Friday, 19 October 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....





'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....


5.8.2018 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் மதுரை முனைவர் வா. நேரு அவர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 240 பக்கங்கள் கொண்ட 'காக்கைச் சோறு' என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை - எனக்கு வழங்கினார்.

படித்தேன் - சுவைத்தேன் - கவிக்கோவின் இலக்கியச் செறிவும், தமிழ்அறிவும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகங்கள். காலம் அவரை 'இயற்கையின் கோணல்' புத்தி காரணமாக பறித்துக் கொண்டது என்பது கொடுமையோ கொடுமை!

நல்ல பேராசிரியராக அவர் இருந்து அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் - கவிஞர்கள் - எழுத்தாளர்கள் ஒளி வீசுகிறார்கள்.

கவிக்கோவின் முதல் கட்டுரையே இன்றைய தமிழ்ப் பாட புத்தகங்களில் உள்ள குறைபாட்டினைச் சுட்டி 'கடிதோச்சி மெல் எறிதலை'ச் செய்வதாக உள்ளது!

பள்ளிகளில் நம்மில் பெரும்பாலோருக்குப் பாடமாக அமைந்ததையே ஆசிரியர் அப்துல் ரகுமான் அக்கட்டுரையில் சுட்டி, நெற்றியடிக் கேள்வியை நேர்மையுடன் கேட்கிறார்.

புத்தாக்கச் சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு வர, பாட புத்தகங்கள் அறிவை, விரிவு செய்து, தூண்டத் துணை நிற்க வேண்டும்.

இன்று...? அப்படி இல்லையே! இதோ சில எடுத்துக்காட்டுகள்.

எடுத்துக்காட்டு ஒன்று (பக்கம் 12)

'பூதகியின் பால்' என்ற முதல் கட்டுரையின் முதல் பகுதி இன்று (நாளை மறுபகுதியைப் பார்க்கலாம்).

"கஸபியான்கா கதையை ஒரு நாள் வகுப்பில் சொன்னேன்.

கஸபியான்கா ஒரு மாலுமியின் மகன். அவனுக்குக் கப்பலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவன் தந்தை ஒருநாள் அவனை அழைத்துச் சென்று கப்பலைச் சுற்றிக் காட்டினார்.

அப்போது திடீரென்று கீழ்த் தட்டிலிருந்து "தீ... தீ..." என்று கூக்குரல் எழுந்தது. கஸபியான்கா வின் தந்தை அவனை மேல் தட்டில் ஓரிடத்தில் நிற்க வைத்து, "ஏதோ தீ விபத்துப் போலிருக்கிறது. நான் கீழே சென்று பார்த்து வரும் வரை இங்கேயே நில். இங்கிருந்து அசையாதே" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.

போனவர் திரும்பி வரவில்லை. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். தீ மேலே பரவி கஸபியான்காவைச் சூழ்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் "சீக்கிரம் நீரில் குதி. அப்போதுதான் தப்பிக்க முடியும்" என்று அவனைப் பார்த்துக் கத்தினர். அவனோ "உயிர் போனாலும் பரவாயில்லை. தந்தை சொல்லைத் தட்டக் கூடாது" என்று அங்கேயே நின்றான். அதனால் அவனும் தீயில் சிக்கி உயிரிழந்தான். 'தந்தை சொல்லைத் தட்டாத தனயன்' என்று எல்லோரும் அவனைப் பாராட் டினார்கள்.

நான் இந்தக் கதையைக் கூறிவிட்டு "இந்தக் கதையின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான்: "தந்தை சொல் கேட்டால் ஆபத்துத்தான்" மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த மாணவன் சொன்னதில் தவறேதுமில்லை. ஒரு பரிசோதனையாகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலைத்தான் மாணவன் சொன்னான்.

இது கதை கூட அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தந்தை வாக்கை மீறக் கூடாது என்று தன் உயிரையும் தியாகம் செய்த கஸபியான்காவின் உறுதி பலரை மனம் உருகச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்தச் சம்பவம் பல நாடுகளுக்கும் பரவி நம் நாட்டிலும் பாடப் புத்தகங்களில் இது தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் ஓர் எதிர்மறையான விளைவை  ஏற்படுத்தும் சாத்தியம் இதில் இருப்பதை உணரலாம்.

மனிதன் எதையும் அதன் பலனைக் கொண்டுதான் மதிப்பான்.

இந்தச் சம்பவம் எதை உணர்த்துகிறது?

தந்தை சொல் தட்டாத தனயனின் தியாகத்தை மட்டுமா? தந்தை சொல் கேட்டதால் அல்லவா அவன் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது? இப்படியும் எண்ண இடம் இருக்கிறதல்லவா?

ஏற்கெனவே தந்தை சொல் கேட்காத தனயர்கள் பெருகி வரும் இக்காலத்தில் இத்தகைய கதைகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடாதா?

தந்தை சொல் கேட்டதால் ஒருவன் ஆபத்திலிருந்து தப்பினான் என்பதாகக் கதை அமைந்திருந்தால் அல்லவா படிப்பவனுக்கும் தந்தை சொல் கேட்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படும்? எதிர்மறையான அல்லது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் பல கதைகளைப் பாடங்கள் என்ற பேரில் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கெ()டுத்துக் கொண்டிருக்கிறோம்".

நமது பாடத் திட்டங்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், சமயோசிதமாக நடந்து கொள்ளும் முறையில் இன்று பெரிதும் சொல்லிக் கொடுக்கப்படு கின்றனவா? இல்லையே; அவர் கேட்கும் கேள்விப்படி அறிவை, தன்னம்பிக்கையுடன் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் கெடுத்துக் கொண்டும் - தடுத்துக் கொண்டும் தானே உள்ளது!

பழைய காக்கை - நரிக் கதையை....

(நாளை பார்ப்போம்)

நன்றி : வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்....விடுதலை 20.10.2018(வெளியூர்)

Sunday, 14 October 2018

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

ஆசிரியர்கள்               : சி.லட்சுமணன் &கோ.ரகுபதி..

வெளியீடு                 : புலம், திருவல்லிக்கேணி, சென்னை-5 98406033499

முதல்பதிப்பு              : ஜூன் 2016, மொத்த பக்கங்கள் 120 , விலை ரூ 100....


அண்ணல் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.அந்தச் சாதிய  மனநிலை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா...இல்லை,இல்லை, இடை நிலைச்சாதியினர் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை கூற இயலும். அந்த சாதிய மனநிலை ஒடுக்கப்படுகிற மக்களாகிய பட்டியல் இனத்தவரிடம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் தரும் புத்தகமாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதுதான் 'தீண்டாமைக்குள் தீண்டாமை : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் " என்னும் புத்தகம்.



அண்மையில் வெளிவந்துள்ள புத்தகங்களுள் மிக முககியமானது என நான் நினைக்கின்றேன்.கள ஆய்வுகளாக பல்வேறு ஊர்களில் வசிக்கும் புதிரை வண்ணார் சாதியில் பிறந்தவர்களின் பேட்டியும் மனக்குமுறலும் நடைமுறையில் உள்ள சாதியக்கொடுமை விவரிப்பும்...எழுத்தாளர் இமையம் அணிந்துரையில்  சொல்வதைப்போல " தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ள " புத்தகம் இது..சாதி ஒழிப்பில் விருப்பம் உள்ள அனைவரும் படிக்கவேண்டிய ,மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.

"இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் அதெல்லாம் ஒரு காலத்தில்தான் இருந்தது' என்று ஒருவர் சொன்னால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.பள்ளர், பறையர், அருந்ததியர் எங்கே குடியிருக்கவேண்டும் , எந்தப்பாதையில் நடக்கவேண்டும் , எந்தப்பாதையின் வழியாகப்பிணத்தை எடுத்துச்செல்லவேண்டும், எந்தத்தெருவில் தேரை ஓட்டவேண்டும் , எங்கே நின்று சாமி கும்பிடவேண்டும் , எங்கே பிணத்தைப்புதைக்க வேண்டும், எங்கே தண்ணீர் எடுக்கவேண்டும் , எந்தப்பள்ளியில் படிக்கவேண்டும் , எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்கவேண்டும்  என்பதெல்லாம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த வரையறையின்படிதான் சமூகம் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.உயர் வகுப்பினரும் இடைநிலை.வகுப்பினரும் பறையர், பள்ளர், அருந்ததியர்களுக்கு என்னென்ன விதமான சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுக்கவிதிகளை , வரையறைகளை வகுத்துள்ளனரோ, எவற்றையெல்லாம் பின்பற்றக் கட்டாயப்படுத்தப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் அப்படியே புதிரை வண்ணார் சமூகத்தினர் பின்பற்றவேண்டும் என்று பறையர், பள்ளர், அருந்ததியர் சமுகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்...தாழ்த்தப்பட்டவர்கள்கூட , பிறப்பின் அடிப்படையிலான நிரந்தரமான அவமானத்தைச் சந்திக்கிறவர்கள்கூட , மற்றவர்களைப் பிறப்பின் அடிப்படையில் அவமானப்படுத்துவதில் , இழிவு செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை...ஒடுக்குவது,சுரண்டுவது,இழிவு செய்வது இதுதான் சாதிக்குரிய பெருமைகளாக,அடையாளங்களாக இருக்கின்றன  " என இமையம் தொடர்ந்து எழுதுகின்றார். மிகவும் கவனித்தில் கொள்ள வேண்டிய அணிந்துரை இமையத்தின் அணிந்துரை.மிக விரிவாக அணிந்துரை அளித்திருக்கின்றார்.

இந்த நூலின் முன்னுரையில் ஆய்வுகளை எதன் அடிப்படையில் மேற்கொண்டோம் என்பதனை நூல் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். முதல் அத்தியாயம் " அதிகாரமற்றோரின் படிநிலை- 'அதிகார நிலைப்பாடு' என்னும் தலைப்பில் உள்ளது. இதில் புதிரை வண்ணார் என்ற சாதியின் படிநிலை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும்,அடிமை போன்ற வாழ்க்கை பற்றியும் -'குடும்ப ஒழுங்கு,ஊர் ஒழுங்கு, அடிப்படை உடமைகள், கொத்தும் ஊர்ச்சோறும், அடிமை முறைக்கு ஒப்பான இணைப்பு என்னும் தலைப்புகளின் கீழ் மிக விரிவாக ஆய்வாளர்கள் நேர்முகப்பேட்டிகளோடு கொடுத்துள்ளனர்.

அடுத்த அத்தியாயம் ' தீண்டாமையும் ஒடுக்குமுறையும் சேரியும் வண்ணாக்குடியும் ' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,புதிரை வண்ணார்கள் நடமாட்டமே தடை செய்யப்பட்ட வெளிக்குள் இருந்தது,பண்பாட்டு ஒடுக்குமுறை,தண்ணீரும் தீண்டவண்ணாரும்(புதிரை வண்ணார்),பொருட்களைத் தொட்டாலும் தீட்டு,மரியாதையின்றி அழைத்தல்,பாலியல் ஒடுக்குமுறை,சொத்துரிமை மறுப்பு போன்ற தலைப்புகளில் வரும் செய்திகள் புதிய செய்திகள் மட்டுமல்ல ,சாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்பதனை புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

மூன்றாவது அத்தியாயமாக இருப்பது ' இயக்கமும் போராட்டமும் ' என்னும் தலைப்பில் இருக்கிறது. புதிரை வண்ணார்களுக்கென ஒரு சங்கம் 1940-களில் தொடங்கப்பட்டது என்னும் செய்தி தொடங்கி சாதிச்சான்று பெறுவதற்கு இன்றும் கூட அந்த புதிரை வண்ணார் சாதியைச்சார்ந்தவர்கள் படும் துன்பங்கள் விரிவாக, கள ஆய்வுகளோடு தரப்பட்டிருக்கின்றன.சாதிச்சான்று தருவதற்கு வருவாய்த்துறையைச்சார்ந்த அதிகாரிகள் " உன் வீட்டில் வெள்ளாவி இல்லை, கழுதை இல்லை, துணிகள் இல்லை, நீ வண்ணான் என்று கூறினால் நாங்கள் எப்படி நம்புவது ? " (பக்கம் 66) என்று கேட்டார்கள் என்பதுவும் அதனைத் தொடர்ந்து குலத்தொழில் செய்பவர்களுக்கு மட்டும்தான் புதிரை வண்ணார் என்னும் சாதிச்சான்றிதழ் தருவோம் என்று சொல்வதையும் ஆதாரங்களோடு புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றார்கள். " ஒருவர் சாதிச்சான்று பெறுவதற்கு அடிப்படையான தகுதி அந்தச்சாதியில் பிறந்திருப்பதா? அல்லது தன்னுடைய பாரம்பரியத் தொழிலைச்செய்வதா ? " பக்கம் 72 என்னும் கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார்கள். " சான்றிதழ் பெறுவது என்பது அவர்களின் சாதி அடையாளத்தை மீட்கும் செயல் அல்ல.மாறாக அது ,உயிர் வாழ்வதற்கான போராட்டம் " எனக்குறிப்பிடுகின்றார்கள்.

தொடர்ந்து மதமாற்றம்,இடம் பெயர்வு, வெளி மாநிலம் சென்று பிழைத்தல், வெளி நாடு சென்று பிழைத்தல் போன்றவைகள் மூலமாக எப்படி அவர்கள் அந்தச்சாதி இழிவிலிருந்து மாறிவிட நினைக்கின்றார்கள், அது எவ்வளவு தூரம் சாத்தியமாயிருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடு கொடுத்துள்ளார்கள்.மறைமுகப்போராட்டம்,நிலரிமைப்போராட்டம்,அரசியல் பங்கேற்பு,உற்பத்தி மாற்றம் ஏற்படுத்திய தாக்கம் போன்ற பலவித தலைப்புகளில் கொடுத்துள்ள தகவல்கள் சாதியின் தாக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடிகின்றது.

காந்தியார் " நாமே துவைக்க வேண்டும், நாமே முடி திருத்திக்கொள்ள வேண்டும் :" போன்று சொன்னபோது தந்தை பெரியார் அனைத்திற்கும் எந்திரங்கள் வரவேண்டுமென்றார். வாசிங்மெசின் என்னும் இயந்திரம்  பல வீடுகளில் வந்தபிறகு புதிரை வண்ணார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணத்தக்கவை. மேல் ஜாதிக்கு வெளுக்கும் வண்ணார்கள் ஆற்றில் மேல்பகுதியில் துவைக்கவேண்டும், அவர்கள் துவைக்கும் பகுதியிலிருந்து வரும் தண்ணீரில்தான் தீண்டவண்ணார் துவைக்க போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன என்பதெல்லாம் நான் அறியாத செய்திகள். இப்படி நிறைய செய்திகள் இந்த நூலில் உள்ளன.

முடிவாக ஒரு கருத்தை அழுத்தமாக சொல்கின்றார்கள். சாதி இந்துக்கள் தாங்கள் செய்யும் சாதியை அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு இந்த மாதிரியான புத்தகங்களை பயன்படுத்த பார்ப்பார்கள். அவர்களுக்கு " படிநிலை வர்ணாசிரம முறையில் இருக்கின்ற ஒடுக்குமுறையும் (அல்லது தலித் அல்லாத பிற சாதிய அமைப்புகளிடம் உள்ள படி நிலை ஒடுக்குமுறையும் ) தலித் இனக்குழுவில் உள்ள ஏற்றத்தாழ்வும் சமமானதல்ல.அப்படிச்சமமாகப் பார்க்கவும் கூடாது,பார்க்கவும் முடியாது.ஏனெனில் தலித்துகள் மீது தலித் அல்லாதவர்கள் கொண்டுள்ள ஆதிக்கமும்,ஒடுக்குதலின் தன்மையும் வீரியமும் மிகக் கொடுமையானது " பக்கம்(104) எனக்குறிப்பிடுகின்றனர். உண்மைதான் இந்தப்புத்தகம் சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக சாதி அமைப்பை, அதன் படி நிலைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உதவும் புத்தகம்.

பின் இணைப்பாக ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்கள் எழுதிய 'சவ ஊர்வலம் ' என்னும் சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலின் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கு அந்தச்சிறுகதை உதவுகிறது. மிகுந்த துயரத்தோடுதான் கதையை வாசித்து முடிக்க நேர்கிறது. இதுதான் எதார்த்தமான நிலை. இந்தச்சாதி என்னும் இழிவை நமது மக்கள் எப்போது முழுமையாக புரிந்துகொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறிதான் என்றாலும் அந்தக் கேள்விக்குறிகளுக்கு பதில் இது மாதிரியான புத்தகங்களே எனச்சொல்லலாம். 

பார்ப்பனர்களுக்கு பிறப்பிலேயே உயர்வைத்தரும் இந்த சாதி அமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என குருமூர்த்தி போன்ற அய்யர்கள் தவிக்கிறார்கள்.ஆயிரம் உண்டிங்கு சாதி என பம்மாத்தாய் எழுதுகிறார்கள்.இழித்தவாயனாய் கிடைக்கும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்கள் சிலரை வைத்து சாதி வேண்டும் எனச் சொல்லவைக்கின்றார்கள்.எந்த நிலையிலும் மக்கள் தொகையில் 80,90 சதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என மிகக் கவனமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் " ஒடுக்குமுறையை மட்டுமே மேற்கொள்கிற ஒரே சாதி பார்ப்பனர்கள்தான் " என்பதனைப் புரிந்துகொள்ளவும் "ஆதிக்கத்திற்குள்ளாகின்ற சாதியே மற்றொரு புறத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும் இருக்கிறது " என்பதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைவதற்கான புரிதலையும் இதைப் போன்ற புத்தகங்கள் கொடுக்கின்றன.படிக்க வேண்டிய புத்தகம்.

Sunday, 7 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்...சுப.வீரபாண்டியன்

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்
ஆசிரியர்                                          : சுப.வீரபாண்டியன்
வெளியீடு                  : வானவில் புத்தகலாயம்,சென்னை-17. 044-24342771
முதல்பதிப்பு                                  : 2004 ஐந்தாம் பதிப்பு  : 2014
மொத்த பக்கங்கள்                      : 40 விலை ரூ 30

                            உருவத்தால் மிகச்சிறிய புத்தகம் ஆனால் உள்ளடக்கத்தால் மிகக் கனமான புத்தகம். முதல் பதிப்பின் பதிப்புரையை தமிழ் முழக்கம் செ.சாகுல் அமீது அவர்களும் 4-ஆம் பதிப்பின் பதிப்புரையை சுப.புகழேந்தியும் எழுதியிருக்கின்றார்கள்.முதல் பதிப்புக்கான முன்னுரையையும் 4-ஆம் பதிப்புக்கான முன்னுரையையும் நூலின் ஆசிரியர் அய்யா சுப.வீ. எழுதியிருக்கின்றார். 'என்ன காரணத்தினாலோ இச்சிறு நூலை மட்டும் நான்கு முறை எழுத நேர்ந்தது, இப்பொழுதும் இதனை ஒரு விவாத மேடையில்தான் வைக்க விரும்புகிறேன் " என்று முன்னுரையில் அய்யா சுப.வீ  எழுதுகின்றார். உண்மைதான் ஒரு விவாதத்தின் தொடக்கமாகத்தான் இந்த நூல் அமைந்திருக்கிறது, அதனால் தான் நூலே கேள்வி பதில் அமைப்பில் உள்ளது எனலாம். 

              " அரசியலையும் குடும்பத்தையும் பிரிக்க முடியாது;பிரிக்கவும் கூடாது " என்று முதல் பக்கத்து  பதிலிலேயே நூல் ஆசிரியர் கூறி விடுகின்றார். குடும்பத்து உறுப்பினர்கள் அரசியலற்று இருந்தால் அவர்களை நாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்னும் கேள்விக்கு " அரசியலற்று இருப்பதே ஒரு விதமான அரசியல்தான். " என்று விளக்கம் கொடுக்கின்றார். நம் அரசியல் எது? எனும் வினாவிற்கு "தமிழின உணர்வு,சாதி மறுப்பு,மதவெறி எதிர்ப்பு,பொருளியல் சமத்துவம்,பகுத்தறிவு,பெண் விடுதலை ஆகியனவற்றை முன்னிறுத்தித் தொண்டாற்றுவதே நம் அரசியல் .சுருங்கக் கூறின் 'மானமும் அறிவும் 'கொண்ட மக்களாய்த் தமிழின மக்களை ஆக்குவதே நம் நோக்கம் " என நறுக்குத் தெரித்தாற்போல் பதில் இருக்கிறது. 

                 ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சின் சாரமாக பக்கம் 12-ல் " வீட்டைத் திருத்திய பின்பே வெளியில் வந்து பேசவேண்டும் என்னும் அறிவுரை நியாயமானதுதான்.ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றது...அரசியலில் உள்ள சுதந்திரம் ,சமூகக் கருத்தியலிலும் உண்டுதானே " என்று குறிப்பிடுகின்றார். அடுத்த கேள்வியில் " வீட்டைத் திருத்தி முடித்தபின் தான் நாட்டைத் திருத்த முயற்சிக்க வேண்டும் என்னும் வாதம் மட்டுமே இங்கு  மறுக்கப்படுகின்றது " என்று குறிப்பிடுகின்றார். இருப்பதிலேயே குடும்பம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. எனது உடன் பிறந்த தம்பி மிகத்தீவிர பக்தன் .என்னை விட 4 வய்து இளையவன். இருபதுகளில் அவனைத் திருத்த முயற்சித்துவிட்டு பின்பு விட்டுவிட்டேன். கால் நூற்றாண்டிற்கு மேல் ஓடிவிட்டது.  அவனைத் திருத்திவிட்டுத்தான், மாற்றி விட்டுத்தான் நான் நாத்திகம் பேசுவேன் என்று முடிவெடுத்திருந்தால்  வாழ் நாள் முழுக்க நான்  நாத்திகமே பேசியிருக்க முடியாது. இதனை ஆத்திகர்கள் மிகக் கவனமாகச்செய்கின்றார்கள், உனது வீட்டிலேயே பக்தன் இருக்கிறான், நீ நாத்திகம் பேசுகிறேயே என்று கேள்வி கேட்கும்போது தடுமாறத்தேவையில்லை, ஆமாம் அவன் வேறு, நான் வேறு என்று சொல்வது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள்,ஒரே குடும்பத்தில்  இருக்கின்றார்கள், அவர்களை யாரும் கேட்பதில்லை, ஆனால் சமூகக் கருத்தியலில் இருப்பவர்களை நோக்கி இப்படிச்சொல்வது அவர்களைச்செயல்பட விடாமல் ஆக்குவதற்கான ஒரு தந்திரம் என்பதனைக் குறிப்பிடுகின்றார் எனக்கொள்ளலாம். " Every body is unique " ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதுதான் உளவியலின் அடிப்படை. 

               " குடும்பம் ,சமூகம் ஆகிய இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதே நம் எண்ணம். ஒன்று முடித்து இன்னொன்று என்பது நடைமுறைக்கு உகந்ததன்று. இன்னொன்றையும் நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் குடும்பம் என்பதும் சமூகத்தின் ஓர் அங்கம்தான்.எனவே சமூக அளவில் நம் அரசியல் மேலோங்கும்போது ,குடும்பத்திற்குள்ளும் அது ஏற்கப்படும்." எனக் குறிப்பிட்டு விளக்குவது ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

               " போராட்டம்தான் வாழ்க்கை. தொடர்ந்து வீட்டிலும்,வெளியிலும் போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒரு போராட்டத்தில் தோற்று விட்டதால் ,இனி நாம் எந்தப்போருக்கும் தகுதியற்றவர்கள் என்று ஏன் கருத வேண்டும் " என்னும் கேள்வியும்(பக்கம் 16)  அதற்கு முன்னதாக தோழர் வாழ்வில் ஏற்பட்ட உறுத்தலும்,விலகலும் அதனை மாற்றுவதற்கான ஆசிரியரின் விவாதங்களும் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கவை...." குறைகளைச்சுட்டிக் காட்டித் திருத்த முயல்வது ஒரு வகை விமர்சனம். குறைகளைப் பெரிதுபடுத்தி ,கொள்கையிலிருந்தே விரட்டியடிப்பது இன்னொரு வகை. " என விமர்சனங்களை விவரிப்பது மனதில் கொள்ளத்தக்க விமர்சனம். 

                  அரசியல் பணியை எப்படித்தொடங்க வேண்டும்?,செயல்பாடுகளின் தொடக்கம் எப்படி அமைய வேண்டும்?, பெயர் மாற்றம், தமிழில் கையெழுத்திடுவது, சாதி ஒழிப்பு,தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது சாதி அரசியல் ஆகாதா? போன்ற கேள்விகளுக்குப் பதில்களை மிக நேர்மறையானதாகக் கொடுத்திருக்கின்றார். "சமூக அரசியல் கொள்கைகள் தங்கள் மனைவி /கணவனுக்கு உடன்பாடில்லை என்றால் ,குடும்ப நிகழ்வுகளை எந்த அரசியலின் அடிப்படையில் நடத்திச்செல்வது ? " என்னும் கேள்வியும் அதற்கான பதிலும் மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டும் . ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்ட  வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொண்ட இணையர்கள் கூட விவாகரத்து பெற்றுக்கொள்வதை நாம் அறிவோம். இதில் சிக்கல் எங்கே நிகழ்கிறது? வெவ்வேறு கொள்கை உடையவர்கள் கணவன், மனைவியாக வாழ்வதில் உள்ள பிரச்சனைகள், அன்பு செலுத்துதல் , தேயாத கற்களாய் இருந்தால் என்ன செய்வது போன்றவற்றை ஆசிரியரின் பார்வையில் கொடுத்திருக்கின்றார். இன்னும் விரிவாக, பெண்கள் நிறையப் பேர் கலந்துகொண்டு விவாதிக்கும் விவாதக் களமாக இந்தத் தலைப்புகள் மாறவேண்டும். 

                 "நம் பெற்றோர்களிடமும், நம் பிள்ளைகளிடமும் நம் அரசியலைக் கொண்டு செல்வது எப்படி? " என்னும் கேள்வி கேட்டு அதற்கான விடையை விரிவாகவே கொடுத்திருக்கின்றார். பிள்ளைகள் நம் அரசியலுக்கு வருவதில் மிக முக்கியமான பண்பாக நமது நேர்மையும், நமது கொள்கை பிடிப்பும் அமையும் என்பது எனது கருத்தாகும். " மதிக்கப்படும்,நேசிக்கப்படும்,நம்பப்படும் இளைஞர்களே முதிர்ச்சியும் ,பொறுப்பும் மிக்க குடிமக்களாக உருவெடுப்பார்கள் .அத்தகைய பிள்ளைகளோடு ,நம் கொள்கைகள் குறித்து பேசுவதும், அவர்களிடம் கொள்கைப் பிடிப்பை உருவாக்குவதும் எளிய செயலாக இருக்கும் " எனக்குறிப்பிடுகின்றார்.

                 " ஒத்த அரசியல் கருத்துடைய குடும்பத்தினர்,ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் நல்ல பயன்களைத் தர வாய்ப்புண்டா ? " என்னும் கேள்விக்கு " மிக நல்ல பயன்களை விளைவிக்கும் " எனக் குறிப்பிட்டு பல்வேறு செயல்பாட்டு திட்டங்களைக் குறிப்பிடுகின்றார். திராவிடர் கழகத்தால் நடத்தப்படும் குடும்ப விழாக்கள் தரும் பலன்கள் மிக அதிக அளவிலானவை. " எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் பள்ளி நாட்களில் நான் என உறவினர் வீடுகளுக்குச்சென்று வந்ததை விட ,திராவிடர் கழகக் குடும்பங்களுக்குச்சென்று வந்ததுதான் மிகுதி " எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். அதனால் விளைந்த பலன்களைக் குறிப்பிடுகின்றார்.இன்றைய நிலைமையை அது மாற்றும் என்பதையும் குறிப்பிடுகின்றார். 

முடிவாக 
              " குடும்பங்களில் நம் அரசியல் வளரட்டும் !
                இயக்கங்களே நம் குடும்பம் ஆகட்டும் " எனப் புத்தகத்தை முடிக்கின்றார்.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டுதான் சமூகப்பணி ஆற்றுகின்றோம். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு கொடுக்கும் சான்றிதழ் என்பது இன்றியமையாதது.செலுத்திய அன்பு மட்டுமே நற்சான்றிதழுக்கு அச்சாரமாக அமையும்.  குடும்பத்திற்குள் நேர்மறையான விவாதங்களும், வெளிப்படைத் தன்மையான பண நிர்வாகமும்,ஒருவருக்கொருவர் கொடுக்கும் சக மரியாதையும், ஒழுக்கமும் நம் சமூகப்பணி தொய்வின்றி தொடர உதவும் " குடும்பமும் அரசியலும் " என்னும் இந்தப்புத்தகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நூலின் ஆசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருப்பதும்,அந்த எடுத்துக்காட்டுகளை விரிவாக விளக்குவதும் படிப்பவரை அடுத்த கட்ட சமூகப்பணிக்கு ஆயுத்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அமைந்திருக்கிறது. " சாதியும் நானும் " என்னும் தலைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல்வேறு அனுபவக் கட்டுரைகளை வாங்கி இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கியிருப்பதுபோல , 'எனது குடும்பமும் எனது அரசியலும் ' என்னும் தலைப்பில் தோழர்களிடம் கட்டுரைகளை வாங்கி ஒரு புத்தகமாக ஆக்கலாம். அந்தப் புத்தகம் வெவ்வேறு அனுபவங்களை,எதார்த்தமாக  கூறுகின்றபோது இந்தத் தலைப்பு இன்னும் செழுமையாகும் என்ற எண்ணம் இந்த நூலை வாசித்து முடித்தவுடன்  எனக்குத் தோன்றியது.

  

Sunday, 30 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை
ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.



                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..

   

    

Tuesday, 25 September 2018

அண்மையில் படித்த பிடித்த கட்டுரை ...புத்தகங்களின் காட்டில் முகத்தைத் தொலைத்தேன் ....ப..திருமாவேலன்



ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் ‘நான் விரும்பும் தலைவர்' என்ற கட்டுரை கேட்கப்பட்டு இருந்தது. நான் விரும்பும் தலைவராக தந்தை பெரியார் பற்றி எழுதினேன். அதன் தொடக்கம் இப்படி அமைந்திருந்தது.

"யாராலும் அப்படி வாழ முடியாது! வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தமிழகத்தின் நீண்ட வாழ்க்கையை உடைய தலைவர்.

வரலாற்று நிகழ்ச்சியாகவே நிரம்பியவர். வரலாறுகள் யாவும் போராட்டங்களாகவே கண்டவர். அறிவா... அது நாட்டுக்காக! உழைப்பா... அது மக்கள் முன்னேற்றத்துக்காக என்றிருந்தவர்.

கிழடு பட்டாலும் தளராத வலிய நெஞ்சு! கால் தளர்ந்தாலும் தளராத கருத்துத் தெளிவு! தாடி தான் நரைத்தது, சிந்தனை நரைத்ததில்லை. மருத்துவர்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகளே இல்லாதும் நீண்ட ஆயுள்! தளராத உடல்! தமிழகத்தின் உந்து சக்தி!

பரம்பரை அடிமைகளின் பாசமுள்ள தலைவன்! ஏழைகளின் காசில்லாத வக்கீல்!

நீதிமன்றங்கள் அவருக்கு விவாத மேடைகள்! குற்றவாளிக் கூண்டுகளோ அவருக்குக் ‘குளு குளு அறைகள்!' சிறைச்சாலைகள் அவருக்கு மருத்துவமனைகள்! மேடைகள் அவருடைய நூல் நிலையங்கள்! ஊர் சுற்றும் உழைப்பே அவருக்கு உற்சாகம்!

போராடுவதுதான் இந்த அரசரின் பொழுது போக்கு! சாதி என்பதே அவருக்குத் தையல் கிழியாத செருப்பு! தன்மானமே அவருக்குக் கைத்தடி! கடவுள் எதிர்ப்பே அவரின் கருப்புக் சட்டை! பண்பாடு அவரின் வெண் தாடி!

அவருடைய புன்சிரிப்பு எதிரிகளுக்குப் புகையும் எரிமலை! அறிவா.. அதற்குக் கூர்மையா... அதை அவரின் ஒளிமயமான கண்களில் அல்லவா காண வேண்டும்!

வீரமா... 'வெங்காயம்' என்று அவர் வெகுண்டு திட்டும்போது வெளிப்படும் நெருப்பல்லவா? இப்படி எழுதிக் கொண்டே போகலாம்! அதனால் தான் அவர் நான் விரும்பும் தலைவர்! - என்று எழுதி இருந்தேன். பதினான்கு வயதில் தந்தை பெரியார் குறித்த ஆழமான புரிதலுடன் நான் எழுதி இருக்கிறேன் என நினைத்து விடா தீர்கள். "அதனால்தான் அவர் நான் விரும்பும் தலைவர்' என்பது மட்டும்தான் எனக்குச் சொந்தமானது. மற்ற அனைத்து வரிகளுக்கும் சொந்தமானவர் பேராசிரியர் அ. அறிவொளி!

நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை, முகத்தில் தாடி, உடல் முழுக்க காவி வேட்டி என்ற உருவம் தான் அ.அறிவொளி என்றால் நினைவுக்கு வரும். பட்டிமன்றப் பேச்சாளராக உள்ளே நுழைந்து, ஆன்மிக சொற்பொழிவா ளராக மறைந்துபோன அவர், தனது தொடக்க காலத்தில் எழுதிய நூல்; 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்!''

அன்பரசி வெளியீட்டகம், வடக்குத் தெரு, பொருள்வை, சிக்கல் என்ற முகவரியில் இருந்து 1979ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் அதன் பிறகு மறுபதிப்பு கண்டதாக நான் அறியவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக அறிவொளி அப்போது இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நிர்வாகத்துடன் அவர் நடத்திய உரிமைப் போராட்டத்தின் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனது தந்தையாருக்கு நல்ல நண்பர். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆண்டு விழாவில் ஆண்டுதோறும் பங்கெடுக்கும் முகங்களில் அறிவொளியும் ஒருவர். அந்த வகையில் அப்பா மூலமாக என் கைக்கு இந்தப் புத்தகம் வந்து சேர்ந்தது.

இந்தப் புத்தகத்தை நான் படித்தது எனது ஒன்பதாம் வகுப்பில். எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, திருச்சியில் இருந்து ஒரு மாணவன் புதிதாக வந்து எங்கள் இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளியில் சேர்ந்தான். அவன் பெயர்: கா.திருமாவளவன். 'திருமா'க்கள் பெயர் ஒற்றுமையால் ஒன்று சேர்ந்தார்கள். திருச்சி பேராசிரியர் க.நெடுஞ்செழியன் - சக்குபாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர் இவர். திராவிடர் கழகக் குடும்பம். திருச்சி அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கும் நெருக்கமான வர்கள். திருமாவளவன் மூலமாக மூன்று புத்தகங்களைப் பெற்றேன். கடவுளர் கதைகள், சங்கராச்சாரி யார்?, இன்னொரு புத்தகம். இம்மூன்றும் தான் என்னுள் ஒரு விதமான திராவிட ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி யவை. அதுவும் 'கடவுளர் கதைகள்' என்ற நூல் புராண ஆபாசங்களை அம்பலப் படுத்தியது. சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பற்றாளர், தமிழுக்கு விரோதி என்பது மட்டுமே அன்றைய எனது எதிர்ப்பின் புரிதல். இந்த அடித்தளத்தில் இருந்த எனக்கு, அறிவொளியின், 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்' நூல் ஈர்ப்பானதாக இருந்தது. ஈர்ப்பின் முதல் காரணம், தலைப்பு.



அந்த வயதில் அதில் இருந்த பல விமர்சனங்கள், சொற்கள், தர்க்கங்கள் புரியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் அழகான மொழிநடை, வர்ணனை ஆகியவை பிடித்திருந்தன. பெரியாரை விமர்சிக்கிறது இந்நூல், ஆனால் அழகாக. பெரியாரை சில இடங்களில் நிராகரிக்கிறது இந்நூல், ஆனால் மரியாதையாக. அதனால் தான் இது பிடித்தமானதாக இருந்தது.

பெரியாரை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக அன்று நான் நினைத்திருந்த காலம் அது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வராக நான் இன்று நினைக்கவில்லை. பெரியார் மட்டுமல்ல, எவரும் விமர் சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படிக் கொண்டுபோய் இருத்தி விடுவது அவர்களுக்கே பெருமை சேர்க்காது. இன்னும் சொன்னால் அந்த மகுடத்தை அவர்களே விரும்பமாட்டார்கள்.

மார்க்ஸ், ‘அயோத்திதாசர், ம.வெ.சிங்கார வேலர், அம்பேத்கர், பெரியார் என்ற சிந்தனையாளர்கள் நேரடியாய் எழுதியதை, பேசியதைவிட மற்றவர்களுக்கு மறுப்பாய், எதிர்வினையாய் எழுதியது, பேசியது தான் அதிகம். அந்த வகையில் இந்த நூல் அன்று (1980களில்) பிடிக்காமல் இருந்தது. பின்னர் (2000ஆம் ஆண்டுகளில்) பிடித்தது. எது பிடித்தது, எது பிடிக்காமல் போகிறது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபாடு இருக்கும். பெரியாரின் செயல்பாடுகளுக்கு மனோ தத்துவ இயல் அடிப்படையிலும், ராசி அடிப்படையிலும் செய்யப்பட்ட விமர்சனங் களை மட்டும் புறக்கணித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

பெரியார் சராசரி மனிதர் அல்ல. சராசரி தலைவரும் அல்ல. சராசரி தத்துவவாதியும் அல்ல. அதை அறிவொளி ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருந்துள்ளார். அதனால்தான் பெரியாரைப் பார்த்துப் பிரமித்துப் போய் நிற்கிறார். "பெரியார் சுயநலவாதியாகவோ, சூழ்ச்சி வஞ்சகம் உடையவராகவோ இளமை முதல் இருந்ததற்கான சாட்சி யங்கள் எங்குமே கிடைக்கவில்லை. இத னால் அவரிடம் பகைவரையும் மதிக்கும் பண்பாடு மிகுதியாக இருந்தது.

மேடையும் எழுது கோலும் அவருடைய உண்மையான இதயத்தைப் படம் பிடித்து விடவில்லை. அவரின் உண்மையான இதயம் அப்பழுக்கற்ற பண்பானது. (பக்.19)

உண்மைதான்! பெரியாரின் பேச்சுக்களின் மூலமாக அவர் எழுதிய கட்டுரைகளின் மூலமாக மட்டுமே பெரியாரை இனம் கண்டுவிட முடியாது. பேச்சும், எழுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வடிவங்களே. செயலும், நடத்தையுமே பரிபூரணமானது. வரிவானது. அத்தகைய செயல்கள், நடத் தைகள் கொண்ட பெரியாரின் பரிபூரண வாழ்க்கை வரலாறு இன்னமும் எழுதப்பட வில்லை . தானே எழுதிய சுயசரிதையில் சில நிகழ்வுகளைப் பெரியார் குறிப்பிடுவார். அதேபோல் ஏன் காங்கிரசை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்குவார், தன்னை நோக்கி அழைத்தது யார் என்று விவரிப்பார், 'மாட்டுக் கொட்டகையில் நடந்த மகத்தான விருந்து' என்றொரு கட்டுரை, தனது தாயாரைப்பற்றி எழுதியது, மனைவி நாகம்மாள் பற்றி எழுதியது - இது போன்ற தரவுகள் மூலமாகத்தான் பெரியாரின் உண்மையான இதயத்தை உணர முடியும். இது புரியாமல் எழுத்தில், பேச்சில் சில சொற்களை முன்னும் பின்னும் வெட்டி எடுத்துக் கொண்டு கட்டுரையாக்கும் விமர்சனப் புலிகள் மலிந்து போன இந்தக் காலத்தில் அறிவொளி வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

தேர்தல் அரசியலில் இருந்து பெரியார் விலகி இருந்ததைத் தான் அவர் செய்த பெரும் தவறு என்கிறார் அறிவொளி. 29 பதவிகளை வகித்தவர் பெரியார். காந்தியாரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 29 பதவிகளையும் தூக்கி எறிந்தவர். இரண்டு முறை கவர்னர்கள் சந்தித்து, சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றபோது பெரியார் மறுத்தார்.

பதவிக்குப் போனவன் மனதில் பட்டதை பேச முடி யாது, வாக்கு, வாங்குவதற்காக மக்களுக்கு பிடித்ததைத் தான் பேச வேண்டும் என்ற பெரியார், பதவிக்குப் போனவர்கள் யோக்கியர்களாக இருக்க முடியாது என்றும் சொன்னார். உச்சகட்டமாக, 'நானோ, அம்பேத்கரோ கூட பதவிக்குப் போய் விட்டால் யோக்கியமாக இருக்க முடியாது' என்றார். அரசியலை பணநாயகம் என்றும் விமர்சித்தார். ஆனால் பெரியாரைப் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங் கியதால் தான் அரசியல் பணமயமானது என்று திருப்பிப் போடுகிறார் அறிவாளி.

''கை சுத்தமானவர்களே ஆளமுடியு மென்ற காலத்தில் இவர் ஆட்சி செய்திருந்தால் அரசியல் சாக்கடைகள் சந்தனச் சந்தையாகியிருக்கக் கூடுமே?

இவரைப் போல் தியாகமே தலை மைக்குத் தேவையானதென்றால் முட்டாள் களும் படிப்பை விலைபேசும் பச்சோந்தி களும் போட்டியிடாமல் அரசியலை விட்டே விலகியிருப்பார்களே! நம்மி டையே ஒரு லெனின் பிறந்திருந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்கத் தவறியதால் 'பெரியார்' என்ற பெயரோடு முடிந்து போய்விட்டார்..." (பக். 73-76) என்கிறார் அறிவொளி. தேசிய விடுதலை அரசியலில் இருந்த காங்கிரஸ் தியாகிகளுக்கு இரட்டை யாட்சி முறை ஆட்சி அதிகாரத்தை சுவைக்க ஏற்பட்ட தவிப்பும் சமூக விடுதலை அரசியலில் இருந்த நீதிக் கட்சிப் பெரிய மனிதர்களில் சிலர் பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த சுயநலமும்தான் தேர்தல் அரசியலை பெரியார் புறக் கணிக்கக் காரணம். அதிகாரத்தில் இருந்து செய்ய முடிந்ததைவிட வெளியில் இருந்து மிரட்டிச் செய்ய வைப்பதே சரியானது, போதுமானது என்று பெரியார் நினைத்தி ருக்கிறார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அவரது இறுதிச் சாதனைச் சட்டமாக ஆக்கப் பட்டதும் தேர்தலில் நிற்காமலேயே பதவியில் உட்காராமலேயே பெரியார் நிகழ்த்திய சாதனைகள்.

பெரியாரின் போராட்டங்களைப் 1979 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் இது. நான் படித்தது 1984-85ஆம் ஆண்டு களில் இன்றளவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக  பார்த்துத் தான் அறிவொளி அதிகம் மலைத்திருப்பார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

காற்றினால் சுழற்றப்படும் காற்றாடி, காற்றையே எதிர்க்கிறது. எதிர்ப்பதனா லேயே மதிக்கப்படுகிறது.

அப்படித்தான் ஒரு போராட்டத்தாலே தலைவரான இவர் பல போராட்டங் களைச் செய்தார். அது தான் அவரின் இயல்பாகி விட்டது. (பக். 115) என்பார். அறிவொளி. பெரியாரை அன்று பலரும் எதிர்க்கவும், மதிக்கவும், இன்று பலரும் எதிர்க்கவும் மதிக்கவும் அவரது போர்க் குணமே காரணம். அதனால்தான் இறுதியில் அறிவொளி...

"அவரை யார் வேண்டுமானாலும் குறை கூறலாம்!

அவரை யார் வேண்டுமானாலும் திறனாய்வு செய்யலாம்.

ஆனால் அவரை அவமதிப்பதை மட்டும் யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏன்! அவரை மதிக்காமல் இருப்பது கூடத் தவறல்லவா? (பக். 124)இருக்கக் காரணம் கருத்தில் தெளிவும் அதன் மொழிநடையும். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நமக்கு எதிரான கருத்துகளையும், 'சரிதானே' என்று மயக்கிவிடும் சொற்கோவைகள்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் பெரியார் குறித்த எத்தனையோ புத்தகங்களைப் வாசித்தாலும், பெரியாரின் எழுத்து களை புத்தகங்களாக படித்திருந்தாலும், குடி அரசு மற்றும் விடுதலை இதழ்களில் அவரது படைப்புகளை நேரடியாக வாசித்திருந் தாலும் முதலில் படித்த 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும் 'நூல் இன்று வரை நினைவில் இருந்து நிழலாடுவதாக இருக்கிறது. இப்படித் தரப்பட்ட தன்மை ஒரு சில நூல்களுக்குத் தான் இருக்கும்'.

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதை யாருக்குப் படைத்துள்ளார் தெரியுமா? இராஜாஜிக்கு!

பெரியார் இராஜாஜியை 'அன்பான எதிரி' என்பார். அறிவொளியும் அப்படித் தான்!

- நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’ செப். 2018, ப. 24-27)
நன்றி: விடுதலை ஞாயிறு மலர் 22.09.2018

Sunday, 23 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம்..சுப்ரபாரதி மணியன்

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம் (குறு நாவல்கள் தொகுப்பு )
நூலின் ஆசிரியர்             : சுப்ரபாரதி மணியன்
வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98.
முதல் பதிப்பு                : டிசம்பர் 2011, 208 பக்கங்கள், விலை ரூ 125 /-
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 215669



                           
                            தமிழில் சிறுகதைத் தொகுப்புகள் உண்டு,நாவல் உண்டு ஆனால் இந்த நூல் குறு நாவல்கள் தொகுப்பு என இருந்தது. ஒவ்வொரு குறு நாவலும் சுமார் 35, 40 பக்கங்களில் ஏழு தலைப்புகளில் இருக்கும் நூல். கடைசிக் கதையான மரபு சிறுகதை வடிவில்தான் உள்ளது. ஒவ்வொரு குறு நாவலும் வெவ்வேறு களங்களை, தளங்களை தன்னகத்தே கொண்டு தனித்தன்மையாக விளங்குகின்ற தொகுப்பாக இந்த நூல் இருக்கின்றது.
.
                           தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தான் நம்முடைய கட்சி வாக்குகள் பெற முடியும், செல்வாக்கு பெறமுடியும் என்று கருதி , சில தறுதலைகள் தலைவர்கள் என்னும் பெயரில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், முதல் கதையான 'நகரம்'90 ' தனித்துவம் பெறுகின்றது. எளிய மனிதர்களின் வாழ்வில் மதக்கலவரம் எவ்வளவு துயரங்களைக் கொண்டுவரும் என்பதனைத் தனது அனுபவத்தின் மூலமாகவே உணர்ந்த காரணத்தால் துயரம் தோய்ந்த எழுத்துகளால் இந்தக் கதையை எழுதியுள்ளார் போலும்.ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழும் மல்லேஸ், அவளின் மகள் சாந்தா,அவரின் மகன் பிரகாஷ்,அவரின் மனைவி சரஸ்வதி என செகந்தராபாத்தில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை நமது கண் முன்னால் கொண்டுவரும் கதையாசிரியர் அடுத்தடுத்து பழைய நகரத்திலும் புதிய நகரத்திலும் மதக் கலவரம் பரவும் விதத்தை விவரிக்கின்றார். இரண்டு மதத்தவரும் கொன்று குவித்த மனிதர்கள். எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் தாங்கள் பிறந்த மதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட மனிதர்கள் என அவர் விவரிக்கும் விதம் கொடுமையாக இருக்கின்றது.

" கும்பலா வர்றாங்களாம்வீட்டுக்குள்ள புகுந்து கொழந்தைக,பெரியவங்க வித்யாசம் பாக்காமே குத்துறாங்களாம்.ஒரு குத்துன்னு இல்லை, சாகுறவரைக்கும் ..பேப்பர்ல போடறான் பாருங்க,கோரம் "
ரத்தத்தில் மிதக்கும் பிணங்கள்.மொத்தமாய் பிணக்குவியலாய் வீடுகளில் கிடந்தவர்கள்.தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வீடுகள்..யாரின் வேலை? எந்த மிருகம் தன் விசுபரூபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது ? " பக்கம் 9.....கடைசியில் மல்லேஸ் வீட்டிலும் கத்திக்குத்து விழுகின்றது. "சரஸ்வதிக்கு வயிற்றில் குத்து. பிரகாஷ்க்கு தலையில் வெட்டு .மல்லேஸ்ஸேன் வலது கை சதை தொங்கிக்கொண்டிருந்தது. சாந்தாவுக்குப் பின்புறத்தில் குத்து,குப்புற ரத்தத்தில் இருந்தாள். அஜ்மத் அலி அசைவற்றிருந்தான் " என அனைவருக்கும் நிகழ்ந்த கொடுமைகளை விவரிக்கும் கதை ஆசிரியர், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கலவரம் அடங்கியதைக் குறிப்பிடுகின்றார். மருத்துவமனையில் படுத்திருக்கும் மல்லேஸ் உள்ளிட்ட நோயாளிகளைப் பார்க்க புது முதலமைச்சர் வருகின்றார். " இத்தனை பலி எதுக்குடா? உனக்கு நாற்காலி வேணுமுன்னுதானா? ? " உரத்துக்கேட்க வேண்டும் என நினைத்தார் மல்லேஸ்(பக்கம் 38 ) ......நிகழ்காலத்தில் சமூகப் பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கதை இது. மத வெறி அமைப்புகளை, எந்த மதமாக இருந்தாலும் ஊக்குவிப்பது என்பது நல்ல பாம்பை வீட்டிற்குள் வரவைப்பது போன்றது என்பதனை இக்கதையை வாசிப்பவர்கள் உணரலாம். 



                    சாகப்போகும் சீனிவாசன், தன் நிலையிலிருந்து மாறி சாகப்போகும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் நிகழ்வைச்சொல்லும் குறு நாவல் 'வாழ்வின் தீர்வு'. எளிமையான மனிதர்கள், ' சீனிவாசா...சீனிவாசா .." " கடவுளைக் கூப்பிடுகிறாயா ..." இல்லை, அவன் செத்தே பல நூற்றாண்டுகள் ஆகின்றன. என் பெயர்தான் சீனிவாசன்.என பெயரை நானே சொல்லிக்கொள்கிறேன்.இதில்தான் எத்தனை சந்தோஷம் " (பக்கம் 45) ....நிறைய உரையாடல்கள் தனக்குள்ளும் சுற்றி இருப்பவர்களுடனும் சீனிவாசன் நிகழ்த்துகின்றான். அதில் கேலி,கிண்டல்,தத்துவம், ஞானம் என அனைத்தும் கலந்ததாக இருக்கின்றது. 

                   "இருள் இசை" என்னும் தலைப்பே இருண்மையைக் குறிப்பிடுவது போல கதையும் எதிர் விளைவைச்சொல்லும் கதைதான். புல்லாங்குழல் வாசிப்பையும், பாடல் பாடுவதையும் தொழிலாகக்கொண்ட ஜெகன் , தான் பிறந்த ஊரில் தனக்கென யாரும் இல்லாத நிலையில் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போவதும் அங்கு பழைய நினைவுகளையும் இன்றைய எதார்த்தையும் இணைத்து பார்ப்பதையும் கதையாக ஆக்கியிருக்கின்றர் சுப்ரபாரதி மணியன்.கால் நூற்றாண்டாக சொந்த ஊருக்குப் போகாமல் இருப்பது என்பதே தனிமைப்பட்டு போவதுதான்.கிராமத்தில் நிலவும் சாதி, அதன் அடுக்குமுறை, அதில் தன்னை சாதிப்படிக்கட்டில் ஒரு இடத்தில் நிறுத்திப் பார்க்கும் உடன் படித்தவர்கள் என விவரிக்கின்றார். வித்தியாசமான கற்பனையும் எதார்த்தமும் கலந்து படைக்கப்பட்ட குறு நாவல் 'இருள் இசை'.

                   பண்ணையாரின் ஆசை நாயகி என்று பெயர் எடுத்த பெண்ணைப் பற்றியும் அவளின் வாழ்க்கை பற்றியும் கடைசியில் பஞ்சம் வந்தபோது பண்ணையார் அனுப்பி வைத்த நெல் மூட்டையை அவிழ்த்துக்கூடப்பார்க்காமல், பண்ணையாரின் மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய கதை 'கவுண்டர் கிளப்' .

                  சிக்கல்களாக இருக்கும் வாழ்க்கை, சின்னச்சின்ன விசயங்களில் கூட ஏற்படும் மனத்தாங்கல்களை ,கோபத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள இயலாமல், கோபத்தை விழுங்கி வாழும் வாழ்க்கையில் தீர்வாக குடிப்பதும் ,புகை பிடிப்பதும் ஆகிவிடுமா என்னும் கேள்விக்கு விடையாக விவரிக்கும் குறு நாவலாக ,இந்த நூலின் தலைப்பான 'வேறிடம் ' என்னும் அமைந்திருக்கின்றது.

                  அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களாக வளரும் அடியாட்கள், அவர்களின் அடிதடிகள், அதில் ஒரு ஓவியக்காரனின் மனதில் பதிந்த நிகழ்வு, அந்த நிகழ்வினை வரைந்த ஓவியக்காரன், அதனால் ஏற்படும் இன்னல்கள் என விவரிக்கும் கதை 'வர்ணங்களில் ' என்னும் கதை.

                  கலவரம், கலவரத்திற்கு காவலாக வரும் ஒரு போலிஸ்காரனிடம் அநியாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சுகந்தி, அவளுக்கு துணையாக நியாயம் கேட்க துணை நிற்கும் அவளின் கணவன் என விவரிக்கும் கதை 'இன்னொரு நாளை '.

                   "முன்பெல்லாம் நூலுக்கு பற்றாக்குறை இல்லாமல் கைத்தறி துணிகளுக்கு கிராக்கியும் இருந்த போது இப்படி அந்தத் தெருவில் நடந்து போகிறபோது  தெருமுழுதும் பாடுகிற மண் புழுதியும் ,தூசியும், கற்களும் மொத்தமாய் தெருவும் சடக் சடக் என்கிற நெய்கிற தறிகளின் சப்தத்தை எதிரொலிக்கும்.ஆனால் அந்தச்சத்தம் நின்று போயிருந்தது முழுவதுமாய் " என நெசவையும் , நெய்யும் மனிதர்களைப் பற்றியும் விவரிக்கும் கதை 'மரபு '.இந்தக் கால்தா, இந்தக் கைதா என்னும் குரலினைக் கேட்கும் நடேசு அழுவதை நூலாசிரியர் விவரிப்பதை வாசிக்கும்போது " கை வீசம்மா, கை வீசு, மிட்டாய் வாங்கலாம் கை வீசு " எனப் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அழுதுகொண்டே பாடுவதைக் கேட்பது போல இருந்தது.

                மொத்தத்தில் இந்தத் தொகுதியில் உள்ள கதைகள், உற்சாகமூட்டும் கதைகள் இல்லை, ஆனால் உண்மையைச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அலங்கார வார்த்தைகள் இல்லை, ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகள் உள்ளன. பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் துணைக்கோட்டப்பொறியாளராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் சுப்ரமாரதி மணியன் இதுவரை 7  நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு பயண அனுபவக்கட்டுரைகள் என 35 புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பது பாரட்டிற்குரியது.

             நூலின் ஆரம்பித்தில் உல்ள 'சுப்ரபாரதி மணியன் : சில விமர்சனக்குறிப்புகள் " என்னும் பகுதி, பல்வேறு இதழ்கள், எழுத்தாளர்கள் பார்வையில் சுப்ரமணிய பாரதி- எனும் எழுத்தாளரைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. மிக அருமையான குறிப்புகள் இவை. முதன் முதலில் சுப்ரமணிய பாரதி என்னும் எழுத்தாளரை வாசிப்பவருக்கு அவரைப் பற்றிய ஒரு புரிதலை இந்தப் பகுதி தரும்.

           பதிப்பகத்தார் தங்கள் பதிப்புரையில் " கதைகளில் வரும் ஒவ்வொரு வரியிலும் மனித உணர்வுகளை உயிரோட்டமாகப் பின்னிக் காட்டுகிறார் நூலாசிரியர்.இவை போன்ற கதைகள் மனித இதய வாசலைத் திறந்து காட்டி ,மனித நேயம் என்கிற வாசனையை வீசச்செய்யும் என்று நம்பலாம். மனித வாழ்க்கையின் கூர்மையை சுய நலக்காரர்கள் மழுங்கடித்துக்கொண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் தங்கள் பேனா முனையால் கூர் தீட்டவே முனைத்து நிற்கிறார்கள் " என்று குறிப்பிடுகின்றார்கள்.உண்மைதான். சில கதைகளில் விவிரிப்பு கொஞ்சம் கூடுதலாகவே  இருந்தாலும், சுப்ரபாரதி மணியன் தன்னுடைய பேனா முனையால் மனித நேயத்தை கூர் தீட்டவே இக்கதைகளை எழுதியிருக்கின்றார் எனலாம். 

               





Sunday, 16 September 2018

எங்க ஆத்தக் காணோம்.......

எங்க ஆத்தக்  காணோம்.......
                வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றைக் காணவில்லை,கண்டு பிடித்துக்கொடுங்கள்  என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நகைச்சுவை புகழ்பெற்றது. அதனைப் போல பார்ப்பனர்கள் தங்களுடைய ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் 'சரஸ்வதி ' ஆற்றைக் காணவில்லை என்று ரொம்ப காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையத்தில சொல்லிட்டாக,ஐரோப்பாவில் இருக்கிற அறிவியல் அறிஞர் எல்லாம் சொல்லிட்டாக,இப்படி ஒரு நதி இந்தியாவிலே இருந்துச்சு,ஓடுச்சுன்னு சொல்லிட்டாக, ஆனா அந்த 'சரஸ்வதி ' ஆற்றைக் காணலையே, அந்த 'சரஸ்வதி ஆற்றைக்காணலியேன்னு சொல்லிப் பார்ப்பனர்கள் புலம்பியது மட்டும் இல்லாமல், 2014-ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் 'நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சுட்டோம், நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சிட்டோம்'ன்னு சொன்னாங்க. அந்த சரஸ்வதியைக் காணாம்ன்னு தேடியதைப்பற்றி ஒரு 20 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று  நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்திருக்கிறது.(21.07.2018) - தமிழ் இந்து பத்திரிக்கையில் ந. வினோத் குமார் என்பவர் எழுதியிருந்த 'எங்கே போனாள் சரஸ்வதி' என்னும் கட்டுரையைப் படித்தவுடன் அந்த இணைய தளத்திற்குச்சென்று பார்த்தேன். 

               நம் விடுதலை இணையதளமான viduthalai.in என்னும் இணையதளத்திற்குள் சென்றாலே, periyar.tv என்னும் இணையதளமும் வரும். அதில் உள்ளே சென்றால் நமது கழக நிகழ்வுகளை, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையின் வீடியோவைப் பார்க்கலாம். அப்படி newyork times என்னும் இணையதளத்திற்குள் சென்றால் op docs என்னும் இணையதளம் வருகின்றது.அந்த இணையதளத்திற்குள் சென்றால் நூற்றக்கணக்கான ஆவணப்படங்கள் இருக்கின்றன.உலகம் முழுவதும் இருப்பவர்கள் அனுப்பக்கூடிய ஆவணப்படங்களைப் பார்த்து , அதில் வெளியிடத்தக்கது என்று நினைக்கும் ஆவணப்படங்களை அப்பத்திரிக்கையின் இணையதள இணைப்பில் வெளியிடுகின்றார்கள்.அதற்கான விண்ணப்ப படிவம் அந்த இணையதளத்திலேயே இருக்கின்றது. அந்த இணைப்பின் நோக்கமே ஆவணப்படத்தின் மூலமாக நேர்மறையான விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'Searching for Saraswati 'என்னும் ஆவணப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். சிர்லி ஆபிரகாம்,அமித் மாதேசியா ஆகியோர் இந்தக் ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.

             ஹரியானாவில் 2015-ஆம் ஆண்டு 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்ததாக அந்த மாநிலத்தின் அரசாங்கமே அறிவித்தது நமக்கு நினைவிருக்கும். அந்த ஆற்றுக்காக உடனடியாக 50 கோடி ஒதுக்கினார்கள். கண்டு பிடித்த நதி இப்போது ஓடுகின்றதா? எனும் கேள்வி கேட்பார் இன்று யாருமில்லை. எதற்காக அந்த 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்தார்கள்,அவர்களின் நோக்கமென்ன, மூட நம்பிக்கையை ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விளக்குவதுதான் இந்த 'சரஸ்வதியைத் தேடி ' என்னும் ஆவணப்படம். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் இத்தனை நாட்கள் குடிக்காத பிள்ளையார், இப்போ எப்படி திடீரென்று பால் குடிக்கிறார் என்னும் கேள்வி கேட்கும் ஞானமின்றி, பிள்ளையாருக்கு பால் கொடுக்க பக்தர்கள் பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் , சென்னையில் தமுக்கு அடித்து பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று வீதிக்கு வந்து நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் தொண்டர்களாகிய என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இப்படம் பார்த்த அனுபவம் இருந்தது. 

            பழங்கால சரஸ்வதியைத் தேடும் பயணம் முடிவில் ஹரியானாவில் முடிந்தது என்றுதான் இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.இது ஒரு அதிசயம்(miracle). நீங்கள் படித்த சரஸ்வதி நதி உங்கள் கண்முன்னால் இருக்கின்றது.பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்த நதித்தேடலை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. ஹரியானா மாநிலம் இதற்கென 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.முகாவலி என்னும் கிராமத்தில் சரஸ்வதி நதியைத் தோண்டும் பணி ஆரம்பித்திருக்கின்றது. எனும் டைட்டிலோடு ஆரம்பிக்கின்றது. இந்துத்துவப் பார்ப்பனர்களின் சூதுவினை அறியாத சகிராம் காசியப் என்னும் விவசாயி,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சரஸ்வதி தன்னுடைய வயலில் தோன்றப்போவதாக நம்புகின்றார். சரஸ்வதி நதி மீண்டும் தோன்றும்வரை கிணற்றுக்குப்பக்கத்திலேயே பூசை செய்யப்போவதாக அறிவிக்கின்றார். 

           அங்கே கோபல தாஸ் என்னும் பார்ப்பன பூசாரி வருகின்றார். நான் இந்து. அதனால் சரஸ்வதி நதி தோன்றப்போகும் இடத்தை வணங்க வந்திருக்கின்றேன் என்று சொல்கின்றார்.அரசாங்கம் இங்கு சரஸ்வதி நதி ஓடப்போவதாக அறிவித்திருக்கின்றது.நம் பகுதியில் இதற்காக நாம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சொல்லும் கோபாலதாஸ் என்னும் பார்ப்பனர் அதற்கான திட்டங்களைச்சொல்கின்றார்.ஊர் மக்களைத் திரட்டுகின்றார். புனிதமான சரஸ்வதி நதி மீண்டும் தோன்றுவது நாம் செய்த பாக்கியம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகத்திற்கு தலைமையாக ஆக்குவேன் என்று சொல்கின்றார், நாம் கங்கை-யமுனை, சரஸ்வதி நதிகளின் மூலமாக இந்தியாவை உலகத்தின் தலைமையாக ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றார்.தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து பாட்டிலில் எடுக்கப்பட்ட தண்ணீரை சரஸ்வதி நதியின் தண்ணீர் என்று மக்கள் மேல் தெளிக்கின்றார்கள்.மக்கள் மண்பானைகளில் தெய்வத்தின் தண்ணீர் என்று பூக்களைச்சூட்டி வங்குகின்றார்கள். சரஸ்வதி, கங்கை, யமுனை என்று மூன்று பெண்களை வேடமிட வைத்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.பண வசூல் செய்கின்றார்கள். மக்கள் பணத்தை தட்டுகளில் வந்து கொட்டுகின்றார்கள்.சரஸ்வதி நதியின் தண்ணீர் தீராத நோயை எல்லாம் தீர்க்கிறது,இருதய நோய், தொழு நோய் எல்லாம் இந்தத் தண்ணீரைக் குடித்ததால் சரியாகி விடுகின்றது,ஒரு பெண் வந்தார், அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. இந்தத் தண்ணீரைக் கொடுத்தேன். இதய ஓட்டை சரியாகி விட்டது. மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படிப்பட்ட மருந்து  என்று சொல்வதைக் காட்டிவிட்டு , அடுத்து அந்த நீரில் தவளை மற்றும் பல பூச்சிகள் செத்துக்கிடப்பதைக் காட்டுகின்றார்கள்.அந்த இடத்தில் உணவு தயாரித்து பலருக்கும் கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு ஜர்னல்சிங் என்னும் விவசாயி மற்றும் பி.பி கபூர் எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இருவரும் வருகிறார்கள்

           அவர்களிடம் இந்த இடத்தில் சரஸ்வதி நதி தண்ணீர் வருவதாக சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இங்கு வரும் தண்ணீரை விட பக்கத்தில் இருக்கும் கிணற்று ஊற்றில் நிறையத் தண்ணீர் வருகின்றது. ஆனால் சரஸ்வதி நதியினை ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுதான் சரஸ்வதி நதி நீர் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள். ஜர்னல்சிங் எங்கே அந்த அறிக்கை இருக்கிறது  என்று கேட்கின்றார். அவர்கள் தங்களிடம் அறிக்கை இல்லை என்று சொல்கின்றார்கள்.புனித நூலில் இருக்கிறது. உயர்ஜாதி பிராமணர்களாகிய நாங்கள் இதனை நம்புகின்றோம் என்று பதில் சொல்கின்றார்கள்.இல்லை, இது சரஸ்வதி நதியின் நீர் இல்லை என்று அழுத்தமாக ஜர்னல்சிங்க் சொல்கின்றார். கபூர் இஸ்ரோ உட்பட பல நிறுவனங்களுக்கு 10 முதல் 15 கிலோ வரை கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அனுப்பியுள்ள பதில்களில் அப்படி ஒரு நதி இல்லை என்றே வந்திருப்பதாகவும் சான்றுகளுடன் காட்டுகின்றார்.கற்பனையான சரஸ்வதி நதியை அரசாங்கம் கொண்டுவந்தால், அடுத்து கற்பனையான இராமன், இராவணனை எல்லாம் அரசாங்கம் உயிரோடு கொண்டுவருமா ? என்று ஜர்னல்சிங் கேட்கின்றார். அதற்கு அந்த கோபாலதாஸ் எனும் பார்ப்பனபூசாரி கடவுள் தன் ரகசியங்களை அறிய அனுமதிப்பதில்லை எனக்கூறி கல்பனா சாவ்லா இறந்ததை உதாரணம் காட்டுகிறார், கடவுளின் ரகசியங்களை அறிந்து வந்த கல்பனா சாவ்லா பூமிக்கு வரும்முன் இறக்கும் படி கடவுள் செய்து விட்டாராம். இவர்களெல்லாம் சரஸ்வதி வந்து விட்டால் உலகின் முதன்மை விண்வெளி நிறுவனமாக உள்ள நாசாவை,அமெரிக்காவை முந்தி விடுவார்களாம்.

               அரசு அதிகாரிகள் ஒன்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் பேசுகின்றார்கள்.சரஸ்வதியின் கதை அறிவியலின் கதை என்று பிரச்சாரப்பயணம் போகின்றார்கள்.மனிதர்களால் நதியை உருவாக்க முடியுமா? என்று கேட்கின்றார்கள் .ஆனால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சரஸ்வதி நதிக்கரையில் பூசைகள் நடைபெறும் என்று அறிவிக்கின்றார்கள். உணமையாக நடந்த பல நிகழ்வுகளை, பேட்டிகளை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள். அரசு அதிகாரிகள், தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு நன்றாக சிரிக்கலாம், அப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.கடைசியில் ஜர்னல்சிங், சகிராம் காசியப்பிடம் கேள்விகளாகக் கேட்கின்றார். நோயெல்லாம் இந்த நீர் தீர்த்துவிடுமென்றால், இந்த நீரை அப்படியே மருத்துவமனையில் வைத்து எல்லா நோயையும் தீர்த்து விடலாமே, எதற்கு மருந்தும் அறுவை சிகிச்சையும் எனக் கேட்கின்றார்.

              சென்னை முதல் சேலத்திற்கு எட்டு வழிச்சாலை என்று இன்று தமிழகத்தில் விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துதல் போல ஹரியானா அரசாங்கம் 10 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்த நிலங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆறுபோல வெட்டி அதில் மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை எடுத்து , சரஸ்வதி என்னும் பெயரில் இருக்கும் ஓடையில் விடுகின்றார்கள். இதனால் அந்தப் பத்து கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் கீழே போயிருக்கின்றது. விவசாயம் செய்ய முடியவில்லை அவர்களால் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றார்கள்.

             தொல்பொருள் துறையோ மற்ற துறைகளோ சொல்லாத நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு நதியைத் தோண்டுவதாக சொல்வதற்கு நோக்கம் இருக்கின்றது. வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில்கள் இல்லை,உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. இதனை மறக்கச்செய்வதற்கு இப்படிப்பட்ட செயல்களை, பொய்மைகளை இந்துத்துவாவாதிகள் செய்கின்றார்கள் என்பதனை கடைசியில் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றார்கள். அரசாங்கம், அரசு அதிகாரிகள் பொன்றவர்களைப் பயன்படுத்தி  இந்துவத்தைப் பரப்புவதற்கான ஒரு திட்டமாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த சரஸ்வதி நதி தோன்றியதாக எப்படி அறிவித்தார்கள்  எப்படியெல்லாம் பொய்களால் பரப்பினார்கள், எப்படி பரப்புகின்றார்கள் என்பதனை நறுக்கென்று சொல்லும் ஆவணப்படம் இப்படம். யூ டியூப்பில் சென்று 'Searching for Saraswati " என்று  டைப் செய்து படத்தைப் பாருங்கள்...தமிழில் நல்ல ஆவணப்படம் எடுக்கும் தோழர்கள், தோழியர்கள் இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.

               

           

Sunday, 19 August 2018

.மனித நேயம் வளர்ப்போம்......



.மனித நேயம் வளர்ப்போம்
( முனைவர்.வா.நேரு)
மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு.  உயிர் அழிப்பு பொருள் அழிப்பு,உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே  மானுடத்துயர்தான்.அந்த மானிடத்துயர் இயற்கைச்சீற்றங்களால்,சாதி, மதச்சண்டைகளால்,நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். எந்தவிதமான குற்றமும் இழைக்காத இலட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள்.அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கின்றார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட துயரங்களை  தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள்.காயம் பட்டு குருதி வழிந்து  கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத்தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா,எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனிதஉயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும்,தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள். அவர்களை நினைவு கூறும்  நாள்தான் மனிதநேய  நாள் ஆகஸ்டு 19 ஆகும். 

2003ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19ம்நாள் ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்  நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி திரு.  செர்சியோவெய்ரா டீமெல்லோ(SérgioVieira deMello ) என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்டனர். செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில்    நாட்டைச்சார்ந்தவர்.வங்காளம்,சூடான்,மொசம்பியா,பெரு,கம்போடியா,யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச்சென்று  30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர்  நீக்கியவர்.. அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் ஆகஸ்டு 19, 2003 அன்று கொல்லப்பட்டார். அவரை சிறப்பிப்பதற்காக  இறப்பிற்கு பின்பு அவருக்கு மனித நேய விருது ஐ.நா.சபையால் அளிக்கப்பட்டது.

 விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோ அவர்களின் குடும்பத்தினர் அவரது பெயரால் ஒரு அறக்கட்டளையை(Sergio Vieira de Mello Foundation) நிறுவினர்.குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை,துடைப்பவர்களை  நினைவுகூறும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கவேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ஆம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் செய்தனர். 2008-ஆம் ஆண்டு மெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர்.அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு,சுவிட்சர்லாந்து,ஜப்பான்,பிரேசில்  போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்துநாடு ஐக்கியநாடுகள் சபையில் A/63/L.49 என்ற தீர்மானத்தைக்  கொண்டுவந்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கியநாடுகள் சபை டிசம்பர்-11,2008-ஆம்ஆண்டு , ஆகஸ்டு 19-ந்தேதியினை உலக மனிதநேயநாளாக அறிவித்தது.. 

உலகம் முழுவதும் இருக்கும் ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் ஆகஸ்டு 19-அன்று மனித நேயநாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த  நாளில்  கலவர பூமிகளில் பணியாற்றும் மனிதநேயர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர். 2003-ல் மெல்லோ அவர்கள் கொல்லப்பட்டதிற்கு பின்பு இந்த நாள்வரை 4076- மனிதநேயர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் நினைவை,செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும்.
இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம்" பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ". போராளிகளோ, அரசாங்கமோ போரிடும்போது 'பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ' என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம்..2010-ல் " நாங்கள் மனிதநேய வேலைக்காரர்கள் " என்னும் முழக்கம், 2011-ஆம்ஆண்டு " உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் ?" என்னும் முழக்கத்தினை வைத்தனர். உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் என்னும் கேள்விக்கு, அன்பு,கருணை,சுகாதாரம்,உணவு,சகிப்புத்தன்மை எனப்பல விடைகளை பார்வையாளர்கள் அளித்தனர். இதன் மூலம் உலகம் அமைதிப்பூங்காவாக மாறுவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதனைப் பட்டியலிட்டனர். இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர். 
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ' என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கல்கத்தா நகரின் தெருக்களிலே தொழு நோயால் படுத்துக்கிடந்த மனிதர்களை தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனித நேயப்பணியாளர்கள். " தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்;தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்;தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே " என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை  நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம்.இன்று ஆகஸ்டு 19 உலக மனித நேய நாள்
.


நன்றி : தினத்தந்தி 19.08.2018

.
.


Tuesday, 14 August 2018

வாட்சப்பால் மன நோயா ?.......

நடு இரவில்
தொடர்ச்சியாக
அனுப்பப்பட்ட
வாட்சப் செய்திகள்.......
காலையில் பார்த்தவுடன்
அயர்ச்சிதான்....

ஓய்வுபெற்று
ஓய்வில் இருக்கும் அவரின்
நடு நிசிச்செய்திகளாக
நிறைய வாட்சப் செய்திகள்

இத்தனை செய்திகளை
நடு இரவில்
அனுப்பியிருக்கிறீர்களே!
அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததாக
எதுவும் இல்லையே ? என்றேன்

எவன் படித்தான்....
எவன் பார்த்தான்....
நூற்றுக்கணக்கில் வரும்
வாட்சப் செய்திகளில்
ஏதேனும் பத்தை
பத்து பேருக்காவது
அனுப்பிவைத்துக்கொண்டே
இருக்கிறேன் ....என்றார்

அர்த்தமும் இல்லாமல்
பொருத்தமும் இல்லாமல்
அர்த்த ராத்திரியில்
தூங்காமல்.......

இது ஒருவகை
மன நோயோ?
வாட்சப்பால் மன நோயா ?
மன நோயால் வாட்சப்பா ?

                                                                        வா.நேரு,14.08.2018


                                   

Tuesday, 7 August 2018

பெரியாரியத்தின் வெடிப்பு ........

எழுதுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே..
பேசுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே ...எங்கள் கலைஞரே...
உழைப்பதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே....



சட்டசபையில் நான்
நாலாம்சாதியென்றாய்
வாழ்நாளெல்லாம் மனுதர்மத்தால்
நாலாம் சாதியாய்
ஐந்தாம் சாதியாய் ஆக்கப்பட்ட
மக்களுக்காகத்தான்
அதற்கும் கீழ் வரிசையில்
வைக்கப்பட்ட பெண்களுக்கும்
சேர்த்துத்தான்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா ....அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே....

பாராட்டிப்போற்றி வந்த
பழமை லோகம் ஈரோட்டுப்
பூகம்பத்தால் இடிகுது பார்
எனக் கவிதை உரைத்தாய்
பழமைலோகத்தை இடிப்பதற்காய்
ஆட்சியில் இருந்தபோதினும்
எதிர்க்கட்சியில் இருந்தபோதினும்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா...அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே
எங்கள் கலைஞரே .....

எந்தக் கல்லூரியில் படித்தார்
உங்கள் கடவுள் ராமர் ?
எனக் கேள்வி கேட்கும் துணிவு
அனைத்து அரசியலையும் கடந்து
அடி மனதில் குவித்து வைத்த
பெரியாரியத்தின் வெடிப்பு அது ?

ஆண்களுக்கு மட்டும் என்னடா
சொத்துரிமை ? ஏனில்லை பெண்ணுக்கு
எனக் கேட்ட அய்யாவின் வார்த்தைகளை
ஆழ் மனதில் சேர்த்து வைத்த நினைவால்தானே
அரசுக் கட்டிலைப் பயன்படுத்தி
பெண்களுக்கும் சொத்துரிமை கொடுத்தாய்.....


உனக்கு அஞ்சலி செலுத்துவதென்பது
வெறும் மாலைகள் வைப்பது அல்ல!
உன்னிடத்தில் இருந்த
போர்க்குணத்தை மனதில் வைப்பது....
உன்னிடத்தில் இருந்த
உழைப்பை நினைவில் வைப்பது

ஒவ்வொரு நிலையிலும்
நீ வரலாறாக மாறியிருக்கிறாய்!
எவராலும் மறைக்க இயலாத
சரித்திரமாயிருக்கின்றாய் ....

மறு வாசிப்பு செய்யப்போகிறோம்
தலைவரே! எங்கள் கலைஞரே!
நீ கொடுத்த இலக்கியங்களை
நீ கொடுத்த புத்தகங்களை
மீண்டும் மீண்டும் வாசிக்கப்போகின்றோம்
உனது பதிவு செய்யப்பட்ட
பேச்சுக்களை மீண்டும் மீண்டும்
கேட்கப்போகின்றோம் தலைவரே
எங்கள் கலைஞரே.......அதுதான்
உங்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி

கண்ணீரால் விடை தந்தோம்....
தலைவரே..எங்கள் கலைஞரே
இயற்கை எய்தினாய் ஆனால்
என்றும் தமிழர்கள் மனதில் நிற்பாய் !
உனது புகழ் வாழி! வாழி !

                                                         வா.நேரு,
                                               தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
                                               07.08.2018      இரவு 7 மணி



..

Saturday, 28 July 2018

கடந்துபோன காலங்கள்(17)

   கடந்துபோன காலங்கள்(17).....

எனது படங்கள்
எத்தனை எத்தனை
ஒளிப்படங்களாய்
என் மகனின்
கணினி சேமிப்பில்.....

எப்படி எப்படியோ
எடுத்து வைத்திருக்கின்றான்
எனது படங்களை....
உட்கார்ந்த வண்ணம்....
ஓடிய வண்ணம்...
கைகூப்பிய வண்ணம்....
கையைக் கட்டிய வண்ணம்
எனது இணையரோடு
ஒருவரோடு ஒருவர்
சாய்ந்த வண்ணம்
எத்தனையோ படங்களை
எடுத்து வைத்திருக்கிறான்

சென்ற இடங்களின்
நினைவுகள் எல்லாம்
சேமிக்கப்பட்ட
வண்ணப்படங்களாய்
அடைத்துக்கிடக்கின்றன
அவனது கணினி
நினைவுகளில்.....

புத்தகத்தில் போட வேண்டுமா?
முக நூலில் போடவேண்டுமா?
கேட்டுவிட்டால் போதும்
படங்களாய் கொண்டுவந்து
கொட்டுகிறான்
கணினித்திரையில்......
எது வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள் .
எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்கிறான்....
எல்லார் கைகளிலும் செல்பேசி..
செல்பேசிக்குள் நிழற்படம்
எடுக்கும் கருவியென
அனைத்தையும் சாத்தியமாக்கிய அறிவியல்....

எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித்திரையில்
பார்க்க ஆசை !
எனது ஏழு வயதில் இறந்துபோன
அப்பாவின் முகம்
நிழலாகக் கூட நினைவில் இல்லை....
அப்பாவின் புகைப்படம்
இறந்த பின்பு யாரோ ஒருவரால்
வரையப்பட்ட படம் ....
அதில் உயிரோட்டம் இல்லை...
அதனால் உணர்வோட்டமும் இல்லை....

அப்பாவின் மாணவர்கள்....
அப்பாவின் நண்பர்கள்....
அப்பாவின் கைப்பந்து
விளையாட்டின் தோழர்கள்.....
எல்லோரிடமும் கேட்டு
கேட்டுப்பார்க்கின்றேன்.....

சாப்டூர் வாலகுரு ஆசிரியர்
ஆண்டவர் வாத்தியார் என
அன்புடன் அழைக்கப்பட்டவர்
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குமுன்
ஆயிரத்து தொழாயிரத்து
எழுபத்து ஒன்றில் திடீரென
இருதய நோயால் மறைந்து போனவர்....
எங்கேணும் அவரது புகைப்படம்
உங்கள் வீட்டில் இருந்தால்
தனிப்படமோ....இல்லை
குழுப்படமோ இருந்தால்
கொடுங்கள் எனக் கேட்டுக்
கொண்டே இருக்கின்றேன்,,,,,,
எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித் திரையில்
பார்க்க ஆசை !....

                                               வா.நேரு......29.07.2018

Thursday, 26 July 2018

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' ..

அன்புடையீர்,
            வணக்கம். எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' -சென்னை எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வெளிவந்துள்ளது. சிறிய அளவிலான ஒரு வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும். எம்ரால்டு பதிப்பகம், மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கலாம். அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்துக்கொடுத்த, தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆயிரம் வேலைகளுக்கும் நடுவிலும் அருமையான கற்பனைத் திறனோடும், கைவண்ணத்தோடும் அமைத்துக்கொடுத்த அவருக்கு நன்றி,நன்றி.. கதைகளை ஒன்றுபடுத்தி அச்சிட்டுக்கொடுத்த அன்புத்தோழர், எழுத்தாளர் உடுமலை வடிவேலு அவர்களுக்கும் நன்றி.
தொகுப்பைப் படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை, விமர்சனங்களைத்  தெரிவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அடுத்தடுத்து எழுதுவதற்கு உறுதுணையாகவும்  அமையும்




Wednesday, 18 July 2018

விழும் அடி எதுவென...

விழும் அடி எதுவென...

கல் ஒன்றுதான்...
உளி ஒன்றுதான்....
உடைப்பதற்காக
விழும் உளி அடியை
படைப்பதற்காக
விழும் உளி அடியை
உள்வாங்க இயலாது
கல்லினால்.......

வளர்ந்த குழந்தை அறியும்
தன்னைச்செதுக்க
விழும் அடி எது....
தன்னை அடிப்பவரின்
மனச்சிதைவால்
விழும் அடி எதுவென.....
   
                   வா.நேரு...18.07.2018

Tuesday, 17 July 2018

ஓடிப்போன நாள்.....


                        ஓடிப்போன நாள்.....


குறிக்கோள் ஒன்று
விருப்பமாய் மனதிற்குள்
இருந்திடின் மனம்
விடியலை விரும்பும்
இருக்கும் பொழுதெல்லாம்
விரைந்து ஓடும்..
விடிந்ததும்...
நாள் முடிந்ததும்...
இவ்வளவு விரைவாகவா
அடடே....
வியப்பாய் தோன்றும்...

                                    வா.நேரு,
                                    17.07.2018 இரவு 10மணி


           

Sunday, 15 July 2018

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!.....

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!


பெரியார் என்ற ஜீவ நதியின்


நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல்


தமிழர் தலைவர் புகழாரம்



காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில்  அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்! காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி! பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப் பாசனத்தால் விளைந்த விளைச்சல் என இன்று (15.7.2018) அவரது 116ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் புகழ்ந்துரைத்துள்ளார். அவர் அறிக்கை வருமாறு:

"பச்சைத்தமிழர்" என்று அறிவு ஆசான் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, அவர் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த காமராசரை - அவர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றால்தான் இத்தகைய திருப்பத்தை உருவாக்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன், டாக்டர் ப. வரதராஜலு நாயுடு அவர்களின் இல்லத்தில் கூடி, கலந்துபேசி, ஒப்புக் கொள்ளத் தயங்கிய காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்!

இது, 1953-1954இல் நடைபெற்ற நிகழ்வு. தமிழ்நாட்டு அரசியலின் மிகப் பெரிய சரித்திரத் திருப்பம்!

அதன்பிறகு காமராசர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோது அடுக்கடுக்காக  இடையூறுகள் தோன்றின.   இன எதிரிகள் ஆச்சாரியார் தொடங்கி, அவரிடம் பதவி எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் எதிர்ப்பு உட்பட அத்தனையையும் தூளாக்கிய வாளும் கேடயமுமாக திராவிடர் இயக்கம் - குறிப்பாக திராவிடர் கழகம் இயங்கியது.

காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்

காமராசர் ஆட்சியின் சாதனைகளை நாடெலாம், வீடெலாம் பரப்பி, பலமான பார்ப்பன பத்திரிக்கை உலகின் எதிர்ப்பையும் முறியடித்தது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற ஆசான் தலைவர் தந்தை பெரியாரும்.  மட்டுமா?

டில்லியில், காமராசர் அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க,  கே. பிளான் (காமராசர் திட்டம்) என்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து டில்லிக்குப் புறப்பட்டபோது, அது சரியான முடிவல்ல; அது தற்கொலைக் கொப்பானது என்று ஒரு தந்தை நிலையில் நின்று அறிவுரை வழங்கியவர் தந்தை பெரியார். (பிறகு அய்யா சொன்னதை நான் ஏற்காதது தவறுதான்  என்று மனம் வருந்தி அருகில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதைச் சிலரே அறிவர்).

காமராசர் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று தந்தை பெரியார் கூறியதையெல்லாம் நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவர்.

அதற்கு முன்னே அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகம், காமராசருக்கு காந்தியாரால் - பார்ப்பன நயவஞ்சகத்தால் ஏற்பட்ட அவமானத்தைப்  போக்கிடவும், அவரிடம் ஆச்சாரியார் தலைமையில் ஒரு கூட்டம் தேசியம் பேசிக் கொண்டே மோதி, அதில் காந்தியார் நடுநிலை தவறி, காமராசர் 'அதிகார பூர்வ தலைவர்' என்ற நிலையையும் மறந்து, "ஒரு விஷமக் கும்பல்" (க்ளிக் - நீறீவீஹீuமீ) என்று கூறி மனம் புண்பட வைத்தது தேசியத்திற்குள் வெடித்த ஆரிய - திராவிடப் போரின் வெளிப்பாடு என்பதை அன்று (6.1.1946) "திராவிட நாடு" இதழில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா தனது தேன் தமிழில் "கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது" என்ற தலைப்பிட்டு ஒரு விரிவான அரசியல் - திராவிட - ஆரிய  திரைமறைவுப் போரினை மிக அருமையாக விளக்கினார்.

காமராசர் - ஆச்சாரியார் அணிகள் தங்களது நிலைப்பாட்டினை விளக்கிட, நிலை நிறுத்த சேலம் மாவட்ட திருச்செங்கோட்டிலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் கூடிய பிறகு, ஆகஸ்ட் போராட்டத்தில் (கல்கத்தா)  எதிராகப் பேசிய ஆச்சாரியார்மீது கட்டுப்பாட்டை ஒட்டிய விமர்சனம் செய்த காமராசரை பலமிழக்கச் செய்ததை விளக்கினார்.

ஆரிய - திராவிட இனப் போராட்டம்

அது மட்டுமல்ல, தொடர்ச்சியாக 17.2.1946இல் '"காமராசர் சிந்தும்  கண்ணீர்" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான  - அரசியல் போராட்டங்கள் ஆரிய - திராவிட இனப் போராட்டம் - காமராசர் - ஆச்சாரியார் அரசியல் மோதல் என்பதை விளக்கியதோடு, காமராஜரின் கண்ணீரைத் துடைக்க  காத்திருக்கிறது கடமையாற்றும் கருஞ்சட்டைப்படை என்று எழுதினார்!

தேசியத்தில் பூத்த மலர் காமராசர்; ஆனால் திராவிடத்தால் கனிந்த கனி என்பதைப் புல்லர்களுக்குக்கூட புரிய வைக்கும் பழைய வரலாற்றிலிருந்து, படித்துக் கொள்ள வேண்டிய திராவிடப் பாசறை தீந்தமிழில் தீட்டிய அரசியல் அழகோவியம்!

அதில் ஒரு பகுதி இதோ - 72 ஆண்டுகளுக்கு முந்தையதானாலும் என்றும் வரலாற்றில் நிலைத்த முன்னோட்டம்

" ஆனால், காமராஜர், காங்கிரசைவிட்டு விலகுவார் என்று நாம் நம்புகிறோமா? இல்லை! நம்பவுமில்லை! அவருக்கு அந்த யோசனையைக் கூறவுமில்லை, திராவிடர் கழகம், நெருக்கடியான நேரத்தில் கண்ணீர் வடித்துக்கொண்டு, வேறு வழி இல்லையே என்று கூறும், "பக்தர்களை" அழைக்கவில்லை,  தேவையில்லாததால்! காமராஜர்கள், அங்கேயே இருக்கட்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பட்டும், அவர்கள் படும் அல்லலை, அவர்கள் அங்கு ஆரியத்தால் அடக்கப்படுவதை, அவர்களின் ஆண்மை மங்குவதை, திராவிடர் கழகம் கவனித்துவருகிறது. ஆரியத்துடன் அக்கழகம் நடத்தும் போரிலே அவர்கள் சார்பாகவும், நிச்சயமாகத் திராவிடர் கழகம் பேசும்! காமராஜரின் கண்ணீரை திராவிடர் கழகம், கருப்புச் சட்டைப்படை, துடைக்கும். அவர் அடைந்த கதியால், தமிழனுக்கு ஏற்பட்ட தாழ்நிலையை, நிச்சயமாகத் திராவிடர் கழகம் போக்கும். வீழ்ச்சியுற்ற இனத்திலே, இதுபோல விழியில் நீருடன் வீரர்கள் இருப்பதுண்டு. ஆனால் எழுச்சி பெற்றதும், அந்த இனத்திலே தோன்றும் வீரர்கள் முன்னவர் சிந்திய கண்ணீரைக் கவனத்திலிருத்தி மாற்றான் மண்டியிடும் அளவு வெற்றிபெற்று அந்த வெற்றிநாளன்று, வீழ்ந்துகிடக்கும் மாற்றானைநோக்கி, 'மமதை கொண்டவனே! உன்மயக்க மொழியிலே சிக்கிய மறத்தமிழனைச் சீரழித்தாயே அன்று! உன்னால் அடைந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விழியில் நீர்பெருக்கினானே! அந்தக் கண்ணீர், இந்தக்கூர்வாளாயிற்று" என்று கூறுவர். காமராஜரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள கருப்புச்சட்டைப் படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியே, அந்தக் கருப்புச் சட்டைப்படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்."

அதற்குப்பின் அரை நூற்றாண்டு கால அரசியல் திரைக்குப்பின் நடைபெற்ற "தேவாசுரப் போர்" - ஆரிய - திராவிடப் போரில் தந்தை பெரியாரும்,  திராவிடர் கழகமும் துணை நின்ற நிகழ்வுகள் நீண்ட வரலாறு.

இதோ இரண்டொரு துளிகள்:

(1) "கறுப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள்" என்ற ஆச்சாரியாரின் நிதானம் இழந்த பேச்சுக்கு நாடு தழுவிய கழகக் கண்டன கூட்டங்கள் நடத்தியது திராவிடர் கழகம்.

2) டில்லியில் காமராசர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டில் பட்டப் பகலில்  தீ வைத்து, கொலை செய்ய முயற்சித்த ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தின் பசுவதை தடுப்பு போர்வையில் - சமதர்மத்தைக் காத்த காமராசரை ஒழித்துக் கட்ட முயன்றபோது அதை அம்பலப்படுத்தியது திராவிடர் இயக்க வீரர்களே!

'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'  நூலை வெளியிட்டு, மதவெறியர்களின் முகமூடியைக் கிழித்திட்டது திராவிடர் கழகமே!

இப்போது புரிகிறதா காமராசர் தேசியத்தில் பூத்து, திராவிடத்தால் காய்த்து, கனிந்த கனி என்பது!

அவரைப் பயன்படுத்தும் காவிகளிடம் எச்சரிக்கை தேவை! மானமிகு கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய சட்டம்தான் இன்று பள்ளிகள் காமராசரின் பிறந்த நாளை கல்வி விழாவாகக் கொண்டாடுவதற்கு அடிப்படை.

இப்போது புரிகிறதா காமராசர் திராவிடத்தில் காய்த்த கனி, பெரியார் என்ற ஜீவ நதியின், நீர்ப் பாசனத்தால் கிடைத்த விளைச்சல் என்பது!

வாழ்க காமராசர்!

வருக  அவர் விரும்பிய

சமதர்ம, மதச்சார்பற்ற நாடு!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.7.2018

நன்றி : விடுதலை 15.7.2018