Tuesday 21 April 2020

கைதட்டச்சொன்னது போதும்...வா.நேரு.

என் உடலில் இருந்த இதயத்தை
எடுத்து தனியே வைத்தார்கள்...
என் உடலில் உயிர் இருக்க
செயற்கை இதயம் பொருத்தி
நாடியைத் துடிக்கவிட்டார்கள்...
தனியே எடுத்த இதயத்தில்
இருந்த  வால்வை
எடுத்து புது வால்வை வைத்தார்கள்..
எனக்கு புது வாழ்வை அளித்தார்கள்...

கடவுளை மறுக்கும் எனக்கு
கடவுளாய் எனக்கு அந்த
அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தான்
அன்று கண்ணில் தெரிந்தார்கள்....
இன்றும்கூட சென்னை அப்பலோ
மருத்துவர்கள் செங்கோட்டுவேலும்
ஸ்ரீதரும் வழிகாட்டிய மருத்துவர்
அய்யா சோம.இளங்கோவனும்
மனதில் நிற்கிறார்கள்..
என்றும் மனிதத்தின் உருவாக
மனதில் நிற்கிறார்கள்...


கரனா நோய்தொற்றால்
மறைந்த மருத்துவருக்கு
சுடுகாட்டில் இடமில்லை என
சிலர் கலாட்டா செய்த செயல்
என்ன சொல்லி நொந்து கொள்வது?
எப்படி இவர்களைத் திருத்துவது?
கரோனோவால்  தேவையில்லா பயம்
தெருவெங்கும் தொற்றிக்கொண்டதா?
மனித இனம் மறுபடியும்
காட்டுமிராண்டி காலத்தை
வரித்துக்கொண்டதா?


கரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க
அரசு மரியோதையோடு அடக்கம் செய்யுங்கள்...
கண்ணுக்குத் தெரியாத கிரிமிகளோடு
போராடும் மருத்துவர்கள்,நர்சுகள்
சுகாதாரப்பணியாளர்கள் எல்லாவகையிலும்
தேசம் காக்கும் போர்வீரர்களே...
கரோனா களத்தில் இருப்போர்க்கு மரியாதையும்
கரோனா களத்தில் இறப்போருக்கு அரசு மரியாதையும்
உறுதிப்படுத்துங்கள் அரசுகளே....
கைதட்டச்சொன்னது போதும்...அவர்களை
மனிதராக மதிக்க சட்டம் செய்யுங்கள்....

                                   .வா.நேரு.....21.04.2020

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக சொன்னீர்கள் ஐயா...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான் ..முன்வரிசை நின்று போராடுபவர்களை மரியாதை செய்ய வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

வணக்கம் கிரேஸ்...நன்றி..என்ன செய்வது..ஆற்றாமையை எழுதித்தான் தீர்க்கவேண்டியிருக்கிறது..
நன்றாக இருக்கிறீர்களா?..புதிய புத்தகங்கள் எல்லாம் எழுதி வெளியீட்டு உள்ளீர்களா?

முனைவர். வா.நேரு said...

நன்றி..திண்டுக்கல் தனபாலன் சார்...