Friday 3 April 2020

கொரனா சொல்லியிருக்கிறது....வா.நேரு

மரங்களில் பறவைகள்
கூடு கட்டும்.....
மனிதர்கள் கூடு கட்டியிருக்கிறார்கள்
மரங்களில்...
மேற்கு வங்க மாநிலத்தில்

நான் என்னைத் தனிமைப்
படுத்தி கொள்ளல் வேண்டுமே...
ஒரு வேளை எனக்கு கொரனா
இருந்தால் என் உறவுகளுக்கு
பரவிடாமல் இருக்க வேண்டுமே?
ஒரு குடிசைக்குள்
ஏழெட்டு பேர் இருக்கிறோம்
இதில் நான் மட்டும்  எங்கே
தனித்து இருப்பது....
ஆதலால்
மரங்களில் கூடு போல
பலகைகளால் கட்டிப்
படுத்துக் கிடக்கிறார்கள் மக்கள்....

பசி கொன்று விடும் போலிருக்குது
ஏழை மக்களை ...
இந்த முழு அடைப்பு நேரத்தில்
ஒரு நாள் இரு நாள்
தாக்குப்பிடிக்க இயலலாம் அவர்களால்
இரு வாரம் மூன்று வாரம் எங்கனம் ?

நீரைக் கூட காசு
கொடுத்தே வாங்கல் வேண்டும்
குடிப்பதற்கும் குளிப்பதற்கும்....
கொளுத்தி எடுக்கும் வெயிலில்
நீரின்றி எங்ஙனம் வாழ்தல்?

உலை கொதிப்பதற்கும்
உணவுப்பொருள் வாங்குவதற்கும்
அனைத்துக்கும் பணம் வேண்டும்?
அன்றாடங்காய்ச்சிகளாய்
உழைக்கும் மக்களின்
கைகளில் ஏது பணம் ?

வல்லரசாக ஆவதைப்
பின்னால் பார்ப்போம்...
இந்திய நாட்டில் இருக்கும்
ஒவ்வொரு குடிமகனுக்கும்
இருப்பதற்கு இடமும்
குடிப்பதற்கு நீரும் .உண்ண உணவும்
கிடைத்திட  ஏதேனும் செய்யுங்கள்...


இன்றைய தேவை கைதட்டல் அல்ல...
விளக்கேற்றுதலும் அல்ல...
செவ்வாய் கிரகத்திற்கு
ராக்கெட் இப்போது அவசியமில்லை..
அதிவேக புல்லட் ரெயில்கள்
இப்போது தேவையுமில்லை...
தேவையெல்லாம் இந்தியாவின்
அனைத்து மக்களுக்கும் ஒரு வீடு...
இலவசமாய் குடிப்பதற்கும்
குளிப்பதற்கும் நீரு...
உழைப்பதற்கு ஏதோ ஒரு வேலை
அதனால் மூன்று வேளை சோறு...

இத்தாலி நாட்டில்
தெருவெங்கும் பணத்தாட்கள்..
எங்களைக் காப்பாற்றாத
இந்தப்பணம் ...
சாகும்போது எதற்கு ?
தெருவெங்கும் இரைத்திருக்கிறார்கள்
பணத்தை...

4000 கோடிப்பணத்தில் கடலில்
வீடு கட்டி நீ வாழ்ந்தாலும்
பணக்காரா..உன்னையும்
இந்தக்கொரனா துரத்தும்...
ஏழை மனிதர்களை
விலங்குகளாய்க் கூட
மதிக்காத மனிதர்களையும்
ஏழை மனிதர்களின் கொரனா தொற்றும்....
துரத்தி துரத்திக் கொல்லும்....


கொரனா சொல்லியிருக்கிறது....
இனி ஒரு விதி செய்யுங்கள்...
கூடுதலாய் இருப்பவர்களிடம்
இருந்து எடுத்து
ஏழைகளுக்கு பங்கிடுவதற்கு
ஏற்பாடு செய்யுங்கள்....
எல்லோருக்கும் எல்லாம்
கிடைப்பதற்கான ஏற்பாட்டை
செய்யுங்கள்...
இல்லையெனில் ஒட்டுமொத்தமாய்
மனித இனம் செத்துப்போவதற்கு
தயார் ஆகுங்கள்....
                    வா.நேரு....03.04.2020






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வல்லரசு கனவு தான்...

முதலில் நல்லரசாக மாறட்டும்...

முனைவர். வா.நேரு said...

ஆம் தனபாலன் சார்...முதலில் நல்லரசாக மாறட்டும்...நன்றி