Tuesday 24 March 2020

கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்....வா.நேரு.

            கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்....

அதிகாலையில் ஒருவன்
கிழிந்த ஆடைகளை உடல் முழுவதும்
போர்த்திக்கொண்டு
மழிக்காத தாடியோடு
இருண்ட பார்வையோடு ஒவ்வொரு
தெருவாக வந்து கொண்டிருக்கிறான்...
வயிற்றுப்பசிக்கு ஏதேனும் கிடைக்குமா?
எனும் தேடுதலாக இருக்கக்கூடும் ..
அவனது காதுகளுக்கு
சுய ஊரடங்கு சென்று சேரவில்லை போலும்..

சாப்பிட வழியில்லாமல்
சாலையோரம் கிடப்பவர்களுக்கு
உணவுப்பொட்டலத்தை மனமுவந்து
வழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
சுய ஊரடங்கலில் உணவு வழங்காதே
எனக் கைத்தடியால் அவரை
ஒரு காவலர் அடிக்கும் காட்சி
மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது
வாட்சப் குழுக்களில்...

முக நூலில்
பெண் கவிஞர் ஒருவர்
வறுத்து எடுக்கிறார் அரசை..
வாடகை கொடுக்க முடியலே
காய்கறி வாங்க முடியல
அன்றாடங்காய்ச்சிகளைப் பற்றி
அரசு ஏதேனும் யோசித்ததா ?
எனும் அவரின் கேள்வி அரசுக்கு கேட்டதோ?
சட்டசபையில் அறிவித்திருக்கிறார்
முதலமைச்சர் சில நிவாரணங்களை...
உரியவருக்கு அது போய்ச்சேருமா?
அந்தக் கொரனாவுக்கே அது வெளிச்சம் !

தெருக்கள் தோறும்
உணவில்லாதவர்கள்
உடையில்லாதவர்கள்
உறைவிடம் இல்லாதவர்கள்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்..
தங்களைக் கண்டுகொள்ளாமல்
பதுக்கி பதுக்கிவைத்த
பதுக்கல்காரர்கள் செத்து தொலையுட்டும்
என அவர்கள் நினைக்கக்கூடும்..

இப்படி நமது கடவுள்கள் எல்லாம்
கையாலாகதவர்களாக போய்விட்டார்களே
எனும் வருத்தம் பக்தகோடிகள்
மனதிற்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது...
எத்தனை விரதங்கள்
எத்தனை பரிகாரங்கள்
எத்தனை புனித யாத்திரைகள்
நமது பிரச்சனைகளுக்குச்சொன்னார்கள்..
அட! அத்தனையும் டுபாக்கூர்தானா
எனும் கேள்வி ஆழமாக
அவர்கள் மனதில் எழுந்திருக்கிறது....

எனக்கு மட்டும்
எனது குடும்பத்திற்கு மட்டும்
என மிதமிஞ்சிச்சேர்த்தவனின்
மனமெல்லாம் ஒற்றைக்கேள்வியாய்
எழுந்து நிற்கிறது...
குடும்பமே செத்துப்போனால்
சேர்த்துவைத்ததெல்லாம் என்னவாகும்?
அட ! நாட்டுடைமையாகும் போங்கப்பா...

ஆட்டுக்கறி வழியாகவும்
கொரோனா பரவுகிறது என
அதீத மகிழ்ச்சியோடு ஒருவன்
வாட்சப்பில்  பதிந்திருக்கிறான்
அநேகமாக பாதிக்கப்பட்ட
கோழிக்கடைக்காரனாக இருக்கக்கூடும்...
உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை...
அவரவருக்கு தோன்றுவதை
பரவுவது முதல் தீர்வது வரை
அவரவர் மொழியில் பதியும் கொரனாக்காலம் இது..!

கைகழுவும் திரவத்தை தெருக்களுக்குள்
சென்று கொடுக்கும் வைபவத்தை
ஆளுங்கட்சிக்காரன் ஒருத்தன்
வாட்சப்பில்  பதிந்திருக்கிறான்...
கூட்டமாய்ச்சென்று திரவம் கொடுத்தால்
குற்றம் இல்லையா?...பரவாதா அது ?
கொடுப்பவர்களூக்கே வெளிச்சம்....

கொரனா தரும் அனுபவம்
மிகவும் வித்தாயாசமாய்...
வெள்ளைத்தோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு
வலிந்து போய் வணக்கம் சொல்லி
கைகுலுக்கி அரைகுறை ஆங்கிலத்தில்
உரையாடும் ஆட்கள் எல்லாம்
வெளிநாட்டுக்காரர்கள்
என்றால் அரண்டு ஓடுகிறார்கள்
மீனாட்சி அம்மன் கோவில் அருகில்....

கை கழுவுங்கள் கைகழுவுங்கள்
எனும் குரல்
சிற்றூர் தொடங்கி உலகம்
முழுக்க கேட்டுக்கொண்டிருக்கிறது....
ஆறிலும் சாவு..நூறிலும் சாவு
கொரானா வந்தால் ஒரு மாதத்தில் சாவு
என உற்சாகமாக கூவிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
தற்கொலைக்கு முயன்று தப்பித்தவனாக இருக்கக்கூடும்...
கொரனா வந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கையை
அவனுக்குச் சொல்லவேண்டும்....

எதைப் பற்றியும் கவலையில்லாமல்
கை நிறையப்  பாட்டில்களோடு
அரைகுறைப் போதையோடு
அலைந்து கொண்டிருக்கிறார்கள் பல பேர்!
ஆளுங்கட்சி சொன்னதற்காக
வெற்றி விழாவென்று
மணியடித்துக்கொண்டிருக்கிறார்கள் சில பேர்!
இருவரும் ஒன்றுதான் எனச் சொல்கிறான் ஒரு தோழன்...

ஓய்வு எடுக்கும் காலம் அல்ல தோழா!
புதிய படைப்புகள் படைக்கும் காலம் !
வாங்கி வைத்து படிக்காமல் விட்ட
புத்தகங்களை எல்லாம் படிக்கும் காலம்!
என ஊக்கமளித்திருக்கிறார் ஒரு கவிஞர்

கொரனா! கொரனா!
நீ இல்லாத இடமே இல்லை...
நீதானே இன்று உலகின் தொல்லை
எனப் பாடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்...

கொரானாவைச் சுற்றி சுழலும் உலகம்
சில நேரங்களில் வேடிக்கையாகும்
பல நேரங்களில் வேதனையாகவும்..
                                வா.நேரு...24.03.2020
.





12 comments:

anandam said...

அருமை... நிகழ்காலத்தைப் பதிவு செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை... அதை அழகியலோடும்.. அறிவுப்பூர்வமாகவும் செய்துள்ளீர்கள்... வாழ்த்துகள் அண்ணே

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி...நன்றி அண்ணே...

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்
மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தம்மைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

nagarajan said...

உண்மையை நகைச்சுவையுடன் எடுத்துக்கூறியுள்ளீர்கள்...

முனைவர். வா.நேரு said...

நன்றி யாழ்பாவாணன் அவர்களே

முனைவர். வா.நேரு said...

உண்மையை ஏதேனும் ஒரு வகையில் பதிவோம், நாகராசன் சார்...நன்றி..

Prof YBK said...

அருமை

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க சார்

kowsy said...

கொரொனாவுடன் உலகத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்துள்ளீர்கள்

முனைவர். வா.நேரு said...

உலகம் இதுவரை சந்திக்காத சவாலாக கொரனா இருக்கிறது....நிகழ்காலத்தை பதிவு செய்வோம் என்பதாகப் பதிவு செய்தேன். நன்றி..வணக்கம்.

ANBU said...

நிகழ்கால நிகழ்வுகளை பற்றிய அருமையான பதிவு சார் .

வாழ்நாளிலே அவசர நிலை பார்த்ததில்லை என்போருக்கு மனக் காட்சியாக விரிகிறது தற்கால ஊரடங்கு தடை காலம்.
மனிதன் அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்டான் என்பதற்கு கேலியாய் சிரிக்கின்றது ஒரு நுண்ணுயிரி.

எல்லாம் கடந்து போகும் என்னும் தத்துவமே நிரந்தரம்

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க சார்