Monday, 1 December 2025

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்...

 

எண்பத்து மூன்று ஆண்டுகளாய்

பொதுவாழ்வு!

கிட்டப்போவது திட்டும்

வசவும்தான் எனத் தெரிந்து

பத்துவயதில் தானே

தேர்ந்தெடுத்த பொதுவாழ்வு!

பொதுவாழ்வுக்குத் தன்னை

அழைத்துவந்த திராவிடமணியும்

உடன் பிறந்த அண்ணனும்

அண்ணாவோடு போய்விட

அண்ணனால் அடிக்கப்பட்டபோதும்

விடாது தந்தை பெரியாரின்

தொண்டராய்த் தொடர்ந்தவர் இவர் !

உடன் இருந்தவர்கள் எல்லாம்

அமைச்சராக வலம் வந்தபோதும்

அய்யா.அம்மாவின் தொண்டராகவே

தொடர்ந்தவர் இவர் !

எத்தனை முறை இவரது

உயிருக்கு குறிவைத்து

எதிரிகளின் தாக்குதல் !

எத்தனை முறை நோய்கள்

இவரைத் தீண்டித் தீண்டிப்

பரிசோதனை செய்தன…

அத்தனையையும் தாண்டி

அய்யா பெரியார் பணிமுடிக்க

விரைகிறார்!பேசுகிறார்!

எழுதுகிறார்!பேட்டி அளிக்கிறார்!

உலகில் வரும் அறிவியல்

புதுமைகள் மூலம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை

கொண்டு சேர்ப்பது எங்ஙனம் என்றே

நாளும் சிந்திக்கிறார்…உடன் இருக்கும்

தோழர்களைத் தூண்டுகிறார்!

தந்தை பெரியாரை நான்

நேரடியாகப் பார்த்ததில்லை!

தந்தை பெரியாரும் நீங்களும் ஒன்று

என்றால் கோபம் வரும் உங்களுக்கு..

ஆனால்  நான் தந்தை பெரியாரின்

கொள்கைகளை ஏற்றதற்கு

அதை வாழ்நாளெல்லாம்

கடைப்பிடிப்பதற்கு

தந்தை பெரியாரின் கொள்கைகளை

அப்படியே பிரதிபலிக்கும்

கண்ணாடியாய் தங்களைக்

கண்டதால்தான் நாங்களும்

தொடர்கிறோம் தந்தை பெரியார்

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்..

வளமாய்த்தான் வாழ்கிறோம்!

எவனுக்கு வாழ்வில் எதில்

குறைந்தோம் நாங்கள்?..



நாளை 93 வயதைத் தொடும் எங்கள்

அய்யாவே! அய்யா ஆசிரியர்

கி.வீரமணி அவர்களே! எங்கள்

குடும்பத்தினர் அனைவரும் இணைந்து

வாழ்த்துகிறோம் தங்களை!

வாழ்க அய்யா !வாழ்க! வாழ்க!

                               முனைவர் வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் .                                                01.12.2025

Sunday, 30 November 2025

சாப்டூரில் நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

 

எனது சொந்த ஊர் சாப்டூர்.அங்கிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் 6ம் வகுப்பு பின்பு எட்டாம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன்.இடையில் ஏழாவது மட்டும் எம்.கல்லுப்பட்டியில்.கடந்த 26.11.2025 அன்று சாப்டூரில்  உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, நிகில் பவுண்டேசன் பயிற்சியாளர்கள் மூலமாக நிகழ்த்துவதற்கு அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் திரு .சுந்தரராஜ் உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்து நடத்தலாம்,மிகவும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்



.நிகில் பவுண்டேசன்,பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.  26.11.2025,புதன்கிழமை இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு  நிகில் பவுண்டேசன் நிறுவனர் திரு.சோம. நாகலிங்கம் IRS(Rtd) அவர்கள் ஒத்துக்கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது.கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று இந்த நிகழ்வு காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது...

மிகவும் நமக்கு பிடித்த ஒருவரின் திடீர் இழப்பை எப்படி சரி செயவது என்பதற்கு திரு சோம.நாகலிங்கம் அவர்களின் செயல்பாடு மிகப்பெரிய உதாரணமாகும். கல்லூரிக்குச்சென்ற தனது மகன் நிகில் திடீரென விபத்தில் இறந்துவிட, சில  நாட்கள்(21 நாட்கள்) துக்கத்திலேயே இருந்துவிட்டு,இனியும் இப்படி இருப்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு உகந்தது அல்ல எனத் தீர்மானித்து,துயரத்தில் இருந்த தனது இணையரிடமும் பேசி ,இறந்த தனது மகன் அடிக்கடி குறிப்பிடும் அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நட்த்துங்கள்எனும் கோரிக்கையை ஏற்று ,இந்த நிகழ்வினை நடத்த ஆரம்பித்தவர் திரு.சோம. நாகலிங்கம் அவர்கள்

திரு சோம நாகலிங்கம் சார் அவர்கள் உரையாற்றுகிறார்.அருகில் தலைமை ஆசிரியர்,நான்,சொ.நே.அன்புமணி மற்றும் பயிற்சியாளர்கள்.


அப்போது அவர் மத்திய அரசுப்பணியில் உயர்பொறுப்பில் இருந்தார்.அவரது இணையரும் அப்படியே.இருவரும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடத்த ஆரம்பித்தனர்.இன்றைக்கு அவரது இணையரும் இல்லாத நிலையில்.தனது பணி ஓய்வுக்குப் பின் தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை திரு சோம. நாகலிங்கம் சார் அவர்கள் செய்துவருகின்றார்.என்னைப் பொறுத்த அளவில் ”கல்விக்காகப் பணி செய்பவர்களே மிகப்பெரும் மனிதர்கள் “இந்த அறக்கட்டளை பற்றி அறிந்துகொள்ள https://www.nikhilfoundation.co.in/index.php

இந்த அறக்கட்டளை பற்றி மேலே குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று பார்த்தால் முழுமையாக அந்த அறக்கட்டளை பற்றிப் புரிந்துகொள்ளமுடியும்.மிகப்பெரும் பணி,போற்றவேண்டிய பணி.

26.11.2025 புதன்கிழமை சாப்டூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் ,மாலையில் மிக மகிழ்ச்சியாக பின்னோட்டம் அளித்தனர்.அவர்களின் உற்சாகம் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.

முழு நாளும் சாப்டூர் அரசுப்பள்ளியில் இருந்தது மிக மகிழ்வான நாளாக இந்த நாள் எனக்கு அமைந்தது.என்னோடு எனது மகன்  சிறப்பு பி.எட். முடித்திருக்கும் சொ.நே.அன்புமணியும் வந்து கலந்து கொண்ட்து மேலும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது.

சிறப்பு பயிற்சியாளராக  திரு இராமூர்த்தி அவர்கள் நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்தார்.,மற்றும் பயிற்சி கொடுப்பவர்களாக திரு எஸ்.பி.குமரகுருபரன், திரு வேல்முருகன்,திரு மாரீஸ்வரன், திரு ப்ரீத்தா,திரு சுகுமாறன்,திரு நந்தினி மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்தார்கள்.


உற்சாகமாக பின்னோட்டம் கொடுத்த ஒரு மாணவிக்கு நூல் பரிசு 

...


சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு க.சுந்தரராஜ் M.Sc,M.Phill.,B.Ed அவர்களும் உதவித் தலைமையாசிரியர் திரு சு.தமிழிரசன் M.Sc.,B.Ed அவர்களும் மற்றும் அத்தனை ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியினை திரு சோம்.நாகலிங்கம் அவர்கள் நகைச்சுவையோடும் வாழ்வியல் எதார்த்த நிகழ்வுகளோடும் இணைத்து அருமையாக நட்த்தினார். இன்னும் இந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுக்க நான் முயற்சிகள் எடுக்கவேண்டும்.தலைமை ஆசிரியரும்,தமிழாசிரியரும் நூலகத்தைக் காண்பித்தனர்.அருமையான புத்தகங்களை தமிழ்நாடு அரசு அளித்திருக்கிறது.அதைப் பள்ளிக் குழந்தைகள் நன்றாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மகிழ்ச்சி அளித்தது.

 

Monday, 24 November 2025

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)...தீபிகா சுரேஷ்

 

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)

ஆசிரியர் : தீபிகா சுரேஷ்

பதிப்பகம் : படைப்பு,கடலூர் -2 பேச : 7338897788 /7338847788

பக்கங்கள் : 130, விலை ரூ 200 முதல் பதிப்பு 2025

வாருங்கள் படிப்போம் குழுவின் மூலம் அறிமுகமான தோழர் தீபிகா சுரேஷ் அவர்களின் நாலாவது படைப்பு.தலைப்பு ‘சிவராமு 1-ம்தெரு வார்டு எண் 28 ‘. தன்னுடைய இளமைக்காலம்,உறவுகள் பற்றிய நினைவுகளைக் கவிதைகளாக வடித்துக் கொடுத்திருக்கிறார். எளிய சொற்களில் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை மட்டுமல்ல வாசிப்பவர்களின் இளைமைக்காலத்திற்கும் அழைத்துச்செல்லும் வல்லமை உடையதாக இக்கவிதைத் தொகுப்பு இருக்கிறது.

‘திண்ணைகள் இருந்தவரை

தெருக்கள் உயிரோடு இருந்தன

சில உறவுகளும்’

என்று சொல்கிறார்.உண்மைதானே,கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம் பெயர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு மூடப்பட்டே இருக்கும்  எதிர் வீட்டுக் கதவுகள் பழக்கமாகி விட்டிருக்கின்றன. நாமும் அப்படித்தான் கதவை மூடியே இருக்கப் பழகியிருக்கின்றோம்இப்போது கிராமங்களும் கூட திண்ணைகள் இல்லாமல் அப்படி மாறிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டுவதுபோல் உள்ளது இக்கவிதை.

‘ . . . எண்ணெய் தேய்த்து குளிப்பதும்

     சிணுக்கோலி வைத்து

     முடி உலர்த்துவதும்

      . . . 

      அப்பத்தா அப்பத்தாதான்’  

இந்தக் கவிதையைப் படித்தபோது 102 வயதில் மறைந்த எனது அப்பத்தா சாப்டூர் சின்னக்குட்டி அவ்வா நினைவுக்கு வந்தார்.கடைசிவரை தானே சமைத்தார். தானே எண்ணெய் தேய்த்துக் குளித்தார். எனது அம்மா(அவருக்கு அம்மாவைப் பெத்த அம்மா) எனது அப்பத்தாவை ‘என்ன குமரி, எண்ணெய் தேய்த்துக் குளிச்சிட்டு சிக்கெடுக்க ஆரம்பிச்சிட்ட போல ‘ என்று கேலி செய்யும்போது ‘ போடி ‘ என்று அவர் செல்லமாகத் தன் பேத்தியைத் திட்டுவதுவரை என் மனதுக்குள் ஓடியது.நம் இளமைப்பருவ நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து காண்பிக்கும் கவிதை மிகச்சிறந்த கவிதை இல்லாமல் வேறன்ன?




ஒரு முரணை ஒரு கவிதையில் நன்றாகச் சொல்கிறார்

‘ஊருணிக்கருகே

மூக்கடைத்து

நடந்த போதும்

ஊரணி மீன் குழம்பு

ருசிக்கவே செய்தது’ என.

தன்னுடைய எழுத்துப்பயணம் எப்படித் தொடங்கியது எனத் தோழர் தீபிகா சுரேஷ் குறிப்பிடுகிறார். இக்கவிதையைப் படித்து முடித்தவுடன் வாய்விட்டுச் சிரித்தேன்…

‘பத்தாம் வகுப்பில்

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து

தோழிக்கு வந்த

காதல் கடிதத்திற்கு

பதில் எழுதியதில்

தொடங்கியது

இந்த எழுத்துப் பயணம்….

அந்தக் காதல் என்ன ஆனதென

சத்தியமாய் தெரியாது…’

தான் சோர்ந்துபோகும்போது தனக்கு ஊக்கமளிப்பவர்கள் யார் என்பதை ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்..

‘எப்போதாவது விடுமுறை நாட்களில்

வயலுக்குப் போய் வருகையில்

வெறும் காலோடு

தலையில் புல்லுக்கட்டோ

விறகு கட்டோ தூக்கி

ஓடுவதா நடப்பதா எனத் தெரியாமல்

முன்னேறிப் போகும்

அன்னை மார்களையும்

அக்கா மார்களையும்

மனதில் நிறுத்திக் கொள்கிறேன்

அவ்வப்போது அலுவலகத்தில்

சோர்ந்து போகையில்…

‘நினைவு ஒரு ஆவணம் ‘ என ஆரம்பித்து ஓர் அழகிய அணிந்துரையை எழுத்தாளர் ரவி சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். ‘கவிதைகளுக்கும் எனக்குமான தூரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன தூரம் என்றாலும் …’ என ஆரம்பித்து தலைமையாசிரியர் திருமதி ரோசாலி சேவியர் தான் வாழ்ந்த தெருவைப் பாடிய கவிஞர் தீபிகா சுரேஷை மனதாரப் பாராட்டி மகிழ்ந்து வாழ்த்துரை அளித்திருக்கிறார்.




இந்தக் கவிதைத் தொகுப்பில் பழமையைப் போற்றும் சில கவிதைகளும் இருக்கின்றன. எனக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டெனினும் தன்னுடைய கிராமத்து வாழ்க்கையை,அப்பாவை,அப்பத்தாவை,தாத்தாவை,கிராமத்துப் பெண்களை, உறவுகளை மிக இயல்பான சொற்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர்களுக்கு மிகவும் இத்தொகுப்பு பிடிக்கும்.நகரத்தில் பிறந்தவர்களும் கிராமத்தைப் புரிந்துகொள்ள இக்கவிதைத் தொகுப்பு உதவும்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர் கவிஞர் தீபிகா சுரேசு அவர்களுக்கு…தொடரட்டும் அவரின் படைப்புப் பணி…

தோழமையுடன்

வா.நேரு, 25.11.2025


 

Sunday, 23 November 2025

திரு வீ.வீரி(செட்டி) சார் அவர்களுக்குப் புகழ் வணக்கம் !

 இன்று எனக்கு சாப்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியராக இருந்த பெரும் மதிப்பிற்குரிய திரு வீ.வீரி(செட்டி) சார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். நவம்பர் 24,2022 அன்று இயற்கை எய்திய அவருக்குப் புகழ் வணக்கம்! அவரது பணிகளைப் பற்றிய 'கனவு போலத்தான் நடந்தது' என்னும்  புத்தகம்  தீர்ந்துவிட்டது. மறுபடியும் அச்சடிக்கவேண்டும்.மாணவர்களின் மனதில் இடம் பிடித்த ஆசிரியர்கள் மறைவதில்லை.தங்கள் உழைப்பால்,தங்கள் தொண்டால் மாணவர்களின்,அவர்களின் வாரிசுகளின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்கள். 


அவர் மறைந்த சில நாட்களில் பதிவு செய்த பதிவு 

இன்றைய எனது தலைமை ஆசிரியர் நினைவு நாளில் எனது மகன் சொ.நே.அன்புமணியின் பங்களிப்பு அவரது நினைவிற்கு





பொறியாளர் க.சி.அகமுடை நம்பி அவர்களின் பிறந்த நாள் விழா..




திருவள்ளுவர் மன்றம் சார்பாக இன்று மாலை அய்யா பொறியாளர் க.சி.அகமுடை நம்பி அவர்களின் பிறந்த நாள் விழா மதுரையில்  கொண்டாடப்படுகின்றது.அறக்கட்டளைச் சொற்பொழிவினை  அய்யா பேரா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் ஆற்றுகின்றார்.நானும் வாழ்த்துரை வழங்குகின்றேன்.அய்யா க.சி.அகமுடை நம்பி பற்றி நான் வலைத்தளத்தில் எழுதிய இரண்டு பதிவுகளையும் இணைத்துள்ளேன். 
















 

Saturday, 22 November 2025

கவிதை பாடிக்கொண்டிருந்த வானம்பாடி

 




ஈரோட்டு வானில் கவிதை பாடிக்கொண்டிருந்த வானம்பாடி ஒன்று இன்று விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கவிதை புனைவதே தன் வாழ்க்கை என்று தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துப் பாடிக்கொண்டிருந்த பறவை அது.

ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !

ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?

வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?

எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !

தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !

எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !


                        வா. நேரு -

நன்றி : எழுத்து.காம்- 18.2.2014

11 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை. அய்யா தன்னுடைய 92-ஆம் வயதில் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்திருக்கின்றார் .நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வீரவணக்கத்தை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன். தனது கவிதைகளால் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்றென்றும் வாழ்வார். தமிழ் இலக்கிய உலகம் இருக்கும்வரை அவரது புகழ் வாழும்.அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும், தோழர் அகன் போன்ற அவரது கவிதை வழி வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தtத்தைத் தெரிவிக்கிறேன்.

முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

Thursday, 20 November 2025

எங்களுக்கும் வலிக்கிறது ...

 

ஊடகத்துக்காரன் காட்டும்

கடவுள் வெளிச்சமெல்லாம்

உண்மை வெளிச்சமென…

விட்டில் பூச்சி போய்

டியூப்லைட் வெளிச்சத்தில்

மோதி விழுந்து சாவதுபோல்

கூட்டத்துக்குள் சிக்கி

அய்யகோ எங்கள் உறவுகள்

திக்கித் திணறுகிறார்களே!

மூச்சுத் திண்றிச் சாகின்றார்களே…





சொர்க்கம் கிடைக்குமென

மெக்காவிற்குப் போய்

பேருந்து தீப்பிடித்து

‘அய்யோ கடவுளே !

காப்பாற்று எங்களை

எனக் கதறி அழுதபோதும்’

குழந்தைகளைக் கூடக்

காப்பாற்றவில்லையே கடவுள்…!

 

எங்கள் உடன்பிறப்புகளின்

இறப்பு..துன்பம்...

எங்களுக்கும் வலிக்கிறது ..

எனினும் இல்லாத கடவுளை

நோக்கி எங்கெங்கோ

பயணம் செய்தாலும்

உதவ மாட்டார் கடவுள்

என்னும் உண்மையைச்

சொல்ல வேண்டியிருக்கிறது…

ஏனெனில் கடவுள் இல்லை..

கடவுள் இல்லை!

கடவுள் இல்லவே இல்லை!

                              வா.நேரு, 20.11.2025