Wednesday, 15 October 2025

அண்மையில் படித்த புத்தகம் : எண்ணங்களின் வண்ணங்கள்..கோ.ஒளிவண்ணன்

 

அண்மையில் படித்த புத்தகம் : எண்ணங்களின் வண்ணங்கள்

நூல் ஆசிரியர்               : கோ.ஒளிவண்ணன்

பதிப்பகம் : எழிலினி முதல் பதிப்பு : 2020 விலை ரூ 150

கலைஞர் நூற்றாண்டு நூலக எண்: GR 3782

இது ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். 33 கட்டுரைகளை உள்ளடக்கி,பல்வேறு தலைப்புகளில், பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நூலைப் பிரித்தவுடன் இந்த நூல் பல ஆண்டுகளுக்கு முன்னால் , நான் சமுதாய நோக்குள்ள கட்டுரைகளை எழுதவேண்டும் என வித்திட்ட,தொடர்ந்து ஊக்கமளித்த  அருமைத்தோழர் காலஞ்சென்ற பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என்று  நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.மறைந்த தோழர் ,பெரியார் சாக்ரடீஸ் அவர்களைப் பற்றி எண்ணம் ஓடியது.உண்மைஇதழுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு எத்தனை பேரிடம்,எத்தனை கட்டுரைகள் வாங்கியவர் தோழர் பெரியார் சாக்ரடீஸ். ஒரு கூட்டத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்கள் கூடப் பெரியார் சாக்ரடீசைக் குறிப்பிட்டார்.தோழர் பெரியார் சாக்ரடீஸ் பற்றிய பலவித நினைவுகளை இந்த நூலின் நுழைவுவாயில் நினைவுபடுத்தியது.



இந்த நூலின் வெளியீட்டு விழாவில் ,திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் உமா அவர்கள் இந்த நூல் குறித்து ஒரு 20 நிமிடம் பேசியிருக்கிறார்கள்.யூ யூ-டியூப்பில் முழுமையாகக் கேட்டேன். நூலை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.கட்டுரைகளின் தொகுப்பினை வெளியிட ஊக்கப்படுத்திய ! ஒருவரைப் பற்றிய செய்தியை என்னுரையில் அண்ணன் ஒளிவண்ணன் கொடுத்திருக்கிறார்.. இப்படி எதிர்மறையாக நின்று ஊக்கப்படுத்துகிறவர்கள் வாழ்க!..தான் ஒரு பதிப்பாளராக இருப்பதால் எப்படி எளிதாக இந்த நூலைக் கொண்டுவர முடிந்தது என்பதையும் அண்ணன் ஒளிவண்ணன் எழுதியிருக்கிறார்.! அதற்காக நாம் எல்லாம் பதிப்பாளராக மாற முடியுமா? என்ன?..

அசுரன் திரைப்படத்தைப் பற்றியது முதல் கட்டுரை.அடுத்து நீட் தேர்வினால் உயிரிழந்த தங்கை அனிதாவைப் பற்றிய கட்டுரை.அப்புறம் திராவிட இயக்கம் பற்றி,சமூக நீதி பற்றி,மாதொரு பாகன் நூல் பற்றி,ஜோதிராவ் பூலே பற்றி, அய்யா நன்னன் அவர்கள் பற்றி,பூமணியின் பிறகு பற்றி, அறிஞர் அண்ணா பற்றி,தோப்பில் மீரான் பற்றி, வித்தியாசமான விமானப்பயணம் பற்றி என்று கலவையாக இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்டுரைகளும் இப்போது வாசித்தாலும் உயிர்ப்பாக இருக்கின்றன.இந்தக் காலகட்டத்திற்கும் பொருந்துவதாக ,நடப்போடு ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கும் கட்டுரைகளாக இருக்கின்றன.



அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது புத்தகக் கடைத் திறப்பு விழாவிற்கு வந்ததைப் பற்றி மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும்என் தந்தை உயிர்த்தெழுந்து வந்தார் என்று எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை பற்றி யூ டியூப்பில் தோழர் உமா அவர்களும் மிக நன்றாகப் பேசியிருக்கிறார்கள்.பெரியாரும் இலக்கியமும்’,’தந்தை பெரியார்-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒப்பீடு,பெரியாரின் பொது வாழ்க்கையும் பண்பு நலன்களும்,பெரியார் சிக்கனக்காரரா?கருமியா? என்று பல்வேறு தலைப்புகளில் தந்தை பெரியார் பற்றி எழுதியிருக்கிறார்.சித்த மருத்துவர் கே.பி.அருச்சுனன் அவர்களின் திடீர் மறைவு குறித்து நெருநல் உளனொருவன்என்னும் தலைப்பில் கட்டுரையைக் கொடுத்து இருக்கிறார். நேற்று என்னோடு பி.எஸ்.என்.எல்-லில் வேலைபார்த்த ,என் வயதுடைய நண்பர் கிருஷ்ணன் அவர்களின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்டபோது,இதே திருக்குறளைத்தான் நானும் பயன்படுத்தினேன்.எக்காலத்திற்கும் உண்மையைச்சொல்லும் திருக்குறள் அது.நல்ல தலைப்பு கட்டுரைக்கு.

மொத்தத்தில் விறுவிறுவென வாசிக்க முடியும் கட்டுரைகள்.நிறைய விசயங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் கட்டுரைகள். நூல் ஆசிரியர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 

 

 

2 comments:

டாக்டர் கோ.ஒளிவண்ணன் said...

அண்ணா நேரு... புத்தகக் காட்சி முடிந்து இரவு துருக்கி நாட்டினரின் விருந்து முடித்துக் கொண்டு தங்கி இருக்கும் குடிலுக்குச் செல்லும்போது ரயிலில் படித்தேன் தங்கள் திறனாய்வினை.... நேரம் இங்கு இரவு 8.30

திடீரென்று யாரோ (வேறு யார் நீங்கள் தான்): ரயிலிலிருந்து வெளியே இழுத்து வானத்தில் பறக்க வைத்தது போல உணர்ந்தேன்.

நன்றி 🙏🙏🙏

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சிங்க அண்ணே...