Thursday 3 February 2022

”திராவிடப் பொழில்” இதழில் வைக்கம் போராட்டம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை....

 வணக்கம்,


நான் வாருங்கள் படிப்போம் குழுவில் உள்ளேன். ”திராவிடப் பொழில்” இதழில் வைக்கம் போராட்டம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.


எனக்கு மிகவும் பிடித்த மனிதரை பற்றிய ஒரு கட்டுரை என்பதால் உடனே வாசிக்க ஆரம்பித்தேன்.


வைக்கம் போராட்டத்தைப் பற்றி இதற்கு முன்பு வாசித்திருந்தாலும், அதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இந்த கட்டுரையின் மூலமாக கிடைத்தது. அதற்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு வரலாற்று நிகழ்வினை முழுமையாக புரிந்து கொள்வதற்கு, அன்று இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல் மற்றும் அச்சமூகத்தின் வரலாற்று போக்கு ஆகியவையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பது எனது புரிதல். 


எனவே இக்கட்டுரையின் முதல் பகுதியில் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தின் வரலாறு மற்றும் அன்று அங்கு இருந்த சமூக சூழல் மற்றும் மக்களின் சாதிய கட்டமைப்பை விளக்கி இருப்பது இப்போராட்டம் தோன்றுவதற்கான காரணங்களை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவியாக இருந்தது.


இந்தியாவில் நடந்த பல சமூக நீதி போராட்டங்களுக்கு வைக்கம் போராட்டமும் அதில் தந்தை பெரியாரின் பங்கும் ஒரு முன்னோடியாக இருந்தன என்று  நீங்கள் குறிப்பிடிருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.


அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இப்போராட்டம் ஒரு உத்வேகத்தை அளித்தது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. இதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.


பெரியாரின் வாழ்க்கை போராட்டமும், பிரச்சாரமும் இணைந்த வாழ்க்கை என்று விளக்கியிருப்பது சிறப்பு. அதை வைக்கம் போராட்டத்தின் மூலமாகவும் உணர முடிந்தது. 


அன்புடன்,

சிபி மாறன்.

https://dravidapozhil.pmu.edu/

No comments: