Monday, 1 December 2025

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்...

 

எண்பத்து மூன்று ஆண்டுகளாய்

பொதுவாழ்வு!

கிட்டப்போவது திட்டும்

வசவும்தான் எனத் தெரிந்து

பத்துவயதில் தானே

தேர்ந்தெடுத்த பொதுவாழ்வு!

பொதுவாழ்வுக்குத் தன்னை

அழைத்துவந்த திராவிடமணியும்

உடன் பிறந்த அண்ணனும்

அண்ணாவோடு போய்விட

அண்ணனால் அடிக்கப்பட்டபோதும்

விடாது தந்தை பெரியாரின்

தொண்டராய்த் தொடர்ந்தவர் இவர் !

உடன் இருந்தவர்கள் எல்லாம்

அமைச்சராக வலம் வந்தபோதும்

அய்யா.அம்மாவின் தொண்டராகவே

தொடர்ந்தவர் இவர் !

எத்தனை முறை இவரது

உயிருக்கு குறிவைத்து

எதிரிகளின் தாக்குதல் !

எத்தனை முறை நோய்கள்

இவரைத் தீண்டித் தீண்டிப்

பரிசோதனை செய்தன…

அத்தனையையும் தாண்டி

அய்யா பெரியார் பணிமுடிக்க

விரைகிறார்!பேசுகிறார்!

எழுதுகிறார்!பேட்டி அளிக்கிறார்!

உலகில் வரும் அறிவியல்

புதுமைகள் மூலம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை

கொண்டு சேர்ப்பது எங்ஙனம் என்றே

நாளும் சிந்திக்கிறார்…உடன் இருக்கும்

தோழர்களைத் தூண்டுகிறார்!

தந்தை பெரியாரை நான்

நேரடியாகப் பார்த்ததில்லை!

தந்தை பெரியாரும் நீங்களும் ஒன்று

என்றால் கோபம் வரும் உங்களுக்கு..

ஆனால்  நான் தந்தை பெரியாரின்

கொள்கைகளை ஏற்றதற்கு

அதை வாழ்நாளெல்லாம்

கடைப்பிடிப்பதற்கு

தந்தை பெரியாரின் கொள்கைகளை

அப்படியே பிரதிபலிக்கும்

கண்ணாடியாய் தங்களைக்

கண்டதால்தான் நாங்களும்

தொடர்கிறோம் தந்தை பெரியார்

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்..

வளமாய்த்தான் வாழ்கிறோம்!

எவனுக்கு வாழ்வில் எதில்

குறைந்தோம் நாங்கள்?..



நாளை 93 வயதைத் தொடும் எங்கள்

அய்யாவே! அய்யா ஆசிரியர்

கி.வீரமணி அவர்களே! எங்கள்

குடும்பத்தினர் அனைவரும் இணைந்து

வாழ்த்துகிறோம் தங்களை!

வாழ்க அய்யா !வாழ்க! வாழ்க!

                               முனைவர் வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் .                                                01.12.2025