அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்
நூல் ஆசிரியர் : முனைவர் மா.வசந்த்
வெளியீடு
: செண்பகம் வெளியீட்டகம்,தஞ்சாவூர்.
முதல் பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 56, விலை ரூ 80
‘கண்ணன் ஒரு
நாத்திகன்’ முனைவர் மா.வசந்த் அவர்கள் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள ஒரு குறுநாவல். தலைப்பைப் பார்த்த உடனேயே
படிக்க வேண்டும் என்று தோன்றியது. சிலர் இப்படித் தலைப்பு வைத்தால் பலர் படிக்க மாட்டார்கள்
என்று நினைத்து தயங்குவார்கள் .ஆனால் எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும்
வசந்த் இப்படி ஒரு
தலைப்பு வைத்ததற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும்
என்று நினைத்தேன். வாங்கினேன். படித்தேன். சின்னப் புத்தகம். மொத்தம் 56 பக்கங்கள்
மட்டுமே உள்ள நூல். பெரும்பாலும் உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ள குறு நாவல்.யார் படித்தாலும்
ஆர்வத்துடன் படிக்கும்படியாக இந்த நூல் அமைந்துள்ளது சிறப்பு.கேள்வி பதில் வடிவில்
பல வரலாற்று செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளது அருமை.ஓர் ஆசிரியராக இருக்கும் கண்ணன்,அவரது
குடும்பம், பள்ளி, மாணவ மாணவிகளுடன் உரையாடல்,தலைமை ஆசிரியருடன் உரையாடல்,காவல் நிலையத்தில்
அனுமதி வாங்குவதற்காகச் சென்று அனுமதி வாங்குவது என்று உயிரோட்டமான ,பல நிகழ்வுகள்
உண்மைபோல் அமைந்திருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது.
இந்த
நூல் ஆசிரியர் ,தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை
கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் என்னும் குறிப்பு
உள்ளது. புகழ்மிக்க இக்கல்லூரியின் செயலாளர் திரு.இரா.சுந்தரவதனம் அவர்கள் ,”பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம்
வயதினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய சொற்களில் தெளிந்த நடையில் உருவாக்கியுள்ளமை
சிறப்புக்குரியது. பெரியாரின் கருத்தியல் கோட்பாடுகளை உள்ளபடியே
உள்ளத்தில் இருத்திப் பயணிக்கும் இவரை
வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துரை வழங்கி இருக்கிறார் .
கல்லூரியின் முதல்வர் முனைவர் (திருமதி) இரா.இராசாமணி
அவர்கள்,” படைப்பிலக்கியத்தில்
கையாளப்படும் அத்தனை நுணுக்கங்களையும் மிகச்
சிறப்பாகக் கையாண்டு
படிக்கும்போது, தொய்வும் இன்றிப் பற்பல கருத்துக்களை விதைத்திருப்பது இன்றைய மாணவர்களுக்குத் தேவையான
ஒன்றாகும். மாறுபட்ட முற்போக்கு சிந்தனையோடு இவ்விலக்கியத்தை வடித்தெடுத்த பேராசிரியர்
முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன்” என்று வாழ்த்துரை கொடுத்து இருக்கிறார்.
நூல் ஆசிரியர் தன்னுடைய என்னுரையில் ,” பெரியார் அவர்கள் முதன்முதலாகக் கடவுள் மறுப்பு
வாசகத்தை முழங்கியதும் திருவாரூர் மண்ணில்தான். அப்படிப்பட்ட
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பிறந்தவன் நான் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று
குறிப்பிட்டு தன்னுடைய உயர்வுக்கும், பகுத்தறிவுப்
பாதைக்கும் காரணமான தனது தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். “பணியில் சேர்ந்த பிறகு எனக்குப் பெரியார் பற்றிய
புத்தகங்கள் வழங்கி என்னைப் பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் சென்றது பேராசிரியர் தோழர் எழிலரசன் அவர்கள். வாசிப்பு மூலம்
பெற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயத்திற்கு ஏற்றவாறு கொண்டு
சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம்தான் இந்த நூல் எழுதக் காரணம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.எழுத்து
அருமையாகக் கைவருகிறது. இன்னும் பல படைப்புகளை வழங்கி சமூகத்திற்குப் பணியாற்ற அவருக்கு
வாழ்த்துகள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மாணவ மாணவிகளும் படிக்கவேண்டிய நூல்.