்குத்தனம் என்று எண்ணிக்கொண்டு,தான் முற்போக்கு இயக்கத்தில் இருப்பதாக ஒரு உயர்வு நவிற்சியிலேயே எப்போதும் உரையாடிக்கொண்டிருப்பார். எந்த இயக்கத்தைச்சார்ந்தவராக இருந்தாலும், அடுத்த  இயக்கத்தை  சார்ந்தவர்களைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மனப்பக்குவம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்யாமல் விட்டுவிடுவேன்.,அதனை எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து வந்து விடுவேன்.

அந்த நண்பர் தேர்தல் நேரத்தில் என்னை மிகவும் வம்புக்கு இழுப்பார்.'தேர்தல் பாதை திருடர் பாதை" என்பது அவரது கோட்பாடாக இருந்தது.தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். எல்லாக்கட்சிகளுமே மோசம்.இந்தத் தேர்தலில் பங்கு பெற்று நமக்கு ஒன்றும் நன்மை கிடைக்கப்போவதில்லை.அதனால் தேர்தலைப் புறக்கணித்து விட்டு ,புரட்சிக்கான வழிவகைகளைச்செய்யவேண்டும் என்பது அவரின் பேச்சாக இருக்கும்.

நான் அவரிடம்  தேர்தலைப் புறக்கணிப்பதில் எங்களுக்கு  நம்பிக்கை இல்லை. தேர்தலைப் புறக்கணிப்பதால் நாம் யார் வரவேண்டாம் என்று நினைக்கின்றோமா அவர்கள் வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. எங்கள் இயக்கத்திற்கு என்று தனித்தன்மையான பார்வை இருக்கிறது. கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக (இப்போது 75 ஆண்டுகளுக்கு மேலாக ) தேர்தலில் போட்டியிடாத இயக்கம் திராவிடர் கழகம்.தந்தை பெரியார் தனக்கு இரண்டு முறை முதலமைச்சர் ஆகும் பொறுப்பு வந்த போதும்,பெரும்பதவிகளைத் தருவதாக சிலர் சொன்னபோதும் அதனையெல்லாம் மறுத்தவர். தான் மட்டுமல்ல, தனது இயக்கமான திராவிடர் கழகத்தைச்சார்ந்தவர்கள் யாரும் தேர்தலிலே போட்டியிடக்கூடாது என்பதிலே மிகக் கண்டிப்பாக இருந்தவர். பதவி ஆசை இருப்பவர்கள்,கட்சியின் பின் வாசல் வழியாகச்சென்று விடலாம் என்று உணர்த்தியவர்.ஆனால் தானோ, தனது இயக்கத்தைச்சார்ந்தவர்களோ தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்ததைப் போலவே, ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய கொள்கைக்கு யார் ஆதரவாக இருப்பார்கள் என்பதனை உணர்ந்து,அந்தக் கட்சிக்கு தன்னுடைய இயக்கத்தைச்சார்ந்தவர்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதைச் சொன்னவர்,அது மட்டுமல்ல தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், தன்னுடைய தொண்டர்களை தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஏன் ஆதரவளிக்கிறோம் என்பதனைத் தெளிவுபடுத்தி, வழிகாட்டி,பிரச்சாரம் செய்யச்சொன்னவர் என்றெல்லாம் விளக்கியபோது, அவர் நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.நான் சொன்ன கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல,'தேர்தல் பாதை திருடர் பாதைதான்', நான் ஓட்டுப்போடமாட்டேன், மற்றவர்கள் ஓட்டுப்போடுவதையும் பிரச்சாரத்தின் மூலமாகத் தடுப்பேன் " என்று அவர் சொன்னது எல்லாம் நினைவில் நிற்கிறது.

அண்மையில் மிக நீண்டகாலம் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தேன்.

கேள்வி : இப்போது இருக்கிற நிலைமையில் தி.மு.க.வால் பாசிசத்திற்கு எதிராக என்ன சாதித்துவிட முடியும் என்பதற்காக திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள்..


தோழர் மருதையன :திமுகாவால் சாதித்துவிடமுடியும் என்பதற்காக இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் சொல்லவில்லை.பாசிசம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கவேண்டும்.அவ்வாறு தடுப்பதற்கு நமது கையில் இருக்கிற சாத்தியமான ஒரே மாற்று திமுகதான்.கமலஹாசன் இல்லை,விஜயகாந்தும் இல்லை.வேறு யாரும் இல்லை.அதிமுக கூட்டணி ஆட்சியில் அமர்வது என்பது நேரடியாக பாஜகவை ஆட்சியில் அமர்த்துவது போன்றதாகும்.அப்படி அமைந்தால் நாம் நேரடியாக பாசிசத்தின் கீழ் வந்துவிட்டோம் என்று பொருள்.உ.பி.யாக குஜராத்தாக நாம் மாறப்போகிறோம் என்று பொருள்.இதைத் தடுக்கவேண்டும். -
தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தபோது ,மகிழ்ச்சியாக இருந்தது.

“ ஜன நாயகம் என்பது தலையை எண்ணுவதுதானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல “ என்றார் தந்தை பெரியார்.இந்த ஜனநாயகம் என்பது மிக விநோதமானது.தந்தை பெரியார் அளவிற்கு இந்த ஜன நாயகத்தை,தேர்தல் முறையை நார் நாராகக் கிழித்தவர்கள் வேறு யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.  தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட  திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவதில்லை. திராவிடர் கழகமாக மாறிய நாளில் இருந்து ,கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அதில் எந்த வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கும் ஒரே இயக்கம் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட திராவிடர் கழகம் ஒன்றுமட்டும்தான்.தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லக்கூட இயக்கங்களிலே தனித்தன்மையானது திராவிடர் கழகமாகும். தான் தேர்தலில் போட்டியிடாமல், ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை ஆதரிக்கவேண்டும்,ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதனை விளக்கமாக எடுத்துவைப்பது தந்தை பெரியார் காலத்திலிருந்து நடைபெறும் நிகழ்வாகும்.இன்றைக்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் திராவிடர் கழகத்தோழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும், யார் வெற்றி பெற பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதையும்  திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்    விளக்கியிருக்கிறார்.

.13.03.2021 குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே  முன் மொழிந்த  அரசியல் தீர்மானம் ‘ நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டப்பேரவைத்தேர்தலும் -நமது கடமையும் ! ‘என்னும் தலைப்பிலே ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட்து.

 அத்தீர்மானத்தின் கடைசிப்பகுதி

“மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக ,ஜாதி ரீதியாக பிரித்து,சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ்-சங் பரிவார்-பா.ஜ.க. உள்ளிட்ட வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச்சக்திகள்,கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்க்க்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச்செய்யவேண்டும். அதற்கு ஆக்கபூர்வ மாற்று தி.மு.க. கூட்டணியே என்பது அதன் கொள்கைத் திட்டங்களே சான்றாகும்.தி.மு.க. அணியின்  வெற்றி என்பது வெகுமக்கள் நல்வாழ்வின் வெற்றி என்பதையும் மனதில்கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக்குழு தமிழக வாக்காளர்ப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக்கொள்கிறது.

ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல;நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக -விடியலாக அமைய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்க்ள் முன் வைக்கிறோம் ..வெல்லட்டும் திராவிடம் “ என்ற இந்த்த் தீர்மானத்தை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே முன்மொழிந்தார்கள். திரண்டிருந்த திராவிடர்  கழக உறுப்பினர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி இந்த்த் தீர்மானத்தை வழிமொழிந்த காட்சி அற்புதமாக இருந்த்து.

இன்னும் கூட நோட்டாவுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் 'முற்போக்கு 'தோழர்கள் இருக்கிறார்கள்.'ஊழல் 'அற்றவர்களுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் 'உத்தமர்கள் 'இருக்கிறார்கள். 'திராவிடத்தால் வீழ்ந்துவிட்டோம்'- அதனால் நம்ம ஜாதிக்காரர்களுக்கு  ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கும் 'தமிழர்கள்' இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட குழப்பவாதிகளைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெரியாரியல் நமக்கு வழங்கியிருக்கிறது

தந்தை பெரியார் இயக்கத்தின் இரண்டு கண்கள் போன்ற கொள்கைகள் சாதி ஒழிப்பும்,பெண்ணடிமை ஒழிப்பும்தான்.சாதி ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் வாழ் நாள் முழுவதும் போராடினார்,வாதாடினார்,சிறை ஏகினார். சாதி ஒழிய வேண்டும் என்றால் ,இந்து மதம் ஒழிய வேண்டும் என்று சொன்னார். ஆனால் இந்து மதத்தை விட்டு தந்தை பெரியார் வெளியில் செல்லவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்தமதத்திற்கு மாறப்போகிறேன்,நீங்களும் வாருங்கள் என்று சொன்னபோது,தந்தை பெரியார் மறுத்தார். நீங்கள் செல்லுங்கள்,சாதாரணமாகச்செல்லாதீர்கள், இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிக்கொண்டு மொத்தமக வெளியேறுங்கள் என்று சொன்ன தந்தை பெரியார் ,தான் இந்துமதம் என்னும் அமைப்புக்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராடினார். வெற்றி கண்டார்.

தந்தை பெரியார் பெண்ணுரிமை வேண்டும் என்னும் நோக்கில் குடும்ப அமைப்பு முறையை மிகக் கடுமையாகச்சாடினார். 'பெண்களே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்'என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்தார். திருமணம் ஒரு கிரிமினில் குற்றமாக்கப்படவேண்டும் என்று உரையாற்றினார்.ஆனால் இருக்கும் குடும்ப அமைப்பு முறைக்குள் விதவை மறுமணம் மற்றும்  சுயமரியாதைத் திருமண முறையைக் கொண்டுவந்தார். சட்டபூர்வமான அங்கீகாரம் என்பது பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1967-ஆம் ஆண்டில்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு கிடைத்தது. ஆனால் 1930- களில் இருந்து ஏறத்தாழ 40 ஆண்டுகள் சுயமரியாதைத் திருமணங்களை தான் தலைமையேற்று நடத்தியதோடு,பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன்,பேரா.அன்பழகன், ஆசிரியர் கி.வீர்மணி எனத் தன் கொள்கை பேசும் பலரும் தலைமையேற்று நடத்திட வழி வகுத்தார். அப்போது நடந்து கொண்டிருந்த வைதீகத் திருமணங்களுக்கு மாற்றாக ஒரு நேர்மறையான அணுகுமுறையாக சுயமரியாதைத் திருமண முறை அமைந்தது.

இப்படித் தந்தை பெரியார் கொள்கைகளின் தனித்துவத்தை விவரித்துக்கொண்டே செல்லலாம்.இருட்டாக இருக்கிறதே என்று திகைத்து நிற்பதற்கு அல்ல கொள்கை. மாற்றாக இருட்டை விளக்குவதற்காக ,கையில் சிறு மெழுகுவர்த்தி இருந்தால் கூட ஏற்றிவைத்து, இருட்டை விளக்கி பின்பு மின் விளக்கினால் முழு இருட்டையும் நீக்கி, ஒளி ஏற்படுத்துவ்தே பெரியார் கொள்கை.அதுவே பெரியாரியல் அணுகுமுறை. இன்றைக்கும் கூட சிலர் கூறுகின்றார்கள். " வாக்கு இயந்திரத்தையே மாற்றி விடுவார்கள், என்ன செய்ய முடியும் ?" என்று ஒரு நம்பிக்கை இழப்போடு பேசுகிறார்கள். சுற்றி நடப்பதை முழுவதையும் உள்வாங்கிக்கொண்டு ,அதற்கு எதிராக பிரச்சாரம்,பிரச்சாரம்,பிரச்சாரம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதே இன்றைய தேவை.மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், பொய்யும் புரட்டும் தூள் தூளாகும். எப்படிப்பட்ட மோசடியும் அம்பலமாகும்..

இது கரோனா தொற்றுக்காலம்.கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. இவ்வளவுதான் நமது உலக வாழ்க்கையா என்று சிலர் நினைத்துக்கொண்டு நிற்கையில் அறிவியல் அறிஞர்கள்  தடுப்பூசியைக் கண்டுபிடித்து, மக்களுக்கு  கிருமி நாசினியை ஏற்றுவதன் மூலம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒப்பிட்டு " கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்.போன்ற கிருமிகள் நம்மை அழிக்கத்துடிக்கின்றன.இந்தக் கிருமிகளைத் தடுக்கும் தடூப்பூசிதான் தி.மு.க.அதற்கான கிருமி நாசினிதான் திராவிடர் கழகம் " என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் 18.03.2021 தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது போல(விடுதலை 19.03.2021) , ஆர்.எஸ்.எஸ். கிருமி, என்னனவோ வேடமிட்டு தமிழ் நாட்டை அழிக்கப்பார்க்கிறது. விபூடணர்களை வரிசையாக இறக்கிவிடுகிறது.வித விதமாய் ஆட்களைத் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, ஆளுக்கு கொஞ்சம் ஓட்டைப் பிரித்தால் தி.மு.க. அணியைத் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.தமிழ் நாட்டில் உறுதியாக இந்த ஆர்.எஸ்.எஸ். & பி.ஜே.பி. எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. பி.ஜே.பி. மட்டுமல்ல, அதோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி,மு.க, பா.ம.க.வும் மண்ணைக் கவ்வுவது உறுதி இந்தத் தேர்தலில்.

நண்பர்களே, ஏப்ரல் 6-ந்தேதி மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவிலே  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்ப்டியே ஏற்று, திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கள், மறுமலர்ச்சி தி.மு.க்..விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டணியில் உள்ள அத்தனை வேட்பாளர்களுக்கும் நமது வாக்கினை ஏப்ரல் 6-அன்று அளிப்போம். அதன் மூலம் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வழி வகுப்போம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் சொன்னதுபோல 'அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.'வை மீட்பதற்கும் நாம் வாக்களிப்பது மிகத் தேவையும் முக்கியமும் ஆகும். திராவிடம்வெல்லும், அதனை இந்தச்சட்டமன்றத் தேர்தல் முடிவும் சொல்லும்.

நன்றி : உண்மை இதழ் -ஏப்ரல் 1-15,2021








 

No comments: