Tuesday, 13 January 2026

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் பண்டிகை

அல்ல

பொங்கல் விழா

வாழ்த்துகள்….

 

போகிப்பண்டிகை..

நாம் கொண்டாடும்

விழா அல்ல…

அது பார்ப்பான் இட்டுக்

கட்டியதின் மிச்சம்…

 

எரிப்பது எல்லாமே

அவாள் வழக்கம்…

செத்தால் கூடப் புதைப்பதுதான்

நம் வழக்கம்…

 

ஆடுமாடு மேய்க்க

வந்த பார்ப்பான் இன்று

மாடுகள் மாநாடு

வைப்பவனோடு கூட்டணி…

 

தமிழர் நமக்குத்…

தமிழ்ப் புத்தாண்டு

தை முதல் நாளே…


திராவிடர் நமக்கு

ஆரியப்பாம்பு தீண்டா

திராவிடர்  விழா

பொங்கல் விழா ஒன்றே…

திராவிடப் பொங்கல் வைப்போம்

தமிழர் நாளைக் கொண்டாடுவோம்

ஆரியத்தின் அத்துமீறல்களை

குழிதோண்டிப் புதைக்க

தமிழ்ப் புத்தாண்டில் 

சபதம் ஏற்போம்..

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்…

இனிய திராவிடப்பொங்கல்

விழா வாழ்த்துகள்…

தமிழும் திராவிடமும் ஒன்று..

இதை அறியாமல் கூச்சல்

போடுகிறவனை விட்டுத்தள்ளு..

                       வா.நேரு, 13.01.2026

Monday, 12 January 2026

அண்மையில் படித்த புத்தகம் : யாதுமாகினாய் ...லோ.குமரன்

அண்மையில் படித்த புத்தகம்: யாதுமாகினாய்(சிறுகதைத் தொகுப்பு)

ஆசிரியர் : லோ.குமரன் 

வெளியீடு : எழிலினி பதிப்பகம்,சென்னை-600 008.

முதல்பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 70, விலை ரூ 150 






இசைக்கருவியை கையாளுபவர்கள் இனிமையைக் கையாளுபவர்கள். புல்லாங்குழலை வாசிப்பவர்கள் பொறுமையாய் எதையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள். மனதிற்குள் தோன்றும் மகிழ்ச்சியை குழலின் வழியாக எளிதாகக் கடத்தத் தெரிந்தவர் 'வாருங்கள் படிப்போம்' குழுவின் மூலம் அறிமுகமான அண்ணன் லோ.குமரன் அவர்கள்.. அண்ணன் லோ.குமரன் அவர்களின் 'யாதுமாகினாய்' என்னும் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்த போது எனக்கு இன்னொரு பிரபஞ்சனைக் கண்டுபிடித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியும் துள்ளலும் மனதிற்குள் எழுந்தது. அப்படி ஒரு விவரிப்பு. தவறு செய்யும் நிலையில் கூட அந்தத் தவறை செய்கிற நிலைமைக்கு ஒரு பெண் எப்படி ஆக்கப்படுகிறாள் என்பதை அற்புதமாய் விவரிக்கும் சொல்லாடல். ஒவ்வொரு கதைக்கும் நிறுத்தி நிதானமாய்ச் சொற்களைப்  வடித்திருக்கும் விதம் அருமை. உண்மையிலேயே இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்த பொழுது அவ்வளவு மன நிறைவாக இருந்தது. இது இவருடைய முதல் தொகுப்பு.  யார் படித்தாலும் இது முதல் தொகுப்பாகத் தெரியாது அப்படி ஓர் எழுத்து ஓட்டம் ,அப்படி ஓர் உளவியல், அப்படி ஓர் உரையாடல், அப்படி ஓர் உள் மனது செய்திகளைக் கடத்தும் நுட்பம் வியந்துதான் போனேன். நான் மகிழ்ந்துதான் போனேன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்  குமரன் அண்ணே.எழுதுங்கள்,எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் தனித்துவமாக இருக்கின்றன

இந்தத் தொகுப்பில் 4 சிறுகதைகள் இருக்கின்றன. நிறையப் பக்கங்கள் உள்ள சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிகழ்பவை. 'யாதுமாகினாய்' என்னும் கதை ஒரு கணவன் மீது மனைவிக்கு இருக்கும் அன்பைச் சொல்கிறது அந்த அன்பு எதனால் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதைப்  படித்துப்பாருங்கள். அதைப்போல அப்பா மீது வெறுப்பு ஏன் ஏற்பட்டது என்பதை 'ஏய்' என்னும் ஒற்றைச் சொல் மூலம் விவரித்திருக்கிறார் ஆணும் பெண்ணும் வாழும் வாழ்க்கை  நன்றாக  அமைவதற்கு என்ன  என்ன வேண்டும் என்பதை  மிக எளிமையாக்கி ஒரு வாய்ப்பாடு(ஃபார்முலா) போலக்  கொடுத்திருக்கிறார்.

இலஞ்சம் வாங்கி, மாட்டும் ஒருவரைப் பற்றிய கதை 'யாதெனக் கேட்டேன்'. பிணவறையைப் பற்றியும் பிணவறைக்குள் இருக்கும் நிலையில் எண்ணிப்பார்ப்பதாகவும் எழுதப்பட்ட கதை. நடப்பில் இருக்கும் நடிகர்கள் மோகம் பற்றியும் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் கதை. பொருத்தமாகப் பொருந்துகிறது.

இந்தத் தொகுப்பில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் கதை என்று 'யாரிவளோ 'என்னும் கதையைச்சொல்லலாம். சென்னை பாஷையையும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.அலமேலு நம் மனதில் நிற்கிறார். ஆணாதிக்கவாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் கதை. கதை ஓட்டத்தில் அற்புதமான கருத்துக்களைப் பொன்மொழி போல எழுதிக்கொண்டு செல்கிறார். 
எடுத்துக்காட்டாக 

" மனதளவில் துவண்டு இருக்கும் நேரத்தில் 'என்னவாயிற்று' எனக் கேட்டு நம் முதுகை அன்பாக தட்டிக் கொடுத்து அரவணைக்கும் அந்த தொடுதலுக்காக, அணைப்பிற்காக ஏங்காத மனித உயிர் இங்கு யாரும் இல்லை. அந்த ஒரு தொடுதலால் வலி என்னும் நச்சுமுள்ளை வேரோடு பிடுங்கி தூக்கி எறிந்து விட முடியும் அலமேலுவின் அந்த அன்பான தொடுதல் சௌந்தர்யாவிற்கு இப்போது தேவைப்பட்டது 

"ஏன் அலமேலு இந்த ஆம்பளைங்களோட புத்தி இப்படி இருக்கு?.. ஆம்பள கையை எதிர்பார்க்காமல் சுயமா தன்னோட கால்ல நிக்கணும், தன்னோடு தொழில்ல ஜெயிச்சு காட்டணும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கள சட்டுனு 'தேவிடியா' என்று கூச்சமே இல்லாம எப்படி பச்சையாத் திட்ட தோணுது? வீட்டுக்காரனை ஏமாத்தணும்னு ஒரு பொண்ணு முடிவு பண்ணிட்டா, அவன் என்னதான் கட்டுப்பாடு போட்டாலும் அத உடைச்சிட்டு, மனசுக்கு பிடிச்சவன் எதிரே மொத்தமா அவுத்து போட்டுட்டு, இந்தா எடுத்துக்கோன்னு அவனோட படுத்து வாழ்க்கைய அனுபவிக்கிறது ஒன்னும் கஷ்டமே இல்லைன்னு ஏன் இவனுங்களுக்கு புரியல அலமேலு. பொம்பளைங்கறவங்க வெறும் உடம்பு மட்டும் தான் அவளுக்கும் உணர்வு இருக்கு, ஆசாபாசம் இருக்குன்னு ஏன் இவனுங்க  நினைக்க மாட்றாங்க..."

"மனுசனுக்கு நாம செய்யற பெரிய செயலை அவங்க கஷ்டத்துல இருக்குறப்போ கொடுக்கிற ஆறுதல்தான்".

" கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கவும், நிகழ்காலத்தின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் வயதோ, படிப்போ, வசதியான வாழ்க்கையோ எதுவும் இங்கு தடை கிடையாது. உண்மையாய் செவிமடுக்கும் நல்ல இதயம் இருந்தால் போதும். தன் மனச் சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாற ஒரு துணை கொடுத்தால் அந்த இடத்தில் ஓய்வெடுத்து பிறகு வரும் நாட்களை சற்று நகர்த்த முடியும். அந்த நல்ல இதயமாய் அலுமேலுவைப் பார்த்தாள் செளந்தர்யா'...

அதைப்போல ஒரு முயலை வைத்து ,கதை சொல்லும் இடம் அருமையாக இருக்கிறது.
"எல்லா நேரங்களிலும் தன்னை வேட்டையாடத் தயாராகும் விலங்கை முயல்கள் கவனிப்பதில்லை. தொடர்ந்து சலசலப்புகளும், வழக்கத்துக்கு மாறான ஓசைகளும் முயல்களுக்கு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும். எச்சரிக்கையாய் இருக்கும் முயல்கள்  இரையாகாமல் தப்பிக்கும். தன் இரை  தேடலில் அதிக ஆசை வைக்கும் முயல் வேட்டையாடப்படும். இது ஆசை இல்லாத முயல் தன் காதுகளை உயர்த்தி  ஓசைகளை உள்வாங்கி  எச்சரிக்கையானது."

'தொடர்பு எல்லைக்கு வெளியே' இன்றைய ஐ.டி.உலகில் வேலை பார்க்கும் நந்தினி மற்றும் கவி என்னும் இரண்டு கதை பாத்திரங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. கதைக்குள் பேசப்படும் கருத்துகள் கதையோடு ஒட்டியும் ,உணர்வுபூர்வமாகவும் பேசப்படுவது இந்தக் கதைக்கே ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.

நான் கதைகளை விரிவாக விவரிக்கவில்லை.இதை வாசிக்கும் தாங்கள் இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசித்துப்பார்க்கவேண்டும்.அதில் இருக்கும் லயத்தை ,இனிமையை வாசித்து உணரவேண்டும் என்பதால் விரிவாக விவரிக்கவில்லை.

குமரன் அண்ணே, உங்களிடம் நிறைய சிறுகதைகளை எழுதுங்கள் என்று நான் சொல்லப்போவதில்லை.அதற்குப் பதிலாக வருடத்திற்கு 4 கதைகளை இதைப்போல எழுதுங்கள்.ஒரு 20 வருடத்தில் 80 கதைகள் மட்டும்தான் என்றாலும் பேசப்படும் கதைகளாக,வாசிப்பவர்களின் மனதில் நிற்கும் கதைகளாக அவைகள் இருக்கும்.என்றென்றும் பேசப்படும் கதைகளாகவும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பல மொழிகளில் பேசப்படும் கதைகளாகவும் அவைகள் இருக்கும்.

 இந்த நூலுக்குச் சிறப்பான அணிந்துரையை தோழர் அ.குமரேசன் அவர்களும்,அருமையான வாழ்த்துரையை அண்ணன் முனைவர் கோ.ஒளிவண்ணன் அவர்களும்  கொடுத்திருக்கிறார்கள்.புத்தகத்தின் அட்டை வடிவமைப்பை  செ.ஜீவானந்தகுமார் அருமையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.  வாழ்த்துகள்


கட்டாயம் வாசிக்க வேண்டிய ,அதுவும் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கவேண்டிய சிறுகதைத் தொகுப்பு. வாங்கி வாசித்துப்பாருங்கள். நீங்களும் இசைக்குத் தலையாட்டுவதுபோல இந்த நூலின் கதைகளுக்குத் தலையாட்டுவீர்கள்.பாராட்டுவீர்கள்.

வாழ்த்துகளும் ,மகிழ்ச்சியும்,பாராட்டுகளும் அண்ணன் லோ.குமரன் அவர்களுக்கு....

                                                                                                                  அன்புடன்
\                                                                                                                 வா.நேரு,12.01.2026




Saturday, 10 January 2026

வழக்கறிஞர் சித்தார்த்தா!...

 

                   வழக்கறிஞர் சித்தார்த்தா!

கண நேரத்தில்

கனல் நீராய்

மாறிப்போகும் வாழ்க்கை!...

 

வழிவழியாய் வந்த திராவிடர்

கழகத்துக் குடும்பத்தின்

வாரிசு நீ..…

அதனாலோ அத்தனை அறிவு…

அத்தனை அன்பு..

அத்தனை பணிவு…

அத்தனையும் கண்ப்பொழுதில்

காணாமல் போனதே

சட்டென்று நிகழ்ந்த விபத்தால்…

 

கதறி அழும் அந்தச் சகோதரிக்கு

அவரின் இணையருக்கு

என்ன சொல்லி ஆறுதல் சொல்ல…

 

ஒருநாள் பரத நாட்டியம்

ஆடிக்காட்டினாய்!

இன்னொரு நாள் வேறொரு

குரலில் பேசிக்காட்டினாய்!

உற்சாகம்.. நகைச்சுவை..

வாழ்வில் அடுத்தடுத்து

செய்ய வேண்டிய வேலைகள் என

அடுத்தவர்களுக்கு

எடுத்துக்காட்டாய்த்தானே நீ இருந்தாய்

 

எவர் மனது நோகவும்

என்றும்  நீ நடந்ததில்லை..

உதவ வேண்டிய நேரங்களில்

கைகளை எப்போதும்

நீ இழுத்துக்கொண்டவரில்லை..

 

இன்னும் உயர்பதவிக்கு

போவாய் என நாங்கள்

நினைத்திருந்த வேளையில்

இடியாய் இறங்கிய செய்தியால்

இதயமும் நொறுங்கியதே…

 

வீரவணக்கம்! வீரவணக்கம்!

எங்கள் தோழர் சித்தார்த்தா..

குறுகிய காலம் பழகினும்

நெடுங்காலம் பழகியவன்போல்

அன்பைப் பொழிந்தாய்

பண்பைக் காட்டினாய்

நூறாண்டு வாழும் கனவோடு

உடலினைப் பேணினாய்..

அரை நூற்றாண்டு வயதில் உமை

நாங்கள் பறிகோடுத்தோம் தோழா!



வீரவணக்கம் ! வீரவணக்கம் !.

வழக்கறிஞர் சித்தார்த்தா!

கரைபுரண்டு ஓடும்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு

அய்யகோ என மனம்

குமுறிடினும் அடுத்தடுத்த

இயக்க வேலைகளால் உமக்கு

அஞ்சலி செலுத்துகிறோம் தோழா..

 

                        வா.நேரு, 10.01.2026

 

 

 

 

Monday, 5 January 2026

வாருங்கள் படைப்போம் குழுவில் பேரா முனைவர் சு.காந்தித்துரை அவர்களின் நேர்காணல்..

மதுரை ,தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா முனைவர்  சு.காந்தித்துறை அவர்கள், தொடர்ச்சியாக சிறுகதைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறார். பல தொகுதிகளாக அவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவரை வாருங்கள் படைப்போம் குழுவில் நான் பேட்டி கண்டேன். ஒரு மணி நேர நிகழ்வு. முழுக்க முழுக்க அவரின் படைப்புகளைப் பற்றிய உரையாடல் . கேட்டு தங்களின் கருத்தையும் பதிவிடுங்கள். நன்றி.

நேர்காணல் காணொளியின் இணைப்பு...

https://youtu.be/zCankNOUdPk?si=yK5FemPZZ-36oQwe 




Saturday, 3 January 2026

பொலிமக்களு’ம் உலகமும் (முனைவர் வா.நேரு)

 



பொலிமக்களும் உலகமும்

                 (முனைவர் வா.நேரு)

உணமை  வாசகர்கள் அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள்வருடத்திற்கு  வருடம் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது.அண்மையில் பிபிசி தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தியை வாசித்தபோது,தந்தை பெரியார் 80,90 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன செய்தி  நினைவுக்கு வந்த்து.

“ பிள்ளைப் பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்.நல்ல திரேகத்துடனும்,புத்தி நுட்பமும்,அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக,பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக் ஷன் ‘ மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும்.” (இனி வரும் உலகம்,தந்தை பெரியார்)

தங்களது வீரியத்தை அளிக்கும் ஆண்களுக்குப் பொலிமக்கள் என்னும் பெயரை தந்தை பெரியார் சூட்டியிருக்கிறார்.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ‘தேர்ந்தெடுத்த மணி ‘ போன்ற பொலிமக்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.ஆண் பெண் குடும்பமாக வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது காலங்காலமாக நடைபெறும் நடைமுறைஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ,இரத்த தானம் அளிப்பதுபோல விந்தணுதானம் அளிப்பது என்பது உலகில் பெருகி வருகிறது.இதைப்பற்றி,” ஒரு பெண்ணின் துணைவர் மலட்டுத்தன்மையுடன் இருக்கும்போது அல்லது தன்பாலின உறவில் இருப்பவர்கள் அல்லது தனியாகக் குழந்தை பெற்று வளர்க்கும்போது விந்தணு தானம் அவர்கள் தாய்மையடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளதுஐரோப்பாவில் இந்தச்சந்தையின் மதிப்பு 2033 ஆம் ஆண்டுக்குள் 2 பில்லிய்ன் பவுண்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது “ என்று பிபிசி குறிப்பிடுகிறது.

எல்லா ஆண்களுக்கும் இப்படி விந்தணு தானம் செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்னும் கேள்வி இயல்பாக நமக்குள் எழும்.அதற்கு “ இதைப் படிக்கும் நீங்கள் ஓர் ஆணாக இருந்தால் உங்களுக்கு வருத்தம் அளிக்கும் செய்தி இதுதான்.உங்கள் விந்தணுவின் தரம் தானம் செய்யப்போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்தான்னார்வலர்களில் நூற்றில் ஐந்துக்கும் குறைவானவர்களே அந்தத்தகுதியைப் பெறுகிறார்கள் ‘ என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.இரத்ததானம் நான் செய்கிறேன் என்று முன்வந்தால் கூடச் சில காரணங்களால் உங்களது இரத்ததானத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மருத்துவர்கள் சொல்வது உண்டு.ஆனால் நூறு பேர் இரத்ததானம் செய்யப்போனால் ஒன்றிரண்டு பேர் அப்படித் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்ஆனால் விந்தணு தானத்தில் நூறு பேர் சென்றால் அதில் ஐந்துபேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று செய்தி சொல்கிறது.

விந்தணு தானம் செய்பவர்களுக்கு நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது.மலையாள மொழியில் ஜோஸ் பாழூக்காரன் என்பவர் எழுதிய  ‘அரிவாள் ஜீவிதம் ‘ என்னும் நாவல் தமிழில் யூமா வாசுகியால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.கேராளவில் மலைவாழ் மக்கள் மத்தியில் இருக்கும் சிக்கிள் செல் என்னும் நோய் பற்றிய நாவல் அது.அது எவ்வளவு கொடுமையான நோய் என்பதையும் அது எப்படி அங்கு வசிக்கும் மக்களை இளம்வயதிலேயே துயருற்று மரணமடையச்செய்கிறது என்பதையும் அந்த நாவல் விளக்குகிறது.. அப்படிப்பட்ட  சிக்கிள் செல் மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்முதுகெலும்பு தசை நார் சிதைவு போன்ற மரபணுக்களால் கடத்தப்படும் நோய்களைக் கொண்டவர்கள் விந்தணு தானம் செய்ய யலாதுஹெச்ஐவி போன்ற தொற்று நோய் உள்ளவர்களும் தானம் செய்ய இயலாது.

இரத்த வங்கிகள் போல விந்தணு வங்கிகள் செயல்படுகின்றன.இரத்த வங்கிகளில் போய் இரத்த தானம் செய்தவரின் புகைப்படத்தையோ அல்லது அவரைப் பற்றிய விவரங்களையோ நாம் அறிய இயலாதுஆனால் மேலை நாடுகளில் விந்தணு வங்கிக்குப் போய் அந்த விந்தணுக்கு உரியவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுப்பெறலாம்.விந்தணு பெறுகின்றவர் தனக்கு எப்படிப்பட்டவரின் விந்தணு தேவை என்று கேட்டு,ஆராய்ந்து பெறலாம்.இதைப் பற்றி “ விந்தணு வங்கியைப் பொறுத்து நீங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம்.அவர்களின் குரலைக் கேட்கலாம்.அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்பொறியாளரா அல்லது கலைஞரா –மற்றும் அவர்களின் உயரம்,எடை போன்றவற்றைச் சரிபார்க்கலாம்அவர்கள் ஸ்வென் என்று அழைக்கப்பட்டால்அவர்களுக்குப் பொன்னிற முடி இருந்தால்,அவர்கள் 6 அடி 4 அங்குலம்(1.93 மீட்டர்உயரமாக இருந்தால்,விளையாட்டு வீர்ராக ,ஃபிடில் வாசிப்பவராக,ஏழு மொழிகள் பேசக்கூடியவராக இருந்தால்-அது என்னைப் போன்ற தோற்றம் கொண்ட தானம் செய்பவரைவிட மிகவும் கவர்ச்சிகரமானது என்பது உங்களுக்கே தெரியும் “ என்று விந்தணு வங்கியை நடத்திவந்த  கருவுறுதல் நிபுணர் பேரா ஆலன் பேசி கூறுகிறார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.ஆமாம் விந்தணுத் தானம் பெறுகிறவரின் விருப்பப்படி,அவர் தேர்ந்தெடுத்து விந்தணுவைப்  பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிகிறது.

 நம் நாட்டில் இருந்து மட்டுமல்லவெளி நாட்டிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். “ இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட விந்தணு தானம் குறித்த ஆய்வின் ஒரு அம்சம்ஒருவரின் விந்தணு டென்மார்க்கில் உள்ள ஐரோப்பிய விந்தணு வங்கியில் சேகரிக்கப்பட்டுப் பின்னர் 14 நாடுகளில் உள்ள 67 கருத்தரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப்ப்பட்டது என்பதாகும் “ என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறதுஉலகின் விந்தணு தானத்தில் முன்னணி நாடாக டென்மார்க் உள்ளது.அங்கிருந்து தானம் பெற்று உலகின் பல நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.நாடு விட்டு நாடுகண்டம் விட்டுக் கண்டம் தாண்டி நடைபெறும் வணிகமாக இது வளர்ந்துள்ளது.

உலகின் பல நாடுகளில் பெண்கள் படும் துயரம் என்பது ஆறாத் துயரமாக உள்ளது.கட்டிய கணவன் படுத்தும் கொடுமைகளால்,குடிகாரன் அல்லது மற்ற போதைகள் உபயோகிக்கும் கணவன்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் படித்து,பணம் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருந்தால் அந்தத் திருமண உறவை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்று வெளியே வருகிறார்கள்.அப்படிப்பட்ட பெண்கள் தாங்கள் பெற்று வளர்க்கும் குழந்தையைப் பற்றிக் கூறும்போது ‘சிங்கிள் பேரண்ட் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்.திருமணம் முடிக்காமலேயே குழந்தை பெற்று,வளர்க்க நினைக்கும் பெண்கள் விந்தணு தான வங்கிகளை நாடுகிறார்கள்.அதன் மூலமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வளர்க்கிறார்கள்.அவர்களும் தங்கள் குழந்தைகளை ‘சிங்கிள் பேரண்ட்’ குழந்தைகள் என்று அழைக்கிறார்கள்எதிர்காலத்தில் சிங்கள் பேரண்ட் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் உயரக்கூடும்.

தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிறது.இன்னும் அவர் நமது பரம்பரை எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.அவரது பெயரைக் கேட்டாலே நமது எதிரிகள் நடுங்குகிறார்கள்,உளறுகிறார்கள்,அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் தந்தை பெரியார் இனிவரும் உலகத்தில் என்ன நிகழும் என்பதைத் தனது சிந்தனையின் மூலம் சொல்லியிருக்கும் செய்திகளும்,அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் சொற்களும் உண்மையிலேயே நம்மைப் போன்றவர்களுக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. இன்றைய உலக நடப்புகளோடு அவரது தொலைநோக்கு சிந்தனைகளை ஒப்பிட்டு நோக்குவது,விளக்குவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜனவரி 1-15 ,2026