Monday, 17 November 2025

பசுமை நிறைந்த நினவுகளின் பகிர்வாய் ஒரு சந்திப்பு...

 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1981 முதல் 1984 வரை பிஎஸ்சி வேதியியல் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள பியர்ல் ஹோட்டலில் 9 11 2025 காலையில் நடைபெற்றது மொத்தம் படித்தவர்கள் 38 பேர் அதில் மூன்று பேர் இறந்து விட்டார்கள் மீதி இருக்கக்கூடிய 35 பேரில் வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் வர இயலாது எனத் தெரிவித்தவர்கள்  தவிர்த்து 20 பேர் வருவார்கள் என்று நண்பர்கள் சொல்லி இருந்தார்கள் ஆனால் 11 பேர் தான் வந்திருந்தோம். ஒரு வித்தியாசமான அனுபவமாக காலை 11 மணி போல ஆரம்பித்த அரட்டை சிரிப்பு உற்சாகம் மாலை ஐந்து மணி வரை நீடித்தது.

 

  1984 க்கு பிறகு இவர்களில்  பல பேரை நான் நேரில் சந்திக்கவில்லை. 1984க்கு பிறகு தாங்கள் என்னென்ன செய்தோம் என்பதை, எப்படி இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்பதை தங்கள் சொற்களாலேயே நண்பர்கள் சொன்னார்கள் 1984 முதல் 2025 வரையிலான  தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சிரிப்போடும் உற்சாகத்தோடும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.



மதிவாணன்,தன்ராஜ்,சித்தர்சிங்,செல்வகணேசு,பாலகிருஷ்ணன்,துளசிராமன்,நான்(வா.நேரு),பத்ரகாளிமுத்து,வின்ஸ்டன்
 

சித்தர் சிங் நெல்லை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து எப்படி எம் எஸ் சி வேதியியல் அலிகார் யூனிவர்சிட்டியில் சென்று படித்தேன் என்பதை,அதற்கு வந்த அனுமதி கடிதத்தை,கையில் அம்மா வைத்திருந்த சிலுவாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு முதன் முதலாக சென்னை முதல் டில்லி வரை விமானத்தில் சென்றதை,அங்கு சேர்ந்ததை ஒரு சிறுகதையைப் போலச் சொன்னான். அதற்கு பின்பு வடநாட்டில் சில இடங்களில் வேலை பார்த்தது அதற்கு பின்பு வளைகுடா நாட்டிற்கு சென்று பணியாற்றியது மிகவும் இயல்பாகச் சொன்னான். கிரீன் கார்டு கிடைத்தது என்று கனடாவிற்கு தானும் தன் மனைவியும் தன் குழந்தையும் சென்ற கதையை அங்கு சென்று ஒரு ஆறு மாதம் வேலை இல்லாமல் அவதிப்பட்டது கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து  நிற்கதியாக நிற்கப் போகும் நிலையில் தனக்கு வேலை கிடைத்தது, அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சம்பாதித்தது பற்றிச் சொன்னான்.

. இப்போது அமெரிக்க நாட்டில் வாழ்வதையும், பல மருந்து வேதியியல் கம்பெனிகளுக்கு ப்ராஜெக்ட் கைடாக இருப்பதையும் அமெரிக்காவில் வீடு, சொந்த ஊரில் வீடு என்று வசதியாக இருப்பதையும் இந்தியா வந்திருக்கும் இந்த நிலையில் உங்களை எல்லாம் சந்திப்பது பெரும் மகிழ்ச்சி என்று அதே கனத்த குரலில் கனமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டதை ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பின்னால் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.



மதிவாணன்,தன்ராஜ்,சித்தர்சிங்,செல்வகணேசு,பாலகிருஷ்ணன்,துளசிராமன்,நான்(வா.நேரு),சித்திரைராஜா,வின்ஸ்டன்

 

 அதைப்போல சுகாதாரத் துறையில் பணியாற்றிய மதுரையில் இருக்கும் துளசிராமன், அருகில் தான் பல ஆண்டுகளாக நாங்கள் இருந்திருக்கிறோம் ஆனால் தொடர்பில்லை. அவர் தனது கதையைச் சொன்னார்.படிக்கும்போதே ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலைக்கு அழைப்பு வந்ததை,நன்றாகப் படிக்கிறாய் தொடர்ந்து படி என்று எங்கள் பிரின்ஸ்பால் டிசி கொடுக்க மறுத்ததை,பின்பு டி.சி. வாங்கிப் பணியில் சேர்ந்ததை சொன்னார். பல ஊர்களில் நேர்மையாகப் பணியாற்றி ,கீழே இருக்கும் ஊழியர்களிடம்,அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்று ஓய்வு பெற்றது,ஓய்வு பெறும் நிலையில் நல்ல போஸ்டில் இருந்ததை,தனது பிள்ளைகள் நன்றாகப் படித்து வெளி நாட்டில் இருப்பதை,இப்போது அமைதியாக இணையரோடு இருப்பதைச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

 கோயம்புத்தூரில் இருக்கும் மதிவாணன் பல தனியார் கம்பெனிகளில் பணியாற்றிய அனுபங்களை, தனக்கு கிடைத்த பாராட்டை,அதே நேரத்தில் ஒரு முரணால் வேலையை விட்டு வெளியே வந்து இப்போது தனியாக பிசினஸ் செய்வதை விளக்கமாக,மதிக்கே உரித்தான மொழியில் சொன்னார். நீண்ட வருடங்களுக்குப் பிறகும் NCC Naval C சர்ட்டிபிகேட் கோல்டரின் கமாண்டிங்கான குரலில்  அனுபவத்தைப் பெற முடிந்தது

திருச்செந்தூருக்கு அருகில் ஆசிரியராக,தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கும் வின்ஸ்டன் , கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைக்காமல் இருந்ததை,எம்.எஸ்.ஸி போவதற்கு முயன்றதைப் பின்பு பி.எட் சேர்ந்து பட்டம் பெற்றதைச் சொன்னார். பின்பு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தது,3 பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டது,இப்போது மகனோடும், மனைவியோடும் வீட்டில் ஓய்வில் இருப்பது என்று தன் கதையை கலகலப்பாக எதார்த்தமாகச் சொன்னார். .

 பின்பு அந்த ஹோட்டலில் மதிய விருந்து. பிரியாணி, சிக்கன் என்று ஒரு பிடி பிடித்தோம் எல்லோரும். அங்கும் அரட்டை.பின்பு முடித்து மீண்டும் அரட்டை, வாழ்க்கை அனுபவப் பகிர்வு என்று தொடர்ந்தது.

  சென்னையில் இருக்கும் போஸ்டல் டிபார்ட்மெண்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் தன்ராஜ், எப்படித் தான் படிக்கும்போதே வேலை கிடைத்துவிட்டது என்று போய் ஏமாந்த கதையை, பின்பு பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததை,பின்பு போஸ்டல் துறைக்கு மனுப்போட்டு வேலையில் சேர்ந்த்தைச் சொன்னார்.இப்போது பணி ஓய்விற்குப் பின் சென்னையில் இருப்பதைச் சொன்னார்.

  மின்சாரத் துறையில் பணியாற்றி தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி நண்பன் பாலகிருஷ்ணன் அவனுக்கே உரிய இயல்பான பாணியில் தன் வரலாறைச் சொன்னான்.

 வேலை கிடைக்காமல் இருந்தது,பின்பு மின்சாரத்துறையில் வேலை கிடைத்தது,வேலை அனுபவம்,தொழிற்சங்க அனுபவம், காங்கிரசு கட்சியில் இருந்த அனுபவம் எனக் கலக்கினார்.எப்படி உயர் அதிகாரிகள் செய்த தவற்றை எல்லாம் தட்டிக்கேட்க முடிந்தது தொழிற்சங்கத்தில் இருந்த காரணத்தால் என்பதை எடுத்துக்காட்டுகளோடு பாலகிருஷ்ணன் சொல்லி, தன் பெண் குழந்தைகள் மிக உயர்ந்த படிப்புகள் படித்து வேலைகளில் இருப்பதைச் சொன்னான்..


 மும்பையில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் செல்வகணேசு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள செட்டிகுளத்தில் இருந்து எப்படி திருச்செந்தூருக்குப் படிக்க வந்தேன்,பின்பு பட்டப்படிப்பை முடித்தபிறகு  இங்கு வேலை கிடைக்காமல் எப்படி மும்பை போனேன், அங்கு இருந்த பள்ளியில் எப்படி ஆசிரியராகச் சேர்ந்தேன் என்பதைச்சொன்னார். எப்படி அங்கு பணியாற்றி விருதுகள் பெற்றேன் இப்போது ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் மும்பைக்கும் செட்டிகுளத்திற்கும் மாறி மாறி சென்று கொண்டிருப்பதை இயல்பாகச் சொன்னார்.

என் அருகில் தாமதமாக வந்து எங்களோடு இணைந்த நண்பர் சந்திரபோஸ்


 

உடன்குடியைச் சார்ந்த சந்திரபோஸ், பி.எட். முடித்ததை,வேலைக்கு முயற்சிகள் செய்ததை, பின்பு கிடைக்காமல் கடை வைத்ததை .கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் தானாக வேலை கிடைத்ததை,ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதைச்சொன்னார்.. சந்திரபோஸ் மிகத் தாமதமாக தனக்கு வேலை வந்தது, தாமதமாக மணம் முடித்ததையும் இயல்பாகச் சொன்னார்.தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

  இப்போது திமுகவின் பொறுப்பாளராக இருக்கும் நண்பர் பத்திரகாளி முத்து வகுப்பில் எம் ஆர் ராதா குரலில் பேசுவார். எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார், சிந்திக்கவும் வைப்பார். அதே குரலில் 42 ஆண்டுகளுக்குப் பின்பு பேசி அசத்தினார். எப்படித் தன்னால் பொதுமக்களுக்கு உதவ முடிகிறது என்பதையும் ,தான் எதுவும் சம்பாதிக்கவில்லை என்றாலும் ,தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான ஆளுமைகளிடம் தனக்கு இருக்கும் மரியாதையைச் சுட்டிக்காட்டினார்.பொதுப்பணி செய்யும் வாய்ப்புகளை,செய்த்தைச் சொன்னார். இவர் இந்த நிகழ்வுக்கு வேட்டியோடு வந்திருந்தார்.


நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்த நண்பர் சித்திரைராஜவும், பாலகிருஷ்ணனும்...

 அதைப்போல இந்த ஏற்பாடுகளை நண்பர் பாலகிருஷ்ணனோடு சேர்ந்து செய்த சித்திரை ராஜா திருச்செந்தூரில் இருக்கிறார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். அவர் எப்படி,எத்தனை அரியர்ஸ்ல் இருந்தது என்பதை, அதை எப்படி ஒரே முறையில் பாஸ் செய்தேன் என்பதைக் களிப்பும் சிரிப்புமாய் எடுத்து வைத்தார். தமிழ்நாடு அரசுத் துறையில் எப்படி தனக்கு  வேலை கிடைத்தது என்பதையும் மிக ஈர்ப்பாகச் சொன்னார். நிறையப் பொதுப்பணி செய்யக்கூடிய சித்திரைராஜா படிக்கும் காலத்தில்.படிப்பில் நிறைய அலட்டிக் கொள்ளமாட்டார்.ஆனால் அவர்தான் இப்போது பழைய மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்.

  

 நானும் 1984-ப் பிந்தைய என் கதையைச் சொன்னேன்.1984 இல் எனக்கும் ,நண்பர் சீனிவாசனுக்கும் தொலைபேசித் துறையில் திண்டுக்கல்லில்  வேலை கிடைத்தது.வெவ்வேறு ஊர்களில்  வேலை பார்த்தது ,பின்பு திருமணம் முடித்தது. பி.எஸ்.ஸி படிப்பை முடிக்க  பிரின்ஸ்பால் திரு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் ஆலோசனை வழங்கி உதவியது.தொலைபேசித்துறையில் விருது வாங்கியது .எம்.ஏ படித்தது, பி.எச்.டி படித்தது மற்றும் பல பட்டங்களை வாங்கியது. பின்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றது. இந்த 2020 இல் விருப்ப ஓய்வு பெற்றது. நான் எழுதிய ஏழு புத்தகங்கள் வெளியாகி இருப்பது என்று கூறி என்னுடைய தொழிற்சங்க அனுபவம், தொலைபேசித் துறை அனுபவம், இலக்கிய அனுபவம், இயக்க அனுபவம் என்று பல அனுபவங்கள் இருக்கிறது என்று நண்பர்களுக்குச் சொன்னேன்.

 வளைகுடா நாட்டில் பணியில் இருக்கும் நண்பன் பாலசிங், சென்னையில் வசித்து வரும் நண்பர்கள் காயாமொழி ராதாகிருஷ்ணன்,ஆறுமுகநேரி செல்வன், ஜெபராஜ் மகிழதாஸ்,பாலசுப்பிரமணியன், நடராஜன், திருச்செந்தூர் நாட் என்ற இராமனாதன் மற்றும் தூத்துக்குடியில் இருக்கும் ஜோன்ஸ், சாத்தான் குளம் அய்யாதுரை ஆகியோர்களும் தங்கள் வரவியலாமையைத் தெரிவித்ததோடு பிரிதொரு நாளில் சந்திப்போம் என உறுதியாகக் கூறினார்கள்.தே கல்லுபட்டி சீனிவாசன் மற்றும் டில்லியில் வசிக்கும் சாந்தகுமார் செல்வினும், தங்கள் பணியின் காரணமாக தங்கள் வரவியலாமை பற்றிமுன்பே தெரிவித்து விடடனர்.

 .கத்தாரில் இருக்கும் நண்பன் அருள் சாம்ராஜ் தான் வரவியலாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அனைவருடனும் அளவளாவி சிறப்பித்தார்.

மொத்தத்தில் கல்லூரிக் காலத்தில் இருந்த உற்சாகத்தோடு,அதே சிரிப்போடும் விளையாட்டோடும் நடந்த சந்திப்பு உண்மையிலேயே மிகப்பெரிய டானிக்காக உள்ளத்திற்கு அமைந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

 

 

4 comments:

Anonymous said...

அருமை நண்பா ❤️🤝👌

Anonymous said...

நல்ல நினைவுகளை நினைக்கும் தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

நன்றி நண்பா...

முனைவர். வா.நேரு said...

ஆமாம். மகிழ்ச்சி. நன்றி. கீழே பெயரையும் இணைத்து போட்டால் நன்றாக இருக்கும்