Thursday 31 March 2022

மார்ச்-31...

 மார்ச்-31...


அலுவலகத்தில் இருக்கும்போது

பிப்ரவரி முடிகிறது

என்றாலே மனதிற்குள்

ஒரு நடுக்கம் வரும்....


மார்ச் மாத இறுதிக்குள்

கொடுக்கப்பட்ட இலக்கை

எப்படி முடிப்பது என்பதையே

உறக்கத்தில் வரும் 

கனவு கூடச்சொல்லும்...


இலக்கை வைத்து ஓடுவதுதான்

வாழ்க்கையா என

உள்மனது சில நேரம் சொல்லும்...


ஜனவரி இறுதியிலேயே

பட்டியல் தயார் ஆகியிருக்கும்...

நேரில் பார்க்கவேண்டியவர்கள்...

தொலைபேசியில் 

பேச வேண்டியவர்கள்....

,மேல் அதிகாரியோடு சென்று 

பார்க்க வேண்டியவர்கள்....

வித விதமாய் பட்டியல்

எப்படி அதனை செயற்படுத்துவது

எனும் செய்முறையே

மாதம் முழுவதும்

மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்...


இருக்கும் வாடிக்கையாளரைத் 

தக்க வைத்துக்கொள்வது மட்டுமல்ல

புதிய வாடிக்கையாளர்களைத்

தேடிப்போய் பேசி சேர்ப்பது...

நம்மிடமிருந்து பிரிந்து போய்

வேறு நிறுவனத்தில் இருக்கும்

வாடிக்கையாளரிடம் புதிதாக

வந்திருக்கும் வசதிகளைச்சொல்லி

வரச்சொல்வது ...என

வகை வகையாகப் 

பட்டியல் இருக்கும்....


மார்ச் 31-ல் இலக்கிற்கும்

மேலும் எட்டிவிட்டு

அன்று மாலை ஒரு 

வெற்றிச்சிரிப்போடு

உடன் பணியாற்றியவர்களோடு

உற்சாகமாய் தேநீர் குடித்து

பேசிச் சிரித்து 

வீடு திரும்பிய காலெமெல்லாம்

நினைவில் ஓடுகிறது....


ஓய்வுற்குப் பின் 

எல்லா நாட்களையும் போலவே

அமைதியாய்

எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி'

'கடந்து போகிறது மார்ச்-31

ஆனால் ஓடிய நாட்களே

பசுமையாய்த் தோன்றுகிறது இன்று...

                         வா.நேரு,31.03.2022 மாலை 2 மணி...


No comments: