Friday, 7 November 2025

தூக்கி எறிய மனமில்லாமல்

 

தயாரிக்கப்பட்ட உரையொன்று

கண்ணில் தென்பட்டது…

கூட்டம் நடைபெறுமென்று

எண்ணி எழுதித் தொகுத்த

எண்ணங்களின் குவியலது…

 

நெடுநாளைக்கு முன்னால்

மழையால் நிறுத்தப்பட்ட கூட்டம்

மீண்டும் நடைபெறவேயில்லை…

 

கிழித்து தூக்கி எறியலாமா?..

எனத் தோன்றியது..

பின்பு இருக்கட்டும்..இன்னொரு நாள்

பயன்படக்கூடும் என எடுத்துப்

பத்திரப் படுத்தி வைத்தேன்…

 

நடைபெறாத கூட்டத்திற்கு

தொகுக்கப்பட்ட உரைபோலவே

மூளைக்குள்ளும் நிறைய

நினைவுகள் கிடக்கின்றன…

தூக்கி எறிய மனமில்லாமல்

                                வா.நேரு ,07.11.2025

No comments: