Saturday 11 April 2020

கரோனாவும் திராவிட இயக்கமும் ......



நன்றி : இன்றைய(11.04.2020) விடுதலை

சாதாரண எழுத்தில் படிப்பதற்காக

"தற்போதைய சூழலில் ,கொரனாவுக்கு எதிரான ஒரே நம்பிக்கைச்சொல் கம்யூனிஸ்ட் நாடான கியூபா.அதனால்தான் ,இந்தக் குட்டித் தீவு நாட்டின் உதவியை உலகின் வல்லரசுகளும் நாடியிருக்கின்றன. இத்தாலி உள்ளிட்ட 59 நாடுகளில் ,கியூபாவின் 29 ஆயிரம் மருத்துவர்கள் கொரனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....தங்களது மருத்துவர்களை உலக நாடுகளுக்கு அனுப்புவதன்மூலம்,ஆண்டொன்றுக்கு 6 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் கியூபா,பொருளாதாரத்தில் பின் தங்கிய லத்தீன்அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.

வெளி நாடுகளுக்கு இவ்வளவு மெனக்கிடும் கியூபா,உள்நாட்டிலும் சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறது...சீனர்களை தனது இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2பி தடுப்பு மருந்தைக்கொண்டு கொரனாவிலிருந்து குணப்படுத்தியதாக இருக்கட்டும்.மற்ற நாடுகள் மறுத்தபோது கொரணாத் தொற்றுள்ள பயணிகளுடன் கடலில் தத்தளித்த இங்கிலாந்து கப்பலை அனுமதித்து சிகிச்சை அளித்ததாக இருக்கட்டும். மனித நேயத்தால் மிளிர்கிறது கியூபா."ஆயுதங்கள் எதற்கு .நம்மிடம்தான் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களே " என்றார் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ.அவரது இந்த வார்த்தை இன்று உலகுக்கே வழிகாட்டுகிறது...(ச.ப. மதிவாணன்...நக்கீரன்-10-4.2020 மின் இதழ்)".  

1000 பேருக்கு 67 டாக்டர்கள் கியூபாவில்...ஒரு பொதுவுடமை அரசை அமைப்பதற்காக அந்த நாடு பட்ட துன்பங்கள் எத்தனை?துயரங்கள் எத்தனை? பக்கத்திலேயே இருக்கும் பிற்போக்கத்தனத்திற்கு முன்னோடியாகத் திகழும் வல்லரசான அமெரிக்கா எத்தனை இன்னல்களை கியூபாவிற்கு கொடுத்தது ? உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி  அமெரிக்காவிலேயே 1000 பேருக்கு 24 டாக்டர்கள்தான்.ஆனால் 1000 பேருக்கு 67 டாக்டர்கள் என்னும் கியூபாவின் சாதனை எவ்வளவு பெரிய சாதனை ?இதனைப் படித்தவுடன் கொரனாவிற்கு மருத்துவமும்  திராவிட இயக்கமும் என எனது சிந்தனை ஓடியது.

உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி இந்தியாவை  எடுத்துக்கொண்டால் 1000 பேருக்கு 1 டாக்டர், இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. அதாவது 1000 பேருக்கு 4 டாக்டர்கள்..அதாவது 253 பேருக்கு ஒரு டாக்டர் தமிழகத்தில் இருக்கிறார்.பி.ஜே.பி. ஆளும் ஜார்க்காண்ட் மாநிலத்தில் 8180 பேருக்கு ஒரு டாக்டர் ,அரியானாவில்  6037 பேருக்கு ஒரு டாக்டர் என இருக்கிறார்கள். சுவீடன் நாட்டினைப் போல, நார்வே நாட்டினைப் போல தமிழ் நாட்டில் 1000 பேருக்கு 4 டாக்டர்கள் இருக்கிறார்கள், அதிலும் கிராமப்புறங்களிலும் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறார்கள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது.

தமிழ் நாட்டின் மருத்துவ வசதி என்பது ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் திராவிட இயக்க ஆட்சிகளினால் ஏற்பட்ட மாற்றம்.இராமனைத் தினந்தோறும் கும்பிடும் பக்தர்கள் அதிகம் உள்ள ஜார்கண்ட்,அரியானா, உத்தரப்பிரதேசத்தை விட , கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் இராமசாமியின் வழியில் வந்த திராவிட இயக்க ஆட்சிகளால் ஏற்பட்ட மாற்றம் இது. மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என எண்ணிய அறிஞர் அண்ணா அவர்கள் சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.திராவிட இயக்க ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களில் மிக முக்கியமானது மருத்துவம். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் 1970-களிலேயே தமிழ் நாட்டின் அத்தனை ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து விட்டது.பெரும்பாலான மாவட்டத்தலைநகரங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகளை டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.  இன்றைக்கு, 35 அரசு மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. இது தவிர அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் இருக்கின்றன.இந்தியாவின் மற்ற எந்தப்பகுதியிலும் இவ்வளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தமிழ்நாடு  அரசால் ஏற்படுத்தப்பட்ட  மருத்துவ கல்லூரிகள் அனைத்திலும் தமிழ் நாட்டைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் படித்து மருத்துவர்களாகி இருக்கிறார்கள். எந்த நுழைவுத்தேர்வும் இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள்தான் தமிழகத்தில், இந்தியாவின் பல நகரங்களில், உலகின் பல நாடுகளில் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரியில் படித்த மருத்துவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ள மனித நேயர்களாகவும் இருப்பது கண்கூடு.

திராவிட இயக்க ஆட்சிகளில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசால் தொடங்கப்பட்டவையே. மத்திய அரசு உதவி செய்யவில்லையென்றாலும் மத்தியில் இருந்த காங்கிரசு அரசு இடைஞ்சல் செய்யவில்லை. 'மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி' என்னும் கோட்பாட்டை முன்வைத்த திராவிட இயக்க முன்னாள் முதல்வர்கள்தான் இதற்கான அடித்தளம் அமைத்தார்கள் என்பது வரலாறு.தமிழ் நாட்டில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு அந்தந்த மாநிலங்களில் மருத்துவக்கல்லூரிகளை துவக்குவதற்கு அந்தந்த மாநில அரசுகள் முன்வரவேண்டும்.அதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

ஆனால் மத்திய அரசு அப்படி வழிகாட்டுவதற்கு பதிலாக,நீட் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து தமிழகத்தில் இருக்கும் திராவிட இயக்க ஆட்சிகளில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மற்ற
மாநிலத்தைச்சார்ந்த மாணவர்களை சேர்ப்பதற்கு முயல்கிறார்கள்.எத்தனை விதமான பித்தலாட்டங்கள் நீட் தேர்வில் நடந்திருக்கின்றன என்பதனை செய்திகள் வாயிலாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆள் மாறாட்டாம் பல இடங்களில் நடந்திருக்கிறது.இன்னும் என்னென்ன தில்லுமுல்லுகளோ...நமக்குத் தெரியவில்லை.இந்தியா முழுவதுமே  உயர் ஜாதிக்காரர்களுக்கும்,பணக்காரர்களுக்குமான படிப்பாக மருத்துவத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவராக வேண்டும் எனும் கனவோடு அல்லும் பகலும் உழைத்து நீட் தேர்வு என்னும் கொடுமையால் உயிர் நீத்த அனிதா போன்றவர்களின் நோக்கம் பணம் ஈட்டுவதல்ல. மருத்துவம் இல்லாமல் எனது அன்னை இறந்தார்.நான் மருத்துவராகி எனது அம்மா போன்ற ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது.மனித நேயத்துடன் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவம் படிக்க நினைப்பவர்களை வடிகட்டி நிறுத்துகிறது நீட் தேர்வு.நீட் என்னும் கொடுமையான ஒரு நுழைவைத்தேர்வைக் கொண்டு வந்து ,பணக்காரர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் இலட்சக்கணக்கில் பணம் கட்டி தனிப்பயிற்சியில்  படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்னும் கொடுமையை மத்திய அரசு தனது காட்டுத்தனமான கொள்கையால்  கொண்டு வந்து நுழைத்திருக்கிறார்கள்.

 தமிழக சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் இணைந்து நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்னும் சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசின் மூலமாக அனுப்பி வைத்ததை முதலில் காணாம்(காணவில்லை) என்றார்கள். பிறகு நீதிமன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டது என்றார்கள். தமிழக மக்களின் உணர்வோடும் உயிரோடும் இன்று வரை நீட் தேர்வில் மத்திய அரசில் இருக்கும் சிலர்  விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 23-ந்தேதி மத்திய அரசின் அலுவலங்களுக்கும் முன்னால் நீட் தேர்வினை எதிர்த்து நடப்பதாக இருந்த மறியல் போராட்டம் கொரனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.  
நீட் தேர்வு கூடாது ஏன் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜனவரி 20 கன்னியாகுமரியில் ஆரம்பித்து ஜனவரி 31- சென்னைவரை நீட் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தமிழகம் முழுக்க பிரச்சாரக் கூட்டங்களை பல்வேறு கட்சியினரின்,.பொதுமக்களின் பெருத்த ஆதரவோடு இந்த நீட் தேர்வினை ஒழித்தே தீருவோம்  என்னும் சூளுரையோடு  நடத்தினார். ஒரே  நாளில் மூன்று நகரங்களில் இந்த 87 வயதிலும் மணிக்கணக்கில் உரையாற்றி மக்களுக்கு இந்த நீட் தேர்வின் தீமைகளை எடுத்துரைத்தார்.

"ஒரே தரத்தில் ஒரே முறையில் ஒரே கட்டமைப்பில் நாடு முழுவதும் கல்வி முறையும் பள்ளிகளும் இல்லாத நிலையில் பொதுவான நுழைவுத்தேர்வு எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? இந்தியாவில் மாநிலப் பாடத்திட்டங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவப் படிப்பு அனுமதிக்கான நுழைவுத் தேர்வு என்பது எப்படிச் சரியானதாகவும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்? நகர்ப் பகுதிகளில் தெருவிற்குத் தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. நகர்ப் பகுதி மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரத்தில் பெறமுடியும். கிராமப்புற மாணவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப் பயிற்சி பெறவேண்டும். பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குதான் இது சாத்தியம். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்?"  என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஆசிரியர் கி.வீரமணி எழுப்பினாரே அதற்குப் பதில் என்ன ?

.மத்திய அரசின் திட்டங்களில் சுகாதாரத்திற்கென பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை.. புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை  ஒதுக்குயிருக்கிறார்கள்..கங்கையை சுத்தம் செய்கிறேன் என்று சொல்லி பல கோடிகளை ஆற்றிலே கொட்டியிருக்கிறார்கள். ஆனால் சுகாதாரத்துறைக்கு ? தூய்மைப் பணி செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு என எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.3000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை இப்போது பயன்படவில்லை.ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலே ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் மக்களின் துயர் துடைக்கும் பணியைச்செய்து கொண்டிருக்கின்றன.

கொரானாவின் காரணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் தேசியமயமாக்கி  அரசு மருத்துவமனைகளாக மாற்றி உள்ளது அந்த நாட்டின்  அரசு.   இங்கிலாந்து பிரதமர் கொரனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்.    எல்லோரையும் பாதிக்கும் நோய் இந்தக் கொரனா.   தமிழக அரசுக்கு இன்றைய தேவை என்பது முதுகெலும்பு. தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவதாக இருக்கட்டும் அல்லது நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்பதைச்சொல்வதாக இருக்கட்டும். அதனை அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு சொல்லவேண்டிய நேரம் இந்த நேரம்.'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதுதான் திராவிட இயக்க ஆட்சியில் முன்னாள் ஆட்சி செய்த முதல்வர்களின் முழக்கம். அந்த முழக்கத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது என்பதனை தமிழக அரசு உணர வேண்டும். மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என்பதனை தமிழக அரசு அழுத்தமாகச்சொல்லி அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதோடு இந்தக் கொரனா காலத்தில் மாநிலத்திற்கு தேவையான நிதியைத் தர மத்திய அரசிற்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதே  நமதே கோரிக்கை.





No comments: