Sunday, 26 October 2025

தோழர் ,அய்யா சண்முகவேல்- அன்பை மட்டுமே சிந்தும் அற்புத மனிதர்

 நேற்று 85 வயது இளைஞர் தோழர் ,அய்யா சண்முகவேல் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறார். எளிமை,தெளிவு என அவரின் பன்முக ஆற்றல் வியக்க வைக்கிறது.இப்போதும் சைக்கிளில்தான் பயணம் செய்கிறேன் என்றார்.அவரைப் பற்றி திரு.சமஸ் எழுதிய பழைய கட்டுரை - 10 ஆண்டுகளுக்கு முந்தையது ...இத்துடன் இணைத்துள்ளேன்.






மதுரையில் அவரைச் சந்தித்தபோது ,எனது ' நெருப்பினுள் துஞ்சல் ' சிறுகதைத் தொகுப்பையும்,அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய 'அவர்தாம் புரட்சிக் கவிஞர் ' என்னும் நூலையும் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.தனது தோட்டத்தில் விளைந்த காய்களைக்  கொண்டு வந்திருந்தார். கொடுத்தார்.அன்பை மட்டுமே சிந்தும் அற்புத மனிதர். இவருடைய அனுபவம் எல்லாம் நூலாகப் பதியப்படவேண்டும்.



தி இந்து தமிழ் திசை- ஜனவரி 18,2014

புத்தகத் தாத்தா

இன்றைக்கெல்லாம் ஒருவருக்கு ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்து, சில ஆயிரங்கள் பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் தயாராகிவிடுகிறது. பெரும்பான்மை வாசகர்களின் மனநிலையும் இப்படித்தான். ஆர்வத்தோடு வாங்கப்படும் பெரும்பாலான புத்தகங்கள் பரண்களையும் பழைய புத்தகக் கடைகளையுமே சென்றடைகின்றன. உண்மையில் ஒரு புத்தகத்தின் பெறுமானம்தான் என்ன? புத்தகங்களோடு வாழும் இவர்கள் வாழ்க்கை அதைச் சொல்லும்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன கிராமமான கீழக்கலங்கலைச் சேர்ந்தவர் சண்முகவேல். 75 வயதாகிறது. சுற்றுப்புறக் கிராமங்களை நோக்கிக் காலை ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுகிறார் சண்முகவேல். சராசரியாக ஒரு நாளைக்கு 90 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணிக்கிறார்; புத்தகங்களுக்காகக் காத்திருக்கும் அவருடைய கிராமப்புற வாசகர்கள் “சிகப்புச் சட்டை தாத்தா வந்துட்டார்” என்கிறார்கள். ஒரு வீட்டில் புத்தக மூட்டையைப் பிரிக்கிறார். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து அதன் சிறப்புகளைப் பட்டியலிட ஆரம்பிக்கிறார். ஆளுக்கொன்றாக எடுக்க, மீதிப் புத்தகங்களுடன் அடுத்த கிராமத்தை நோக்கிப் பயணிக்கிறது அவருடைய சைக்கிள்.

“சாதாரண விவசாயக் குடும்பம் நம்மளோடது. நல்லாப் படிப்பேன். ஆனா, வீட்டுச் சூழ்நிலை படிப்பை நிறுத்தும்படியா பண்ணிட்டு. விவசாய வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். சின்ன வயசுலேயே இடதுசாரி இயக்கத்துல சேர்ந்துட்டேன். அன்னைக்கு ஆரம்பிச்சு சிகப்புச் சட்டைதான் இந்த உடம்புல. இந்தப் புஸ்தக ஆர்வம், வாசிப்பு இதுக்கெல்லாம்கூட அதுதான் ஆரம்ப விதை. பொதுவுடைமைப் புஸ்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சப்போ, இது நம்மளோட நிக்கக் கூடாது; நாலு பேருக்குப் போய்ச் சேரணும்னு வாங்கி, தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தேன். ஒரு கட்டத்துல விவசாயம் கையைச் சுட்டப்போ, புஸ்தக வியாபாரமே தொழிலா மாறிடுச்சு. சின்ன அளவுல ஊருலேயே கடை ஒண்ணு இருக்கு; வேற எதுனா தொழில் செஞ்சும்கூடப் பொழைச்சுருக்கலாம். ஆனா, மனசுக்கு இதுல கெடைக்குற திருப்தி இருக்கே… அது வேற எதுலேயும் கிடையாது.

காலையில ஆறரை மணிக்கு சைக்கிளைக் கிளப்புவேன். ஊர்ஊரா வண்டி போகும். பெரும்பாலும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் பிள்ளைகளும்தான் என்னோட வாடிக்கையாளருங்க. நான் கொண்டுபோற புஸ்தகங்களையும் கொடுப்பேன்; அவுங்க முந்தின முறை கேட்ட புஸ்தகங்களையும் வாங்கிட்டுப் போவேன். பள்ளிக்கூடங்கள்லேயே கண்காட்சி போடுவேன். தள்ளுபடி கொடுப்பேன். மிச்சம் கிடைக்குறது கம்மின்னாலும், என் குடும்பத்துக்கு அது போதுமான தொகையா இருக்கு. ஏன்னா, என் மனைவி லட்சுமி, என் மகள்கள் ஜீவா, கல்பனா எல்லோரும் என்னை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கிட்டவங்க. எனக்குத் தனிப்பட்ட செலவுனு எதுவும் கிடையாது.

டீகூட குடிக்க மாட்டேன். வீட்டுலேயே சாப்பாடு கட்டிக்குவேன். எப்படியும் ரெண்டு நாளாவது போற ஊர்கள்லேயே தங்கிடுற மாதிரி இருக்கும். ‘என் வீட்டுல தங்கு, என் வீட்டுல சாப்புடு’ன்னு ஒரே போட்டியா இருக்கும். அப்படி ஒரு பிரியம் என் மேல கிராமத்துக்காரவங்களுக்கு. அப்புறம் என்ன? சந்தோஷமா போகுது பொழைப்பு.

இந்த சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? கிராமப்புறங்கள்ல இப்படிக் கொண்டுபோய் நாம கொடுக்குற புஸ்தகம் அவுங்கவுங்க வாழ்க்கையில ஏற்படுத்துற தாக்கம் இருக்கே… அதை நேரடியா உணர்ற பாக்கியம். சின்ன வயசுல இடதுசாரி இயக்கத்துல சேர்ந்தப்போ, சமுதாயத்துல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கணும்கிற கனவுலதான் சேர்ந்தேன். சாதி, மதம், பணப் பாகுபாடுக்கு எதிரா ஒரு புரட்சியைப் பண்ணணும்கிற வெறி அப்போ. காலப்போக்குல இயக்கம் நீர்த்துப்போக நான் அதுலேர்ந்து வெளியேறிட்டேன்; ஆனா, புஸ்தகம் கொடுக்குறேன் பார்க்குறீங்களா, அதுல நான் விரும்புன மாற்றத்தை நேர்ல பார்க்குறேன். வெயில்லேயும் மழையிலேயும் வேர்க்க விறுவிறுக்க சைக்கிள் மிதிச்சு சுமந்துகொண்டுபோய்க் கொடுக்குற எல்லாக் கஷ்டமும் ‘தாத்தா போனவாட்டி கொடுத்த புஸ்தகத்தைப் படிச்சுட்டேன் தாத்தா; நல்லா இருந்துச்சு’னு சொல்ற ஒரு வாக்கியத்துலயோ, ‘அடுத்த முறை எப்போ தாத்தா வருவீங்க’னு கேட்குற ஒரு வாக்கியத்துலேயோ போய்டும். புஸ்தகம் சமுதாயத்தைத் திருத்த ஒரு வலுவான அகிம்சா ஆயுதம்னு சொல்வாங்க; என்னால முடிஞ்ச அளவுக்கு அந்த ஆயுதம் எல்லோர் கையிலேயும் கிடைக்க நான் உழைக்கணும். அவ்வளவுதான்.”

– சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பிக்கிறார் சிகப்புச் சட்டை தாத்தா!

சமஸ்..

தொடர்புக்கு: samas@kslmedia.in

Friday, 17 October 2025

அண்மையில் படித்த புத்தகம்: மெளனித்திருக்கும் மூங்கில் வனம்...கலையரசி பாலசூரியன்

 

அண்மையில் படித்த புத்தகம்: மெளனித்திருக்கும் மூங்கில் வனம்

 ஆசிரியர்                   : கலையரசி பாலசூரியன்

முதல்பதிப்பு 2024, பக்கம் 90 ,விலை ரூ 180

வெளியீடு : எழிலினி பதிப்பகம்,எழும்பூர், சென்னை -8

 

மெளனித்திருக்கும் மூங்கில் வனம் ஒரு கவிதைத் தொகுப்பு.இந்த நூல் ஆசிரியர் கலையரசி பாலசூரியன் என்ற கலைபாலாவின் முதல் நூல்.முதலில் முதல் நூலை அச்சில் கொண்டுவந்திருக்கும் தங்கை கலைபாலவுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

வாருங்கள் படைப்போம்’,’வாருங்கள் படிப்போம்குழுவில் ஒரு முக்கிய பங்களிப்பாளர் கலைபாலா அவர்கள்.ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்வுகளில் தொடர்ச்சியான பங்களிப்பை அளிப்பவர்.அவரின் ஆக்கத்தில் வந்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.



அருமையான அணிந்துரையை தோழர் அ.குமரேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்.அதைப்போல கவிஞர் சினேகன்,அண்ணன் குழலிசை குமரன் ஆகியோர் வாழ்த்துரை, அண்ணன் டாக்டர் கோ.ஒளிவண்ணன் அவர்களின் பதிப்புரை என்று நூலுக்குள் நுழைவதற்கு முன்பே நூலைப் பற்றிய  அறிமுகம் கிடைத்துவிடுகிறது.

காதலில் தான் தொடங்குகிறது

கவிதையின் பயணம்

இல்லையில்லை..

கவிதையில்தான் தொடங்குகிறது

காதலின் பயணம்என்று தன் கவிதையின் மூலமாகவே என்னுரையை

ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறார் கவிதை பாலா இல்லையில்லை கலை பாலா. 

எளிமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பெரும்பாலும் அக மனம் சார்ந்த பாடல்கள்.

உன் மீதான நேசம்

உனக்காய் மலர்வதில்

மட்டுமல்ல..

உன்னை நினைத்து

உலர்வதிலும்

தான்என்று தொகுப்பின் முதல் கவிதையை ஆரம்பித்திருக்கிறார்.இது சங்கப் பாடலின் தொடர்ச்சி.அகம் சார்ந்து, அகம் நாடுபவனின் நினைவு சார்ந்து எழுந்த கவிதை.

உறங்கும் விழிகளுக்கு

என்னவோ

இரவின் நீளம் குறைவுதான்

விழித்திருக்கும்

விழிகளுக்குத்தான்

வெகுதொலைவு …’ என்கிறார்பிரியத்தின் பெருவெளிஎன்னும் கவிதையில். அருமையான ஒப்பீடு..உணர்ந்து விழுந்த சொற்களாக இருக்கின்றன.

கனவுகள் /அன்பின் மொழிபெயர்ப்புஎன்கிறார் ஒரு கவிதையில்.சில நேரங்களில் பயமுறுத்தும் கனவுகளும் வந்து தொலைக்கின்றன.அதை எதன் மொழிபெயர்ப்பு எனச்சொல்லலாம்?.

கற்பென்ற ஒன்று

கடவுள் போல்

கற்பனையோ..

கற்பென்ற

சொல்லொன்று

பெண்ணிடம்

மட்டும் விற்பனையோஎன்று கற்பு என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை வடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக இத்தொகுப்பில் இக்கவிதை.’பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும்  நூலில் தந்தை பெரியார்கற்புஎன்ற தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையும் நினைவுக்கு வந்தது இக்கவிதையைப் படிக்கையில்.துணிச்சலாக கேள்விகளைக் கேட்டிருக்கும் கவிஞருக்கு பாராட்டுகள்.இந்தக் கவிதை போலவேஏவாளின் அடுப்பங்கரைஎன்னும் கவிதையும் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது.

அல்லுமேது,பகலுமேதுஎன்றுஆத்தாவின் வாசம்கவிதையில் சுட்டுகின்றார்.வட்டாரச்சொற்கள் அருமையாக அமர்ந்து பொருள் தருகின்றன இக்கவிதையில்.

அகம் தொட்டவர்களின்

அலட்சியங்கள்

என்னைச் சிதைத்துப்

போனதுண்டு

சில நேரங்களில்’ ..என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.பல பெண்களைப் பல நேரங்களில் மன ரீதியாகத் துன்பறுத்தும் காரணமாய் அமைவது அலட்சியம்.அதுவும் நாம் நேசிப்பவர்களின் அலட்சியம் என்ன பாடுபடுத்தும் என்பதை எழுதியிருக்கிறார்.

இன்னும் நிறையக் கவிதைகளைச் சுட்டிக் காட்டலாம். நூல் விமர்சனத்தைச் சுருக்கமாக எழுதுங்கள் அப்பா, என்று என் மகன் சொ.நே.அன்புமணி எப்போதும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறான்.சரியான சுட்டிக்காட்டலை, நம் பிள்ளைகள் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதுதானே சரியான நடைமுறை.



தங்கை கலைபாலா என்னும் கலையரசி பாலசூரியன் இன்னும் நிறைய எழுதவேண்டும்.சமூகம் சார்ந்து நிறையக் கவிதைகளைத் தரவேண்டும் எனவும்,அடுத்தடுத்த நூல்களுக்களுக்கான படைப்புப் பணிகளிலும் ஈடுபடவேண்டும் என்னும் எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.. படைப்பாளராக மாறியிருக்கும் தங்கை கலைபாலாவிற்கு மீண்டும் வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்.

 

                                                    தோழமையுடன்

                                                 வா.நேரு, 17.10.2025

 

Wednesday, 15 October 2025

அண்மையில் படித்த புத்தகம் : எண்ணங்களின் வண்ணங்கள்..கோ.ஒளிவண்ணன்

 

அண்மையில் படித்த புத்தகம் : எண்ணங்களின் வண்ணங்கள்

நூல் ஆசிரியர்               : கோ.ஒளிவண்ணன்

பதிப்பகம் : எழிலினி முதல் பதிப்பு : 2020 விலை ரூ 150

கலைஞர் நூற்றாண்டு நூலக எண்: GR 3782

இது ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். 33 கட்டுரைகளை உள்ளடக்கி,பல்வேறு தலைப்புகளில், பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நூலைப் பிரித்தவுடன் இந்த நூல் பல ஆண்டுகளுக்கு முன்னால் , நான் சமுதாய நோக்குள்ள கட்டுரைகளை எழுதவேண்டும் என வித்திட்ட,தொடர்ந்து ஊக்கமளித்த  அருமைத்தோழர் காலஞ்சென்ற பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என்று  நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.மறைந்த தோழர் ,பெரியார் சாக்ரடீஸ் அவர்களைப் பற்றி எண்ணம் ஓடியது.உண்மைஇதழுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு எத்தனை பேரிடம்,எத்தனை கட்டுரைகள் வாங்கியவர் தோழர் பெரியார் சாக்ரடீஸ். ஒரு கூட்டத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்கள் கூடப் பெரியார் சாக்ரடீசைக் குறிப்பிட்டார்.தோழர் பெரியார் சாக்ரடீஸ் பற்றிய பலவித நினைவுகளை இந்த நூலின் நுழைவுவாயில் நினைவுபடுத்தியது.



இந்த நூலின் வெளியீட்டு விழாவில் ,திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் உமா அவர்கள் இந்த நூல் குறித்து ஒரு 20 நிமிடம் பேசியிருக்கிறார்கள்.யூ யூ-டியூப்பில் முழுமையாகக் கேட்டேன். நூலை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.கட்டுரைகளின் தொகுப்பினை வெளியிட ஊக்கப்படுத்திய ! ஒருவரைப் பற்றிய செய்தியை என்னுரையில் அண்ணன் ஒளிவண்ணன் கொடுத்திருக்கிறார்.. இப்படி எதிர்மறையாக நின்று ஊக்கப்படுத்துகிறவர்கள் வாழ்க!..தான் ஒரு பதிப்பாளராக இருப்பதால் எப்படி எளிதாக இந்த நூலைக் கொண்டுவர முடிந்தது என்பதையும் அண்ணன் ஒளிவண்ணன் எழுதியிருக்கிறார்.! அதற்காக நாம் எல்லாம் பதிப்பாளராக மாற முடியுமா? என்ன?..

அசுரன் திரைப்படத்தைப் பற்றியது முதல் கட்டுரை.அடுத்து நீட் தேர்வினால் உயிரிழந்த தங்கை அனிதாவைப் பற்றிய கட்டுரை.அப்புறம் திராவிட இயக்கம் பற்றி,சமூக நீதி பற்றி,மாதொரு பாகன் நூல் பற்றி,ஜோதிராவ் பூலே பற்றி, அய்யா நன்னன் அவர்கள் பற்றி,பூமணியின் பிறகு பற்றி, அறிஞர் அண்ணா பற்றி,தோப்பில் மீரான் பற்றி, வித்தியாசமான விமானப்பயணம் பற்றி என்று கலவையாக இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்டுரைகளும் இப்போது வாசித்தாலும் உயிர்ப்பாக இருக்கின்றன.இந்தக் காலகட்டத்திற்கும் பொருந்துவதாக ,நடப்போடு ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கும் கட்டுரைகளாக இருக்கின்றன.



அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது புத்தகக் கடைத் திறப்பு விழாவிற்கு வந்ததைப் பற்றி மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும்என் தந்தை உயிர்த்தெழுந்து வந்தார் என்று எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை பற்றி யூ டியூப்பில் தோழர் உமா அவர்களும் மிக நன்றாகப் பேசியிருக்கிறார்கள்.பெரியாரும் இலக்கியமும்’,’தந்தை பெரியார்-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒப்பீடு,பெரியாரின் பொது வாழ்க்கையும் பண்பு நலன்களும்,பெரியார் சிக்கனக்காரரா?கருமியா? என்று பல்வேறு தலைப்புகளில் தந்தை பெரியார் பற்றி எழுதியிருக்கிறார்.சித்த மருத்துவர் கே.பி.அருச்சுனன் அவர்களின் திடீர் மறைவு குறித்து நெருநல் உளனொருவன்என்னும் தலைப்பில் கட்டுரையைக் கொடுத்து இருக்கிறார். நேற்று என்னோடு பி.எஸ்.என்.எல்-லில் வேலைபார்த்த ,என் வயதுடைய நண்பர் கிருஷ்ணன் அவர்களின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்டபோது,இதே திருக்குறளைத்தான் நானும் பயன்படுத்தினேன்.எக்காலத்திற்கும் உண்மையைச்சொல்லும் திருக்குறள் அது.நல்ல தலைப்பு கட்டுரைக்கு.

மொத்தத்தில் விறுவிறுவென வாசிக்க முடியும் கட்டுரைகள்.நிறைய விசயங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் கட்டுரைகள். நூல் ஆசிரியர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 

 

 

Tuesday, 14 October 2025

மறந்துவிடுதல்...

                   மறந்துவிடுதல்...

                  

செல்போனை

எங்கு வைத்தோம் என்பதை

மறந்துவிடுதல்

சில நேரங்களில்

மகிழ்ச்சியான தருணமாக

மாறி விடுகிறது...

 

ஏதோ ஒரு புத்தகத்தை

முழுமையாக வாசித்து

முடிப்பதற்கும்..

எழுத நினைத்த செய்தியை

எழுதி முடிப்பதற்கும் இந்த

செல்போனை மறந்து போதல்தான்

வாய்ப்பாக இருக்கிறது...

 

வீட்டு வேலைகளைச் செய்வதற்கும்

வாங்காமல் விட்டுவிட்ட

மாத்திரைகளை நினைவில்கொண்டு

வாங்குவதற்கும் கூட

இந்த செல்போனை மறப்பதுதான்

வசதியாக இருக்கிறது...

 

பழகிய கால நினைவுகளை

மனதில் நிறுத்துவதற்கும்

பழகிய நண்பர்களோடு

நட்பை முறிக்கும் அளவிற்கு

‘வாட்சப்’ பில்

அரசியல் விவாதம்

செய்யாமல் இருப்பதற்கும் கூட..

இந்த செல்போனை

மறப்பதுதான் வசதியாக...

வாய்ப்பாக இருக்கிறது...

 

                       வா.நேரு, 14.10.2025

 

 

Monday, 13 October 2025

உங்கள் வரிசை எண் 311…

                                                      

உங்கள் வரிசை எண் 311…

                                                 முனைவர் வா.நேரு

 

மிக அரிதான புத்தகங்களை நாம் கண்டெடுக்கும் இடமாக, வேறு எங்கும் கிடைக்காத புத்தகங்கள் நமக்குக் கிடைக்கும் இடங்களாக நூலகங்கள்தாம் இருக்கின்றன.

அண்மையில் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தன்னுடைய நூலக அனுபவத்தை ஒரு கட்டுரையில் விவரித்திருந்தார்.

அந்தக் கட்டுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் நகைச்சுவையாகத் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கிறார். “தவறான நேரத்தில் தவறான இடத்தில் எடுத்த தவறான முடிவு. இந்த முடிவு எடுத்த அன்றே ஒரு புதுப் புத்தகம் வெளியானது. அதைப் பற்றிச் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் வார இதழ்களும் வானளவாகப் புகழ்ந்தன. கலிபோர்னியாவிலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் கூட அனுப்பினார்.

நான் என்னுடைய நூலகத்துக்குச் சென்று இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்தேன். இங்கே எல்லாம் நூலகங்களில் போய் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை உருவி எடுத்துக் கொண்டு உடனே புறப்பட முடியாது அநேகமாக நீங்கள் கேட்கும் புத்தகம் வெளியிலே போயிருக்கும். உங்கள் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து உங்களுக்கு முன்பு அந்தப் புத்தகம் கேட்டவர்கள் எல்லாம் வாசித்து முடித்த பிறகு அந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.”

இப்படிப்பட்ட வசதி நம் ஊர் நூலகங்களில் இல்லை. நூலகத்தில் சென்று இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வார்கள். கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற நூலகத்தில் இணையத்தின் வழியாக இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், ஒருவர் எடுத்துச்சென்று இருக்கிறார் என்ற நிலையில், அடுத்து ஒருவர் இந்தப் புத்தகத்திற்காகக் காத்திருக்கிறார் என்பதை நாம் பதிவு செய்யும் வசதி இல்லை. கனடாவில் இருக்கும்  நூலகத்தில் அந்த வசதி இருப்பதாக அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்.

இதற்கு அடுத்து அ.முத்துலிங்கம் அவர்கள் பதிவு செய்த செய்தி மிக ஆச்சரியமாக இருக்கிறது.”
நான் புத்தகத்தைப்  பதியச் சென்றபோது நூலக அலுவலர் கம்ப்யூட்டரில் விவரத்தைப் பதிந்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார் ‘மிக அதிசயமாய் இருக்கிறது நீங்கள் இந்தப் புத்தகத்துக்குப் பதிந்த 311ஆவது நபர். இந்த 310
பேரும் படித்த பிறகு இது உங்கள் கைக்கு வந்து சேரும்’ என்றார். நான் வாயை மூடும்முன் அவர் அடுத்து அடுத்த ஆளை கவனிக்கப் போய்விட்டார். இப்பொழுது எனக்கு ஆவல் அதிகமானது. இவ்வளவு பேர் ஆசைப்பட்டு வரிசையில் நிற்பதென்றால் அந்தப் புத்தகத்துக்கென்று ஏதோ ஒரு சிறப்பு இருக்கத்தானே செய்யும்!

310 பேர் வாசிக்கும் வரைக்கும் காத்திருப்பது நடக்கிற காரியமா? எப்படியும் இந்தப் புத்தகத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆகப்பெரிய நூலகரைச் சந்தித்து ஒரு புத்தகத்திற்காக 5 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டிய என்னுடைய நிலையைப் பற்றிக் கூறினேன். அவர் பெயர் பேட்ரிசியா (Patricia). புத்தகங்களை நேசித்த அளவுக்கு அவர் மனிதர்களையும் நேசித்தார்.

வாசிப்புச் சுற்றுக்கு அல்லாமல் ஆராய்ச்சிக்கு மட்டும் ஒதுக்கி வைத்த ஒரு புத்தகத்தை ஒரு வாரத்திற்கு மட்டும் எனக்கு இரவல் தர வேண்டும் என்ற தனிப்பட்ட முடிவு ஒன்றை எடுத்தார். அப்படிப்பட்டது தான் அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தில் இருந்து என் கண்களை ஒரு வாரமாக எடுக்க முடியவில்லை.” என்று எழுதியிருக்கிறார்.

இந்தக் காலத்திலும் ஒரு நாட்டில் 310 பேர் ஒரு நூலினைப் படிப்பதற்காக நூலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்திதான். தன் வரலாற்று நூல்களைப் படிக்கிறபோது புத்தகங்களைப் படிப்பதற்காக எழுத்தாளர்களும், தலைவர்களும் எவ்வளவு தூரம் முயற்சி எடுத்திருக்கிறார்கள், துன்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதை வாசிக்கின்றோம்.

குறிப்பாக ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி, அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்றோர் நூல்களைப் பெறுவதற்கும் வாசிப்பதற்கும் எவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பதை வாசிப்பின் மூலமாக நாம் அறிவோம். இந்த 21ஆம் நூற்றாண்டில் நூலகத்தில் 310 பேர் பதிவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதற்காகக் காத்திருந்தார்கள் என்பது பெரிய செய்திதான்.

310 பேர் காத்திருந்து படிக்கவிரும்பிய புத்தகத்தை எழுதியவர் பெயர் பில் ப்ரைசன் (‘Bill Bryson’). அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘கிட்டத்தட்ட சகல விசயங்களையும் சொல்லும் சிறிய வரலாறு (A short History of Nearly Everything). அந்தப் புத்தகத்தைப் பற்றியும் அந்த நூல் ஆசிரியர் பில் ப்ரைசன் பற்றியும் மிகச் சிறப்பாக அ.முத்துலிங்கம் அவர்கள் அந்தக் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.விரும்புகிறவர்கள் படிக்கலாம் (அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – தொகுதி 1 பக்கம் 183).

இன்றைக்கும் மிகக் குறைந்த மாத வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டக் கூடியவர்கள் அதிகமான சதவிகிதத்தில், மக்கள் தொகையில் இருக்கின்றனர். அவர்கள் புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும் அதனை வாங்கிப் படிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வசதியில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நூலகம்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.

அதுவும் விலை அதிகமாக இருக்கக்கூடிய, எளிதில் கிடைக்காத  புத்தகங்கள் நூலகங்களில் பார்வைப் புத்தகங்கள் (Reference Books) பகுதியில் வைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எடுத்து நாம் பல மணி நேரம் அமர்ந்து வாசிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்தப் புத்தகங்களை இரவலாகப் பெற்று நமது வீட்டுக்குக் கொண்டு வர இயலாது. இந்தப் பார்வைப் பகுதி புத்தகங்கள் பகுதி என்பது மிக முக்கியமானது. மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கும் மதுரை மய்ய நூலகத்தில் மேல்தளம் முழுவதும் பார்வைப் புத்தகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மிக அரிதான, பழைய பதிப்புப் புத்தகங்களை எல்லாம் இங்கு எடுத்து நாம் வாசிக்க இயலும். அதனைப்போலவே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கப்பட்டு ஒன்று இரவல் கொடுக்கும் பகுதியிலும் இன்னொரு புத்தகம் பார்வைப் புத்தகங்கள் பகுதியிலும் வைக்கப்படுகின்றன.இரவல் பகுதியில் இருக்கும் புத்தகத்தை எவரேனும் எடுத்துச்சென்று இருந்தாலும், பார்வைப் பகுதியில் இருக்கும் புத்தகத்தை நாம் எடுத்து வாசிக்க இயலும், குறிப்புகளை எடுக்க இயலும். எந்தப் புத்தகமும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகம் வாசகருக்கு உடனடியாக வாசிக்க இல்லை, குறிப்பு எடுக்க இல்லை என்பதைத் தவிர்க்க பார்வைப் பகுதியிலுள்ள புத்தகங்கள் பயன்படுகின்றன.


கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் மாநில மத்திய  நூலகத்திற்குச் சென்ற போது அங்கு தமிழ் நூல் பிரிவு என்னும் தனிப்பிரிவு வைத்திருந்தார்கள். அங்கு பெரும்பாலும் தமிழ் நூல்கள் பார்வை நூல்களாகவே இருந்தன. சில நூல்கள் இரவல் தரும் நூல்களாகவும் இருந்தன. அங்கு இருந்த நூலகரிடம், நான் கொண்டு சென்ற, எனது மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய ‘ஆழினி’ நாவல் மற்றும் நான் எழுதிய சில புத்தகங்களையும் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்கள். சில நாள்கள் கழித்து, திருவனந்தபுரம் மாநில மத்திய நூலகத்திலிருந்து எனது வீட்டுக்கு ‘நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்’ என்ற கடிதத்தை அனுப்பி இருந்தார்கள். 


வெளி மாநிலங்களில் இருக்கும் நூலகங்களுக்கு நமது இயக்க நூல்களை, நமது தலைவர்கள் எழுதிய நூல்களை நாம் அனுப்பலாம்.அவர்கள் பெற்றுக் கொண்டு, அதை அந்த நூலகங்களில் வைக்கிறார்கள். அது அங்கு இருக்கும் தமிழர்களுக்கு, அல்லது தமிழ் தெரிந்த வெளி மாநிலத்தவர்களுக்குப் பயன்படும். நமது திராவிட இயக்க நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கக்கூடிய நூல்கள் நம் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் நூலகங்களில் இடம் பெறுவதற்கு நமது திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இருக்கும் அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாகும். |

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 1-15

Sunday, 12 October 2025

'சுமார்ட் போன்' சுரண்டிச் சூதாடிகள்...

 எளிதாகப் பணம்

Thursday, 9 October 2025

திரையுலகில் திராவிட இயக்கம்

 


வணக்கம். சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு நூல் அறிமுகம் இணையம் வழியாக. தோழர் ,இயக்குநர் பாலு மணிவண்ணன் நிறைய புதிய தகவல்களை இந்த நூலின் வழியாகக் கொடுத்திருக்கிறார். வாருங்கள்... 

Tuesday, 7 October 2025

ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு சிறுகதையும்...வா.நேரு

 

                          

 

மௌனத்தின் சாவிகள்’  என்னும் புத்தகம்  நண்பர் செ. வினோத் பரமானந்தன் அவர்கள்  எழுதிய கவிதைத் தொகுப்பு. வாருங்கள் படிப்போம்’, வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக அறிமுகமான  நண்பர்.இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். ஓரிரு முறை நேரில் சந்தித்தோம், பேசினோம். அவர் ஓர் ராணுவ வீரர் ராணுவத்தில் இருந்து கொண்டு அங்கிருந்தே சில நேரங்களில் இணையத்தின் வழியாக இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவர். நண்பர் வினோத் பரமானந்தன் ராணுவ வீரர், கவிஞர் என்று இரு துடுப்புகளால் ஓர் அழகி ஓடத்தைச் செலுத்தித் தனது வாழ்க்கை பயணத்தை அழகாக்குகிறார். சவாலான ராணுவ சூழலில் சிந்தனை மற்றும் செயல்களை இலகுவாக்கும் கவிதைகளைப் படைத்து பலருக்கும் ஒரு  வழிகாட்டியாக முன்னுதாரமாகத் திகழ்கிறார்என அன்புத்தம்பி எழுத்தாளர் ஆலடி எழில்வாணன் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்.இந்த நூலுக்குக் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி ,எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் அணிந்துரை அளித்துள்ளனர்.’மெளனம் திறக்கும் தேடல் ‘ என்னும் தலைப்பில்  கவிஞர் செ.வினோத் பரமானந்தன் என்னுரையை எழுதியுள்ளார்.அழகியலோடு மனதின் எண்ணங்களைக் கவிதைகளாக்கி நண்பர் வினோத் பரமானந்தன் இந்தக் கவிதைத் தொகுப்பைக் கொடுத்துள்ளார்.அதில் உள்ள ஒரு கவிதையின் ஒரு பகுதி



 

நினைவில் காடுள்ள பறவை

 

காடும்..

கூடும் ..

பெருந்தேடலானதால்

 

பறத்தல் மறந்து

போயிருந்தது

நினைவில்

காடுள்ள பறவைக்கு…

 

எப்போதாவது

விரிக்கும் சிறகுகளிலும்

சிலுவையில்

அறைந்ததைப்

போல வலிகள்….

 

நாடில்லா காட்டில்

நன்றாய்த்தானிருந்தது

பறவை…

 

காடில்லா நாட்டில்

வாழ்வதே

கடினம்…



 

இப்படி ஒரு சில கவிதைகளில் மட்டும் துன்பச்சுவை இருக்கிறது.மற்றவை எல்லாம் இயல்பான கவிதைகள்.

 

நண்பரின் கவிதைத் தொகுப்பைப் படித்துமுடித்தவுடன் ஒரு சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன்.அது மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இரவலாக எடுத்தது.’கண்காணிப்புக் கோபுரம் ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பு.எனக்குப் பிடித்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான பாவண்ணன் எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பு நூல் அது.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு தளத்தில்,வெவ்வேறு களத்தில்.நல்ல வாசிப்பு அனுபவங்களைக் கொடுக்கும் கதைகள்.அதில் சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘கண்காணிப்புக் கோபுரம்,தொகுப்பின் முதல் சிறுகதை.ஒரு இராணுவ வீர்ர் பற்றிய சிறுகதை.



கண்காணிப்புக் கோபுரத்தைக் கண்காணிக்கும் இராணுவ வீரன் அஜய்சிங்காவைப் பற்றிய கதை.’சிலிகுரி ராணுவ முகாமில் வேலை செய்து கொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத் துடைக்கச்சொன்ன வேலையைச் செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக,கீழ்ப்படிய மறுத்தவன் எனக் குற்றம் சுமத்தி,இந்தக் குன்றிலிருந்த முகாமுக்கு மறு நாளே மாற்றி விட்டதாகச் சொன்னான்.வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.இங்கே இருக்கும் அதிகாரிகள் மட்டுமல்ல,சக ஊழியர்களும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டான்.கசப்பான புன்னகை ஒரு கணம் அவன் உதடுகளில் நெளிந்து மறைந்தது.ஊருக்குச் செல்ல விடுப்பு தர மறுப்பதாகவும் மாற்றல் கோரும் விண்ணப்பங்களை வாங்கிக் கொள்ளாமலேயே ஒவ்வொரு முறையும் நிராகரிப்பதாகவும் வருத்தத்துடன் சொன்னான்’ என்று அஜய்சிங்காவின் துன்பத்தை விவரித்துக்கொண்டே செல்கிறார் இந்தக் கதையில் கதாசிரியர்.

 இராணுவ வீரனின் சுயமரியாதை உணர்வு எப்படி எல்லாம் கொல்லப்படுகிறது..எப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக மேல் அதிகாரிகளால்,மேல் அதிகாரியின் மனைவியால் கொடுமைப்படுத்தப்படுகிறான் என்பதைக் கதையின் வழியாக வாசிக்கும்போது உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.மனம் வலித்தது. ‘கட்டளைக்குக் கீழ்ப்படி ‘ என்னும் அந்தச் சொல்லுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கட்டளை இடுகிறவன் மோசமான ஆளாக இருந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியை எழுப்புகிறது.



 

உலகம் முழுவதும் ஒரே நாடாகிவிட்டால்,ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவம் தேவையில்லை அல்லவா? என்னும் ஆசை எழுகிறது.அது ஓர் உடோப்பியன் கருத்து என்று அறிவு இடித்துரைக்கிறது.ஆனாலும் இராணவத்திலிருந்து நிறையப் படைப்பாளிகள் வந்தால் இவையெல்லாம் மாறும் என்ற எண்ணம் பிறக்கிறது.

                                             வா.நேரு,

                                              07.10.2025