அண்மையில் படித்த புத்தகம் : அவயம் (புதினம்)
ஆசிரியர் : ஏக்நாத்
வெளியீடு டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,சென்னை-78..
முதல் பதிப்பு : பிப்ரவரி 2022,மொத்த பக்கங்கள் 288
,விலை ரூ 320
கலைஞர் நூற்றாண்டு
நூலகம் எண்: 894.8113 EGN;1
ஏக்நாத் அவர்களின்
கெடை காடு நாவல் ஏற்கனவே படித்துப் பிடித்து இருந்ததால், எனது(இந்த) வலைத்தளத்தில்
எழுதி இருந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அவரது நாவலைப் பார்த்தபொழுது,ஏக்நாத்
அவர்களின் பெயரைப் பார்த்து எடுத்து வந்த நாவல்.
இந்த நாவல் முடிகிறபோது
“ கணீர்க் குரலில் பேசத்தொடங்கினார், “பேரன்பு கொண்ட பெரியோர்களே ..நண்பர்களே “ என்று
முடிகிறது.ஒரு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களோடு
தொடங்கும் இந்த நாவல்,முழுக்க முழுக்க ஒரு பேச்சாளரைப் பற்றிய நாவல். பொதுவுடமைக் கட்சியில்
பேச்சாளராக இருக்கும்,பொதுவுடமைக் கருத்துகளில் மிகப்பிடிப்பாக இருக்கும் மாடசாமி என்பரைப்
பற்றிய கதைதான் இந்த நாவல்.ஆனால் மாடசாமி நல்ல பேச்சாளராக மாறுவதற்குக் காரணம் மறைந்த
மேனாள் அமைச்சர் காளிமுத்து போன்றவர்கள். காளிமுத்து அவர்களின் பேச்சைக்கேட்டு தான்
எப்படி நல்ல பேச்சாளராக மாறுவது என்பதை மாடசாமி கற்றுக்கொண்டான் என்று எழுதியிருக்கிறார்.எந்த
இயக்கத்தில் இருந்தாலும் அவர்கள் பேசுவதற்குக் கற்றுக்கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்
என்பதைச் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது.
ஈழப்போரட்டத்தின்போது,பொதுவுடமைக்
கட்சிகளின் நிலைப்பாட்டை எதிர்த்து நிறையத் தோழர்கள் கட்சிக்குள் பேசினர்.அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
அல்லது வெளியேறினார்கள். ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் மாடசாமி,அவரது தனிப்பட்ட
பலவீனத்தின் காரணமாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். பின்பு தி.மு.க,.வில் சேருகிறார்.
பின்பு ம.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சேருகிறார். பொதுக்கூட்டங்களில் தொடர்ச்சியாகப்
பேசும் மாடசாமி, குடிக்கவும் பழகுகிறார். பெண்கள் மீதான அதீத பலவீனமும், குடியும் சேர
எல்லோராலும் மதிக்கப்பட்ட மாடசாமி,தெருவில் குடித்துவிட்டுப் படுத்துக்கிடக்கும் ,உறவுகளால்
கூட வெறுக்கப்படும் மனிதராகிறார். பின்பு எப்படி மீண்டும் திருந்தி ,பேசத்தொடங்குகிறார்
என்பதுதான் கதை.
1980-களில் தொடங்கி
ஓர் இருபது ஆண்டுகள் தமிழ்நாட்டின் அரசியலை, மாடசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியாகப்
பேசும் நாவல் இது. இப்படி முழுக்க அரசியலைப் பேசும் ஒரு நாவலை இதுவரை நான் தமிழில்
படித்ததில்லை. 1991-ல் இராஜூவ் காந்தி கொல்லப்பட்டபோது, தி.மு.க.வினருக்கு எதிராக நடந்த
வன்முறை பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டிருக்கிறது.இராஜீவ் காந்தி கொலையின் மர்மம்
இன்றுவரை விளக்கப்படவில்லை. சந்திராசாமி, போன்றவர்களின் பங்களிப்பு குறித்து நிறையப் பேசப்பட்டாலும்
,அவர்கள் விசாரிக்கப்படவேயில்லை.. மாறாகத் தி.மு.க.வினர் குறிவைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள்.அந்தக்
காலம் குறித்துப் பதிவு இந்த நாவலில் உள்ளது.
கெடை காடு நாவலிலேயே
இவரின் கிராமத்து மொழியும், கிராமத்து மனிதர்களைப் பற்றிய விவரிப்பும் எனக்கு மிகப்பெரிய
ஈர்ப்பாக இருந்தது.அதே நடை இந்த நாவலில் தொடர்ந்திருக்கிறது. கிராமத்து மனிதர்களின்
கிண்டல்,கேலி, ஆற்றாமை, பொறாமை, ஆசைப்படுதல், திருமணம் முடித்த பெண்களிடம் காமம் கொள்ளுதல்,அதனால்
அசிங்கப்படுதல் எனப் பல விவரிப்புகள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த நாவலை ‘வாழ்வின்
சூறாவளியில் தொலைந்துபோன தோழர்களுக்கு ‘ எனக் குறிப்பிட்டிருக்கிறார். நான் 30 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தொழிற்சங்கத்தில் பணியாற்றியவன். சில அற்புதமான தோழர்கள் எப்படி,பெண் சார்ந்த
பலவீனத்தால்,குடியால் தங்கள் நற்பெயரை இழந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.பொதுவாழ்க்கைக்குள்
போய்ப் போராடுவது மட்டுமல்ல பொதுவாழ்க்கை, தன் மனதிற்குள் எழும் பலவீனமான எண்ணங்களையும்
எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதுதான் பொதுவாழ்க்கை.அப்படிப் போராடமல் போனால் எப்படிப்பட்ட
நிலைமை ஏற்படும் என்பதனை அருமையாக இந்த நாவலில் ஏக்நாத் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
‘அவயம்’ என்றால்
சத்தம் என்று பொருள் என்று எழுதியிருக்கிறார். மதுரை மாவட்டம் பகுதியில் இந்தச்சொல்லைப்
பயன்படுத்துவதில்லை. ஆனால் தென்காசி பகுதியில் இயல்பாகப் பேசப்படும் சொல்லாக
இந்த அவயம் என்னும் சொல் இருக்கிறது போலும்,. அரசியல் பற்றி அவயமாகப் பேசும் நாவல்
இந்த நாவல்.. படித்துப்பாருங்கள். எந்த இடத்திலும் தொய்வில்லை. விறுவிறுவெனப் படிக்க
முடிகிறது. பல இடங்களில் வாசிக்கும்போது சிரிக்க முடிகிறது.ஏன் இப்படி மனிதர்கள் மாறுகிறார்கள்
என யோசிக்க முடிகிறது. வேறு யாரும் தொடாத தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளை, ஒரு கிராமம்
சார்ந்து எடுத்து அதனை அற்புதமாக ஒரு நாவலாகக் கொடுத்திருக்கும் ஏக்நாத் அவர்களுக்குப்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வா. நேரு @ மதுரை,
15.06.2026
ஏக்நாத் அவர்களின் கெடை காடு பற்றிய எனது விமர்சனம்
https://vaanehru.blogspot.com/2015/03/blog-post_40.html
.

