Thursday, 30 January 2014

புத்தகப் பார்வை -1

புத்தகப் பார்வை என்னும் பகுதியில் "நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல் " என்ற தலைப்பில்  பிப்ரவரி -1-15, 2014 -இதழில் வெளியிட்ட உண்மை மாதம் இருமுறை இதழுக்கு என் நன்றி .  


நூலின் தலைப்பு : திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே !
                   தந்தை பெரியார் கருத்துகள் பற்றி  ஓர் ஆய்வு
நூல் ஆசிரியர்     :   சு.அறிவுக்கரசு
வெளியீடு             :    விழிகள் பதிப்பகம், சென்னை-41 -9444265152/9444244017
முதல் பதிப்பு       :    2013      பக்கங்கள்           :     256  விலை ரூ 160 

                              

       திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு புதிய நோக்கு என இந்த நூலைசொல்லலாம். நூலின் உள்ளடக்கம் பதிமூன்று தலைப்புகளில் உள்ளது. 'திராவிடர் ' என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை 'தொடங்கும் முன்' விளக்கும் இந்த நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக் எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை  தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டிய்லிடுகின்றார். 'தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை , பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? ' அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56 ) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை  ,மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை  'தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில் ,திருமணம் ,நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை '  எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.
                                 வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படி திருப்பம் அடைந்தது என்பதனை 'திருப்பு முனை ' என்னும் அத்தியாயத்திலும், தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரித்து ' பார்ப்பனரல்லாதாருக்காக, சுயமரியாதைச் சமதர்மக்காரராக, நீதிக்கட்சிக்காரராக, திராவிடராக ' எப்படியெல்லாம் அவரின் கொள்கை நோக்கும் அதற்கான நடைமுறை ஆதரவும் எதிர்ப்பும்  அமைந்தது என்பதனை ஆதாரப்பட்டியல்களோடு அடுக்குகின்றார், விளக்குகின்றார் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள். காமராசர் ஆட்சிக்கு தந்தை பெரியார் கொடுத்த ஆதரவை , அன்றைய நிலைமையை 'முதல் எட்டு ஆண்டுகளில்' என்னும் தலைப்பில் விளக்குகின்றார். 'அண்ணாவின் வெற்றி' என்னும் தலைப்பில் 'தேனிலவு முடிந்து விட்டது' என்று ராஜாஜி சொன்னதையும். 'ஆம்,குடும்ப வாழ்க்கை தொடங்கிவிட்டது ' என்று அண்ணா சொன்னதையும் குறிப்பிட்டு , அண்ணாவிற்கு தந்தை பெரியார் தந்த ஆதரவை, அன்றைய நிகழ்வுகளை விரிவாகக் கொடுத்து, இன்றைய தலைமுறைக்கு ஆவணங்களாகக் கொடுத்துள்ளார். 'பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917-ல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச்செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை ,அணுகுமுறைகளை,செயல்திட்டங்களை(Polices) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச்சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கயாண்டார் . சமூக நீதிக்காக- பார்ப்பனர் அல்லாதார் சமுகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செய்ல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர - உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச்செல்வதற்காக மாற்றினாரே தவிர- அவர் மாறவே இல்லை! " பக்கம் 239 -ல் நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக  இந்த நூல் அமைந்துள்ளது. பின் இணைப்பாக சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும், மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி தலைவர் வேதாசலம் அவர்களும் விடுவித்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் உண்மைத் தன்மை, இன்று 67 ஆண்டுகளுக்குப் பின்னாலும் படிப்பவர்களையும் சுடுகின்றது. 
                              'திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி ' என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து , தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான் ,இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி ,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலை நிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால- மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை,,குழப்புவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோர்க்கும்  தருவதாக அமைந்துள்ளது......

                         படித்துப் பயன்பெற வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்களும் , இனி வரும் தலைமுறையும்.
சிறப்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, திராவிடர் சமுதாயத்தின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்குப் பெரியாரின் சிகிச்சை எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை மிக அருமையாக விளக்கும் தொண்டுக்கு நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ' என்று திராவிடர் கழகத்தின் தலைவர் , அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் வைரக்கற்களாய் பதித்துள்ள சொற்கள் ,நூலின் மேன்மையை, நூலாசிரியரின் தொண்டினை சிறப்பிக்கின்றன.

                             'யானை பள்ளத்தில் விழும்போது தவளை கூட ஓர் உதை உதைக்கும் ' என்றார் இங்கர்சால். திராவிடர்கள் என்னும் யானை பார்ப்பனர்கள் விரித்த  மூடப்பள்ளத்தில் விழுந்ததால் மொழியால், இனத்தால் வீழ்ச்சியுற்று, பார்ப்பனத்தவளைகள் எல்லாம் உதைக்கும் ஓர் இனமாய் , ஏமாற்றப்படும் இனமாய் இருந்தோம்.. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் , நாம் யானை பலம் கொண்டவர்கள் என்பதனை உணர்த்திய தந்தை பெரியாரின் உழைப்பை, உண்மையை, அர்ப்பணிப்பை,தியாகத்தை, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றிய அடலேறுத் தன்மையை   இன்றைய்  தலைமுறை உணர்ந்து கொள்ளும். . இன்றைய தலைமுறையும் ,இனிவரும் தலைமுறையும் தந்தை பெரியாரின் இயக்கத்தை, திராவிடர் கழகத்தை  உணர்ந்து கொள்ள உதவும் ஆய்வேடு இந்தப் புத்தகம். படியுங்கள், பரப்புங்கள் தோழர்களே.

Saturday, 25 January 2014

எங்கே கடவுள் ?

                                        எங்கே கடவுள் ?

ஆத்திகர்களாய் அடையாளம்
காட்டிக் கொண்டவர்களின்
கைகளில் கடப்பாரைகளும்
கத்திகளும்.....

இடித்தே தீருவோம்
உடைத்தே தீருவோம்
கட்டியே தீருவோமென்னும்
உறுதி மொழிகள்

எனது கடவுளே பெரிது
இடிக்கப்பட்டன்
புத்தர் சிலைகள்
தகர்க்கப்பட்டது மனித நாகரீகம்
ஆப்கானில் .........

எனது கடவுளே பெரிது
உனது வழிபாடு இருந்த
இடத்தில்தான் கட்டவேண்டும்
எனது வழிபாட்டுத்தலம்
இராம ஜென்ம பூமியா?....
பாபர் மசூதியா ?.....
வெறிபிடித்த கோஷங்களோடு
வளையவரும் மத-மனிதர்கள்...

மூன்று வய்துக்
குழந்தையின் முகத்தில் கத்தி
பாய்ச்சும் ஆத்திகர்கள்...
மொத்தமாய் ரெயிலுக்குத்
தீவைத்து பொசுக்கும்
மிருக எண்ணங்கள் !   ....

எரிக்கப்படும் உயிர்கள்.....
தகர்க்கப்படும் மனித நேயம்....
சிதைக்கப்படும் மனித உடல்கள் !...
அனைத்தும் ஆண்டவனின் பெயரால்....

எந்தக் கடவுள் பெரிது ?
எங்களுக்குத் தெரியவில்லை..
கடவுள் இருப்பது உண்மையெனில்
ஏதாவது ஒரு கடவுள்
இங்கே வாயேன்....
எதிரிகளிடம் சென்று
நானிருக்கும் இடமென்று
சொல்லித் தொலையேன்
                                                        - வா. நேரு-

தோழர் ந,முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று' தனிச்சுற்றுப் பத்திரிக்கையில் 2002-ல் எழுதியது.

Thursday, 23 January 2014

நூல் அறிமுகம் : குடும்பம் (ஒரு சீன நாவல்)

 நூலின் தலைப்பு : குடும்பம் (ஒரு சீன நாவல்)
நூல் ஆசிரியர்      : பா. ஜின்
தமிழில்                   : நாமக்கல் சுப்பிரமணியம்
பக்கங்கள்             : 272  விலை ரூ 85
வெளியீடு             : அலைகள் வெளியீட்டகம், சென்னை-24

                                  குடும்பம் எனும் அமைப்பு எவ்வாறெல்லாம் அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை சிதறியடிக்கிறது, மழுங்க வைக்கிறது, பத்தாம் பசலித்தனமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதனை விளக்கும் சீன நாவல். காவோ குடும்பம் -அதன் உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் என்னும் பாத்திரப்படைப்புகள் மூலம் விரிவாக சித்தரிக்கின்றது.

                              மீ-பெங் அடிமைப்பெண் இளைய முதலாளி ஜீகுவால் காதலிக்கப்படுகிறாள். இளைய முதலாளி இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள இயலாத சமூக சூழல். ஒரு கிழவனுக்கு வைப்பாட்டியாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்போது , அதனை விட சாவதே மேல் என ஏரியில் விழுந்து சாகின்றாள்.

                             மீ - உறவுப்பெண்ணை காதலிக்கிறாள். ஒரே வகுப்பு- ஆனால் ஜாதகப் பொருத்தம் சரியில்லையென்று வேறொருவனுக்கு மூத்தவர்களின் கட்டாயத்தால் கட்டி வைக்கப்படுகின்றாள். கொஞ்ச நாளில் கணவனை இழந்து , பின் மடிகிறாள்.

                              இதைப் போல ருஜீ என்னும் பெண். சமீபத்தில் ஒருவர் இறந்திருக்கும் வீட்டில் , பிரசவம் பார்க்கக்கூடாது என்னும் மூட நம்பிக்கை அடிப்படையில் ,ஊருக்கு வெளியே அனுப்பப்படுகிறாள். பிரசவ வசதி இல்லாமல் சாகின்றாள். மூன்று பெண்களின் இறப்புகள்- அதைச்சொல்லும் விதம்- பாத்திரப்படைப்பு மிக வலிமையாக இருக்கிறது. அதைப்போல ஜீக்சன்,ஜீமின், ஜீகு என்னும் ஆண் பாத்திரப்படைப்புகளும் நினைவில் நிற்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. " நான் கலைஞன் அல்லன். எழுதுவது என் வேலையுமல்ல. என் வாழ்க்கையில் முரண்பாடுகள் இருந்தன.படைப்பிலும் முரண்பாடுகள் உண்டு. அன்புக்கும் ,வெறுப்புக்கும் இருப்பதைப்போல், அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இருப்பதைப்போல் , நினைவிற்கும் நடப்புக்கும் இருப்பதைப்போல், என் வாழ்வும் எழுத்தும் ஒரு துயரமான போராட்டம். என் எழுத்துக்களில் வித்தியாசமான நடைகளும் கோணங்களும் இருக்கலாம். ஆனால் அவற்றின் சாரம் ஒன்றாகவே இருக்கும். தொடக்க காலத்திலிருந்தே என் எதிரிகளைத் தாக்காமல் நான் எழுதியதே இல்லை. என் எதிரிகள் யார் ? காலங்கடந்த பழைய சிந்தனைகள். சமுதாய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக நிற்கும் மடமைகள். மனித நேயத்தை அழிக்க முயலும் அனைத்தும் என் எதிரிகள் " என்கிறார் இந்த நூலின் முல ஆசிரியர் பா-ஜின். தனது கூற்றை நாவல் முழுக்க மெய்ப்படுத்தியிருக்கின்றார்.

                             இந்த நாவல் தமிழில் வரத்தூண்டு கோலாக இருந்த கு.சின்னப்பபாரதி அவர்கள் " இந்த அற்புதமான நாவல் , தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பல படிப்பினைகளை வழங்கக்கூடியதென நான் கருதுகிறேன் " என்கிறார் முன்னுரையில் -உண்மை.

                        இந்த நாவலை தமிழாக்கியவர் நாமக்கல் சுப்பிரமணியம். தமிழ் இலக்கிய உலகின் சார்பாக மனதார,உளமாரப் பாரட்டப்படவேண்டியவர். சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த 'செம்மீன் 'போல, இளையபாரதி மொழி பெயர்த்த 'மய்யழிக்கரையொரம் ' போல, ஒரு அற்புதமான நாவலின் உயிரோட்டமான மொழி பெயர்ப்பு. நமது வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய மொழி பெயர்ப்பு நாவல்.


நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

Sunday, 19 January 2014

நிகழ்வும் நினைப்பும்(14) : நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா?

"சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

    துஷ்பிரயோகம்,
    கத்தோலிக்கம்,
    ஊழல்,
    மனித உரிமை,
    ஒருபாலுறவு

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.

பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன"
பி.பி.சி.செய்தி 18.1.2014

 கத்தோலிக்கப் பாதிரிமார்களின் இத்தகைய செயல்களை மதவாதிகள் எப்படி நியாயப்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை. பாலியில் உணர்வு என்பது வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான ஒன்று. அதனை முறைப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் வாழ்வியலில் நிறைய உள்ளன. அதனை விடுத்து விட்டு நான் முற்றும் துறந்தவன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன், கடவுளின் தூதுவர் சொன்ன செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தூயவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு, சிறுவர்களிடம் இத்தகைய சேட்டைகள் பண்ணுவது எவ்வளவு பெரிய அநியாயம்? எவ்வளவு பெரிய அநாகரிகம்? அப்படி ஒரு கடவுள் உண்மையாகவே இருந்தால், தப்பு செய்யும் பாதிரியாரை அந்த நேரத்தில் படாரென்று அறைய மாட்டாரா? பார்த்துக்கொண்டு சும்மாவே இருப்பார் ? பிஞ்சுகளிடம் வம்பு செய்யும் பாதிரியார்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் திரிகிறார்கள் என்றால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று தானே அர்த்தம் ?  இந்து மதக் கடவுள்களின்  ஏஜெண்டுகள் பண்ணும் அநியாயமும்  தாங்கமுடியவில்லை. ஒரு சாமியார் ? திடீரென்று பிரச்சனைக்கு உரிய நடிகையையும் சாமியாராக ஆக்கி விட்டேன் என்று சொல்லி விட்டார். தீட்சை பெற்றார், சாமியாராகி விட்டார் என்று  செய்தி கொடுத்து விட்டார். இதையெல்லாம் பார்த்தபிறகும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள் என்றால் உண்மையிலேயே நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா? ஆத்திகர்களுக்கே வெளிச்சம்.

Saturday, 18 January 2014

நிகழ்வும் நினைப்பும் (13) : நாத்திகர் என்பதற்காக அகதித் தஞ்சம்

"நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது.

ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நாத்திகர் என்பதற்காக ஒருவருக்கு பிரிட்டனில் அகதித் தஞ்சம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்கனில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். இங்கு அவர் நாத்திகரானார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து கருத்துக் கூற உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது. தேவைப் படுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் சிறப்பான பாரம்பர்யம் கொண்ட நாடு பிரிட்டன் என்று அது கூறியுள்ளது."
பி.பி.சி.செய்தி 14.1.14

நல்ல செய்தி. வரவேற்கப்படவேண்டிய செய்தி. உலகில் இன்னும் சில நாடுகளில் கடவுளை மறுப்பது என்பது, கடவுள் இல்லை என்னும் உண்மையைச்சொல்வது தண்டனைக்குரியது, அதுவும் மரணதண்டனைக்கு உரியது என்பது கொடுமையானது. ஒரு பக்கம் 21 ஆம் நூற்றாண்டு, செவ்வாய் கிரகத்திற்குப் போகப் போகின்றோம், வான வீதியில் வீடு அமைத்து வாழப்போகின்றோம், வான வீதியில் சுற்றுலா போகப்போகின்றோம் என்று சொல்லப்படுகின்ற நிலையில், இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு, அதனைச சந்தேகப்பட்டால் கூட தண்டனை என்பது கொடுமை. கடவுள் காப்பாற்றப்படுவது கடுமையான தண்டனைகளால் என்பது அந்தக் கடவுள் எனும் கருத்துக்கு பெருமை அளிப்பதா ? அளவற்ற அருளாளன், தான் இல்லை என்று ஒருவன் சொல்கிறான் என்றால் நேரில் வந்து இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் போவதை விட்டு விட்டு, கொல்லச்சொல்வாரா? அப்படிச்சொனனால் அவர் அருளற்ற அருளாரா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான்  கடுமையான தண்டனை என்று மதவாதிகள் அச்சுறுத்துகின்றார்கள் போலும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் , க்டும் கோட்பாடு கொண்ட மதவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் நாத்திகர்கள், பிரிட்டனில் தஞ்சம் அடையட்டும். கடவுள் என்னும் பெயரால் தங்கள் நாடுகளில், பகுதிகளில் நடக்கும் கொடுமைகளை பட்டியலிடட்டும். அது ஒரு புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை உலகத்திற்கு அளிக்கும். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்னும் புத்த்கத்தில் ரிச்சர்டு டாக்கின்ஸ் சொன்னதைப் போல ஒரு மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், மாறலாம் என்பதே தனக்குத் தெரியாதே எனத் தன் துணைவியார் சொன்னதாக சொன்னது போல , மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், நாத்திகராக வாழலாம், இன்னும் நலமாக பிரிட்டனில் சென்று உழைத்து வாழலாம் என்பது நம்பிக்கைகுரிய செய்தியாக அந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு, நாத்திகர்களுக்கு  அமையும். உலகில் இத்தகைய அகதி முறையை முதன்முதலில் அமுல்படுத்தியிருக்கும் பிரிட்டனுக்கு பாராட்டுக்க்ள்.

Tuesday, 14 January 2014

நிகழ்வும் நினைப்பும் (12) : அயல் நாட்டு அனுபவங்கள்

மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 12.1.2014 நடைபெற்ற கூட்டத்தில் 'அயல் நாட்டு அனுபவங்கள் ' என்னும் தலைப்பில் , மதுரை  மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சே.முனியசாமி சிறப்புரையாற்றினார். இளமையில் மிகவும் வறுமை நிலையில் இருந்த தான் வளர்ந்த நிலையையும் , வாழ்வில் உயர்ந்த நிலையையும் விவரித்துப் பேசுவதென்றால் 10 மணி நேரம் ஆகும் என்றார். உண்மைதான், அவ்வளவு அனுபவ்ங்கள், துயரங்கள் அவரின் வாழ்க்கையில் உள்ளது. அவருடைய அனுபவங்களை என்னிடம் (விஜயவாடா, நாக்பூர் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள இடங்களுக்கு சென்ற நேரங்களில்) விவரித்திருக்கின்றார். 3, 4 நாவல்களுக்கு உரிய கதைக்கரு உங்களிடம் இருக்கிறது என்று நான் அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.

                    அய்யா முனியசாமியின் வய்து 65. தன்னுடைய பிள்ளைகளை எல்லாம் ஆளாக்கி, அவரவர்க்கு வருமானம் வருவதற்கான கடை முதலிய ஏற்பாடுகளைச்செய்து நிம்மதியாக இருப்பவர். தன்னுடைய 50 வய்து வரை ஆத்திகராக இருந்தவர். 50 வயதிற்குப்பின்புதான், தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக, திராவிடர் கழக உறுப்பினரானவர். செம்மையாக இருக்கும் அவர், 2010-ல்தான் வெளி நாடு போக ஆரம்பித்திருக்கின்றார். இதுவரை 14 நாடுகள் போய் வந்திருக்கின்றார். இந்த ஆண்டு 6 நாடுகள் போகப்போகின்றார். தான் பார்த்த சீனா, எகிப்து, ம்லேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளைப் பற்றி மிக விரிவாக தனது அனுபங்களை, நிழற்படங்களின் துணையோடு பேசினார். இந்தியாவையும் ,தான் பார்த்த நாடுகளையும் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் ,பெரியாரியலோடு தொடர்பு படுத்தியும் அவர் பேசியது சிறப்பாக இருந்தது. பேச்சாளர் என்பதை விட, கருத்தாளராக தனது கருத்துக்களை எடுத்து வைத்தது சிறப்பாக இருந்தது.

                     சீனாவில் எல்லா இடங்களிலும் வெள்ளாமை(விவசாயம்) செய்கின்றார்கள். விவசாயம் செய்யப்படாத வெறும் நிலத்தையே பார்க்க முடியவில்லை. நம் நாட்டில் கிராமத்தில் ஒருவர் நெல் நாத்தைப் போட்டுக்கொண்டு இருப்பார்.பக்கத்து காட்டுக்காரர் 2 மாத நெல் பயிருக்கு களை எடுத்துக்கொண்டு இருப்பார். இன்னொருவர் நெல்லை அறுத்துக்கொண்டிருப்பார். ஒரு ஒழங்கற்ற நிலை , அவரவர் விருப்பத்திற்கு பயிரிடுகின்றார்கள். ஆனால் சீனாவில் ஒரு 400 கி.மீ தூரம் முழுமைக்கும் 2 மாத பயிர் என்றால் ஒன்று போல 400 கி.மீ தூரமும் 2 மாதப் பயிராக இருந்தது. விதைப்பது, வளர்ப்பது,அறுப்பது என்பது ஒன்று போல இருக்கின்றது அதிசயமாக இருக்கிறது என்றார். பக்கத்தில் இருந்த ஒருவர், விவசாயம் அந்த நாட்டில் அரசின் வழிகாட்டுதலில் என்றார். ஹாங்காங் நகரத்தின் அதிசயங்களை, மக்களின் உழைப்பை, வானுயர்ந்த கட்டிடங்களை விவரித்தார். வெறும் கடலும், மலையும் மட்டுமே உள்ள நகரம் அது , எப்படியெல்லாம் நவீன மயத்தைப் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டுகின்றார்கள், மலையைத் தகர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்கின்றார்கள் என்பதையெல்லாம் விவரித்தார்.

                     எகிப்து என்னும் நாடு நைல் நதி இல்லையென்றால் அந்த நாடு இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுத்தம் இல்லை, உண்மை இல்லை. நாட்டில் உள்ள பல கோயில்கள் , பழமையான கோயில்கள், நமது நாட்டில் உள்ளது போல் இருக்கிறது என்றார். அந்தப் படங்களைக் காட்டினார். சுற்றுலாப்பயணிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள், எகிப்தில், விழிப்பாக இல்லையேல், பணத்தை இழக்க நேரிடுகிறது என்றார்.
அதனைப் போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைப் பற்றியும் விவரித்தார்.

                       கூட்டத்தின் ஆரம்பித்தில் 'பெரியார் பேழை' என்னும் தலைப்பில், பா.சடகோபன் பேசினார். ' தானாகப் பிறக்காத  மனிதன், தனக்காக மட்டும் வாழக்கூடாது ' என்னும் தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்கொண்டு அதனை விளக்கிப் பேசினார். பேழை என்பது மிகுந்த மதிப்பு வாய்ந்த பொருளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு பெட்டி என்பதனைக் குறிப்பிட்டு, அதனைப் போன்றதுதான் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என ஒப்பிட்டுப் பேசினார்.

                          மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள் 'இம்மாத விடுதலை சிந்தனை ' என்னும் தலைப்பில் பேசினார். ஒரு இருபது நிமிடம், ஒரு மாதத்தில் வந்த விடுதலை நாளிதழின் முக்கியமான செய்திகளை தொகுத்து ஒருவர் உரையாற்றும் இந்தப் பகுதி முக்கியமானது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் , உலகத்தின் ஒரே நாத்திக தினப்பத்திரிக்கையான விடுதலையின் சிறப்பை, தனித்தன்மையை புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள உதவும் உரை இந்த உரை. அருமையாக இதனைக் கொடுத்தார் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள். விடுதலையில் மின்சாரம் அவர்களின் மோடி யார் ? என்பதனை வெளிப்படுத்தும் கட்டுரை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள், மறைந்த சிவகங்கை சுயமரியாதைச்சுடரொளி அம்மா இராமலக்குமி அவ்ர்களின் வரலாறு, இயக்கத் தொண்டு , விடுதலையில் ஒரு மாதத்தில் வந்த தலையங்கங்கள், ஒற்றைப்பத்தி, ஊசி மிளகாய் விமர்சனம் என அனைத்தையும் தொட்டு சுப.முருகானந்தம் மிக இயல்பான தன்மையில் உரையாற்றினார்.

                              நிகழ்வுக்கு தலைமையேற்ற முன்னாள் நீதியரசர் பொ. நடராசன், சிறப்பு பேச்சாளரை அறிமுகப்படுத்திய அய்யா அ.வேங்கைமாறன், உரையாற்றிய மூவர் என அனைவருமே மதுரைக்காரர்கள், இயக்கத் தோழர்கள். குறிப்பிட்ட நேரமும், குறிப்பிட்ட தலைப்பும் கொடுத்து அவர்களைப் பேச வைத்தபோது, ஒவ்வொருவரின் தனித்திறமையும், உரை ஆற்றலும், கருத்தை கேட்பவர் இனிக்க சொல்லும் ஆற்றலும் வெளிப்பட்டன. 

Monday, 13 January 2014

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழன் எமது நாடு எனச்சொல்லும் நாடாய் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்.. இப்புத்தாண்டில் சாதியெனும் சாக்கடை ஒழிய. மதமென்னும் மாயவித்தை மறைய, கடவுளெனும் கயமை காணாமல் போக உழைத்திட உறுதி ஏற்போம் . . உழைப்பவர்களின் உரிமையும் , பாடுபடும் விவசாயிகளின் குரலும் ஓங்கட்டும்.  இனிய தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Sunday, 12 January 2014

நூல் அறிமுகம் : நெல்லித்தோப்பு -பாவண்ணன்

நூல் அறிமுகம்                       : நெல்லித்தோப்பு -சிறுகதைகள் தொகுப்பு
ஆசிரியர்                                      பாவண்ணன்
வெளியீடு                                  :  ஸ்நேகா , சென்னை-14
விலை                                         : ரூ 55.00

தொலைபேசித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் பாவண்ணனின் சிறுகதைகள் மனம் சார்ந்தது, மனித நேயம் சார்ந்தது. பரபரப்பான வாழ்நிலைக்கிடையில் இளைப்பாறவும், களைப்பாறவும் மட்டுமல்லாது மனித மனங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தவரையில் புரிந்து கொள்ளவும் இலக்கியங்கள் பயன்படுகின்றன.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது செவிப்பறைகளை சினிமா வசனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  உமிழ வேண்டிய பல விசயங்கள் ஒரே மாதிரியான வசனங்கள் மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றி  ஆக்கிரமித்துக்கொள்கின்றன என்றாலும் உடன் இருப்பவர்களுக்காக சகித்துக்கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது.

                              ஆனால் இலக்கிய வாசிப்பு என்பது உள்மனம் சார்ந்தது. தனிமையில் மகிழவும் , நினைக்கவும், வெறுக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் இலக்கியங்களே அடிப்படையாகின்றன.
பாவண்ணனின் 18 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. பாவண்ணனின் வார்த்தைகளில் சொல்வதானால், 'இந்த உலகின் முன் என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். என்னை ஈர்க்கும் பலவற்றையும் ஈடுபாட்டுடன் கவனிக்கிறேன். அசை போடுகிறேன். உள்வாங்கிக் கொள்கிறேன். பறவையானாலும் சரி, மனிதனானும் சரி, மனசுக்குள் ஏந்திக் கொள்கிறேன். கீறல்கள், புண்கள், இரத்தக்கசிவுகள்,வசைகள் இல்லாமல் இல்லை. ஏற்றுக்கொள் என்கிறேன், என் மனதிடம். கைகுலுக்கல்கள், கைதட்டல்கள், பாராட்டுக்களுக்கு இடம் தருவதைப்போலவே இவற்றுக்கும் இடம் கொடு என்கிறேன். எல்லாவற்றையும் ஏற்று அனுபவத்துக்குள்ளாக்கிக் கொள்ள விரும்பு என்கிறேன். ஒரு மரத்தைப் போல, இந்த மண்ணைப் போல , அந்த மலையையும் கடலையும் போல எல்லாவற்றிற்கும் திறந்திரு என்கிறேன். இதொகுப்பின் கதை மாந்தர்களை இந்த வாழ்விலிருந்தே எடுத்திருக்கிறேன். இவர்களைப் பற்றி உணர வேண்டும் என ஆசைப்படுகிறேன். " எனச்சொல்ல வேண்டும்.
                          இந்தத்தொகுப்பில் உள்ள 'பயணம்' என்னும் சிறுகதை நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் கிடைக்கும் ஒரு சிநேகிதச்சிறுவனைப் பற்றியது.கள்ளம் கபட்மில்லாத குழந்தை ஆசையும் அதன் நேசமும் விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. கமிசனும் கமிசனுக்குமான தொழிலுமாய் இருக்கும் உலகில் திடீரெனத் தள்ளப்படும் இரத்தன் எனும் கதாபாத்திரம் மனித உறவுகள் ஆதிக்கம் சார்ந்தும் நன்றியை விட நயவஞ்சகம் சார்ந்தும் இருக்கும் நிலையைக் காட்டுகிறது. 'பொய்' என்னும் சிறுகதையின் சிங்காரம் என்னும் கதாபாத்திரம் 'பொய்ம்மையும் வாய்மையிடத்த' என்னும் குறளை ஞாபகப்படுத்துகிறது. பொய்ச்சாட்சி, பொய்ச்சாட்சி என்று கேலி பண்ணிக்கொண்டே இருக்கும் அப்பாவைக் காப்பாற்ற சிங்காரத்தின் பொய்ச்சாட்சிதான் கை கொடுக்கிறது. 'சரண்' என்னும் சிறுகதை இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் நடுவே தடுமாறும் சுப்பையாசாமிகையும், மடத்திலும் கூட பதவிப்போட்டியால் குருசாமி ஜோதியில் கலந்து விட்டார் என்னும் சிஷ்யனின் பொய்யையும் பேசுகிறது.

                        தலைப்பாக அமைந்துள்ள நெல்லித்தோப்பு என்னும் சிறுகதை போலித்தனமான பரம்பரைப்பவுசையும் , முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை மட்டுமல்லாது பெருமையையும் தொலைப்பதையும் வலுவாகச்சொல்லப்பட்டுள்ளது.

                       'வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் மனித மனம் கொள்ளும் தத்தளிப்புகளும் பதற்றங்களும் பாவண்ணனின் கதைகளில் பதிவாகின்றன. அவசரங்களும் ஆவேசங்களும் குழப்பியடிக்கிற உலகில் தலைகீழாகிவிடுகிறது வாழ்க்கை. எளிமையையும் ,அன்பையும் உதிர்த்த மனிதர்களுக்கு எல்லாவிதப் பிரச்சனைகளும் முளைக்கின்றன.அதன் கோலத்தை வடிப்பதில் பாவண்ணனின் எழுத்துக்கள் மும்முரமாக இயங்குகின்றன. எதார்த்த வாழ்வின் சாரம் எல்லாக் கதைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாவண்ணனின் கதைகள் ஓசையின்றி எழுப்பும் கேள்விகளை நாமும் எழுப்பிக்கொள்ளும்போது இக்கதைகள் விரிவாக்கம் பெற்று நம் வாழ்வின் சங்கடங்களையும் இக்கட்டுகளையும் நமக்கு உணர்த்துகின்றன். ' இவை இச்சிறுகதைத் தொகுப்பை பதிப்பித்த ஸ்நேகா பதிப்பகத்தின் வார்த்தைகள். நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசித்துப்பார்க்கலாம்.

நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

Saturday, 4 January 2014

நன்றி பாராட்டு விழா


 மதுரையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் சிற்ப்புக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து, செய்தியையும்  எழுதி அனுப்பிய பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்களுக்கும், திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களுக்கும் மிக்க நன்றி.   செய்தி வெளியிட்ட விடுதலை இதழுக்கு மிக்க நன்றி

மதுரை, ஜன.4- மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஒடிய மொழியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை முதன் முதலாக மொழி பெயர்த்து "பெரியாரங்கா ரக்சனா" எனும் நூலை எழுதிய பேராசிரியர் தனேஸ்வர் சாகு அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா 30.12.2013 திங்களன்று மாலை 6.00 மணியளவில் மதுரை ஆர்த்தி உணவு விடுதியில்  நடைபெற்றது. விழாவுக்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் முனைவர்.வா.நேரு  தலைமை தாங்கி னார். மதுரை மாநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக  தலைவர் சுப.முரு கானந்தம் அனைவரையும் வரவேற் றார். விழாவிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழக அமைப்புச் செய லாளர் வே.செல்வம் அவர்கள் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களின் சீரிய முயற்சியினை பாராட்டி பேசினார்.
திராவிடர் கழக மண்டல தலைவர் மீ.அழகர்சாமி பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். திராவிடர்கழக மாநில வழக்கறி ஞரணி துணைத் தலைவர் நீதி யரசர்(நிறைவு) பொ.நடராசன் அவர் கள் தந்தை பெரியாரின் உழைப்பால் தமிழகத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமண சட்டம் போன்ற பயன்களை எடுத்துரைத்தும் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டியும் பேசினார். விழாத் தலைவர் முனைவர் வா.நேரு இந்திய பகுத்தறிவாளர்கள் அமைப் பில் செயல்பாட்டில் சிறந்து விளங்கு பவர் பேரா. தனேஸ்வர் சாகு என்பதை எடுத்துரைத்து, தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு ஒரிசாவிலிருந்த வந்திருந்த பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் , தான் மதுரைக்கு அகில இந்திய தத்துவ மாநாட்டிற்கு வருவதை தெரிவித்ததால் இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது என்பதையும், தமிழர் தலைவர் கைகளில் 1005 பவுன் தங்கத்திற்கான பணம் அளித்த விழாவில், தஞ்சையில் கலந்து கொண்டவர் என்பதையும், தமிழர் தலைவர் அவர்களை அழைத்து ஒரியாவில் தந்தை பெரி யாரின் மொழி பெயர்ப்பு நூலை வெளியிட வைத்து பெருமை சேர்த் தவர், தந்தை பெரியார் கொள்கை களின் பால், தமிழர் தலைவரிடம் மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர், இன்னும் தந்தை பெரியாரின் நூல்கள் பலவற்றை அவர் மொழி பெயர்க்க வேண்டும்,  அவருக்கு துணையாக தமிழகம் எங்கும் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக தோ ழர்கள் இருப்பார்கள். தொடர்ந்து இது போன்ற பணியில் அவர் ஈடுபட வேண்டும் என்றும், பெரியாரங்கா ரக்சனா நூல் எழுதி யமைக்கு மனமார்ந்த நன்றியதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா அவர்கள் , தந்தை பெரியார் - தமிழர் தலைவர் கருத்துக்கள் பொறிக் கப்பட்ட நினைவுப் பரிசினை பேரா. தனேஸ்வர் சாகு, , அவரது துணை வியார் பிரதிமா சாகு அவர்களுக்கும்  வழங்கினார். நிறைவாக பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் "அறிவியல் மனப்பான்மை" எனும் தலைப்பில், இந்தியாவில் பிறந்த சமூக சிந்தனையாளர்களை எல்லாம் நினைவு கூர்ந்தும், தான் ஜாதி மறுப்பு, வரதட்சனை மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் என்ற முன்னுரை யோடு பலத்த கைதட்டலுக்கிடையில் அவரது உரையை ஆரம்பித்து, காலம் காலமாக மனித இனம் தவிர, மற்ற உயிரினங்கள் எந்தவித மாற்றமுமின்றி இருக்கையில் மனிதர்கள் தங்கள் அறிவியல் மனப்பான்மையால் தான் இன்றைக்கு வசதியான எளிதான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். எதையும் கூர்ந்து நோக்குவது, ஆராய்ச்சி செய்து முடிவுகளை காண்பது, திரும்பவும் அந்த முடிவை களை செயல்படுத்தி சோதனை செய்து விதிகளை உருவாக்குவது அறிவியல் மனப்பான்மையின் அடிப்படைக் கூறுகள். இதை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு மனிதர்கள் சிறப்புற வாழலாம் என்றும், தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்களுக்கு நன்றி கூற வார்த் தைகளே இல்லை, மிகவும் நன்றி என்று உணர்ச்சிவயமாக பேசினார். அவரது ஆங்கில உரையை முனைவர். வா.நேரு தமிழில் மொழி பெயர்த்து கூறினார். இறுதியாக வழக்கறிஞர் நா.கணே சன் நன்றி கூறினார். விழாவில் , மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பவுன்ராசா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அ.வேல் முருகன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் சே.முனியசாமி,மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மன்னர் மன்னன்,  மதுரை மாவட்ட தி.க செயலாளர் க.அழகர், மதுரை மாவட்ட தி.க துணைத் தலைவர் திருப்பதி,நா.முருகேசன் , காளியப்பன், இளைஞரணி தோழர் கள் பேக்கரி கண்ணன், வேல்துரை, மகளிர் அணித் தோழியர்கள் இராக்கு தங்கம்,நே.சொர்ணம் ,சுசிலா வேல் முருகன், நாகலட்சுமி,  போட்டோ இராதா, இரா.சடகோபன், மு.கனி., மோதிலால்,  ஆட்டோ செல்வம், மாரி முத்து,  மற்றும் கழகத் தோழர்களும் பகுத்தறிவாளர்களும் கலந்து கொண் டனர். நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.

Tuesday, 31 December 2013

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். சாதிகள் ஒழிந்த, மதங்கள் மறைந்த, கடவுள்கள் காணாமல் போன ஆனால் மனித நேயம் மிக்க, உலகம் நோக்கி நடக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். வாழ்த்துக்கள், 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNM91_cCFkj2-YA3XhTYvg6pvB3-o4htyETw0el5ZrBIIczHyVXzaW0mveJtiem-XwqCPcryesx2SGJOLf_My2GvCgCTKoVpUVK5GnbUii5DhP6SIp4WMrgyfeDZMQMCIMIxTybMwD57_z/s1600/download.jpg


 வா. நேரு

பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக.

இணையதளப் படைப்பாளிகள் பேரவை , புதுச்சேரி சார்பாகவும் "எழுத்து" இணையதளத்தின் சார்பாகவும் எனக்கு "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " என்ற விருதினை அளித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பொதுவாக விருதுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. வாங்கப்படும் சில விருதுகளை நான் அறிவேன் என்றாலும் இந்த விருதுப்பட்டயத்தில் கையெழுத்திட்டிருக்கும் நால்வரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அமைப்பாளர் திரு. அமிர்தகணேசன் என்னும் அகன் அவர்கள் மிகப்பெரிய ஊக்கமூட்டக்கூடியவர். புதிய எழுத்தாளர்களை எழுத்து இணையதளத்தில் அற்புதமாகப் பாராட்டக்கூடியவர். , வழி நடத்தக்கூடியவர். முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் 'யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் ' என்னும் தொகுப்பில் எனது 'மத்த்தின் அளவு மட்டுமே ; என்னும் கவிதையை தனது முன்னுரையில் பாராட்டியிருந்தார். யார் என்று தெரியாதபோதும், எவரென்று நேரில் அறியாதபோதும் படைப்புக்களின் தரத்தை மட்டுமே வைத்து அளவிடும் தோழர்களின் , பெரியோர்களின் பாராட்டுக்களை, விருதினை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் நிறைய பகுத்தறிவு படைப்புக்களை ஆக்கு என இந்த விருதின் மூலம் கட்டளையிட்டு இருக்கின்றார்கள் . தொடர்வேன் என்னும் உறுதிமொழியோடு , அவர்களின் பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக. 




விருதுகள்-2013 பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013

தோழர்களே...

வணக்கம் ..

ஒரு படைப்பாளி ,
அவன் சார்ந்த சமூகத்தின் கண்ணாடி.
தூய்மை செய்யும் துப்புரவாளி...
சினங்கொண்டு எழும் சீர்கேடழிக்கும் போராளி...
எல்லாவற்றிக்கும் மேலாக சரி என்பதை சார்ந்து நின்று சான்றுகளோடு தவறுகளை சுட்டிக்காட்டி அழித்தொழிக்கும் ஆயுதம் கொண்ட அவதாரம்...

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இல்லையெனில் தமிழனின் நிலை இன்றுள்ள நிலையை விட மோசமாகி இருந்திருக்கும்...பெண்களுக்கு சொத்துரிமை எனும் ஆயுட்கால அருமருந்தை போராடி பெற்று அளித்து சென்றவர் அவர் எனவே அவரும் ஒரு படைப்பாளியே...!!!

தேர்தல் அரசியலை விரும்பாதவர் பெரியார்...அரசியலில் பங்கு ஏற்க விரும்பாதவர்.: மறுத்தவர் என்றாலும் அவரில்லாமல் தமிழகத்தில் ஓர் அரசியல் இருந்திருக்க இயலவில்லை...தமிழர் கலாச்சார விழுமியங்களில் மூடத்தன மடமைகளை வெளிக்கொணர்ந்து பகுத்தறிவு பாடம் புகட்டியவர்...அவர் கோட்பாடுகள் மூலம் இறைமையை மையப்படுத்திய மூடத்தனங்களை அழிக்க பல நிலைகளிலும் பாடுபட்டார்.

முக்கியமாக தமிழ் இலக்கிய மரபின் மூலமாகவும்
கற்பனை செய்திகள் வழியாகவும் பழக்கவழக்கங்கள் எனும் போர்வையிலும் தமிழர் சமுதாயம் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அவதியுறும் நிலை மாறிட படைப்பாளிகள் எழுத்தைப் பயன்படுத்தி குமுகாய
தொண்டாற்றுவதும் ஒரு படைப்பாளியின் பணியாகும்.

இந்நிலையில் நமது தளத்தில் பகுத்தறிவு ஆக்க வரிகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தனது படைப்பு மற்றும் கருத்துக்களால் அளித்து வரும் இவர் 2014ஆன் ஆண்டின் முதல் விருது என "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " எனும் விருது பெறுகிறார்.

யார் அவர் ?
*******************************************************************
$$$$$ "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " $$$$


எனும் விருது பெறும்

@@@@@ தோழர் .முனைவர் வா. நேரு @@@@@



--------------------------------------------------------------------------------------------
திரு அகன் அவர்கள் - எழுத்து இணையதளத்தில் எழுதியது.


http://eluthu.com/kavithai/165294.html

Sunday, 29 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா -ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்                                         : இரா. நடராசன்
முதல் பதிப்பு                                : ஏப்ரல் 2005           16-ஆம் பதிப்பு : 2013
வெளியீடு                                      : Books for Children
விற்பனை உரிமை                      : பாரதி புத்தகாலயம், சென்னை -18 .
விலை                                             : ரூ 15 மொத்த பக்கங்கள் : 24

                                                  மிகச் சுருக்கமாக அமைந்த ஆபிரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை போல , வீரியமிக்க குறு நாவலாக இந்தச்சிறிய  நூல் அமைந்துள்ளது.கனவு ஆசிரியர் என்னும் புத்தகத்தில் தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக் காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்ப்தனை ' எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரையாக எழுதிய.இரா. நடராசன்  வாசிக்கும் எந்த ஆசிரியருக்கும், ஏன் எந்த மனிதருக்கும்  அறிவியல் மன்ப்பான்மை வரக்கூடிய அளவிற்கு வலிமையாக எழுதியுள்ள குறு நாவலாக 'ஆயிஷா ' அமைந்துள்ளது.  குறும்படம்,நூல் மதிப்புரை என இணையத்தில் இந்த நூலைப் பற்றிய செய்திகள் பல உள்ளன என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படவேண்டிய புத்தகம் இந்தப் புத்தகம்  என உணர்கின்றேன். 

                         பள்ளிக்கூடங்களும் , ஆசிரியர்களும் எப்படி இருக்கின்றார்கள் எனும் உண்மையை உடைத்துப்போடும் கதை, 1995-ல் வந்த புத்தகம் என்றாலும், இன்றும் நாளையும் பொருந்தும் கதை. கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துவதுதான் கல்வி, ஆனால் கேள்வி கேட்கும்   மாணவி ஆயிஷா எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள் ஆசிரியர்களால் என்பதுதான் கதை. இன்றைய சூழலில் எதையும் கேட்காதே, நம்பு , நம்பு என்று சொல்லும் பள்ளிக்கூடங்கள்,எதையும் வாசிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத ஆசிரியர்களிடம் சிக்கிக்கொள்ளும்  மாணவ், மாணவிகள், அதுவும் கேள்வி கேட்கும் மனப்பான்மை இருந்தால் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை நாம் இக்கதையின் மூலம் ஊகிக்கலாம்.  ஒரு ஆசிரியை " ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன் எவ்வளவு தூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழ்ந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று.நான் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும் வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை ? " கையைக் கட்டு ... வாயைப் பொத்து ...:ப்க்கம் 17 "  உணர்வதாக , ஆயிஷாவால்  தனது பணியை, படிப்பை புதிப்பதாக வரும்  பகுதி  அருமை. வகுப்பறைகள் மாறினால் , நாடே மாறும். இன்று வகுப்பறைகள் எல்லாம்  பெரும்பாலும் அஞ்ஞானத்தை பரப்பும் இருட்டறைகளாக உள்ள நிலையில் வெளிச்சத்தைக் கொடுக்கும் மெழுகுவர்த்தியாய் இந்தப் புத்தகம் , ஒரு நம்பிக்கை அளிக்கிறது.
ஆனந்த விகடன் பேட்டியில் இந்த நூலின் ஆசிரியர் அளித்த பதில்

''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'

இன்று இந்தப் புத்தகம் 1 இலட்சம் பிரதிகள் விற்றுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் அதிகம் விற்கக்கூடும். நம்மைப் போன்றவர்கள் இந்த நூலின் பிரதியை தெரிந்த மாணவ, மாணவிகளிடம் ,ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். 'ஆயிஷா ' புத்தகம் படித்துள்ளீர்களா எனத் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வெறும் 15 ரூபாயில் கிடைக்கும் மாற்றுச்சிந்தனை, ஆக்கச்சிந்தனை  புத்தகம் இந்தப் புத்தகம. படிக்காதவர்கள் தய்வுசெய்து வாங்கிப்படியுங்கள். பரப்புங்கள்.

Saturday, 21 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்
ஆசிரியர்                   : கெளரி ராமஸ்வாமி
வெளியீடு                  : ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4
இரண்டாம் பதிப்பு             : 2008,  விலை ரூ 23.00 மொத்த பக்கங்கள் 104

                                 தொலைபேசி, செல்பேசி, உள்ளூர் இணைப்பு, வெளியூர் இணைப்பு, வெளி நாட்டு இணைப்பு என்னும் சொற்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் தொலைபேசி சார்ந்து கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புப்பெற்று பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் 1871- ல் தான் , அ.கி.பெல் தன்னுடைய உதவியாளர் வாட்ஸனுடம் முதன் முதலில் தொலைபேசி மூலம் பேசியிருக்கின்றார். 134 ஆண்டுகளில் உலகத்தை , உலக நடப்பை தலைகீழாக மாற்றிய தொலைபேசியைக் கண்டுபிடித்த அ.கி.பெல்லினைப் பற்றிய சுவையான தகவல்களைத் தரும் புத்தகம் இந்தப் புத்தகம்.

                                    "முன்னோர்கள், இளமைப்பருவம், குடும்பத்தில் சோகம், பிராண்ட போர்ட், பாஸ்டன், 'மிஸ்டர் வாட்ஸன்-இங்கு வாருங்கள்- நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்', நூற்றாண்டுக் கண்காட்சி, தொலைபேசிப் பரிசோதனைகள், சாதனைக்குப் பிறகு, பெல்லின் குடும்பம், பெல்லின் கண்டுபிடிப்புகள், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - ஒரு கணிப்பு " என்னும் 12 தலைப்புகளின் அ.கி. பெல்லின் வாழ்க்கையும், அவரது கண்டுபிடிப்பிற்காக அவர் பட்ட பாடுகளும், அறிவியல் அறிஞரான அவர் விற்பனைத் திறன் இல்லாமையால் பொருளாதார ரீதியாக நலிந்ததையும் ஆனால் மனித நேயமிக்க மனிதராக வாழ்ந்ததையும் இப்புத்தகம் நேர்த்தியாகக் கூறுகின்றது.

                             நாடகமும், இலக்கியமும் அ.கி.பெல்லை, அவரது தந்தை மெல்வில் பெல்லை, அவரது தாத்தா அலெக்ஸாண்டர் பெல்லை (செருப்புத் தைக்கும் தொழிலாளி ) எவ்வளவு தூரம் ஈர்த்தது என்பதும், குறிப்பாக சேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதை ஒரு கலையாக மூன்று தலைமுறையாக செய்து வந்தனர் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. 'இருப்பதா? இறப்பதா ? " என்னும் சேக்ஸ்பியரின் வசனமே , தொலைபேசி முன்னோட்டச்சோதனைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதும் புதிய தகவல் .

                                  பல சமயங்களில் ஒரே வேலையைச்செய்யும் திறமை பெற்றவராக அ.கி.பெல் இருந்ததும், மனித நேயத்தை தனது வாழ் நாள் முழுவதும் கடைப்பிடிப்பவராக,ஊமை, செவிடுகளாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக தனது வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தவராக இருந்ததும் விவரிக்கப்படுகின்றது. தொலைபேசி மட்டுமல்ல, 16 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதும், தனது 29-ம்  வய்திலேயே தொலைபேசியை அவர் கண்டுபிடித்து விட்டாலும், பகட்டாக- சோம்பேறியாக அந்தப் பணத்தை செலவழிப்பவராக இல்லாமல், தனது வாழ் நாள் முழுவதையும்  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செல்வ்ழிப்பவராக  அவர் வாழ்ந்ததும் சொல்லப்பட்டுள்ளது. .

                      " நிறையப் பொதுமக்கள் டெலிபோனைப் பற்றிப் பலவிதங்களில் நினைத்து பயந்தார்கள். 'டெலிபோன் வைத்துக்கொள்வது வீட்டுக்குள் ஒரு ஒற்றனை வைத்துக்கொள்வது போல' என்றார்கள். ...'கம்பி மூலம் மின்சாரம் போகிறது, அப்படி நோய்களும் போய்ப் பரவி விட்டால்...' என்று மற்றொரு பயம். டெலிபோனால் காது செவிடாகுமா? மன நிலை பாதிக்குமோ ?" என்ற கவலைகள் வேறு. இவற்றைத் தவிர 'கடவுள் டெலிபோன் பற்றி என்ன நினைப்பார் ' என்ற விசாராம் வேறு! கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளில் 'டெலி போனை உயபோகிக்க்க்கூடாது ' என்று எழுதியிருப்பதாக ஆதாரத்துடன் காட்டவும் சிலர் இருந்தனர்! இந்தக் கருவி கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதை உபயோகிக்ககூடாது என்று பைபளில் எழுதி வைத்திருக்கிறதாம் " பக்கம்-56-57 . மேலை நாட்டில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடும் இயந்திரமாக கிறித்துவ மதம் இருந்திருக்கின்றது  என்பதும், பல அறிவியல் அறிஞர்கள் மதவாதிகளுக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாறு. அதற்கு அ.கி.பெல்லும் விதி விலக்கு அல்ல போலும். டெலிபோனில் முதலில் கரகரவென்று குரல் கேட்டதும் 'சாத்தான் க்ம்பி வழியாகப்பேசுகிறது' என்றும் மக்களிடம் பரப்பி விட்டார்கள் என்பதும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 2014 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் இப்போதும்கூட , சிலர் சொர்க்கம் என்றும் நரகம் என்றும், சாத்தான் என்றும் பிதற்றிக்கொண்டிருக்கும் வேளையில் 1880-களில் மக்கள் நம்பியதில் என்ன வியப்பு இருக்கின்றது. அதையெல்லாம் மீறித்தான் அ.கி.பெல் வெற்றி பெற்றிருக்கின்றார்.

                   அ.கி.பெல் தன்னுடைய காதலி, பின்னால் மனைவியாகிய மேபெல் ஹப்பரிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்(மனைவியிடம் அலெக் பெல் கொண்ட அன்பு, இலக்கியத்தில் பொறிக்கத்தக்கது ,இருவரும் மிக அந்நியோன்யமாக, ஒருவருடன் மற்றவர் ஆதரவோடு இணைத்துக்கொண்டு இறுதிவரை வாழ்ந்தார்கள் (பக்கம்102))  என்பதும், அதனைப் போல உலக்ப் புகழ்பெற்ற சாதனையாளர் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அ.கி.பெல்லின் உதவி(அலெக் பெல்லை சந்தித்ததுதான் தனக்குத் தன்னம்பிக்கையை  கொடுத்து 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக் கொண்டு போனது; தனிமையிலிருந்து நட்புக்குக் கூட்டிப்போனது ' என்று எழுதியிருக்கின்றார் (பக்கம் 102) )என்பதும் சுட்டப்பட்டுள்ளது. ' நேஷனல் ஜியாகிரபிக் ' பத்திரிக்கையை வாங்கி , பல புதுமைகளைப் புகுத்தி , தனது மருமகனான கில்பர்ட் கிராஸ்வீனர் என்பவரை ஆசிரியராக நியமித்து, அதன் வளர்ச்சியில் அ.கி.பெல்லின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                                             செவிடர்களுக்கு காது கேட்க வைக்க முடியுமா? என்பதற்காகவே தனது தந்தை உருவாக்கிய பார்க்கும் பேச்சை, ஒலி கேட்கும் தன்மையை, காதின் அமைப்பை, அதில் ஒலி கேட்கும் தன்மையை சிறுவய்திலேயே ஆராய்ந்திருக்கின்றார். எம்பதி என்று சொல்வார்களே, அதனைப் போல காது கேளாதவர்களின் துன்பத்தை தனது துன்பமாக ,உணர்ந்ததே தொலைபேசி கண்டுபிடிப்பிற்கு அடிப்படை. " இவர் மனம் அவர்கள்பால்(காது கேளாதவர்கள் ) மிகவும் இரங்கியது. 'என்னுடைய உணர்வுகளும் இரக்கமும் ஒவ்வொரு நாளும் பொங்குகிறது. இந்தக் குழ்ந்தைகள் படும் துயரைப் பார்த்து என் இதயம் வலிக்கிறது ' என்று ..குறிப்பிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பருடன் பேசுகையில் 'செவிடர்களின் தனிமையை யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும் ? நாம் கிராமத்துக்குப் போய், வயல்களில் நடக்கும்பொழுது , தனிமையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால் ஒரு புத்திசாலியான செவிட்டு மனிதன் , ஒரு சந்தோசமான கூட்டத்தின் மத்தியில் , மற்றவர்களுடன் பேசவோ, கேட்கவோ முடியாமல் இருக்கும்போது உணரும் தனிமைக்கு முன் எம்மாத்திரம்? " என்று வேதனையுடன் குறிப்பிட்டார்( பக்கம் 100),... உலகம் முழுவதும் இருக்கும் செவிடர் பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதுடன் நின்று விடாமல் , தன் பெயரையும் ,செல்வாக்கையும் உபயோகித்து ,அவர்கள் துயரைக் களைய பல திட்டங்களையும் ,அமைப்புகளையும் ஏற்படுத்தினார். மனித குல உயர்வுக்காக இன்னும் என்ன புதிய கண்டுபிடிப்புகளைச்செய்யலாம் என்பதே அவர் வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.(பக்கம் 104).

                 ஒரு அறிவியல் அறிஞரின் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை விவரிப்பதோடு நின்று விடாமல், அவரின் மனித நேய மறுபக்கத்தை மிக இயல்பாக, படிப்பவர்க்கு ஆர்வம் ஏற்படும் வகையில் இந்தப் புத்தகத்தை இந்த் நூலின் ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்த்கம் இந்தப்புத்தகம். 

Friday, 20 December 2013

நிகழ்வும் நினைப்பும்(11) : ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய் ....

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இணையம் இணைப்பு பி.எஸ்.என்.எல்-ல்லில் வேண்டும் என்றார். விவரங்கள் பல கேட்டார். இணைப்பையும் வாங்கினார். எத்தனையோ பேர் இணைய இணைப்பு வாங்கி , என்ன செய்வது , எப்படி அதனைத் தனக்கும் , சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது என்று இன்றும் கூடத் தெரியாது இருக்கும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு வாங்கி , ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்த அந்த நண்பர், மிகப்பெரிய பணக்காரர் இல்லை, பெரிய வாய்ப்பு வசதிகள் இல்லை, ஆனால் ஆழமான புரிதல் பெரியாரியலில் உண்டு.தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கே உரித்தான கடுமையான உழைப்பு உண்டு.  தொடர்ந்து , தொய்வில்லாமல், எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக தொடர் உழைப்பினைக் கொடுக்கும் அந்த இனிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்கள். தமிழ் ஓவியா என்னும் பெயர் தமிழ் மணம் மற்றும் தமிழ் திரட்டிகளில் மிகவும் புகழ்வாய்ந்த பெயர்.அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித்தரும் வலைத்தளமாய், தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, புரட்சிக் கவிஞர் பாவேந்தரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, திராவிடர் இயக்க கொள்கையை இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் , தெவிட்ட தெவிட்ட  தெரிந்து படிக்கலாம் என்ற வகையில் அமைந்திட்ட வலைத்தளமாய் தோழர் தமிழ் ஓவியாவின் வலைத்தளம்.

                        

                                      பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும்  தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.  சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக்  குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின்  தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன்.  . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன். "19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா . இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .

Wednesday, 27 November 2013

நிகழ்வும் நினைப்பும்(10) : கால தாமதமும் தண்டனையும்

இன்று(26.11.2013)  காலை மதுரை தியாகராசர் கல்லூரி விலங்கியல் துறைப்பேராசிரியர் திருவள்ளுவன் மற்றும் மதுரைக் கல்லூரி கணிதப் பேராசிரியர்  தர்மலிஙகம் ஆகியோரைச் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேரா.திருவள்ளுவன் அவர்கள், தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கதையைச்சொன்னார். டாக்டருக்குப் படித்தவர் கிராமத்தைச்சேர்ந்தவர். சில மைல் தூரம் நடந்து வந்து பேருந்தைப் பிடித்து , மருத்துவக்கல்லூரிக்கு வரும்போது , வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வரும் நிலை. தினந்தோறும் இதனைப்போல் இந்த மருத்துவ மாணவர் தாமதாக வருவதைப் பார்த்த , ஆசிரியர் கண்டிக்கின்றார். நாளை முதல் இப்படி வரக்கூடாது என்று சொல்கின்றார். மருத்துவ மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கப்பணமில்லை. கிராமத்திலிருந்து வருவதற்கு , ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை, தினந்தோறும் மிகக் கடினமாக 3 மைல் 4 மைல் நடந்து,பின்பு  பேருந்தைப் பிடித்து  ஏறி வந்து வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வருவதைத் தவிர வேறு வழியில்லை. கண்டிக்கும் ஆசிரியர், சில நாட்களில் வகுப்பிற்கு உள்ளே வராதே, வெளியில் நில் எனச்சொல்ல, வெளியில் தினந்தோறும் பல்  நாட்கள் நிற்கின்றார். வெளியில் நிற்கும் நேரத்தில் , அந்த அரை மணி நேரத்தில் ஜன்னல் வழியாகப் பாடஙளைக் கேட்டு,குறிப்பு எடுத்து நல்ல மதிப்பெண் பெறுகின்றார். சில நாட்களில், இவரது நேரத்திற்கு வர இயலாமை,ஏழ்மையப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள் , வகுப்பிற்குள் அனுமதிக்கின்றார்கள்.Winning the heart என்று சொல்வார்களே , அப்படி பேராசிரியர்களிடம் தனது பக்க நியாயத்திற்காக சண்டை போடாமல், பொறுமையாகத் தனது நிலையை உணர்த்திய மருத்துவ கல்லூரி மாணவர் தன்னுடைய பொறுமையான அணுகுமுறையால் வெற்றி பெற்றார்.  பின்பு படித்து இன்று புகழ் பெற்ற மருத்துவராக இருக்கின்றார் எனச்சொன்ன போது என் கண்கள் பனித்தன.
                                   
                                     வெளியில் வந்தவுடன் என் அருகிலிருந்த மகன் சொ. நே. அன்புமணி ஏன் இதைக் கேட்டு, உணர்ச்சி வசப்ப்பட்டீர்கள் என்றான். எனக்கும்  கூட இப்படி அனுபவம் உண்டு என்றேன் அவனிடம். 1980-களில் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியில் +2 படித்தபொழுது, சாப்டூரில் இருந்து காலையில் 7 மணிக்குப் பேருந்து. அதனை விட்டால் 8.50 க்குத் தான் பேருந்து. ஒன்று காலையில் வெகு சீக்கிரம் கிளம்பி 9 மணிக்குப் பள்ளிக்கூடத்திற்கு 7.30க்கு போய் விடுவேன். அப்படி இல்லையென்றால் 8.50 பேருந்தில் போனால் 9.30 க்குத்தான் பள்ளிக்குப்போக முடியும். அப்பொழுது +1 வேதியியல் ஆசிரியர் சுதந்திர மணி என்பவர். என்ன , உனக்கு மட்டும் 9.30 க்குப் பள்ளிக்கூடமா, மற்றவனுக்கெல்லாம் 9-ம்ணிக்கா என்பார். ஆனால் வகுப்பிற்கு உள்ளே சென்று அமர அனுமதிப்பார். எனது அம்மா ஆசிரியரென்றாலும் காலையில் 3 மணிக்கு எழுந்து, மாடுகளுக்கு தண்ணீர் வைத்து, இரையப் போட்டு, பால் பண்ணைக்காரர்களுக்கு பாலைக் கறந்து ஊத்தி , 5 பிள்ளைகளையும் பார்த்து பள்ளிக்கு அனுப்பி என்று இயந்திரம் போல வேலை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு மட்டும் காலை 7 மணிக்குள் சோறாக்கி கொடுத்து விடுவது சாத்தியமில்லை, 7 மணிக்குப் போகும் சில நேரஙகளில் பழைய சோறோடு போவேன். சில  நாள் 8.50 வண்டிக்குப் போனேன். சுதந்திர மணி சார் நம்மை, 9.30 மணிக்கு அனுமதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு போனேன். ஒரு நாள் தலைமை ஆசிரியர் பள்ளியைச்சுற்றி வரும்போது , என்னக்கூப்பிட்டு, என்ன் லேட்டாக வருகிறாய் என்றார். அப்படியே அழைத்துக்கொண்டு, வேதியியல் ஆசிரியரிடம் வர, சுதந்திர மணி சார் என்னைக் காப்பாற்றுவார் என நினைக்க, தலைமை ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். " அய்யா, இவனுக்கு மட்டும் பள்ளிக்கூடம் 9 மணிக்குப் பதிலாக, 9.30க்குத்தான், தினந்தோறும் இப்படித்தான் வருகின்றான் " என்று சொல்ல, திட்டும் அடியும் விழுந்தது. நான் வேண்டுமென்றே செய்யவில்லை, தாமதமாக வந்தது , எனது சூழல் , வசதியின்மை அப்படி இருந்தது. புரியாமல் நம்மைத் திட்டுகிறார்களே என்று பல நாள் வலித்தது. பின்பு கால ஓட்டத்தில் மறைந்து போன நினைவுகளை பேரா.திருவள்ளுவன் சொன்ன நிகழ்வு ஞாபக்ப் படுத்தியதால் கண் கலங்கினேன் என்றேன் என் மகனிடம். " உங்களோடு துயரமப்பா, ஆ,ஊன்னு உடனே பிளாஸ் பேக் போயி விடுவீங்க  " என்றான் என் மகன் என்னிடம் .  " என்ன செய்வது, அன்பு ,இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் வசதியும் , வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை " என்றேன். " பேருந்தில் அதிகக்கூட்டம் இருக்கும், பேருந்திற்குள் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல், பேருந்தின் மேற்கூரையில் (டாப்பில்)ஏறிப் பல நாட்கள் போயிருக்கின்றோம். கரண்ட் வயர் வரும்போது மட்டும் ,குனிஞ்சிக்க, குனிஞ்சிக்க , கரண்ட் வயர் வருது " என்று கத்து வோம். அப்படித்தான் நாங்கள் படித்தோம என்றேன்.