Saturday, 28 July 2018

கடந்துபோன காலங்கள்(17)

   கடந்துபோன காலங்கள்(17).....

எனது படங்கள்
எத்தனை எத்தனை
ஒளிப்படங்களாய்
என் மகனின்
கணினி சேமிப்பில்.....

எப்படி எப்படியோ
எடுத்து வைத்திருக்கின்றான்
எனது படங்களை....
உட்கார்ந்த வண்ணம்....
ஓடிய வண்ணம்...
கைகூப்பிய வண்ணம்....
கையைக் கட்டிய வண்ணம்
எனது இணையரோடு
ஒருவரோடு ஒருவர்
சாய்ந்த வண்ணம்
எத்தனையோ படங்களை
எடுத்து வைத்திருக்கிறான்

சென்ற இடங்களின்
நினைவுகள் எல்லாம்
சேமிக்கப்பட்ட
வண்ணப்படங்களாய்
அடைத்துக்கிடக்கின்றன
அவனது கணினி
நினைவுகளில்.....

புத்தகத்தில் போட வேண்டுமா?
முக நூலில் போடவேண்டுமா?
கேட்டுவிட்டால் போதும்
படங்களாய் கொண்டுவந்து
கொட்டுகிறான்
கணினித்திரையில்......
எது வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள் .
எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்கிறான்....
எல்லார் கைகளிலும் செல்பேசி..
செல்பேசிக்குள் நிழற்படம்
எடுக்கும் கருவியென
அனைத்தையும் சாத்தியமாக்கிய அறிவியல்....

எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித்திரையில்
பார்க்க ஆசை !
எனது ஏழு வயதில் இறந்துபோன
அப்பாவின் முகம்
நிழலாகக் கூட நினைவில் இல்லை....
அப்பாவின் புகைப்படம்
இறந்த பின்பு யாரோ ஒருவரால்
வரையப்பட்ட படம் ....
அதில் உயிரோட்டம் இல்லை...
அதனால் உணர்வோட்டமும் இல்லை....

அப்பாவின் மாணவர்கள்....
அப்பாவின் நண்பர்கள்....
அப்பாவின் கைப்பந்து
விளையாட்டின் தோழர்கள்.....
எல்லோரிடமும் கேட்டு
கேட்டுப்பார்க்கின்றேன்.....

சாப்டூர் வாலகுரு ஆசிரியர்
ஆண்டவர் வாத்தியார் என
அன்புடன் அழைக்கப்பட்டவர்
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குமுன்
ஆயிரத்து தொழாயிரத்து
எழுபத்து ஒன்றில் திடீரென
இருதய நோயால் மறைந்து போனவர்....
எங்கேணும் அவரது புகைப்படம்
உங்கள் வீட்டில் இருந்தால்
தனிப்படமோ....இல்லை
குழுப்படமோ இருந்தால்
கொடுங்கள் எனக் கேட்டுக்
கொண்டே இருக்கின்றேன்,,,,,,
எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித் திரையில்
பார்க்க ஆசை !....

                                               வா.நேரு......29.07.2018

Thursday, 26 July 2018

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' ..

அன்புடையீர்,
            வணக்கம். எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' -சென்னை எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வெளிவந்துள்ளது. சிறிய அளவிலான ஒரு வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும். எம்ரால்டு பதிப்பகம், மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கலாம். அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்துக்கொடுத்த, தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆயிரம் வேலைகளுக்கும் நடுவிலும் அருமையான கற்பனைத் திறனோடும், கைவண்ணத்தோடும் அமைத்துக்கொடுத்த அவருக்கு நன்றி,நன்றி.. கதைகளை ஒன்றுபடுத்தி அச்சிட்டுக்கொடுத்த அன்புத்தோழர், எழுத்தாளர் உடுமலை வடிவேலு அவர்களுக்கும் நன்றி.
தொகுப்பைப் படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை, விமர்சனங்களைத்  தெரிவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அடுத்தடுத்து எழுதுவதற்கு உறுதுணையாகவும்  அமையும்




Wednesday, 18 July 2018

விழும் அடி எதுவென...

விழும் அடி எதுவென...

கல் ஒன்றுதான்...
உளி ஒன்றுதான்....
உடைப்பதற்காக
விழும் உளி அடியை
படைப்பதற்காக
விழும் உளி அடியை
உள்வாங்க இயலாது
கல்லினால்.......

வளர்ந்த குழந்தை அறியும்
தன்னைச்செதுக்க
விழும் அடி எது....
தன்னை அடிப்பவரின்
மனச்சிதைவால்
விழும் அடி எதுவென.....
   
                   வா.நேரு...18.07.2018

Tuesday, 17 July 2018

ஓடிப்போன நாள்.....


                        ஓடிப்போன நாள்.....


குறிக்கோள் ஒன்று
விருப்பமாய் மனதிற்குள்
இருந்திடின் மனம்
விடியலை விரும்பும்
இருக்கும் பொழுதெல்லாம்
விரைந்து ஓடும்..
விடிந்ததும்...
நாள் முடிந்ததும்...
இவ்வளவு விரைவாகவா
அடடே....
வியப்பாய் தோன்றும்...

                                    வா.நேரு,
                                    17.07.2018 இரவு 10மணி


           

Sunday, 15 July 2018

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!.....

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!


பெரியார் என்ற ஜீவ நதியின்


நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல்


தமிழர் தலைவர் புகழாரம்



காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில்  அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்! காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி! பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப் பாசனத்தால் விளைந்த விளைச்சல் என இன்று (15.7.2018) அவரது 116ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் புகழ்ந்துரைத்துள்ளார். அவர் அறிக்கை வருமாறு:

"பச்சைத்தமிழர்" என்று அறிவு ஆசான் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, அவர் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த காமராசரை - அவர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றால்தான் இத்தகைய திருப்பத்தை உருவாக்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன், டாக்டர் ப. வரதராஜலு நாயுடு அவர்களின் இல்லத்தில் கூடி, கலந்துபேசி, ஒப்புக் கொள்ளத் தயங்கிய காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்!

இது, 1953-1954இல் நடைபெற்ற நிகழ்வு. தமிழ்நாட்டு அரசியலின் மிகப் பெரிய சரித்திரத் திருப்பம்!

அதன்பிறகு காமராசர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோது அடுக்கடுக்காக  இடையூறுகள் தோன்றின.   இன எதிரிகள் ஆச்சாரியார் தொடங்கி, அவரிடம் பதவி எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் எதிர்ப்பு உட்பட அத்தனையையும் தூளாக்கிய வாளும் கேடயமுமாக திராவிடர் இயக்கம் - குறிப்பாக திராவிடர் கழகம் இயங்கியது.

காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்

காமராசர் ஆட்சியின் சாதனைகளை நாடெலாம், வீடெலாம் பரப்பி, பலமான பார்ப்பன பத்திரிக்கை உலகின் எதிர்ப்பையும் முறியடித்தது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற ஆசான் தலைவர் தந்தை பெரியாரும்.  மட்டுமா?

டில்லியில், காமராசர் அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க,  கே. பிளான் (காமராசர் திட்டம்) என்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து டில்லிக்குப் புறப்பட்டபோது, அது சரியான முடிவல்ல; அது தற்கொலைக் கொப்பானது என்று ஒரு தந்தை நிலையில் நின்று அறிவுரை வழங்கியவர் தந்தை பெரியார். (பிறகு அய்யா சொன்னதை நான் ஏற்காதது தவறுதான்  என்று மனம் வருந்தி அருகில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதைச் சிலரே அறிவர்).

காமராசர் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று தந்தை பெரியார் கூறியதையெல்லாம் நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவர்.

அதற்கு முன்னே அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகம், காமராசருக்கு காந்தியாரால் - பார்ப்பன நயவஞ்சகத்தால் ஏற்பட்ட அவமானத்தைப்  போக்கிடவும், அவரிடம் ஆச்சாரியார் தலைமையில் ஒரு கூட்டம் தேசியம் பேசிக் கொண்டே மோதி, அதில் காந்தியார் நடுநிலை தவறி, காமராசர் 'அதிகார பூர்வ தலைவர்' என்ற நிலையையும் மறந்து, "ஒரு விஷமக் கும்பல்" (க்ளிக் - நீறீவீஹீuமீ) என்று கூறி மனம் புண்பட வைத்தது தேசியத்திற்குள் வெடித்த ஆரிய - திராவிடப் போரின் வெளிப்பாடு என்பதை அன்று (6.1.1946) "திராவிட நாடு" இதழில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா தனது தேன் தமிழில் "கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது" என்ற தலைப்பிட்டு ஒரு விரிவான அரசியல் - திராவிட - ஆரிய  திரைமறைவுப் போரினை மிக அருமையாக விளக்கினார்.

காமராசர் - ஆச்சாரியார் அணிகள் தங்களது நிலைப்பாட்டினை விளக்கிட, நிலை நிறுத்த சேலம் மாவட்ட திருச்செங்கோட்டிலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் கூடிய பிறகு, ஆகஸ்ட் போராட்டத்தில் (கல்கத்தா)  எதிராகப் பேசிய ஆச்சாரியார்மீது கட்டுப்பாட்டை ஒட்டிய விமர்சனம் செய்த காமராசரை பலமிழக்கச் செய்ததை விளக்கினார்.

ஆரிய - திராவிட இனப் போராட்டம்

அது மட்டுமல்ல, தொடர்ச்சியாக 17.2.1946இல் '"காமராசர் சிந்தும்  கண்ணீர்" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான  - அரசியல் போராட்டங்கள் ஆரிய - திராவிட இனப் போராட்டம் - காமராசர் - ஆச்சாரியார் அரசியல் மோதல் என்பதை விளக்கியதோடு, காமராஜரின் கண்ணீரைத் துடைக்க  காத்திருக்கிறது கடமையாற்றும் கருஞ்சட்டைப்படை என்று எழுதினார்!

தேசியத்தில் பூத்த மலர் காமராசர்; ஆனால் திராவிடத்தால் கனிந்த கனி என்பதைப் புல்லர்களுக்குக்கூட புரிய வைக்கும் பழைய வரலாற்றிலிருந்து, படித்துக் கொள்ள வேண்டிய திராவிடப் பாசறை தீந்தமிழில் தீட்டிய அரசியல் அழகோவியம்!

அதில் ஒரு பகுதி இதோ - 72 ஆண்டுகளுக்கு முந்தையதானாலும் என்றும் வரலாற்றில் நிலைத்த முன்னோட்டம்

" ஆனால், காமராஜர், காங்கிரசைவிட்டு விலகுவார் என்று நாம் நம்புகிறோமா? இல்லை! நம்பவுமில்லை! அவருக்கு அந்த யோசனையைக் கூறவுமில்லை, திராவிடர் கழகம், நெருக்கடியான நேரத்தில் கண்ணீர் வடித்துக்கொண்டு, வேறு வழி இல்லையே என்று கூறும், "பக்தர்களை" அழைக்கவில்லை,  தேவையில்லாததால்! காமராஜர்கள், அங்கேயே இருக்கட்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பட்டும், அவர்கள் படும் அல்லலை, அவர்கள் அங்கு ஆரியத்தால் அடக்கப்படுவதை, அவர்களின் ஆண்மை மங்குவதை, திராவிடர் கழகம் கவனித்துவருகிறது. ஆரியத்துடன் அக்கழகம் நடத்தும் போரிலே அவர்கள் சார்பாகவும், நிச்சயமாகத் திராவிடர் கழகம் பேசும்! காமராஜரின் கண்ணீரை திராவிடர் கழகம், கருப்புச் சட்டைப்படை, துடைக்கும். அவர் அடைந்த கதியால், தமிழனுக்கு ஏற்பட்ட தாழ்நிலையை, நிச்சயமாகத் திராவிடர் கழகம் போக்கும். வீழ்ச்சியுற்ற இனத்திலே, இதுபோல விழியில் நீருடன் வீரர்கள் இருப்பதுண்டு. ஆனால் எழுச்சி பெற்றதும், அந்த இனத்திலே தோன்றும் வீரர்கள் முன்னவர் சிந்திய கண்ணீரைக் கவனத்திலிருத்தி மாற்றான் மண்டியிடும் அளவு வெற்றிபெற்று அந்த வெற்றிநாளன்று, வீழ்ந்துகிடக்கும் மாற்றானைநோக்கி, 'மமதை கொண்டவனே! உன்மயக்க மொழியிலே சிக்கிய மறத்தமிழனைச் சீரழித்தாயே அன்று! உன்னால் அடைந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விழியில் நீர்பெருக்கினானே! அந்தக் கண்ணீர், இந்தக்கூர்வாளாயிற்று" என்று கூறுவர். காமராஜரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள கருப்புச்சட்டைப் படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியே, அந்தக் கருப்புச் சட்டைப்படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்."

அதற்குப்பின் அரை நூற்றாண்டு கால அரசியல் திரைக்குப்பின் நடைபெற்ற "தேவாசுரப் போர்" - ஆரிய - திராவிடப் போரில் தந்தை பெரியாரும்,  திராவிடர் கழகமும் துணை நின்ற நிகழ்வுகள் நீண்ட வரலாறு.

இதோ இரண்டொரு துளிகள்:

(1) "கறுப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள்" என்ற ஆச்சாரியாரின் நிதானம் இழந்த பேச்சுக்கு நாடு தழுவிய கழகக் கண்டன கூட்டங்கள் நடத்தியது திராவிடர் கழகம்.

2) டில்லியில் காமராசர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டில் பட்டப் பகலில்  தீ வைத்து, கொலை செய்ய முயற்சித்த ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தின் பசுவதை தடுப்பு போர்வையில் - சமதர்மத்தைக் காத்த காமராசரை ஒழித்துக் கட்ட முயன்றபோது அதை அம்பலப்படுத்தியது திராவிடர் இயக்க வீரர்களே!

'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'  நூலை வெளியிட்டு, மதவெறியர்களின் முகமூடியைக் கிழித்திட்டது திராவிடர் கழகமே!

இப்போது புரிகிறதா காமராசர் தேசியத்தில் பூத்து, திராவிடத்தால் காய்த்து, கனிந்த கனி என்பது!

அவரைப் பயன்படுத்தும் காவிகளிடம் எச்சரிக்கை தேவை! மானமிகு கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய சட்டம்தான் இன்று பள்ளிகள் காமராசரின் பிறந்த நாளை கல்வி விழாவாகக் கொண்டாடுவதற்கு அடிப்படை.

இப்போது புரிகிறதா காமராசர் திராவிடத்தில் காய்த்த கனி, பெரியார் என்ற ஜீவ நதியின், நீர்ப் பாசனத்தால் கிடைத்த விளைச்சல் என்பது!

வாழ்க காமராசர்!

வருக  அவர் விரும்பிய

சமதர்ம, மதச்சார்பற்ற நாடு!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.7.2018

நன்றி : விடுதலை 15.7.2018

Wednesday, 27 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

பாராட்டப்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்:
                                          ஆந்திர மாநிலம் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம (நாயுடு) அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்தப்படவேண்டியவர்.மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசுகின்ற நமது நாட்டில் ,அந்த முடை நாற்றத்தை தனது ஓட்டு வங்கியாக மாற்றுவது எப்படி எனும் கலை பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அகற்ற நினைப்பது இந்த மூட நம்பிக்கை முடை நாற்றத்தை அகற்றுவதைத்தான். அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகளான கணினி,செல்பேசி பொன்றவற்றைப் பயன்படுத்தி அரண்டு போய் இருக்கும் மக்களை மேலும் மேலும் அரள வைக்கும் வகையில் பேய்,பிசாசு மூட நம்பிக்கை கதைகள் திட்டமிட்டுப்பரப்படுகின்றன. ஒலி,ஒளிபரப்பபடுகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் செயல்பட்ட நிம்மல ராம(நாயுடு) அவர்களைப் பாராட்டுவோம்.

பேய்', பிசாசுகள்' பயத்தைப் போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ

அமராவதி, ஜூன் 26 ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பால கோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன் தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

அந்தசுடுகாடுகடந்தபல ஆண்டுகளாக யாரும் பயன் படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புனரமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

திட்டம் இழுபறியாககிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., ராமநாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப் பட்டுச்சென்றார்.அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

இதனால்,மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு' பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துவசதிகளும்கொண்ட நவீன சுடுகாடாக இது மாற் றப்படும். எனக் கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என  தெரிவித்துள்ளார்.

நன்றி : விடுதலை 26.06.2018

Saturday, 9 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....மதுரை நிகில் பவுண்டேசன்....





மதுரை நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று எனது ஊரான சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 12 மாணவ மாணவிகளுக்காக நடைபெற்றது. மொத்தம் சுமார் 120 மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். நிகில் பவுண்டேசன் நிறுவனர் மரியாதைக்குரிய மதுரை திரு.சோம.நாகலிங்கம் ஐ.ஆர்.எஸ். அவர்கள் நிகிழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு நான்(வா.நேரு) தலைமை தாங்கினேன். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.சாப்டூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.வணங்காமுடி,பொறியாளர் சு.இரா.மணிமாறன்,பொறியாளர் லட்சுமிகாந்த்,கணினி ஆசிரியர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பயிற்சியாளர்களாக மதுரை திரு.குமரகுருபரன் சார்,இராஜபாளையம் கண்மருத்துவர் பால்ராஜ் சார்,மதுரையினைச்சார்ந்த திரு தயாளன் சார் ஆகியோர் மிகச்சிறந்த பயிற்சியினை அளித்தனர். சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருமதி சுகந்தி அவர்களும் முருகேஸ்வரி அவர்களும் விடுமுறை நாளில் காலையிலிருந்து மாலைவரை பயிற்சி நடக்கும் இடத்தில் இருந்ததோடு, மாணவ,மாணவிகளை ஒழுங்குபடுத்தி வகுப்பில் அமரவைத்து மிகப்பெரிய உதவியைச்செய்தார்கள். மதியம் உணவினை,காலையில் தேநீரை அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார்கள்.

                            மதுரையிலிருந்து விருந்தினர்களை அழைத்துச்சென்று, எனது மகன் அன்புமணியும் , நானும் நிகழ்வில் கலந்துகொண்டோம். மிகப்பெரிய மன நிறைவினைக் கொடுத்த நாளாக இந்த நாள்(09.06.2018) அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் கொடுத்த நிகழ்வு மதிப்பீடு மனம் நெகிழும் அளவிற்கு அமைந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனி ஆண்டவர் பெண்கள் கல்லூரியில் மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக நான்,திரு.இரா.சீனிவாசன், பேரா.சேகர்,பேரா.ஆண்டியப்பன் சார் போன்றவர்கள் கலந்துகொண்டு கொடுத்த ஒரு நாள் பயிற்சி முடிவில் ஒரு மாணவி  நிகழ்வு மதிப்பீடு சொல்லும்போது 'எனது வாழ்க்கையை இந்த பயிற்சிக்கு முன்/இந்த பயிற்சிக்குப் பின்  என்று பிரித்துக்கொள்ளலாம். அவ்வளவு செய்திகள் இன்று கற்றிருக்கின்றேன். இதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து வெற்றி பெறுவேன் 'என்றார். அதனைப் போல இன்றைக்கு சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளி +2 மாணவி தன்னுடைய வாழ்க்கையில் இலக்கினை முடிவு செய்ய இந்த நாள் உதவியிருக்கிறது. நான் தெளிவாக இந்தப்பயிற்சி உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி என்றார். மனம் மகிழ்வாக இருந்தது.  நிகில் பவுண்டேசன் வெளியீடான, திரு.சோம. நாகலிங்கம் அவர்கள் கருக்கொண்டு வடிவமைத்த 'வல்லமை காணீர் ' என்னும் புத்தகம் அனைவருக்கும்  வழங்கப்பட்டது.  


                               இது ஒரு நல்ல தொடக்கம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான வேலைகளை அக்னி சிறகுகள் அறக்கட்டளையும், ஊரில் உள்ள பெரிய மனிதர்களும்  வெளியூரில் உள்ள பெரிய மனதுக்காரர்களும் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். அங்கங்கு இருக்கும் நல்ல உள்ளங்கள் தங்கள் கரங்களின் மூலமும் உள்ளங்களின் மூலமும் உதவத்தொடங்கியிருக்கின்றார்கள். திருப்பூரில் இருக்கும் அருமை நண்பர்கள் க.சுப்பிரமணியமும்,ஜொ.இராஜேந்திரனும் இணைந்து ரூ 2000 இந்த நிகழ்வுக்கு உதவியிருக்கின்றார்கள். மிக்க நன்றியும் பாராட்டுகளும் அவர்களுக்கு. சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச்சேர்த்த பெற்றோர்களுக்கு அக்னி அறக்கட்டளை சார்பாக பாரட்டு விழாவினை இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதயம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு....

                  இணைவோம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான
நல்லதை செய்வோம் .....   அதன் மூலம் மன நிறைவு கொள்வோம்

Sunday, 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......



Wednesday, 30 May 2018

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

           

சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு என்றார் பெரியார்
வாயால் கூறுபவர்களைவிட
ஒருபடி மேலே நின்று
வாழ்ந்து பார்த்து சொல்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு......

சாதிச்சகதியில்
எந்நாளும் மாட்டியதில்லை
சக மனிதனை எந்த நாளும்
சாதிக்கண் கண்டு நோக்கியதில்லை
பார்ப்பன நண்பரைக் கூட
அளவு கடந்து  நேசிக்கவைக்கும்
அய்யாவின் மனித நேயம்
மண்டைக்குள் புகுந்ததால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

இடையூறுகள் ஏதும் என்றால்
சிலர் சோதிடர்களை
நோக்கி ஓடுகின்றார்...
எதை எதையோ நாடுகின்றார்..
அறிவு கொண்டு இடையூறு
நீக்கும் அய்யாவின் வழி ஏற்றதால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்...

இல்லாத கடவுளுக்காக
எந்த நாளும் காசைச்செலவழித்ததில்லை...
கடவுளுக்கென எவர் கேட்டு வந்தாலும்
இந்த நாள் வரை ஒரு ரூபாய் கொடுத்ததில்லை
விடுதலை இதழின் வளர்ச்சி நிதி
முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம்
படிப்போர்க்கு உதவி எனத்தான்
கரங்கள் நீண்டிருக்கின்றன.......
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

வரவுக்குள்தான் செலவு
கஞ்சியோ கூழோ குடிப்போம்
கடன் வாங்கி பகட்டு வேண்டாம்,,,
எவ்வளவு பெரிய பணக்காரரோடு
பதவிக்காரரோடு பழகினாலும்
நம் நிலையில் நாம் இருப்போம்
நம்மால் முடிந்ததை
தொண்டாய்க் கொடுப்போம் எனும்
பொருளாதார நடைமுறையால்
எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்

மற்றவர்கள் உனக்கு மரியாதை
காட்ட வேண்டும் என நினைத்தால்
அவர்களுக்கு மரியாதை காட்டு
எனும் தந்தை பெரியாரின் தத்துவம்
மனதில் பதிந்த காரணத்தால்
கடிந்து சொல்ல மனம் வருவதில்லை
எவர் மனதையும் நோகவைக்கும்
எண்ணம் எப்போதும் இல்லை
அதற்காக எந்த நிலையிலும்
எனது கொள்கையை விட்டுக்கொடுத்தலும்
இல்லை எனும் எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

ஒழுக்கம் என்பது உனக்கு
கொடுத்த பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றுதல்
என அடித்துச்சொன்னார் அய்யா பெரியார்...
இயக்கப்பொறுப்போ குடும்பப்பொறுப்போ
அலுவலகப்பொறுப்போ
ஒழுக்கமே உயிர் எனக்கொள்வதால்
எந்த நாளும் தளர்ச்சி இல்லை
வாழ்வில் வளர்ச்சிதான் எனும்
வாழ்க்கை முறையால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

தந்தை பெரியாரின்
தலைமைக் கொள்கை மகன்
அய்யா ஆசிரியரின் வழிகாட்டல்
நாளும் 'விடுதலையில்' அவர் ஊட்டும்
வாழ்வியல் சிந்தனைகளை
வாழ்வின் கைத்தடிகளாய்ப்
பற்றிக்கொண்டதால்
வளமாய் நலமாய் வாழ்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு...

இன்று மே முப்பத்தி ஒன்று....
அய்ம்பத்து ஐந்தாம் ஆண்டு
பிறந்த நாளை எளிமையாகக்
கொண்டாடும் இந்த நாளில்
உங்களுக்கு வலிமையாகவே
பரிந்துரைக்கின்றேன்.....
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு....

                                       

                         வா.நேரு ....31.05.2018

               

Monday, 30 April 2018

எங்களது கனவில் ஒரு மேதின நாள் ....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உலகம் முழுதும் இருக்கும்
உழைக்கும் மக்கள் எல்லாம்
இன்புற்று இருக்கும் நாள்....

உழைத்து உழைத்து உருக்குலைந்து
உண்ணும் உணவிற்காக அலைந்தலைந்து
அல்லல்படும் இந்த நாள் போல் அல்லாது
அந்த நாளில்
எல்லோரும் உழைப்பதுவும்
உழைக்கும் அனைவருக்கும் உணவு
உறுதிபடுத்தப்படுவதுமான நாளாக
அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உண்டு கொழுக்கச் சிலரும்
உணவின்றி உழைத்து சாகப் பலருமாய்
இருக்கும் இந்த நாள் போலல்லாது
அந்த நாளில்
அவரவரால் முடிந்த உழைப்பு
ஆனால் அனைவருக்கும்
தேவையான அவரவர் உணவு
அவரவர் தட்டில் வந்து
நிரம்பி வழியும் நாளாய் அந்த நாள்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

கடவுளின் நெற்றியில் இருந்து
பிறந்தவர்கள் நாங்கள் என்னும்
உளறல்கள் எல்லாம் ஒழிந்து
உலகில் பிறக்கும் அத்தனை
குழந்தைகளும் பேதமில்லாமல்
கறுப்பென்றும் சிவப்பென்றும்
வேற்றுமைகள் காட்டாது
உயர்வென்றும் தாழ்வென்றும்
பிறக்கும்போதே சாதி ஏற்றத்தாழ்வு
ஏணிப்படிகளில் பொருத்தாது
பிறக்கும் குழந்தைகள் எல்லாம்
மனிதக் குழந்தைகளாய்
பிறக்கும்  நாளாய்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

சாதியா ? அப்படியென்றால்.....என்னது ?
மதமா ? அப்படியென்றால் ....தெரியாது ?
கடவுளா ? நன்றாக வாழத் தேவையா அது ?
என்னும் கேள்விகளோடு
இனிவரும் ஓரிரு தலைமுறைகளில்
எங்களது பிள்ளைகளின் பிள்ளைகள்
பிரசவிக்கும் பிள்ளைகள் எழுப்பும்
கேள்விகளால் நிரப்பப்படும் நாளது .....

உலகம் ழுழுவதும் இருக்கும்
செல்வமெல்லாம் ஓரிருவர் கையில்
இருக்க அல்ல! அல்லடா அல்ல !
என ஆர்ப்பரித்து உழைக்கும் கூட்டம்
உலகச்சொத்துக்களையெல்லாம்
பொதுவாக்கும் காலமது .....
தனியுடமை அழிந்து
பொது உடமை செழித்து
தந்தை பெரியார் காணவிரும்பிய
பொது உரிமையோடு மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க வாழும் காலம் அது.....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
அந்த நாளை நோக்கி நகர்வதற்காக
தந்தை பெரியாரின் கைத்தடி இருக்கிறது..
அண்ணல் அம்பேத்கரின் சுட்டும் விரல் இருக்கிறது....
ஓங்கிய கைகளோடு புரட்சியாளர் லெனின்
போட்டுத்தந்த முழக்கங்கள் இருக்கிறது ....
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
தோழர் லெனினும் போட்டுத்தந்த
பாதை தெளிவாகவே எங்கள்
இளைஞர்களின் கண்களில் தெரிகிறது....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
ஆணும் பெண்ணும் சமமாய்
வர்க்கப்பேதம் ஒழிந்து
வர்ணபேதம் அழிந்து
மனித நேயம் தழைத்து
உலகமெல்லாம் ஒரு நாடாய்
உழைக்கும் மக்களெல்லாம் ஒரு வீடாய்
செழித்துக்குலுங்கும் அந்த நாள்...
அந்த நாள் ! அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது!

                                                               வா.நேரு ....
                                                மேதின  வாழ்த்துகள் அனைவர்க்கும்


Sunday, 1 April 2018

தந்தை பெரியாரும் கோராவும்.........உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்......


'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம் " 29,30.03.2018 தேதிகளில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ' தந்தை பெரியாரும் கோராவும் ' என்னும் தலைப்பில் 30.03.2018 அன்று காலை உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரின் போராட்டம், அவரின் வாழ்வியல் போன்ற பலவற்றை வாசிக்கும் வாய்ப்பு இந்தக் கருத்தரங்கத்திற்கு தயாரித்ததன்  வாயிலாகக் கிட்டியது. பிறப்பால் பார்ப்பனராக பிறந்த கோரா அவர்கள் 22 வயதில் பூணூலைக் கழட்டிப்போட்டுவிட்டு மறுபடியும் பூணூலை போட மறுத்தவர். வாழ் நாளெல்லாம் பூணூல் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர். வாதாடியவர். பூணூல் போடாவிட்டால் வீட்டில் இருக்காதே,வீட்டை விட்டு வெளியில் போ என்று சொன்னவுடன் தனது மனைவி சரஸ்வதி கோரா அவர்களோடும் தனது மூத்த மகன் 3 மாதப்பிள்ளையான இலவணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியவர். அக்கிரகாரத்திலிருந்து வெளியேறி, சேரியில் போய் குடியேறியவர். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைய்வராக இருந்த அவர் எப்படி நாத்திகவாதியாக மாறினார். நாத்தியவாதியாக மாறியதால் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கை,துணிச்சல் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாத்திகத்தை தனது வாழ் நாள் முழுவதும் பரப்பியவர் போன்ற பல செய்திகளை அரங்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.(விரிவான கட்டுரை புத்தகத்தில் வருகின்றது.) பெரியார் சிந்தனை உயராய்வு  மய்யத்தின் பேராசிரியர்கள் முனைவர்.க.அன்பழகன், முனைவர்.த.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்தோர் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர். ஒவ்வொரு கருத்தாளரும் மிக நுட்பமாக நன்றாக தயாரித்து வந்திருந்த கட்டுரைகளை அரங்கத்தில் வாசித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய கோணத்தில் தந்தை பெரியாரின் தத்துவத்தை உழைப்பை மற்ற தலைவர்களோடு,அறிஞர்களோடு ஒப்பிட்டு கருத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றி, சான்றிதழ்களை வழங்கி,இந்த நிகழ்வுக்கு உழைத்தோர்க்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். அய்யா ஆசிரியரின் அவர்களின் உரை, தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் தண்டித்த நீதிபதியே சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த நேரத்தில், பெரியாரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், தண்டித்த நீதிபதியே தலைமை ஏற்று அய்யா அவர்களை வரவேற்று, மேல் நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு தந்தை பெரியார் அவர்களை பாராட்டியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். உணவு,இருப்பிடம், விருந்தோம்பல்,நல்ல நிறைவான கருத்துப் பரிமாற்றம், புதிய நோக்கில் அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துவைத்த விதம் என ஒவ்வொன்றும் மிகவும் ஈர்ப்பாக அமைந்த கருத்தரங்கமாக அமைந்தது. எனது அறையில் உடன் தங்கிய தோழர்கள் எழுத்தாளர் உடுமலை வடிவேல், எழுத்தாளர், பேச்சாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களோடு இயக்க நிகழ்வுகள் பரிமாற்றம் என குறிப்பிடத்தக்க நாளாக 30.03.2018 அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் தந்த நிகழ்வு,பங்கேற்பு.





'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்' என்னும் தலைப்பில் விடுதலை நாளிதழ் தீட்டிய 30.03.2018 தலையங்கம்

"வல்லம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் - அதன் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பல்கலைக் கழக அய்ன்ஸ்டின் மன்றத்தில் மார்ச்சு 29,30 ஆகிய இரு நாட்களில் "உலகப் பெரியாரும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களும் - ஓர் ஒப்பிடு" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் அளிக்கும் கருத்தரங்கம் நேர்த்தியாக நடைபெறுவது - அறிவியல் துறையில் ஓர் அத்தியாயம் என்றே கூற வேண்டும்.

மனித குல வரலாற்றில் சமுதாய வளர்ச்சி என்பது - மனிதனின் அறிவு வளர்ச்சியைச் சார்ந்ததே. காட்டு விலங் காண்டிக் காலந் தொடங்கி அறிவியல் வளர்ச்சியால் மானுடம் அடைந்திருக்கும் எல்லா வகையிலுமான வசதிகளும், வாய்ப்புகளும், மனிதனின் அறிவு வளர்ச்சி விளைச்சலைச் சார்ந்ததேயாகும்.

கடவுள், மதம் தொடர்பான நம்பிக்கைகள் மானுட வளர்ச்சியின் கால்களை ஒரு பக்கம் கீழே இழுத்தாலும் அவற்றை யெல்லாம் கடந்து மானுட சமுதாயம், வளர்ச்சி நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுதான் வருகிறது.

"கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பி இருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்" என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் ('குடிஅரசு' 11.8.1929).

அஞ்ஞான குப்பைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத்தான் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.

மத்திய அமைச்சராக - அதுவும் கல்வித் துறையின் (மனிதவள மேம்பாட்டுத் துறையின்) இணை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே 'டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கூற்றுத் தவறானது' என்று கூறியதோடு நிற்கவில்லை. "விஞ்ஞானம் என்றும் பொய்யானது, மெய்ஞ்ஞானமே உண்மை" என்று கூறியிருப்பது - நம் நாட்டின் வெறும் படிப்பறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்புவதைவிட ஒரு மனிதனின் மத நம்பிக்கை மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவின் வேர்களை அழிக்கும் வேர்ப் புழுக்களாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களி டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலி யுறுத்துகிறது. (51கி-லீ)

ஏட்டுச் சர்க்கரையாக இருந்து பயன் என்ன? மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவரே அஞ்ஞானத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலையில் உள்ளார். பிரதமராக இருக்கக் கூடியவரே "சிவபெருமான் யானை தலையை வெட்டி ஒரு முண்டத்தின் கழுத்தில் பொருந்துமாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்" என்று கூறுகிறார் என்றால், இந்த நிலையை என்னவென்று சொல்லி பரிகசிப்பது!

இந்த நிலையில் சிந்தனையாளர்களின் அரிய வழிகாட்டும் பகுத்தறிவுச் சிந்தனைகள், உயர் எண்ணங்கள் மானுட வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக - சிறப்பாக தந்தை பெரியார் அவர் களின் சுய சிந்தனைகள் மானுட வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி விஞ்ஞானிகள்கூட நினைத்துப் பார்க் காத ஒரு கால கட்டத்தில்  தந்தை பெரியார் (1938இல்) சொல்லி யிருப்பது சாதாரணமானதா?

அதனால்தான் அய்.நா.வின் "யுனெஸ்கோ" அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் புதிய "உலகின் தொலைநோக்காளர் (Prophet of the New age)"
என்று குறிப்பிட்டுள்ளது. (27.6.1970).

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையும், தொண்டும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடந்திருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய தனித்தன்மை மிக்க சிந்தனைகள், உலக மானுடத்திற்கே தேவையானவையே! அவர் அளித்த கொள்கைகள் வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு நெறி முறையாகும். (A way of Life).

கடவுள், மதம், மத நூல்கள், ஜாதி போன்றவைகளால் மனிதன் அறிவையும், தன்னம்பிக்கைகளையும், பொரு ளையும், காலத்தையும் விரயமாக்குவது பற்றி கவலை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கொடூரமான சிறையிலிருந்து அவனின் பகுத்தறிவை விடுதலை செய்வ தற்குக் கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார். அதன் விளைச்சலைத்தான் இன்றைக்குத் தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

"இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட் சியைச் செய்தார் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்"

- பேராசிரியர் ஜான்ரைலி ('ஆனந்தவிகடன்' 16.7.1972)

இத்தகு தலைவரின் கருத்துக்கள் உலகெங்கும் பரவச் செய்வதற்கு வல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கும் பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

பன்னாட்டுச் சிந்தனையாளர்களை, இந்திய அள விலான சிந்தனையாளர்களை தந்தை பெரியாரோடு ஒப் பிட்டுக் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை  வல்லம் கருத்தரங்கில் வழங்கியுள்ளனர்; அது சிறப்பான நூலாக வெளிவரவிருக்கிறது என்பது அறிவு விருந்துக்கான ஏற்பாடாகும்.

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் ஒரு துறையான பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரியார் சிந்தனைப்பற்றி 'டிப்ளோமா' வகுப்புகளை நடத்தி வருகிறது. அஞ்சல் வழியாக நடத்தப்படும் இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்பது பெரும் பயன் தரக் கூடியதாகும். வாழ்வை வளப் படுத்திக் கொள்ள வளமான சிந்தனைகளை வாரி வழங்கக் கூடிய தத்துவத்திற்குச் சொந்தமானவர் தந்தை பெரியார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வீர்களாக!"

Tuesday, 20 March 2018

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் ...உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.

ஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் சந்தோஷ விஷயத்தில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் மத்தியில் இருக்கிறது இந்தியா.

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை
ஃபின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகெங்கும் குடிபெயர்தல் பிரச்னை தலைப்பு செய்தியாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், ஃபின்லாந்தில் குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஐ.நா அறிக்கை.

இது எப்படி சாத்தியமானது?

இலவச கல்வி, தரமான சுகாதாரம்

மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை அனுபவம். ஆனால், அதையெல்லாம் கடந்து எம்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இலவச கல்வியும், தரமான சுகாதார வசதியும்தான் காரணம் என்கிறார் ஃபின்லாந்தை சேர்ந்த அன்ட்டி காப்பினன்.

அதே மனநிலையில் அவர், "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும், நான் இதே மனநிலையில்தான் இருப்பேன்."என்கிறார்.

எல்லாருக்கும் எல்லாமும்

மேலும் அவர், "எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு இங்கு இருக்கிறது. அது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இரண்டாவது உலக போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. ஃபின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எங்களுக்கு யாருடனும் விரோதம் இல்லை." என்கிறார்.

"நாங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலவிடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப்பமானவற்றில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமென்று கருதுகிறேன்." என்கிறார் அதே மகிழ்வுடன்.

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது.
சமத்துவம்

இதே கருத்தைதான் முன் வைக்கிறார் தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலாவும். இலவச கல்வியையும், தரமான மருத்துவ வசதியையும் சுட்டிக்காட்டும் யெனா, "ஃபின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்கிறது." என்கிறார்.

இந்த ஆய்வில் வெளிநாடுகளிலும் குடியேறியவர்களும் ஃபின்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யெனா, " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ... அது அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (ஃபின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.


கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் இருந்தது. ஃபின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.

மகிழ்ச்சிக்கான முதலீடு

நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் தனது நானோ தொழிற்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் , "நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகள் இந்த மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன." என்கிறார்.

மேலும், "மக்களை கொண்டாட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்கள் செலவிடும் தொகையை செலவாக அந்நாட்டு அரசுகள் கருதுவதில்லை. அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகளை கொண்டு வரும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. அதற்காக மெனக்கெடுகின்றன. அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த வியப்பும் இல்லை." என்று விவரிக்கிறார் விஜய் அசோகன்.

மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும்.
குரோதமில்லை... வெறுப்பில்லை

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை என்கிறார் அவர்.

"வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்" என்கிறார் விஜய் அசோகன்.
நன்றி : பி.பி.சி. தமிழ் 20.03.2018..படங்கள் சேர்க்கப்படவில்லை


Wednesday, 14 March 2018

வீரவணக்கம் ..தோழனே...இந்த நூற்றாண்டின் அறிஞனே !




வீரவணக்கம் ..தோழனே...
இந்த நூற்றாண்டின் அறிஞனே !
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !

அசையாத உடல் இருக்கலாம் ஆனால்
அஞ்சாத உள்ளம் இருந்தால் அகிலமும்
உனைத் திரும்பிப்பார்க்கும் என
நிருபித்த இந்த நூற்றாண்டின் அறிஞனே!
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம்!

ஒரு நாள் சாவது உறுதி எனினும்
இன்று சாவேனோ நாளை சாவேனோ
என அஞ்சி அஞ்சி சாகப்போவதில்லை
எவனுக்கும் அஞ்சாமல் சொல்லும்
கருத்துக்களால் அடுத்தடுத்த நூற்றாண்டில்
வாழும் மனிதர்கள் நினைவுகளிலும்
வாழ்வேன் என உரைத்து வாழ்ந்த தீரா...
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !..

நேரில் உனைப் பார்த்ததில்லை
உனது நிழல் கூட எங்கள் மீது பட்டதில்லை...
கொண்ட கொள்கை உறுதிப்பாட்டால்
நீ கொண்ட விசாலப்பார்வையால்
உலகம் முழுக்க வாழும் நாத்திகர்களின்
வீரவணக்கம் பெற்றாய் தோழா ! உன் புகழ் வாழி !

கடவுளை மறுத்தாய் ! மறுபிறப்பா
எனக்கேட்டு மெதுவாய் சிரித்தாய்!
உலகத்தைப் படைத்தது கடவுளா ? எனக்கேட்டு
அறிவியலால்... உலகம் வளர்ந்தவிதத்தை
விவரித்தாய் !விளக்கினாய்!
இருக்கும் பூமி இன்னும் சில நூற்றாண்டில்
பழுதாகும்... அடுத்த கிரகத்தில் வாழ
மனிதர்களே ஆயுத்தப்படுங்கள் என்றாய்!....
குமித்துவைத்த மணல்கோபுரம்
ஒரு குத்து விட்டால் சரிதல்போல
கடவுள் கதைகள் அனைத்தும்
அறிவியலால் சரிந்திடவே வாதிட்டாய் !வென்றிட்டாய் !

உடம்பில் ஏதேனும் குறை என்றாலே
சுற்றி நிற்கும் உறவுக்கூட்டம்
அச் சடங்கை நீ செய்யவில்லை...
இச் சாமியை நீ கும்பிடவில்லை...
அதனால்தான் இந்தக் குறை எனக்
கைகாட்டி கள்ளத்தனமாய்
இக்கட்டு நேரத்தில் கடவுள் விற்பனை
செய்யும் முட்டாள்கள் மத்தியில்தான்
ஐம்பது ஆண்டுகளாய் சக்கர நாற்காலியில்தான்
வாழ்க்கை என்றாலும் தோழா நீ
கம்பீரமாகச்சொன்னாய் ....
சொர்க்கமாவது ....நரகமாவது ....
க்டவுளாவது ...கத்திரிக்காயாவது...
நோய்க்கும் கடவுளுக்கும் சம்பந்தமாவது....
என்று உரக்க உனது செயல்களால்
சொன்ன மாவீரா ! உன் புகழ் வாழி !

வலிமை என்பது உடலாளல்லடா கோழைகளே!
மனதால் என வாழ்ந்து நிருபித்தாய் !
இருபது வயதில் செத்துப்போவாய் என்றார்கள்
எழுபத்தி ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாய்!
நிறையவே உலகுக்கு அறிவியலால்
விட்டுச்சென்றிருக்கின்றாய்!தோழனே !
எங்கள் அறிவியல் அறிஞன் ஸ்டீபன் ஹாக்கின்ஸே !
வீரவணக்கம் ! உனக்கு எங்கள் வீரவணக்கம் !

                                                     வா.நேரு,
                                                     மாநிலத்தலைவர்,
                                                     பகுத்தறிவாளர் கழகம்,தமிழ்நாடு....
                                                      14.03.2018 ....

Tuesday, 13 March 2018

March 14.......... (Vaa.Nehru )


               March 14..........
             (Vaa.Nehru )

By rising questions,
You told the ways and means
for the new life !
Hail You Comrade !

You have weapons,
to remove the
adamantine of
the capitalist......
Hail You Comrade!

At time when you have
no money
to buy the corpse-box and bury
your own dead heir....
You told the ways and
saved the poor children
from being buried
Hail You comrade !

You said not money
alike mind is enough
for better half
to earn
unequalled frame
on earth .....

Dear Comrade !
You lived long
with Comrade Jennie...
Hail You Comrade ....

Working hands will all
raise up to the sky
and greet " Red Salute " to You
Comrade 'Karl Marx '
Hail your fame !....

 (From my Suriyakeetrukal Tamil Poem book- Translated  by B.Shyamala And by V.Balakumar)....Vaa.Nehru....March-14,2018
    

வாழ்த்துகள், பாராட்டுகள்.....

மதுரையில் 10.03.2018 அன்று விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.


தனது அனுபவத்திலிருந்தே கூட்டத்தில் மெதுவாக பேச்சினை ஆரம்பித்த தோழியர் கொ.செந்தமிழ்ச்செல்வி அவர்கள்  மிகச்சிறப்பாக தனது வாதங்களை முன்வைத்தார். தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை உரையில் தொட்டுக்காட்டினார். தான் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுவதையும் ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு இன்னும் பெண்கள் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டார். இணையத்தில் பதிவிடும் ஒரு பெண்ணாக பேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் பதிவிடும்போது, கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க இயலாத கோழைகள்  எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிப்பிட்டார். அதற்காக அஞ்சிடப்போவதில்லை, பெண்களுக்கு கிடைத்திட்ட மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாட்ஸ் அப், பேஸ்புக் -அதனை முழுமையாக பதிவிடுவோம் என்று சூளுரைத்தார். எப்படியெல்லாம் தந்தை பெரியார் பற்றி, திராவிடர் இயக்கம் பற்றி தெரியாமல் பதிவிடுவதையும் சிலர் தெரிந்துகொண்டே நரித்தனம் செய்வதையும் எடுத்துரைத்தார்.தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்னதால் ஏற்பட்ட எழுச்சியை,ஒற்றுமையை குறிப்பிட்டு பார்ப்பனர்கள் எந்த நாளும் திருந்தப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார். ஏறத்தாழ 90 நிமிடங்கள் அரங்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர் உரையாற்றிய விதம் அருமை. தோழியருக்கு பாராட்டுகள். திருவாரூரிலிருந்து மதுரை விடுதலைவாசகர் வட்டக்கூட்டத்திற்காக வருகை தந்து பெரியாரியம், எதிரிகளின் தகிடுதத்தங்கள்,பெண்களின் கடமை,உழைக்கும் மகளிர் தினம்,  அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்பு, அத்தனை கேலிகளையும் வசவுகளையும் அவர் தாங்கிக் கொண்டு தந்தை பெரியாருக்கு உறுதுணையாக இருந்த விதம், அய்யா அவர்களின் மறைவுக்குப்பிறகு உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றியது, அய்யா அவர்களின் அறக்கட்டளையைக் காப்பாற்றியது மட்டுமல்ல தன்னுடைய சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு அளித்தது என அன்னை மணியம்மையாரின் சிறப்புக்களை பட்டியலிட்டு   சிறப்புரையாற்றியது அருமையாக இருந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள்.....

முனைவர்.வா.நேரு,
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.