Thursday 8 April 2021

நமக்கு என்ன குறை நிகழும்?

                 

ஊக்கமூட்டும் 

ஒரு வார்த்தை 

ஒரு மைல்தூரம்

எளிதாகக் கடக்க

நெம்புகோல் போல

உதவுகிறது....


படைத்த நூலை

பக்கம் பக்கமாகப் 

படித்து

அதில் குறிப்புகளை

எழுதி

எழுதி வைத்த பாராட்டைச்

சொல்வதை விட..

மனதில் எழுந்த 

வினாக்களை ஐயங்களை

எழுத்தாளனிடம்

கேட்பதை விட

மிக உயர்ந்த பரிசு

நூலைப் படைத்தவனுக்கு

வேறு என்ன 

கிடைத்து விடப்போகிறது...?


எழுதுகிறவன் 

எதை நோக்கி எழுதுகிறான்?

தங்கப் பேனா பரிசாகக்

கிடைக்கும் என்றா

வெறும் பேனாவில்

எழுதுகிறான்.?


அன்றாடம் காணும்

அவலங்களை

சொற்களால் விளையும்

கொலைகளை

குவிப்புகளால் விளையும்

குமுறல்களை

ஏதோ ஒரு வகையில்

தவிர்க்கவேண்டும்

எனும் எண்ணோடத்தில்தானே

எழுதுகிறான்/எழுதுகிறாள்....


எழுதும் சொல் ஏதேனும்

ஒன்றிரண்டு

படிப்பவர் மனதில்

தைக்கவேண்டும்...

அதனால் ஒரு 

மாற்றம் நிகழல் வேண்டும்.

என்றுதானே எழுதுகிறான்..


படைக்கும் அவசரத்தில்

அடுத்தவர் புத்தகம்

எதனையும் படிக்கும் நேரம்

எனக்கு இல்லை 

என்றார் ஒருவர்....

உங்கள் படைப்பும்

குறைப்பிரசவப் 

படைப்பாகவே இருக்கும்

என்றேன் நான்....


எவரையும் படிக்காமல்

எனது புத்தகத்தை

எல்லோரும் படிக்கவேண்டும்

எனும் விருப்பம் சரிதானா?


எழுதும் நேரம் போலவே

மற்றவர் படைப்பைப்

படிக்கும் நேரத்திற்கும்

நேரம் ஒதுக்குவோம்...


குப்பையாகக் கருதும்

எழுத்தை

மாற்றி மாற்றிச் சொரிதல்

தேவையில்லை

எனினும்

உண்மையான எழுத்து

என உணரும் நேரம்

ஓரிரண்டு சொற்களால்

படைத்தவனை

வாழ்த்துவதில் 

நமக்கு என்ன குறை நிகழும்?..


                         வா. நேரு, 09.04.2021


1 comment:

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா