Monday 13 June 2022

நாடு பூராம் அலையுது...

                                     நாடு பூராம் அலையுது...



இரவெல்லாம் தூக்கமில்லை..

ஏனிந்தக் கொடுமை எனும்

நினைப்பால் உறக்கமில்லை...


திட்டு திட்டாய்ப் 

பரவிக் கிடந்த இரத்தம்...

ஆடுகள் போல 

அறுத்துப்போடப்பட்ட இரு உயிர்கள்..

ஆணவத்தின் உச்சத்தால்

அநியாயமாக உயிர் இழந்த

புதுமணத் தம்பதிகள்....



நான் சொன்னவனை விட்டுவிட்டு

வேறு ஒருவனை மணம் முடிப்பாயா?

நம்ம ஜாதியை விட்டு விட்டு

வேறு ஜாதியில் திருமணமா

உடன் பிறந்த அண்ணனாலேயே

கொலை செய்யப்பட்ட சரண்யா

அவரோடு கொலை செய்யப்பட்ட மோகன்


அறிவியலில் என்னன்னமோ நடக்குது...

இழவு பிடித்த இந்த நாட்டில்

எல்லாமே ஜாதிமயமா இருக்குது...


வெறிபிடித்த கூட்டம் ஒன்னு

சனாதனம் வேணும்

ஜாதிமுறை வேணும் என்று

சங்கிகளாய் அலையுது...


வீட்டுக்குள்ளதான் பொண்ணு இருக்கணும்

அவ நம்ம சொல்ற பையனைத்தான்

திருமணம் முடிக்கணும்...

இல்லையின்னா அவளைக் கொல்லணும்

என்று ஒரு கொலைவெறிக்கூட்டம்

நாடு பூராம் அலையுது...

அதுக்கு பார்ப்பனியக் கூட்டம்

ஆதரவைக் கொடுக்குது..... 



இன்னும் உரக்க நாம்

பெரியாரின் கொள்கைகளைச்

சொல்ல வேண்டிய அவசியம் இருக்குது...

ஏணிப்படியாய் அமைந்திட்ட

ஜாதிமுறையை அழித்தொழிக்கும்

வேலைக்கு இன்னும் 

தீவிரமாய்த் திரள்வோம் தோழர்களே...


                  வா.நேரு

                  14.06.2022...












No comments: