Sunday 31 December 2023

மதிப்புரை: கனவு போலத்தான் நடந்தது…….

 

மதிப்புரை:

கனவு போலத்தான் நடந்தது…….

வீரிசெட்டி என்ற சிறப்பான ஆசிரியர் பற்றிய பெருமைக்குரிய செயல்பாடுகள், சீர்மிகு சுருக்கமான வாழ்க்கை வரலாறு,தேவதானப்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் .அப்பாவின் வழிகாட்டுதலோடு வாழ்ந்தவர்கள் அந்தக் குடும்பத்தினர்.தாய்மாமனின் உதவியோடு கல்வி கற்று ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

பண்ணைக்காடு,நத்தம்,தேவதானப்பட்டி,தொண்டி,சாப்டூர்,தெற்குத்தெரு போன்ற ஊர்களில் கணித,ஆங்கில ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ,உயர் பதவிகளான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும்(C.E.O), I.M.S.ஆகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.




வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை என இறுதிவரை எளிமையாக உடை அணிந்து,ஆசிரியர் பணிக்கு எடுத்துக்காட்டாக,இலக்கணமாகத் திகழ்ந்தவர்.ஆங்கில புலமை அதிகம் உண்டு.கணிதப் பாடம்,ஆங்கிலப்பாடம் கற்பிப்பதில் இவர் ஒரு இமயம்.மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார்.அவர்களது கல்வி மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி,இரவு படிப்பு என பல யுத்திகளை கையாண்டுள்ளார்.மாணவர்களைக் கண்டிப்பதிலும்,அவர்களை சீர்படுத்துவதிலும்,மாணவர்களைத் தன் வயப்படுத்துவதிலும் ஆற்றல் கொண்டவர்.மாணவர்கள் இவர் மீது வைத்துள்ள மதிப்புக்கு உதாரணம்தான் இவரிடம் படித்த மாணவர் முனைவர்.வா.நேரு.அவர்கள் எழுதிய இந்தப்புத்தகம்.

கல்விக்கான ஆசிரியர் என்பதால் மட்டும் இவருக்கு இந்தச்சிறப்பு கிடையாது.இவர் ஒரு சமூக ஆர்வலர்,நேர்மையானவர்.தன் இலக்கு நோக்கி தடைகளை உடைத்து நடை போட்டவர்.பல பள்ளிக்கூடங்களுக்கு சிறப்பான கட்டமைப்பை செய்து கொடுத்துள்ளார்.அரசிடம் அனுமதி பெறுவதிலும்,கட்டமைப்புக்கான  நிதி திரட்டுவதிலும்,பொதுமக்கள் முக்கிய பெரிய மனிதர்களை அணுகுவதிலும்,நிதியைக் கையாளுவதிலும் சிறப்பான பங்களிப்பைச்செய்துள்ளார்.உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனிலும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனிலும் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்று தருவதிலும் கவனமுடன் இருந்துள்ளார்.இயற்கையிலேயே ஒரு தொழிற்சங்கவாதிக்கான குணத்தை உடையவராகத் திகழ்ந்துள்ளார்.

எதார்த்தமான நிலைபாட்டைக் கையாண்டுள்ளார்.ஆங்கில புலமைக்கு அதிக முக்கியத்துவம்,மாணவர்களிடம் அதிகக் கண்டிப்பு,உயர் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை,செய்யும் ஆசிரியர் பணியில் அதிக ஈடுபாடு,உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது என இவர் வாழ்ந்துள்ளார்.அதற்கான பல நிகழ்வுகள் புத்தகம் எங்கும் நிறைந்துள்ளது.

வீரிசெட்டி என்ற ஆசிரியருக்கு புத்தக ஆசிரியர் முனைவர் வா.நேரு மாணவராக அமைந்ததுதான் பெருமைக்குரியது.நேரு என்ற இந்தப் புத்தக ஆசிரியர் இல்லாவிட்டால் வீரிசெட்டி என்ற ஆசிரியரும் பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டிருப்பார்.வீரிசெட்டி அவர்களுக்கு நேரு அளித்த இந்த எழுத்துகள்தான் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது.எளிய நடை,சிறப்பான வடிவமைப்பு.

பா.சண்முகவேலு,

தலைவர்,மதுரை வாசகர் வட்டம்,சூர்யா நகர் பகுதி,கே.புதூர்,மதுரை-7.

31.12.2023

மனமார்ந்த ஒரு மதிப்புரையை எனது ‘கனவு போலத்தான் நடந்தது’  புத்தகத்திற்கு அளித்த திரு.பா.சண்முகவேலு அய்யா அவர்களுக்கு எனது நன்றியும் மகிழ்ச்சியும்.

வா.நேரு,31.12.2023

 

2 comments:

முனைவர். வா.நேரு said...

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் சுந்த்ரம் அவர்கள் முக நூலில்

தம்பி என் சிந்தனை சிப்பிக்குள் அலை அடித்தது உன் படைப்பு. நல்ல படைப்பு என்பது எதார்த்தத்தை எதிரொலிக்க வேண்டும். நாம் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சி என்பது படைப்பாளியின் படைக்கலன் ஆகும். எழுதறிவித்தவன் இறைவன் ஆவான். உன் கொள்கைக்கு அப்பாற்ப்பட்டது இது. கல்வியும் கற்பித்த ஆசிரியரும் என்ற உணர்வு உன் படைப்பின் உச்சம். எழுத்து உலகின் இறுமாப்பு. ஒரு சிற்பம் சிற்பியை செதுக்கியது எழுத்துலகின் புதிய பரிமாணம். உறங்கி கிடக்கும் என் உணர்வுகளை உசிப்பி விட்ட உன் தமிழ் நடை , தளிர் நடை, தனி நடை. வாழ்த்துக்கள் தம்பி

முனைவர். வா.நேரு said...

"ஒரு சிற்பம் சிற்பியை செதுக்கியது எழுத்துலகின் புதிய பரிமாணம்.உறங்கி கிடக்கும் என் உணர்வுகளை உசிப்பி விட்ட உன் தமிழ் நடை , தளிர் நடை, தனி நடை. வாழ்த்துக்கள் தம்பி"..மனதார வாழ்த்தி இருக்கிறாய் அண்ணே, நன்றியும் மகிழ்ச்சியும்.