Monday 7 October 2024

நீரோடை இலக்கிய மின்னிதழிலில் நூல் விமர்சனம்...

 






நன்றி : நீரோடை இலக்கிய மின் இதழுக்கு...









கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)...அர்ஷா

 தோழர் அர்ஷா அவர்கள் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக அறிமுகமானவர்.மிகத் தீவிரமான வாசகர்.மிக நல்ல நூல் திறனாய்வாளர்.அவர் எனது 7-வது புத்தகமான,கனவு போலத்தான் நடந்தது என்னும் நூலினை வாசித்துவிட்டு, முக நூலில் அவரது கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார்.ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும்? ஒருவர் படித்து தன் கருத்தினைப் பகிர்வதைத் தவிர...நன்றி தோழர் அர்ஷா அவர்களுக்கு... நூல் பற்றிய அவரது கருத்துகள் கீழே... 


முனைவர்


வா. நேரு அவர்களின் கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)

நூல் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர் திரு. வே. வீரி செட்டி அவர்களின் தாக்கத்தை அழகாக விவரிக்கிறது. கீழடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், கற்பித்தல் முறைகளைத் தாண்டி, மாணவர்களிடம் ஆசிரியர் ஏற்படுத்திய ஆழமான மன உறவுகளைப் பற்றிச் சொல்லுகிறது.
திரு. வீரி செட்டி, ஒரு கல்வியாளரைத் தாண்டி, மாணவர்களின் அறிவுத் தாகத்தைத் தூண்டி, ஒரு தந்தையைப் போல் வாழ்வை வழிகாட்டிய ஆசிரியர். அவரது செயல்பாடுகள், ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி குறித்து இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நூல், ஜப்பானிய எழுத்தாளர் சுதூகோ குராயான் எழுதிய "டோட்டோசான்" நூலின் நினைவுகளைப் புத்துயிர்ப்பிக்கிறது. டோட்டோசான் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களை அன்புடன் வளர்த்தார் என்று அந்த நூலில் விவரிக்கப்படுகிறது. இதை வாசித்தபோது, திரு. வீரி செட்டி அவர்களும் இதுபோல தங்கள் மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவியதை பார்க்க முடிகிறது.
10வது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அதனை நிரப்பும் வகையில் தானே சென்று கற்பித்த திரு. வீரி செட்டி, மற்ற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
பள்ளியில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவி பள்ளிக்கு வராமல் இருந்தது அவரை கவலைக்குள்ளாக்கியது. பல ஆசிரியர்கள் கவலைப்படாமல் இருந்தபோது, அவர் நேரில் மாணவியின் வீடு தேடி சென்றார். நிலைமையைப் புரிந்து கொண்டு, பெற்றோர்களிடம் நீண்ட நேரம் விவாதித்து, இஸ்லாமிய சமுதாயத்தில் பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர் பெற்றோர்களுக்கு பெண் கல்வி பற்றி புரிய வைத்து, அம் மாணவியை பள்ளிக்கு அனுப்ப செய்கிறார். அந்த மாணவி தனது உயர்கல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறாள். இது, இந்த ஆத்மார்த்தமான சமுதாய பணியை தலைமை ஆசிரியரின் பல சேவைகளைக் குறிக்கின்ற புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
மேலும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களை செல்வந்தர்களிடமிருந்து பெற்று வழங்குகிறார். கிராமப்புறம் வந்த மாணவர்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் வகையில், அவர் ஒழுங்குகளை ஏற்படுத்தி, பாடத்தை எடுக்கும் பணியையும் செய்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்திருந்தாலும், அவர் மாணவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்திருக்கிறார். இதனால், அவரது வாழ்க்கை பல துயரங்களை எதிர்கொண்டு, அதையெல்லாம் மீறி, மாணவர்களின் நலன் குறித்து ஒருபோதும் கவலைப்படாமல் உழைக்கிறார்.
இந்த நூல், மாணவர்களின் நலனில் அயராது உழைத்த ஆசிரியரின் உன்னத குணங்களை நமக்கு உணர்த்துகிறது. அவர், மாணவர்களுக்கு ஒரு கல்வியாளர் மட்டுமல்ல, ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்த நூல், ஒரு தலைமை ஆசிரியரின் பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த அற்புதமான நூலை படைத்த முனைவர் வா. நேரு அவர்களுக்கு நன்றி!
அர்ஷா ❤️

Friday 4 October 2024

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்- முனைவர் வா.நேரு


 


சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை’ என்பதாகும். (The theme of this year’s International Day of the Girl is ‘Girls’ vision for the future’.)

அக்டோபர் 11, பெண் குழந்தைகளைக் கொண்டாடி மகிழும் நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

“ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பெண்களின் குரல்கள், செயல்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் பெருக்கி, எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் ஒரு முக்கிய உலகளாவியத் தருணமாகும். பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உரிய நாள் இது. இந்த நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து வாதிடுவோம்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்த நாள் பற்றி அறிவித்திருக்கிறது.

சர்வதேசப் பெண் குழந்தைகள்தினம் என்பதைப் பார்த்தவுடன் தந்தை பெரியாரின் நினைப்பும் அவர் இயக்கத்தின் பணிகளும்தான் நினைவுக்கு வந்தது.ஆமாம், இதைப் பற்றிப் பேசுவதற்கு மிகப்பொருத்தமான தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தானே. அதுவும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை என்பதைப் பார்த்தபோது தந்தை பெரியாரின் பெண் குழந்தைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வைதான் நினைவுக்கு வந்தது.

‘ஒரு வீட்டில் நான்கு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தால் பெண் குழந்தையைப் படிக்க வையுங்கள்’ என்று சொன்னவர் யார்? ‘பெண்களே உங்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று ஊர்தோறும் மேடைகள் போட்டு முழங்கி மாற்றத்திற்கான காரணமாகத் திகழ்ந்தவர் யார்? ‘பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள்,அவர்கள் படித்து முடித்த பின் வேலை கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமையைக் கொடுங்கள்’ என்று பெண் குழந்தைகள் எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கான வழியைச் சொன்னவர் யார்? தந்தை பெரியார் தானே!

“ஆணுக்குப் பெண் அடிமை என்று இருக்கக் கூடாது; சரி நிகர் சமமான நிலை இருக்க வேண்டும்; சம உரிமை இருக்க வேண்டும்; இருவருக்கும் உள்ள பேதம் ஒழிய வேண்டும்; மடமையில் மூழ்கி இருக்கக்கூடாது; மக்களைத் தெளிவு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் தான் முதன்முதலில் பலத்த எதிர்ப்புக்கிடையேயும் ஆரம்பித்தோம். இன்று ஓரளவு மாறுதல் அடைந்துள்ளது. இந்த அளவான மாறுதல் போதாது. இன்னமும் மாறுதல் தேவை. நீங்கள் மனம் வைத்தால் குறிப்பாக பெண்கள் மனது அமைத்தால் மிக விரைவில் கொடுமைகளை உடைத்து விடலாம்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 26.5.1962)

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டில், இன்றைய தென் இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெண் குழந்தைகளின் நிலைமை நம் கண் முன்னால் தெரிகிறது. குழந்தை வயதுத் திருமணங்கள், குழந்தை வயது விதவைகள், பெண்களுக்கான கல்வி மறுப்பு, அர்த்தமற்ற சடங்குகளால் ஆச்சாரங்கள் என்னும் பெயரால் பெண்கள்,பெண் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட நிலைமை என்று அன்று இருந்த நிலைமைக்கும் இன்று இருக்கும் நிலைமைக்கும் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடு தெரிகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் தந்தை பெரியார்தானே!
“பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் தீவிரமாக முதலீடு செய்வது நமது சொந்த எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.ஒவ்வொரு பெண்ணின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதைத்தான் திராவிட இயக்கங்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செய்து வருகின்றன.அதனால்தான் உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இருக்கிறது. இப்போது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் பெண் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம் இத்தகைய திட்டமே! இதைப்போன்ற பல திட்டங்கள் இன்றைய திராவிட மாடல் அரசால்,சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு பெண் குழந்தை தானாக வெளியில் செல்ல முடியாத நிலைமை இன்றைக்கும் இந்தியாவின் வட நாட்டில் நிலவுகிறது. மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற அந்தப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது.தலிபான் போன்ற மதவாதிகள் பெண் குழந்தைகளுக்கு ‘சமைப்பது எப்படி‘ என்பதை மட்டும் கற்றுக் கொடுத்து, அவர்களை அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும் பயன்படும்படி மட்டும் வளர்த்தால் போதும் என்று
அறிவுரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு
அவர்கள் கையில் புத்தகங்களைக் கொடுங்கள்’ என்றவர் தந்தை பெரியார்! மதவாதப் பிற்போக்குத்தனம் நிலவும் உலகின் பல நாடுகளில் தந்தை பெரியாரின் குரல் பயணிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

‘‘இளம்வயதில் அப்பா,மணமான பின் கணவன்,வயதான காலத்தில் பிள்ளைகள் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் இருக்கவேண்டும்’’ என்று மனுநீதி சொல்கிறது. அந்தக் குரலைத்தான் பல்வேறு வடிவங் களில் இந்துமதப் பழமைவாதிகள் பலகோணங்களில் சொல்கின்றனர்.’பெண் ஏன் அடிமையானாள்?’’ என்பதற்கான காரணங்களை ஒரு வெளியீட்டின் மூலம் தெளிவுபடுத்தி இன்றைக்கும் பல மொழிகளில் பெண்களுக்கான விழிப்புணர்வை அந்த நூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நூலின் ஒவ்வொரு பக்கமும் இன்றைக்கு பெண்களால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட வேண்டும். தந்தை பெரியாரின் தத்துவம் பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயமரியாதையை உணர்த்தும். உலகின் ஏற்றத்தாழ்வுகளை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும். இதை மாற்றுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும். அஞ்சி நடுங்கி கோழைகளாய் அடுப்பங்கரைக்குள் கிடந்து, வெந்து, நொந்து வாழும் வாழ்க்கை முறையிலிருந்து மாறி எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்க பெண்களாய் எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் மாற வழி வகுக்கும். ஜாதி, மத பேதங்களைத் தள்ளி
ஒதுக்கிவிட்டு மனிதர்களாய் மாறி வாழும் பொன்னான
வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும்.

 நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 1-15 ,2024

Tuesday 1 October 2024

உண்மை நெருப்பு வெளிச்சத்தில்....

 

       

அதட்டிப் பேசினால்

மிரட்டிப் பேசினால்

அமர்ந்து விடுவார்கள்

என  அறிவிலியே

ஆட்டம் போடுகின்றாய்..

விளக்கில் விழுந்த

விட்டில்பூச்சி போல

மேடையில் அங்குமிங்கும்

அலைகிறாய்,பிதற்றுகிறாய்..

 

உண்மை எனும் நெருப்பின்

கங்குகள்டா எங்கள் மகள்கள்

நீ மிரட்ட மிரட்ட

இன்னும்

பலமாய் உண்மை நெருப்பு எரியும்..

உன் புராணக் குப்பைகள்

யாவும் தில் எரியும்

உண்மை  நெருப்பு வெளிச்சத்தில்

நீ கட்டிவைத்த பொய்மைக்

கோட்டைகள் யாவும் பொசுங்கும்! சாகும்!



 

கருத்துகளைக் கருத்துகளால்

சந்திக்க வலிமையின்றி

இங்கும் அங்கும் குதிக்கிறாய்!

ஏளனமாய்ப் பேசுகிறாய் !

ஏதோதோ உளறுகிறாய் !

தற்குறியே ! வரலாறு அறிவாயா நீ!

 

தீ பரவுட்டும் நூல் படித்திருக்கிறாயா?

கருத்துப்போரில் எவ்வளவு மரியாதையாய்

அறிஞர் அண்ணாவும்

சோமசுந்தர பாரதியாரும்

நடந்து கொண்டார்கள் என்பதை அறிவாயா நீ!


குண்டர்களின் கூடாரமாய்

குற்றவாளிகளின் புகலிடமாய்

அமைப்புக் கட்டும் உனக்கு

பண்பும் தெரியாது !வரலாறும் புரியாது…

 

எங்களைப் போல இனிவரும்

இளைஞர்கள் இருக்கப்போவதில்லை!

உன் மொழியில் அவர்கள்

பதில் மொழி பேசும் காலம்

வெகு விரைவில்!

 

பெரியாரியலை உணர்ந்த பெண்கள்

பெரும் நெருப்பு! கருத்துகளால்

சாத்தத் தெரிந்த பெண்கள் அவர்கள்!

அடங்கி இரு ! இல்லையேல்

இன்னும் அசிங்கப்படுவாய்!

                              வா.நேரு,

                               01.10.2024

                        

 

 

 

 

Monday 23 September 2024

பயணமே வாழ்க்கை !- முனைவர் வா.நேரு

 வாழ்க்கைப்பயணம் என்பர். ஆனால் பயணத்தையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும். தன் வாழ்க்கை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, ‘‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்“ என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.




தந்தை பெரியார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அவரது சுற்றுப்பயணம்தான். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒப்புக்கொண்ட தேதிக் கூட்டத்திற்கு, எத்தனை துன்பங்கள் உடல் ரீதியாக இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பட்டி தொட்டியெல்லாம் சென்று பேசியிருக்கின்றார். இன்றைக்கு இருப்பதுபோலச் சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத காலத்தில் தந்தை பெரியார் இலட்சியப்பயணம் என்பது மிகப்பெரும் வியப்புக்குரியது.

உலகச் சுற்றுலா நாள் செப்டம்பர் 27. அதாவது பயணத்தை ஊக்குவிக்கும் நாள். உலகச் சுற்றுலா நாள் என்பது அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மூலமாக 1980ஆம் ஆண்டிலிருந்து உலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.1979இல் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சுற்றுலா ஏன் தேவை என்பதை மக்களுக்கு விளக்கவும், சுற்றுலா என்பது எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுற்றுலா என்பது பயணிப்பது. நாம் மதுரையில் வசித்துக்கொண்டு, மதுரையில் இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை சுற்றுலா என்று சொல்லமாட்டோம். மதுரையில் இருந்து சென்னைக்கோ, வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டிற்கோ செல்லும்போது அது சுற்றுலா என்னும் தலைப்பில் வரும்.

ஒவ்வோர் ஆண்டும் சுற்றுலா சம்பந்தப்பட்ட ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு, அதனை விளக்கும் வண்ணமாகச் சில நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உலகச் சுற்றுலா நாளின் கருப்பொருள் ‘தொடர்ச்சியான பயணங்கள், நிலையான நினைவுகள்’ அதாவது ‘கவனத்துடனும் பொறுப்புடனும் பயணங்கள்’ அதன்மூலம் நிரந்தரமான நினைவுகளை விட்டுச்செல்லுதல் என்பது ஆகும்.( Sustainable Journeys, Timeless Memories,” focusing on the importance of responsible and mindful travel.)

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கையைப் பரப்புவதற்காக அயராது பயணம் செய்துகொண்டே இருந்தவர். அவரது ரஷ்யாப் பயணமாக இருந்தாலும், மலேசியா, சிங்கப்பூர் பயணமாக இருந்தாலும், இலங்கைப் பயணமாக இருந்தாலும் அவரது பயணம் என்பது கொள்கைப் பயணமாக,எப்போதும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் பயணமாக அமைந்திருப்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

தந்தை பெரியார் 1940இல் பம்பாய் செல்கின்றார். அங்குச் சென்று திரும்பிவந்த பின்பு பம்பாய் பயணம் பற்றி ஈரோட்டிலே 12.01.1940இல் பேசுகின்றார் .அப்படிப் பேசுகின்றபொழுது, “நமது நாட்டிலிருந்து பிழைப்புக்காகப் பம்பாய் சென்றுள்ள தமிழர்கள் நமது இயக்க விசயங்களில் மிக அக்கறை எடுத்து வேலை செய்து வருகிறவர்கள். அன்புடன் அழைக்கிறார்களே என்று அங்குச் சென்றேனே ஒழிய, வேறில்லை.அவர்கள் என்னை அங்கு வரவேண்டுமென்று அழைத்தது தங்களுக்குத் தொண்டாற்றும் ஒருவரைக் காணவும் களப்படுத்தவுமேயாகும் என்று கருதினேன்…” என்று குறிப்பிடுகிறார்.அது மட்டுமல்லாது முதலில் பம்பாய் செல்லவேண்டாம் என்று கருதியது பற்றியும்,தோழர்கள் சில காரணங்களுக்காக அழைக்கிறார்கள் என்று தெரிந்தபோது அங்கு சென்றதாகவும் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்.அந்தப் பயணத்தை எவ்வளவு கவனத்துடன் தந்தை பெரியார் அவர்கள் வடிவமைத்துப் பயணம் செய்திருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, பம்பாய் சென்றோமா, கூட்டத்தில் தனது கருத்துகளை எடுத்து வைத்தோமா என்றில்லாமல், அந்தப் பயணத்தில் தமிழ்மக்களை எவ்வளவு பொறுப்புணர்வோடு கவனித்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் தனது பம்பாய்ப் பயணத்தைப் பற்றி மேலும் குறிப்பிடுகிறபோது, “6ஆம் தேதி காலை தாதர் போய்ச் சேர்ந்தோம்.இந்தத் தாதர் என்ற இடத்தில்தான் நமது தமிழர்கள் 2000 பேர்களுக்கு மேலாக வசிக்கிறார்கள். அவர்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை ஜில்லாக்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கூலிவேலைகள் செய்து வருபவர்கள். அதாவது, தொழிற்சாலைகளிலும், தோல் ஷாப்புகளிலும் வேலை செய்து வருபவர்கள். இவர்களைப் பார்த்தவுடன் என் மனம் மிகவும் கலங்கி விட்டது. ஏனெனில், நமது நாட்டிலிருந்து பம்பாய்க்குப் பிழைக்க வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலி வேலைகள் செய்து கஷ்டப்படுவதும், பம்பாயிலிருந்து நமது நாட்டிற்குப் பிழைக்கவரும் பனியாக்களும்,குஜராத்திகளும்,மார்வாடிகளும் நம் நாட்டின் செல்வங்களைச் சுரண்டிக்கொண்டு முதலாளிகளாய் வாழ்வதும் ஞாபகத்திற்கு வந்து என் மனதை மிகவும் வாட்டிற்று. (‘வட நாட்டில் பெரியார்’ -தொகுதி1, தொகுப்பாசிரியர் கி.வீரமணி, பக்கம் 34).

அய்யாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயணத்தை எவ்வளவு விரும்புகிறவர் என்பதை நாம் அறிவோம். ஓராயிரம் உடல் உபாதைகள் இருந்தாலும் அதனை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டுக் கொள்கை முழக்கம் செய்திட ஒவ்வொரு ஊராக, இந்தியாவின், உலகின் பல பாகங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அவரது பயணமும் நமக்கு உற்சாகம் ஊட்டுவதும் வழிகாட்டுவதும் ஆகும். மறைந்த மதுரை வழக்குரைஞர் அண்ணன் கி.மகேந்திரன் அவர்கள் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது “1970களில் மேலூருக்கு வந்து அய்யா ஆசிரியர் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது பேருந்து கிடைக்காததால் சென்னைக்கு ஒரு லாரியில் ஏற்றி உட்காரவைத்து அனுப்பினோம் என்றார். நான் வியப்பாக ‘என்னது, அய்யா ஆசிரியர் அவர்கள் லாரியில் சென்னைக்குச் சென்றாரா!’ என்றபோது ‘ஆமாம் அண்ணே, அய்யா ஆசிரியர் அவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்தபின்புதான், முறையாக பயண வாகனங்களை உபயோகிக்கிறார். அதற்கு முன்பு இப்படியெல்லாம் இல்லை’’ என்றார். அப்போது எனக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் தன்னுடைய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்னும் நூலில் தானும் டாக்டர் கலைஞர் அவர்களும் மாட்டுவண்டியில் முளைக் கம்பைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது.

பகுத்தறிவாளர்களுக்கு இயல்பாகவே பயணம் செய்வதில் பெரும் விருப்பம் உண்டு. அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களும்,அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும் பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்றதும்,அந்தப் பயணங்களை எல்லாம் ஒளிப்படங்களோடு பதிவு செய்து நூலாக்கியதும் நினைவுக்கு வருகிறது.

எனவே, உலகச் சுற்றுலா நாள் என்று சொல்லப்பட்டாலும் செப்டம்பர் 27 என்பது நம்மைப் பொறுத்த அளவில் அது பயணம் செய்வதை ஊக்குவிக்கும் நாள். சுற்றுலா செல்வது பலவகையில் நன்மை பயக்கும் என்றாலும், அதைவிட கொள்கைக்கான பயணம் என்பது நமக்கு உற்சாகமும் உணர்ச்சியும் அளிப்பது ஆகும். அந்த வகையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா நாள் என்பது தந்தை பெரியாரின் பயணத்தைத் தொடர்ந்து அவர்தம் அடிச்சுவட்டில் அய்யா ஆசிரியர் அவர்கள் பயணம் செய்வதை நம் மனதில் இருத்திக்கொண்டு கொள்கைக்கான பயணத்தை ஊக்குவிக்கும் நாளாக நாம் எடுத்துக்கொள்வோம்.பயணம் தொடர்வோம்! தந்தை பெரியாரின் கொள்கையைப் பரப்புவோம்!

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ,செப்டம்பர் 16-30,2024

Thursday 12 September 2024

உலகத் தொண்டு நாளும் தீர்வுகளும்-முனைவர் வா.நேரு


 


அன்னை தெரசாவை நாம் அறிவோம். தெருவில் குளிரில் நடுங்கிக் கொண்டு கிடந்த தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் புண்களுக்கு மருந்திட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கான பாதுகாப்பை அளித்தவர். 1910இல் வெளி நாட்டில் (அல்பேனியா) பிறந்த அவர் 1928இல் இந்தியாவிற்கு வருகின்றார். 1948இல் இந்தியக் குடியரிமையைப் பெறுகின்றார். 1950ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ‘மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்னும் நிறுவனத்தை நிறுவுகிறார்.அதன் மூலம் ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலம் ஏழைகளுக்காகவும்,கைவிடப்பட்டவர்களுக்காகவும் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அவருடைய பணி உலகம்ஹ முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் அவருக்கு நோபல் பரிசு 1979இல் கிடைத்தது. நோபல் பரிசு தவிர இந்தியாவின் பாரத ரத்னா உள்ளிட்ட பல உயர் விருதுகளைப் பெற்றவர் அவர். தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்றப் பாடுபட்டவர். அவர் 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் நாள், தன்னுடைய 87வயதில் இயற்கை எய்தினார்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக அன்னை தெரசாவின் நினைவு நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை சர்வதேசத் தொண்டு நாளாக அய்க்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மனித நேய நெருக்கடிகள், உலக அளவில் மனிதர்களின் துன்பங்களைத் தணிப்பதில் தொண்டின் பங்கினை அங்கீகரிக்கின்ற வகையில் அன்னை தெரசா அவர்களின் பணி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை அறிவித்தது. (ஏ/RES/67/105). 2013ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 5ஆம் நாள் உலகத் தொண்டு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இல்லறம், துறவறம் என்னும் இரண்டு சொற்கள் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த உலகில் தொண்டறம் என்னும் சொல்லைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார். ‘மனிதன் தானாகப் பிறக்கவில்லை, எனவே, தனக்காக மட்டுமே வாழக்கூடாது என்றார்.

உனக்குப் புகழ் வேண்டும், பெருமை வேண்டும் என்றால் மற்றவர்களுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் பெற்றுக்கொள் என்றார்.
“நீங்கள் எவ்வளவு பெரிய இடத்திற்குச் சென்றாலும், யார் யார் உங்களுக்கு உதவினார்களோ வாழ்க்கையில், அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். அதற்கு அப்பாற்பட்டு, நீங்கள் யாருக்கெல்லாம் உதவவேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். உதவி செய்வதில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே – மனநிறைவு இருக்கிறதே, அது வேறு எதிலும் கிடையாது. அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், தொண்டறம் என்று சொன்னார்கள்.” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (விடுதலை 2.10.2014) அவர்கள் ஒரு திருமண விழாவிலே குறிப்பிடுகின்றார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே தொண்டறம்.அது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகிறபோது மிக உயர்ந்த அறமாக உயர்ந்து நிற்கிறது.

உலகத்தொண்டு நாள் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது பற்றி அய்க்கிய நாடுகள் சபை தன்னுடைய இணையதளத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. சர்வதேச நாள் என்பது ஒரு சக்திவாய்ந்த வாதிடக்கூடிய ஒரு கருவி என்று குறிப்பிடுகிறது.உலகில் நிலவும் கவலைக்குரிய பிரச்சனைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து
வதற்கும் ,அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வுகளையும் இருக்கும் வளங்களைப் பற்றிய தகவல்களையும் திரட்டுவதற்கும் ,மனித குலத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் சர்வதேச நாள்கள் கடைப்பிடிக்கப்பிடிக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகிறது.அந்த வகையில் சர்வதேச தொண்டு நாள் என்பது உலகில் இன்னும் வறுமையாலும், கல்வி இன்மையாலும் அவதிப்படும் மக்களைப் பற்றியும் ,அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஒரு நாளாக செப்டம்பர் 5 அமைகிறது.

மக்களுக்குத் தொண்டு செய்யும் மத நிறுவனங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்வதோடு நிறுத்திக்கொள்கின்றன. அதனைச் சிலர் கடவுளுக்குச் செய்யும் சேவை என்று கூறுகின்றனர்- அன்னை தெரசா அவர்களைப் போல. ஆனால், ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள், அவர்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணமென்ன? அவர்கள் படிப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணமென்ன? பெண்கள் ஏன் படிக்கக்கூடாது என்று சில மதவாதிகள் சொல்கிறார்கள், அதனை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்து,அதனை மீறுகிறவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை .மனிதர்கள் ஏன் ஆடு மாடுகளைப் போல உணவும் இன்றி, முறையான உடையும் இன்றித் தெருக்களிலே கிடக்கிறார்கள்? இதற்கான காரணம் என்ன? இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என்பது பற்றியும் தொண்டு நிறுவனங்கள் யோசிப்பதில்லை; யோசிக்கத் தூண்டுவதுமில்லை.

மற்றவர்களுக்குத் தொண்டறம் செய்யவேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் செய்தியாக ,ஒவ்வொரு செயலிலும் நிரூபித்த தந்தை பெரியார் அவர்கள்,உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் துன்பப்படுவது ஏன், அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களும் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தும் பெரும் துயரம் அடைவது ஏன் என்பதை மிக ஆழமாக யோசித்தார். இனிவரும் உலகம் எப்படி எப்படியெல்லாம் அமையவேண்டும் என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்தார்.அந்தத் தீர்வுகளுக்கு முன் நிபந்தனையாகப் பொது உரிமையும்,பொது உடைமையும் அமைந்தன. இவற்றின் மூலமே துன்பப்படும் எளிய மனிதர்களின் துயரங்கள் துடைக்கப்படும் என்று தந்தை பெரியார் அவர்கள் நம்பினார்.அதனையே தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்துப் பரப்பினார்.

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு உதவுதன் மூலம் ஏழை-பணக்காரன் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்று காந்தியடிகள் நினைத்தார்; செயல்பட்டார். அவருடைய சீடரான வினோபா ‘பூமிதான இயக்கம்’ என்று ஒரு பெரிய இயக்கத்தையே நடத்தினார்.தற்காலிமாகச் சிலருக்கு இவை நன்மை பயத்ததே தவிர நிரந்தமான தீர்வைத் தரவில்லை. எனவே தொண்டறத்தை ஊக்குவிக்கக் கூடிய அதே நிலையில் நிரந்தரமான தீர்வினைப் பற்றியும் உலகம் யோசிக்கவேண்டும். அதற்குத் தோழர் காரல்மார்க்ஸ் மற்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகளே தீர்வைத் தரும்.

மதத்தின் அடிப்படையில் தாங்கள் உயர்ந்த ஜாதி, உயர்ந்த இனம் என்னும் மனப்பான்மை ஒழிய வேண்டும் .மனிதர்கள் துன்பப்படுவதற்கு அவர்கள் முற்பிறவியில் செய்த பாவம்தான் காரணம் என்னும் விதிக்கோட்பாடு அழியவேண்டும். மனிதர்களின் மனங்களில் இருந்து அப்படிப்பட்ட கோட்பாடுகள் அடியோடு அகலவேண்டும். அப்படி அவை ஒழிந்த நிலையில்தான் மனித இனம் முழுமையாகத் துன்ப நிலையிலிருந்து விடுபடமுடியும். ஆண்களும் பெண்களும் சம உரிமை படைத்தவர்களாக உலகில் வாழமுடியும். எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலையை நோக்கி உலகம் செல்லும் நாளைப் பற்றியும் சிந்தனை செய்யும் நாளாகவும் உலகத்தொண்டற நாள் செப்டம்பர் 5 அமையட்டும். அனைவருக்கும் உலகத் தொண்டற நாள் வாழ்த்துகள்.

நன்றி ; உண்மை மாதம் இருமுறை இதழ் செப் -1-15 ,2024


Friday 30 August 2024

நமது கடமை- முனைவர் வா.நேரு

 சில வெளிநாட்டு அறிஞர்களின் பெயரைக் கேட்டாலே சங்கிகள் பதறுவதுண்டு. அவர்களுக்கு அந்தப் பெயர்களின் பேரில் பெரும் ஒவ்வாமை உண்டு. அவர்களில் ஒருவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். அவருடைய நினைவு நாள் ஆகஸ்ட் 28. அவர் 1891இல் மறைந்தார். அவர் 1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். தனது இளம் வயதில், (24 வயதில்) ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ என்னும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து 1838 ஜனவரியில் தமிழ் நாட்டின் சென்னைக்கு வந்தார்.

இன்றைய இளைஞர்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவருடைய உழைப்பை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு அவர் வந்த நோக்கம் என்னவோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதுதான். தன் வாழ்நாளில் அதைச் செய்யவும் செய்தார். ஆனால், எளிய மனிதர்களைப் புரிந்து கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாகவும் ஊக்க சக்தியாகவும் இருக்கும். சென்னையை வந்து அடைந்தவர் மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்குகிறார்.தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். திருநெல்வேலி செல்ல விரும்பிய அவர் அன்று இருந்த பயண வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. சென்னையிலிருந்து திருநெல்வேலிவரை நடந்தே செல்வது என்று முடிவு செய்கிறார்.



ஏறத்தாழ 400 மைல்களை அதாவது அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே செல்கின்றார். நடந்து செல்வது என்றால் நேர் பாதையிலே சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை என்று அவர் செல்லவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியாகச் செல்கிறார், அந்த இடத்திலேயே தங்குகின்றார் ,அங்கு கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறார் .அந்த மக்களோடு பேசு
கின்றார். அவர்கள் பேசும் மொழியை, பேசுவதில் இருக்கும் மொழி வேறு பாடுகளைக் கூர்ந்து கவனிக் கின்றார். பல்வேறு திராவிட
மொழிகளைப் பேசக்கூடியவர்களை சந்திக்கும் அவர் திராவிட மொழிகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உணர்கிறார்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டிய அவர் இடையில் நீலகிரிக்குச் செல்கிறார். மலையின் அழகைப் பார்க்கிறார். அந்த மலையில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கிறார்; அவர்கள் பேசும் மொழியை உற்று நோக்குகிறார்.

அப்படியே நீலகிரி மலையில் இருந்து இறங்கி இந்தப் பக்கம் தஞ்சாவூருக்குச் செல்கிறார். தஞ்சாவூர் கோயிலையும் சுற்றிப் பார்க்கிறார். இப்படி ஒரு அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடப்பதற்காக எடுத்துக் கொண்ட காலம் ஆறு மாதங்கள்.

இன்றைய விரைவு உலகத்தில், ஒவ்வொரு இடத்தையும் விரைந்து கடக்கும் இளைஞர்களுக்கு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த இந்த மனிதர் எப்படி பொறுமையாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்துக் கடந்து சென்றிருக்கிறார் என்பது படிப்பினையாக மாறலாம். இப்படியே நடந்து நடந்து செல்லும் அவர் கடைசியில் இடையன்குடி என்னும் ஊரில் போய் நிரந்தரமாகத் தங்குகிறார்.

அயர்லாந்தில் அவர் பிறந்த ஊரின் பெயர் ,ஆங்கிலத்தில் ஆடு மேய்ப்பவர்களின் நகரம். எனவே அதே பெயரில் இருந்த இடையன்குடி என்னும் பெயர் பிடித்துப் போகவே, அங்கேயே தங்கி விட்டார் என்று தமிழ் அறிஞர் தொ.பரமசிவம் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிடுவார்.

இடையன்குடி என்னும் ஊரிலே போய்த் தங்குகிறார். அந்த ஊர் முழுக்கக் குப்பையாகக் கிடக்கிறது. முதலிலே இவர் தனக்காகப் பார்த்து அமைத்துக்கொண்ட வீடும் கூட அப்படித்தான் குப்பையாகக் கிடக்கிறது. முதலில் தனது இல்லத்தைச் சரி செய்கிறார். பிறகு மற்றவர்களுக்குச் சொல்லி, ஈடுபட்டு தனது தெருவைச் சுத்தம் செய்கிறார். பின்பு அந்த மக்களோடு இணைந்து அந்த ஊரையே சுத்தம் செய்கிறார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, அவருக்கு 18 மொழிகள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்பே தெரியும் எனக் குறிப்பிடுகிறது. மொழிகளைக் கற்றுக் கொள்வதில், மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமை,வேற்றுமைகளை அறிந்து கொள்வதில் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த அவர் தமிழ்
மொழியைக் கற்கின்றார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையும் கற்கின்றார்.இந்த மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை அவரை ஈர்க்கிறது.சமஸ்கிருதத்தையும் கற்கின்றார். சமஸ்கிருதத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் குறிப்பாக தமிழ் மொழிக்கும் உள்ள வேற்றுமை அவருக்குப் புலப்படுகிறது.

அதுவரை பார்ப்பனர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியவை என்று கதை அளந்து கொண்டிருந்தனர். அதனையே தங்களுக்குத் தோன்றிய வண்ணம் ஆராய்ச்சி என்னும் பேரால் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தனர்.இந்தப் பார்ப்பனத்தனத்தை தனது ஆராய்ச்சி மூலம் அடித்து நொறுக்கியவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.அதுமட்டுமல்ல; அவாள்களின் குடுமிகளைப் பற்றியே ஒரு நூல் (குடுமியின் மீதான அவதானிப்புகள் ( Observations on the Kudumi ) என்ற நூல் வரக் காரணமாக இருந்தவர். அதனால்தான் சங்கிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர் பெயரென்றால் அவ்வளவு கசப்பும் காழ்ப்பும்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக மொழிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கால்டுவெல் ஆவார்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘இந்தியா முழுமையும் பரந்து விரிந்து இருந்தவர்கள், நாகர்கள் எனப்படும் திராவிடர்கள்’ என்று குறிப்பிடுவதுபோல மொழியின் அடிப்படையில் பலுசிஸ்தானம், வங்காளம் உள்பட இன்றைய இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளில் திராவிட மொழிக் குடும்பங்களே இருந்தன என்று குறிப்பிட்டவர்.

அதனால் “திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி” என்று அழைக்கப்படுபவர் திரு.ராபர்ட் கால்டுவெல் ஆவார்.திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் எல்லாம் ராபர்ட் கால்டுவெல் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவரது உழைப்பிற்குப் பெரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர். 1968இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் அவருக்கு சிலை அமைத்துப் பெருமை சேர்த்தார். திராவிட இயக்க அரசுகள் எல்லாம் அவரது வரலாற்றை தமிழ்ப் பள்ளிக்கூட நூல்களில் சேர்த்து பெருமை சேர்த்தனர். அவரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.அவற்றை வாசிப்பதும்,அவரது பெருமையை, உழைப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்ட் 16-31,2024

Sunday 25 August 2024

அமைதியாய் இருப்பது நலம்….

 


 

வெட்டுவதா?தொடர்வதா?

என்பது சூழலைப் பொறுத்தது..

அவரவர் மனதைப் பொறுத்தது..

 

வெட்டிக்கொண்ட சிலர்

சில ஆண்டுகள் கழித்து…

தொடர்ந்து இருக்கலாம்…

தவறு இழைத்துவிட்டேன்

என்று புலம்பியவர்கள் சிலரை

நான் சந்தித்திருக்கிறேன்…

 

வெட்டிக்கொள்ளாமல்

இப்படித் தொடர்ந்து

என் வாழ்வை நானே

சீரழித்துக்கொண்டேனே..

என்று தவிக்கும் சிலரையும்

நான் சந்தித்திருக்கிறேன்..

 

எதிலிருந்தும் எவரும்

வெட்டிக் கொள்வதும்

விட்டுக் கொடுத்துத் தொடர்வதும்

அவரவர் சூழல் பொறுத்தது..

அவரவர் மனம் பொறுத்தது..

அவரவர் பொருளாதாரம்

பொறுத்ததும் கூட…

 

எவர் செய்வதையும்

எங்கேயோ இருந்துகொண்டு

இது சரி..இது தவறு

எனச்சொல்லும் நாட்டாமைத்தனம்

இல்லாமல் அவரவர்

தேர்வுக்கு விட்டுவிட்டு

அமைதியாய் இருப்பது

நமக்கு  நலம்…

 

                    வா.நேரு,

                    25.08.2024

 

Saturday 24 August 2024

திராவிட இயக்கமும் தொழிற்சங்கமும்...

 மிகச்சிறப்பான ஒரு நூல்,தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்றச்சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன் அவர்கள் எழுதிய  நூல்,சென்னையில் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. வாய்ப்பு இருக்கும் தோழர்கள் நிகழ்வுக்கு வாருங்கள்.



இந்த நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை...





















Tuesday 20 August 2024

நினைவுகளில் நிறைந்து நிற்கிறான் என் நண்பன்

 எனது அருமை நண்பன் திருப்பூரில் வசித்து வந்த கா.சுப்பிரமணியன் நிரந்தரமாக விடை பெற்றுக் கொண்டான் ,கடந்த பதினெட்டாம் தேதி அன்று (18.08.2024).எனக்கும் அவனுக்கும் இப்போது 60 வயதாகிறது ஒன்றாம் வகுப்பு முதல் அவனது இறுதிக்காலம்வரை தொடர்ந்த  நட்பு. இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வந்த நண்பன் அவன் .


இருவரும் சாப்டூரில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்து பின்பு  பிளஸ் ஒன் பிளஸ் டூ தே.கல்லுப்பட்டியில ,காந்தி நிகேதன் ஆசிரமத்தில் படித்தோம். பீறகு  நான் திருச்செந்தூர் ஆதித்தனார்      கல்லூரியில்  பி.எஸ்.எஸி வேதியியல் படிக்க, அவன் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்தான். ஆதித்தனார் கல்லூரியில்  படித்த பல சமயங்களில் திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் இருக்கும விருதுநகர் கல்லூரியில் இறங்கி ,அங்குப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊரைச் சார்ந்த சுப்பிரமணி ,சுந்தரசேகர்                      பேரையூரைச் சார்ந்த கண்ணன் போன்றவர்களைப் பார்த்து பேசி விட்டு மறுபடியும் பேருந்து ஏறி ஊருக்கு வருவது வழக்கம்.மிக வறுமை மிகுந்த குடும்பச் சூழலில் பி.எஸ்.எஸ்ஸி. விலங்கியலைக் கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றான்.படித்து முடித்து விட்டு ஊரில் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.




 கொஞ்ச நாட்கள் ஊரில் அவன் சும்மா இருந்த காலத்தில், நான் தொலைபேசித்துறையில்  உசிலம்பட்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் நானும் நண்பர்கள் சுப்பிரமணி ,சுந்தரசேகர்,கணேசபூபதி மூவரும் இணைந்து எங்கள் வீட்டில்  ஒரு டியூஷன் சென்டர் வைத்தோம் நிறையக் குழந்தைகள் அப்போது படித்தார்கள். பின்பு அவன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றான். கடினமான வேலையை மிகப் பொறுமையாக,லோகு  பேப்பர் ஸ்டோர் ன்னும் கடையில் வேலை பார்த்தான்.திருப்பூரில் முதல் ரெயில்வே கேட் ரோட்டில் இருந்த ஒரு விடுதியில் தங்கி இருந்தான். மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் திருப்பூரில்(1986-87) இருந்த காலம். ஓரிரு நாள் அந்தச் சூழலில் தாக்குப் பிடிப்பதே கடினம். ஆனால் அங்குத் தாக்குப் பிடித்து வாழ்ந்தான்.

 அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குப் பிறந்தது. கடை கடையாக  பேக்கிங் மெட்டீரியல்ஸ் பொருட்களைச் சிலவற்றை வாங்கிக் கம்பெனிகளுக்குக் கொடுக்க  ஆரம்பித்தான்  அந்தச் சமயத்தில்தான் கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்றான். அப்போது நான் திண்டுக்கல் தொலைபேசி  நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  திண்டுக்கல்லில் என்னிடம் இருந்த சைக்கிளை லாரியில் போட்டு அனுப்பி வைத்தேன் நீ பயன்படுத்திக்கொள், எனக்கு இங்கே சைக்கிள் தேவை இல்லாமல் தான் இருக்கிறது என்று சொன்னேன். சரி என்றான். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து  தனியாக ஒரு கடையை எஸ்.எம்.பேக்கிங் மெட்டிரியல்ஸ் என்னும் பெயரில்  ஆரம்பித்தான்.முறையாக அனுமதி வாங்கி ஆரம்பிக்கப்பட்ட கடை. கடினமான முதலாளியாக இருந்த லோகு பேப்பர் ஸ்டோர் முதலாளி திரு.லோகு அவர்கள் ,புதிய கடைக்கு வந்து இவனை வாழ்த்தி கையில் 10000 ரூபாய் கொடுத்து விட்டுப்போனார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.தன் கடையில் வேலை பார்த்த பையன் ,தன் கடையைப் போன்ற இன்னொரு கடையை வைத்த பொழுது,வந்து மனதார வாழ்த்தி,பணமும் கொடுத்துவிட்டுச்சென்றது. இவனது அணுகுமுறை அப்படி இருந்திருக்கிறது வேலை பார்த்த இடத்தில்,

கோயம்புத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய இன்னொரு நண்பன் எங்கள் ஊர் ஜோ.ராஜேந்திரன் வனோடு பார்ட்னர் ஆக 
சேர்ந்தான். அதற்குப் பிறகு  வாழ்க்கையில் இருவருக்கும் வெற்றிதான். அவர்கள் இருவரும் இணைந்து ஏறத்தாழ ஒரு 40 ஆண்டுகள் அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி, நல்ல லாபம் பெற்று  மேலும் கடைகள், இடங்கள், வீடுகள் என்று ஒரு நல்ல பொருளாதார வசதியைப் பெற்றனர். எனது திருமணத்திற்குப் பின்பு ஒரு 20 நாட்களில் அவனுக்கும் பிரபாவிற்கும் திருமணம் நடைபெற்றது,1993-இல் அவனுடன்  இணைந்து பெண் பார்க்கப் போனது முதல் அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கு என்னுடையது. அதனால என்னவோ அவனது மாமனார் அவனது மாமியார் இருவரும்                  அவர்களின் இறுதி மூச்சு வரை என்மேல் மிக பாசமாக இருந்தார்கள் .

பின்பு அவனுக்கு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.விக்னேஷ்,சுகந்தன்.. இருவரும் நன்றாகப் படித்து பொறியியல் பட்டதாரிகளாகி வேலைக்குச் சென்றனர் முதல் மகனுக்குத் திருமணத்தை முடித்து வைத்தான்.  இனிமேல் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் மதுரையில் செட்டில் ஆவதா அல்லது பேரையூரில் செட்டில் ஆவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான் ஒரு இரண்டு வருடங்களுக்கு 
முன்பு.அவன் முன்னேறியது மட்டுமல்லாது தன்னுடைய அண்ணன்கள் குடும்பம,அக்கா,தங்கை குடும்பம் என அனைவருக்கும் உதவியாக இருந்தான். 

18 மாதங்களுக்கு முன்பு  பெருங்கொடுமையாய் அவனுக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்தது.  அதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டான்.  நன்றாக இருந்தான். இரண்டாவது மகனுக்குத் திருமணத்தை முடித்தான். முதல் மகனின் மனைவிக்கு வளைகாப்பு 2 மாதங்களுக்கு முன்னால் திருப்பூரில் நடந்தது.அன்று கொஞ்சம் சோர்வாக இருந்தான்.எப்போதும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது , எனது மகன்களும், மனைவியும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள் ,அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றான்.அன்றுதான் அவனைக் கடைசியாகப் பார்த்துப்,பேசியது.
 
நன்றாக இருக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான், 15 நாட்களுக்கு முன்னால் பேசிய பொழுது கூட அப்பப்ப கோயம்புத்தூருக்கு செக்கப்  போக வேண்டியிருக்கிறது, மற்றபடி நன்றாகச் சாப்பிட முடிகிறது நன்றாக இருக்கிறேன் என்றான். 18ம் தேதி அவன் இறந்து விட்டான் என்ற செய்திதான் வந்தது. ஆடிப்போய் விட்டேன்.  இடையில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவனது எண்ணில் பதில் இல்லை..

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இதய  ஆபரேஷன் சென்னையில் நடைபெற்றது ஆபரேஷன் நடப்பதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் கட்டாயமாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு சரி செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். கையில் உடனடியாகப் பணம் இல்லை.  பணத்தைத் திரட்டி நாலு லட்ச ரூபாய் சேர்த்த பிறகு சென்னையில் சென்று ஆப்ரேஷன் செய்து விடுவோம் என்று இருந்தேன். தற்செயலாகக் கூப்பிட்ட சுப்பிரமணி, சென்னைக்குப் போனாயே என்ன சொன்னார்கள் டாக்டர் என்று கேட்டான். இப்படிக்குக் கட்டாயம் ஆப்ரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள், 4 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் அதற்காக நான் பணம் திரட்டிக்  கொண்டிருக்கிறேன்,எங்கள் சொசைட்டியில் கடன் கேட்டிருக்கிறேன் என்று சொன்னேன் 

அப்படியா என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  மறுநாள் காலை நாலு லட்ச ரூபாய் பணத்தோடு வீட்டில் வந்து நின்றான். இதை வைத்து முதலில் ஆபரேஷன் செய், உடனே சென்னைக்குக் கிளம்பு, மற்றவற்றையெல்லாம்   பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தான். மிகப்பெரிய ஆபரேஷன் இதய ஆபரேஷன். சில நேரம்  உயிருக்குக்கூட ஆபத்தாக முடியும் ஆப்ரேசன். அப்படிப்பட்ட நிலையில் 4 லட்ச ரூபாயை  மிதத்துச்சமாக மதித்து நண்பனின் உயிர் பெரிது என்று வீட்டிற்கு வந்த பணத்தைக் கொடுத்த நண்பன். 2 வருடங்கள் கழித்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொண்டான்..வங்கி வட்டியாவது தருகிறேன் என்றபோது ,'அடி வாங்காத,சும்மா  இருடா' என்று சொல்லி விட்டான்.

உரிமையாகத் திட்டுவான்.அறிவுரை சொல்வான்.அதுபோல நான் திட்டுவதை,சொல்வதைக் கேட்டுக்கொள்வான்.திருத்திக் கொள்வான்.இறப்பு வீட்டில் அவனது மைத்துனர் சுந்தரபாரதி ." மாமா.ஒவ்வொருவருக்கும் பல நண்பர்கள் உண்டு. ஆனால் ஆத்மார்த்தமான நண்பன் என்று ஒருவர்தான் இருப்பார்கள்.அந்த நண்பனிடம் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். எனது மாமா சுப்பிரமணி அப்படித்தான் உங்களை வைத்திருந்தார். உங்களைப் பற்றிப் பேசாத நாளே இருக்காது " என்றார்.அழுகைதான் வந்தது.அவனது மூத்த அண்ணன் இறப்பு வீட்டில் " ஆலமரம் சாய்ஞ்சிருச்சுடா நேரு,எல்லோருக்கும் உதவி பண்ணியவன் சாஞ்சிட்டாண்டா " என்று அழுது புலம்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது வீட்டில் , 'எனது இறப்பிற்குப் பின்னால் சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது,எனது உடலை மருத்துவமனைக்குக் கொடுக்கவேண்டும் ' என்று நான் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, 'டேய், நம்ம ஊர்க்காரர்கள் ,சொந்தக்காரர்கள் இதைச்செய்வதில் பிரச்சனை செய்தால் ,நீதான் முன்னின்று எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' என்றேன். அவன் பக்தன்தான் என்றாலும் என்னை நன்றாகப் புரிந்தவன். 'அதெல்லாம் அப்ப பார்ப்போம். சும்மா இருடா' என்றான். அவனுக்கு முன்னால் நாம் இறந்து விடுவோம்  என்பது எனது எண்ணமாக  இருந்தது.அதனால் அவனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் கொடுமை.  நினைவுகளில் நிறைந்து நிற்கிறான்  என் நண்பன். 

வா.நேரு
20.08.2024

Saturday 17 August 2024

'விறகு வண்டி முதல் விமானம் ‘வரை....

 முனைவர் வா.நேரு,

 மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,


                        வாழ்த்துரை

விறகு வண்டி முதல் விமானம் ‘வரை என்னும் இந்த நூல் அய்யா சே.முனியசாமி  அவர்களின் தன் வரலாறு நூல்.25 வயதில் தான் கைவண்டி இழுத்த காலம் முதல் இந்றைக்கு விமான்ங்களில் பறக்கும் 75 வயதுவரையிலான அவரின் அனுபவக்குவியல் இந்த நூல். வெறும் அனுபவத்தொகுப்பாக அமையாமல்,வாசிப்பதற்கு எளிமையாய்,விறுவிறுப்பாய் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் கொள்கை வழிகாட்டுதலில் மதுரையில் களப்பணி ஆற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர் . அய்யா சே.முனியசாமி அவர்கள். இவர் மிகச் சிக்கனமாக இருப்பார். வரவு என்றாலும் செலவு என்றாலும் அவரிடம் ஒவ்வொரு ரூபாய்க்கும்  கணக்கிருக்கும் சொற்களில் கனிவருக்கும் ஆனால் வாக்குவாதம் என்று வந்தால் சண்டை என்று வந்தால் எதிர்த்துக் களமாட என்றைக்கும் தயங்க மாட்டார்.எவரிடமும் தானாகவே பேச்சை ஆரம்பிக்கும் பண்பாளர் இவர் . இரயிலில் நாக்பூர் சென்று வரும்போது ஒரு இராணுவ வீர்ரோடு நடந்த உரையாடல் பற்றி இந்த நூலில் இவர் சொல்லும் விதமும் உரையாடலும் நினைத்து மகிழலாம்.அதைப்போல இரயிலில் இவரும் மறைந்த பொறியாளர் அண்ணன் கி.மனோகரன் அவர்களும் நடத்திய பகுத்தறிவு உரையாடலும் இரசிக்கத்தக்கது மட்டுமல்ல,ஒரு புதுவித பிரச்சார யுக்தியை நமக்குச் சொல்லித்தருகிறது.



இந்த நூல் அய்யா முனியசாமி அவர்களின்  பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டுகிறது.’சுட்டி முனியசாமி ‘ எப்படி பண்பட்டார்,பழகும் வித்தை அறிந்தார் என்பதைக் காட்டுகிறது. மனிதர்களோடு பழகும் முறையினால் அவர் பயன் பெற்றதையும் அவரால் மற்றவர்கள் பயன்பெற்றதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டில் இருக்கும் ஒருவருக்குகாலத்தினால் செய் உதவி எப்படிப்பட்ட ஒரு நன்மையை திருப்பித் தந்தது என்னும் தன் அனுபவம் இந்த நூலில்  நமக்கு படிப்பினையாக இருக்கிறது

முதன் முதலில் இவர் தன்னுடைய அனுபவங்களை என்னிடம் சொன்ன போது எனக்கு மிக வியப்பாக இருந்தது ‘அய்யா, இதனை ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் ‘ என்று  நான் சொன்னேன். அதிலே முதலில் தயக்கம் காட்டினார் ஆனால் புத்தமாக ஆக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தொடர்ச்சியாக தன்னுடைய மனதிற்குள்ளே கிடந்த பல்வேறு நினைவுகளை, கடந்த கால அனுபவங்களை கொட்டித் தீர்த்தார். அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலையின் ‘வாழ்வியல் சிந்தனைகள் ‘ பகுதியில் வரப்போகும் நூல் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதைப் படித்து படித்து ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த மகிழ்ச்சியை மனதார வெளியில் காட்டினார்.உவகை அடைந்தார்.

 தன்னுடைய தொண்டர்கள்,தன் வரலாறு எழுதும்போது அதனைப் படித்து,அதனைப் பற்றி எழுதி அளப்பரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தன்னுடைய தொண்டர்களுக்கு தருபவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவ்வாறே இந்த நூலுக்கும் தந்துள்ளார்கள்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டங்களில், நம் கழகத்தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பங்களை எழுத்தாகப் பதிவிட வேண்டும்  என்று வேண்டுகோள் விடுப்பதுண்டு.இந்த நூலைப் படித்தபொழுது மீண்டும் மீண்டும் அந்தக் கருத்தைச்சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.ஆம் ஒவ்வொரு பெரியார் தொண்டரின் வாழ்க்கையும் எதிர் நீச்சல்தான்.போராட்டம்தான். ஆனால் அய்யா தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் செல்பவர்களுக்கு என்றும் வெற்றி தான் ,மகிழ்ச்சிதான் என்பத்ற்கு மிக நல்ல எடுத்துக்காட்டு இந்த நூல்.அய்யா சே.முனியசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.இந்த நூல் ஆக்கத்தை மிகச்சிறப்பாக குறுகிய காலத்தில் செய்து கொடுத்திருக்கும் கீழடி வெளியீட்டகத்திற்கும், அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த நூலை முழுமையாகப் படிப்போம். நாம் பெற்ற மகிழ்ச்சியை மற்றவர்களும் பெற வழிகாட்டும் இந்த நூலைப் பரப்புவோம்.

 

மதுரை

19.06.2024                                        முனைவர் வா.நேரு