Thursday 17 October 2024

‘திராவிடம் வென்றது ‘ ... இராம.வைரமுத்து

அன்பு இளவல் வழக்கறிஞர் இராம.வைரமுத்து அவர்கள் தனது முதல் கவிதை நூலினை எனக்கு அளித்தார்.மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்.அருகில் பகுத்தறிவு ஊடகப்பிரிவின் மாநிலத்தலைவர் அய்யா மா.அழகிரிசாமி மற்றும் திராவிடர் கழகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் அண்ணன் மதுரை வே.செல்வம் அவர்கள். 





அந்த நூலுக்கு நான் அளித்த வாழ்த்துரை கீழே..


முனைவர் வா.நேரு,

மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

பெரியார் திடல்சென்னை-7.

                     வாழ்த்துரை

திராவிடம் வென்றது ‘ என்னும் தலைப்பில் கவிதைத் திரட்டு நூலினை மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் அருமை உடன்பிறப்பு வழக்கறிஞர் இராம.வைரமுத்து i அவர்கள் ஆக்கி நமக்குத் தந்துள்ளார்கள்.இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள்விடுதலை,விடுதலை ஞாயிறுமலர்,உண்மை,திராவிட வாசிப்பு,கருஞ்சட்டைத் தமிழர் போன்ற இதழ்களில் வெளிவந்தவைமுதலில் பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒன்றிணைத்து ஒரு நூலாக ஆக்கித் தந்தமைக்குக் கவிஞர் இராம.வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நினைவுக் கொடை என்னும் தலைப்பிட்டு கன்னித்தமிழையும் கவிதைத் திறனையும் எனக்கு அளித்த அறிவுப் பேராசான் அன்புத் தலைவர் கலைஞருக்கு”  என்று தான் இந்தக் கவிதை நூல் தொடங்குகிறது மண்டபத்திற்குள்ளே சில புலவர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்டிருந்த கவியரங்கங்களைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்குள்ளே கவியரங்கங்களைத் தலைமையேற்று நடத்திய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.எள்ளலும் துள்ளலுமாய்,எதிரிகளைச் சுட்டிக்காட்டும் சிலேடைகளுமாய் இலக்கியச்சுவையைக் கற்பிக்கும் பாடசாலைகளாய் கவியரங்கங்களை மாற்றிய பெருமை கலைஞர் அவர்களுக்கு உண்டுஎனவே அவரின் நினைவுக்கொடையாக இந்த நூல் அமைந்திருப்பது மிக்கப் பொருத்தமானது.

இந்த நூலில் மொத்தம் 28 கவிதைகள் இருக்கின்றன திராவிட இயக்கம்  எழுத்தால், பேச்சால் அதன் விளைவாக எழுந்த எழுச்சியால்  வளர்ந்த இயக்கம். வாள் முனையை விடப் பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்த இயக்கம்.அதனை இந்தியத் துணைக்கண்டத்திற்கே உணர்த்திய இயக்கம் அந்த வகையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், அன்பு உடன்பிறப்பு  ராம. வைரமுத்து அவர்கள் எழுதுவதில் ,பேசுவதில் தனித்தன்மையோடு விளங்கக் கூடியவர். படிப்பவர்,கேட்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்,பேசுபவர். அந்த வகையில் இவருடைய இந்த்த் ‘திராவிடம் வென்றது’ என்னும் கவிதைத் திரட்டும் எளிமையாகவும் எவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் “ அன்று நீங்கள் ஏந்திய /  அந்தச் சுயமரியாதைத் தீப்பந்தம்/

எங்கள் கைகளில் ன்று- அது / என்றும் ஒளிரும் வென்று!”

என்று தந்தை பெரியாருக்கு இளைஞர் பட்டாளத்தின் சார்பாகக் கவிதை வழியாக உறுதி மொழியை அளிக்கின்றார் சுயமரியாதை  இயக்கத்தின் நூற்றாண்டு மட்டும் அல்ல, கலைஞர் அவர்களின் நூற்றாண்றைக்  கூட  இப்போதுதான் கொண்டாடி முடித்திருக்கிறோம்.

 தாழ்த்தப்பட்டோருக்கு அஞ்சல் வந்தால்/ தர மாட்டார் அவர் வீட்டில்/

ஊர் ஓர் மரக்கிளையில் கட்டி வைப்பார் அன்று /

அந்தச் சமுதாயத்தின் தகத்தகாயச் சூரியனை /

அஞ்சல் துறைக்கு அமைச்சராக்கினார் கலைஞர் வென்று “

என்று மிகச் சிறப்பாகப் பழைய வரலாற்றையும் இன்றைய ஆளுமையையும் இணைத்துக் கவிதையாக்கி கைகளில் கொடுத்திருக்கிறார்  இந்த நூல் ஆசிரியர்.

சிங்காரச் சென்னையின் சிற்பிநீ / ஆரியத்திற்குத் தோல்வியை கற்பிஎன்று  மார்ச் 2022-ல் எழுதி இருக்கிறார்மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் 40க்கும் 40ம் தோற்று ஆரியம் அழுது கொண்டிருக்கும் இந்த வேளையில் மிகப்பொருத்தமான கவிதையாக இந்தக்கவிதை அமைந்திருக்கிறது.

 தாத்தா பேரை எடுக்கணும் தம்பி என /

தமிழ்நாடு வாழ்த்துது உன்னை நம்பி

என்று இன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் அன்புத்தம்பி மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பற்றிய  கவிதையை அளித்திருக்கிறார். பெரியார் வழி செல்வதனால் / பெருமை என்ன கிடைக்குமென/

கேட்டுக் கேலி  செய்த கூட்டத்திற்கு/ லகிலேயே சிறந்த மனிதநேயர்”/ விருது கிடைக்கும் என்று காட்டினார்/ தந்தை பெரியார் கொள்கைகளை/ரணி எங்கும்  நிலை நாட்டினார்”  என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் போற்றிப் பாராட்டி ஒரு கவிதையை இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்.

 இயன்றவை அனைத்தும்/ இடைவிடாது செய்து/

 இயங்குதலே வாழ்க்கை என நிலைநாட்டி /

கழகத்திற்கு வழிகாட்டி/ தமிழ்நாட்டிற்கு ஒளிகூட்டி/

நாங்கள் திராவிடக் கூட்டம் என மார் தட்டி/

கலங்கரை விளக்கமாய்/ அறிவாசன் அய்யா சுப.வீ”  என்று அய்யா சுப.வீ . அவர்களைக் கவிமாலையால் பாராட்டி மகிழ்கின்றார். அதைப்போலவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா, வி.பி.சிங்,அலைக்கற்றை நாயகன் என மானமிகு அய்யா ஆ.இராசா என்று பல தலைவர்களைப் பற்றிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கவிதைகள் இருக்கின்றன 2001 தேர்தல் 2004 தேர்தல் என்று பல தேர்தலில் பற்றிய கவிதைகள் இருக்கின்றன.

மொத்தத்தில் வரலாற்றைச்சொல்லும் கவிதைகளாகவும்,வரலாறு படைத்த திராவிட இயக்கத்துத் தலைவர்களைப் பற்றியும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் சொல்லும் கவிதைகளாக அனைத்துக் கவிதைகளும் இருப்பது சிறப்பு.

திராவிடம் வென்றது ‘ என்னும் கவிதைத் திரட்டு  நூலினைக் கொடுத்திருக்கும் அன்பு உடன்பிறப்பு இராம.வைரமுத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்நமது தோழர்கள் இந்தக் கவிதை நூலினை வாங்கிப் படிக்கவேண்டும்பரப்ப வேண்டும்ஏனெனில் இது முழுக்க முழுக்கத் திராவிடத்தின் வெற்றியைச்சொல்லும் கவிதைத் தொகுப்பு,

தன்னுடைய முதல் கவிதை நூலினை வெளியிடும் கவிஞர் இராம.வைரமுத்து அவர்கள் இன்னும் இதனைப் போலப் பல கவிதை நூல்களை வெளியிடவேண்டும்.அதனைத் தமிழ் உலகம் வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும்.வாழ்த்துகளுடன்.

மதுரை                               தோழமையுடன்

25.08.2024 …                               வா.நேரு

 

Monday 7 October 2024

நீரோடை இலக்கிய மின்னிதழிலில் நூல் விமர்சனம்...

 






நன்றி : நீரோடை இலக்கிய மின் இதழுக்கு...









கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)...அர்ஷா

 தோழர் அர்ஷா அவர்கள் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக அறிமுகமானவர்.மிகத் தீவிரமான வாசகர்.மிக நல்ல நூல் திறனாய்வாளர்.அவர் எனது 7-வது புத்தகமான,கனவு போலத்தான் நடந்தது என்னும் நூலினை வாசித்துவிட்டு, முக நூலில் அவரது கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார்.ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும்? ஒருவர் படித்து தன் கருத்தினைப் பகிர்வதைத் தவிர...நன்றி தோழர் அர்ஷா அவர்களுக்கு... நூல் பற்றிய அவரது கருத்துகள் கீழே... 


முனைவர்


வா. நேரு அவர்களின் கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)

நூல் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர் திரு. வே. வீரி செட்டி அவர்களின் தாக்கத்தை அழகாக விவரிக்கிறது. கீழடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், கற்பித்தல் முறைகளைத் தாண்டி, மாணவர்களிடம் ஆசிரியர் ஏற்படுத்திய ஆழமான மன உறவுகளைப் பற்றிச் சொல்லுகிறது.
திரு. வீரி செட்டி, ஒரு கல்வியாளரைத் தாண்டி, மாணவர்களின் அறிவுத் தாகத்தைத் தூண்டி, ஒரு தந்தையைப் போல் வாழ்வை வழிகாட்டிய ஆசிரியர். அவரது செயல்பாடுகள், ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி குறித்து இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நூல், ஜப்பானிய எழுத்தாளர் சுதூகோ குராயான் எழுதிய "டோட்டோசான்" நூலின் நினைவுகளைப் புத்துயிர்ப்பிக்கிறது. டோட்டோசான் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களை அன்புடன் வளர்த்தார் என்று அந்த நூலில் விவரிக்கப்படுகிறது. இதை வாசித்தபோது, திரு. வீரி செட்டி அவர்களும் இதுபோல தங்கள் மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவியதை பார்க்க முடிகிறது.
10வது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அதனை நிரப்பும் வகையில் தானே சென்று கற்பித்த திரு. வீரி செட்டி, மற்ற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
பள்ளியில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவி பள்ளிக்கு வராமல் இருந்தது அவரை கவலைக்குள்ளாக்கியது. பல ஆசிரியர்கள் கவலைப்படாமல் இருந்தபோது, அவர் நேரில் மாணவியின் வீடு தேடி சென்றார். நிலைமையைப் புரிந்து கொண்டு, பெற்றோர்களிடம் நீண்ட நேரம் விவாதித்து, இஸ்லாமிய சமுதாயத்தில் பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர் பெற்றோர்களுக்கு பெண் கல்வி பற்றி புரிய வைத்து, அம் மாணவியை பள்ளிக்கு அனுப்ப செய்கிறார். அந்த மாணவி தனது உயர்கல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறாள். இது, இந்த ஆத்மார்த்தமான சமுதாய பணியை தலைமை ஆசிரியரின் பல சேவைகளைக் குறிக்கின்ற புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
மேலும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களை செல்வந்தர்களிடமிருந்து பெற்று வழங்குகிறார். கிராமப்புறம் வந்த மாணவர்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் வகையில், அவர் ஒழுங்குகளை ஏற்படுத்தி, பாடத்தை எடுக்கும் பணியையும் செய்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்திருந்தாலும், அவர் மாணவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்திருக்கிறார். இதனால், அவரது வாழ்க்கை பல துயரங்களை எதிர்கொண்டு, அதையெல்லாம் மீறி, மாணவர்களின் நலன் குறித்து ஒருபோதும் கவலைப்படாமல் உழைக்கிறார்.
இந்த நூல், மாணவர்களின் நலனில் அயராது உழைத்த ஆசிரியரின் உன்னத குணங்களை நமக்கு உணர்த்துகிறது. அவர், மாணவர்களுக்கு ஒரு கல்வியாளர் மட்டுமல்ல, ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்த நூல், ஒரு தலைமை ஆசிரியரின் பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த அற்புதமான நூலை படைத்த முனைவர் வா. நேரு அவர்களுக்கு நன்றி!
அர்ஷா ❤️

Friday 4 October 2024

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்- முனைவர் வா.நேரு


 


சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை’ என்பதாகும். (The theme of this year’s International Day of the Girl is ‘Girls’ vision for the future’.)

அக்டோபர் 11, பெண் குழந்தைகளைக் கொண்டாடி மகிழும் நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

“ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பெண்களின் குரல்கள், செயல்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் பெருக்கி, எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் ஒரு முக்கிய உலகளாவியத் தருணமாகும். பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உரிய நாள் இது. இந்த நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து வாதிடுவோம்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்த நாள் பற்றி அறிவித்திருக்கிறது.

சர்வதேசப் பெண் குழந்தைகள்தினம் என்பதைப் பார்த்தவுடன் தந்தை பெரியாரின் நினைப்பும் அவர் இயக்கத்தின் பணிகளும்தான் நினைவுக்கு வந்தது.ஆமாம், இதைப் பற்றிப் பேசுவதற்கு மிகப்பொருத்தமான தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தானே. அதுவும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை என்பதைப் பார்த்தபோது தந்தை பெரியாரின் பெண் குழந்தைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வைதான் நினைவுக்கு வந்தது.

‘ஒரு வீட்டில் நான்கு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தால் பெண் குழந்தையைப் படிக்க வையுங்கள்’ என்று சொன்னவர் யார்? ‘பெண்களே உங்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று ஊர்தோறும் மேடைகள் போட்டு முழங்கி மாற்றத்திற்கான காரணமாகத் திகழ்ந்தவர் யார்? ‘பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள்,அவர்கள் படித்து முடித்த பின் வேலை கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமையைக் கொடுங்கள்’ என்று பெண் குழந்தைகள் எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கான வழியைச் சொன்னவர் யார்? தந்தை பெரியார் தானே!

“ஆணுக்குப் பெண் அடிமை என்று இருக்கக் கூடாது; சரி நிகர் சமமான நிலை இருக்க வேண்டும்; சம உரிமை இருக்க வேண்டும்; இருவருக்கும் உள்ள பேதம் ஒழிய வேண்டும்; மடமையில் மூழ்கி இருக்கக்கூடாது; மக்களைத் தெளிவு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் தான் முதன்முதலில் பலத்த எதிர்ப்புக்கிடையேயும் ஆரம்பித்தோம். இன்று ஓரளவு மாறுதல் அடைந்துள்ளது. இந்த அளவான மாறுதல் போதாது. இன்னமும் மாறுதல் தேவை. நீங்கள் மனம் வைத்தால் குறிப்பாக பெண்கள் மனது அமைத்தால் மிக விரைவில் கொடுமைகளை உடைத்து விடலாம்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 26.5.1962)

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டில், இன்றைய தென் இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெண் குழந்தைகளின் நிலைமை நம் கண் முன்னால் தெரிகிறது. குழந்தை வயதுத் திருமணங்கள், குழந்தை வயது விதவைகள், பெண்களுக்கான கல்வி மறுப்பு, அர்த்தமற்ற சடங்குகளால் ஆச்சாரங்கள் என்னும் பெயரால் பெண்கள்,பெண் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட நிலைமை என்று அன்று இருந்த நிலைமைக்கும் இன்று இருக்கும் நிலைமைக்கும் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடு தெரிகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் தந்தை பெரியார்தானே!
“பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் தீவிரமாக முதலீடு செய்வது நமது சொந்த எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.ஒவ்வொரு பெண்ணின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதைத்தான் திராவிட இயக்கங்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செய்து வருகின்றன.அதனால்தான் உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இருக்கிறது. இப்போது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் பெண் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம் இத்தகைய திட்டமே! இதைப்போன்ற பல திட்டங்கள் இன்றைய திராவிட மாடல் அரசால்,சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு பெண் குழந்தை தானாக வெளியில் செல்ல முடியாத நிலைமை இன்றைக்கும் இந்தியாவின் வட நாட்டில் நிலவுகிறது. மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற அந்தப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது.தலிபான் போன்ற மதவாதிகள் பெண் குழந்தைகளுக்கு ‘சமைப்பது எப்படி‘ என்பதை மட்டும் கற்றுக் கொடுத்து, அவர்களை அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும் பயன்படும்படி மட்டும் வளர்த்தால் போதும் என்று
அறிவுரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு
அவர்கள் கையில் புத்தகங்களைக் கொடுங்கள்’ என்றவர் தந்தை பெரியார்! மதவாதப் பிற்போக்குத்தனம் நிலவும் உலகின் பல நாடுகளில் தந்தை பெரியாரின் குரல் பயணிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

‘‘இளம்வயதில் அப்பா,மணமான பின் கணவன்,வயதான காலத்தில் பிள்ளைகள் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் இருக்கவேண்டும்’’ என்று மனுநீதி சொல்கிறது. அந்தக் குரலைத்தான் பல்வேறு வடிவங் களில் இந்துமதப் பழமைவாதிகள் பலகோணங்களில் சொல்கின்றனர்.’பெண் ஏன் அடிமையானாள்?’’ என்பதற்கான காரணங்களை ஒரு வெளியீட்டின் மூலம் தெளிவுபடுத்தி இன்றைக்கும் பல மொழிகளில் பெண்களுக்கான விழிப்புணர்வை அந்த நூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நூலின் ஒவ்வொரு பக்கமும் இன்றைக்கு பெண்களால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட வேண்டும். தந்தை பெரியாரின் தத்துவம் பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயமரியாதையை உணர்த்தும். உலகின் ஏற்றத்தாழ்வுகளை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும். இதை மாற்றுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும். அஞ்சி நடுங்கி கோழைகளாய் அடுப்பங்கரைக்குள் கிடந்து, வெந்து, நொந்து வாழும் வாழ்க்கை முறையிலிருந்து மாறி எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்க பெண்களாய் எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் மாற வழி வகுக்கும். ஜாதி, மத பேதங்களைத் தள்ளி
ஒதுக்கிவிட்டு மனிதர்களாய் மாறி வாழும் பொன்னான
வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும்.

 நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 1-15 ,2024