Sunday 19 April 2020

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு....ஆசிரியர் கி.வீரமணி

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு
நூல் ஆசிரியர்               : ஆசிரியர் கி.வீரமணி
வெளியீடு                   : திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,பெரியார் திடல் ,சென்னை-7.
முதல் பதிப்பு                : ஜீலை 2018, மொத்த  பக்கங்கள் 24, விலை ரூ 15/-


உருவத்தில் மிகச்சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் நிறைய செய்திகளை,கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய புத்தகம் இந்தப்புத்தகம் . 'மாணவத்தோழர்களுக்கு ' என்று மாணவர்களை அழைக்கும்விதமாகத் தான் புத்தகம் தொடங்குகிறது. 'குடந்தை மாநகரில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் உடைக்கப்பட்ட ஒரு தண்ணீர்ப்பானை ஒரு இயக்கத்தை உருவாக்கியது அதுதான் 8.7.2018-ல் பவள விழாக்காணும் திராவிட மாணவர் கழகம் என்ற சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு அமைப்பு '  என்னும் வரலாற்றுச்செய்தியோடு புத்தகம் தொடங்குகிறது.அன்று உடைந்தது வெறும் பானை அல்ல, எதைக்கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரர்களுக்கு கல்வியைத் தராதே என்ற மனு சாஸ்திரச்சட்டம் எழுதிவைத்த பார்ப்பனியத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது அந்த பானை உடைப்பின் மூலம் என்று விவரிக்கின்றது.  

திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கிடும் நிலையில் தந்தை பெரியார் கொடுத்த அறிக்கையும் அதற்கு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுக்கும் விளக்க உரையும் அடுத்து இடம் பெற்றுள்ளன.அந்த அறிக்கையில்தான் தந்தை பெரியாரின் புகழ்பெற்ற வாசகமான ' விழியுங்கள்,எழுந்திருங்கள்.ஆழ்ந்து சிந்தியுங்கள்.உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித்துப்புங்கள் .உங்கள் இனத்தை மனிதத்தன்மையதாக்குங்கள்.நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டி தொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள் " என்னும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 


திராவிட மாணவர் கழகத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட தன்மை உடையவர்களாக, குணங்கள் உடையவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதனை தந்தை பெரியாரின் , " ....மாணவர்கள் தங்கள் புத்தியை,தங்கள் சக்தியை கண்ட இடத்தில் எல்லாம் செலுத்தாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ' என்னும்  அறிவுரைகளை மேற்கோள்களாகச்சுட்டிக்காட்டி " இதில் கண்ட இடத்தில் என்பதற்குப் பெரியார் காலத்தில் கடவுள் பக்தி,ஜாதி வெறி,மித மிஞ்சிய உல்லாசம்,கேளிக்கை,பதவி வெறி,சினிமா போதை இவை மட்டுமே இருந்தது. இப்போது அது மேலும் விரிவடைந்து SOCIAl MEDIA என்ற தொலைக்காட்சி ,கைத்தொலைபேசி மற்றும் முக நூல்,வாட்ஸ் அப்,டுவிட்டர் போன்றவை எல்லாம் சதா சர்வகாலமும் பயன்படுத்தக்கூடாத நேரத்திலும் நாம் பயன்படுத்தினால் மீண்டும் திரும்பாத அரிய காலத்தை வீணாக்குகின்றன" என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உண்மைதான். எதை இழந்தாலும் திரும்பப்பெற இயலும்,.அரிய நேரத்தை வீணாக்கினால் திரும்பப்பெற இயலாது. அதிலும் மாணவப்பருவத்தில் வெட்டியாக பொழுது போக்கிவிட்டு பின்னால் வருந்துபவர்களை நிறையவே பார்த்திருக்கிறோம். 

மாணவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் ? இதோ பெரியார் சொல்கின்றார்..கேட்போம். " நீங்கள் உங்களைச்சாதாரண மனிதர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச்சவுகரியங்களை எவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு மிக மிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிக மிக தன்னலமற்றவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும்....நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக்கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்க வேண்டும்? ..மனிதத்தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான் " ..இவற்றையெல்லாம் மாணவர்கள் மனதில் மிக ஆழமாகப் பதியவைத்துவிட்டால் பாதிப் பிரச்சனை தீரும். 

திராவிட மாணவர் கழகத்தில் இணைந்தால் இலாபம் கிட்டாது, நட்டமே கிட்டும் என்று சொல்லி 'சூத்திர பஞ்சம்,அடிமை இழிவுப்பட்டம் ஒழியும் ' என்று ஆரம்பித்து ஒழியும் 8 நட்டங்களை பட்டியலிடுகின்றார் ஆசிரியர். பின்பு திராவிட மாணவர் கழக இயக்கத்தில் இணைந்த "மாணவத்தோழர்கள், இதன் விளைவாக செழிப்போடு வளரும் பகுத்தறிவு விளைச்சல்கள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் படிப்பை சமூக மாற்றத்திற்குரிய கருவியாக்கி மகிழ்வீர்கள். அறிவியல் மனப்பான்மை உங்களுள் பெருகும்,அதன் விசாலப் பார்வையால் விரிபயன் அடைவீர்..சமத்துவம் ,சுய மரியாதையால் சொக்கத்தங்ககளாவீர்...மான வாழ்வு பெற்ற மனிதம் உங்களிடையே மலரும்." என்று பயன்களை அடுக்குகின்றார் ஆசிரியர். திராவிட மாணவர்கள் என்று ஏன் சொல்லவேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கம் அடுத்தடுத்த பக்கங்களில் கிடைக்கிறது இந்தப் புத்தகத்தில்.திராவிடத்திற்கும் ஆரியத்திற்குமான 11 வேறுபாடுகளை வகைப்படுத்திக்கூறுகின்றார் ஆசிரியர் .இதனை மட்டுமே தனியாக முக நூல் போன்றவைகளில் பதிவிடலாம். நறுக்கென்று வேறுபாட்டை உணர்த்தும். 

அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான ஆட்சியாளர்கள், இன்றைக்கும் தொடரும் போராட்டம்,புரட்டர்களின் புகலிடமாக வரலாறு மாற்றப்படுதல் என இன்றைய செய்திகள் என விரியும் இந்தப்புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வெங்கிட்ட இராமகிருஷ்ணன் சொன்ன கருத்தான " நான் ஏதாவது கருத்துச்சொன்னால், என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகி விட்டவன் என்பார்கள்.அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங்.அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்னும் கருத்து மிக ஆழமான கருத்து. இன்றைக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்கள் சாதாரண மக்களுக்கு கல்வி கிடைக்கக்கூடாது, சமூக நீதி நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்காக செய்யும் செயல்களையும் அதனை எதிர்த்து திராவிடர் கழகம் எப்படிப்பட்ட முயற்சிகளின் மூலம் முறியடித்தது என்பதையும் வரிசையாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.புரட்சிக் கவிஞரின் பாடலோடு இந்தப்புத்தகம் நிறைவு பெறுகிறது. முடிவில் (08.07.2018-ல் குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை) எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நானும் அந்த உரையைக் கேட்டவன் என்றாலும் ,உரையை நூலாகப் படிக்கும்போது வியப்புதான் மேலிடுகின்றது.படிக்க வேண்டிய புத்தகம். மாணவர்களிடம் பரப்ப வேண்டிய புத்தகம். 


No comments: